Search This Blog

27.8.10

காவி தீவிரவாதமும் ப.சிதம்பரமும்! 1 & 2





டில்லியில் நேற்று அனைத்து மாநிலக் காவல் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தெரிவித் துள்ளார்.

தற்போது புதிதாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது. சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் காவி உடை அணிந்தவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு சிறு திருத்தம் என்னவென்றால் புதி தாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது என்பதாகும்.

என்றைக்கு இந்து மகா சபையும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார்க் கும்பலும், அவற்றின் அரசியல் வடிவமான ஜனசங்கமும், பாரதீய ஜனதாவும் தோற்றமெடுத்தனவோ, அந்த நொடி முதலே அதன் குருதி ஓட்டத்தில் மதக் கலவர எண்ணங்கள் கருத் தரித்து அவ்வப்போது வாய்ப்புக் கிடைத்த போதெல் லாம் கலவரத்துக்குக் கத்தி தீட்டிதான் வந்திருக் கின்றன. அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆணையங்களும் ஆதாரப் பூர்வமாகவே இந்தக் கூட்டத்தின் வன்முறைக் கலாச்சாரத்தினை வெளிப் படுத்தியும் உள்ளன. இதற்காகவே இந்த அமைப்பின் முக்கிய கூர்மையான அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பலமுறை தடை செய்யவும் பட்டது.

இந்தியா முழுவதும் நடைபெற்று வந்திருக்கிற பல்வேறு கலவரங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும், சங் பரிவார்க் கூட்டத்தின் தலைமை அமைப்புகளுக்கும் சங்கிலித் தொடர்போன்ற இணைப்புகள் இருந்திருக்கின்றன என்ற தகவல் ஆதாரப் பூர்வமாகக் கிடைத்துவிட்டது.

மாலேகான் குண்டு வெடிப்பில் பிரக்யா தாகூர் எனும் சாத்வி (சன்யாசியாம்) லெஃப்டினண்ட் கர்னல் சிறீகாந்த் புரோஹிட், தயானந்த பாண்டே எனும் சங்கராச்சாரியார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச் சத்துக்கு வந்தன. இந்தச் சங்கராச்சாரியாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லாப்டாப் கருவியிலிருந்து அதிர்ச்சியூட்டக்கூடிய சதித் திட்டங்கள் வெளிப்பட்டன. இந்தச் சதித் திட்டங்களையெல்லாம் நுண்மையாக ஆய்வு செய்த ஹேமந்த் கர்கரே என்ற உயர் காவல்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்டதும் சாதாரணமான தல்ல. சங்பரிவார் கும்பலின் மிகப் பெரிய சதித் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது கருதப்படுகிறது.

இந்தப் படுகொலையில் சதியுள்ளது என்று மத்திய அமைச்சராக உள்ள ஏ.ஆர். அந்துலேயே கூறி இருக்கிறார் என்றால், இதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாமே.

புதுடில்லியில் உள்ள ஹெட்லைன்ஸ் டுடே என்னும் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய தகவல்கள் சங் பரிவார்க் கூட்டத்திற்கு நெரி கட்டச் செய்துள்ளன. காவிக் கூட்டத்துக்கும், அதன் தீவிரவாத வன்முறைக் கூட்டத்துக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பினை அது அம்பலப்படுத்திவிட்டது.

காந்தியார் படுகொலை, தென்காசி சதித்திட்டம், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், மாலேகான் குண்டு வெடிப்பு என்று மிகப் பெரிய வன்முறைப் பாதைகளின் சுவடுகளையெல்லாம் மிகத் திறமையாக உளவுத் துறையையும் விஞ்சிய சாமர்த்தியத்தோடு இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அலசி எடுத்துத் தோரணமாகத் தொங்க விட்டுவிட்டது.

தாம் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டோம் அதன் மூலம் சட்ட ரீதியான கடுந்தண்டனைக்கு ஆளாக்கப்படப் போகிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்த இந்தக் காவிக் கூட்டத்தால் ஆத்திரத்தை அடக்க முடிய வில்லை.

கடந்த மாதம் (ஜூலை 16) புதுடில்லியில் உள்ள அந்தத் தொலைக் காட்சி நிறுவனத்தின் முன் காவிக் கூட்டத்தினர் ஆயிரக்கணக்கில் கூடி அந்நிறுவனத் தைத் தரைமட்டமாக்க ஆவேசமாக எழுந்தனர். காவல் துறையின் சாமர்த்தியத்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்பது போல, நான்காவது மாடியில் இருந்த அந்த நிறுவனத்துக்குள் இந்தக் காலிகளாகிய காவிகள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும் கல்லெறி எனும் கலையில் தேர்ந்தவர்களாயிற்றே! அதைப் பயன்படுத்தி கண்ணாடிக் கதவுகளை யெல்லாம் அடித்துத் தூள் தூளாக்கிவிட்டார்கள்.

இந்த ஆத்திரமே அவர்களின் குற்றங்களுக்கான அளவுகோல் என்பதை மத்திய அரசு அறிந்திருக்க வேண்டும்..

அபினவ் பாரத் என்ற மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் காந்தியார் கொல்லப்பட்ட பின்பு நமக்கு நேர்ந்த கதியை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்களே அலற ஆரம்பித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, மத்திய உள்துறை சட்ட ரீதியாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமோ, அவற்றைக் கொஞ்சமும் தயக்க மின்றி எடுத்தாகவேண்டும். இல்லையென்றால், நிவர்த்திக்க முடியாத கடும் விலையை இந்தியா கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

--------------------- “விடுதலை” தலையங்கம் 26-8-2010

*******************************************************************************


காவி தீவிரவாதமும் ப. சிதம்பரமும் (2)

காவிக் கூட்டத்தின் வன்முறைக் கலாச்சாரம் நாளும் நாளும் கொம்புசீவிக் கொண்டு பாய்வதற்கு முக்கியக் காரணம் 1992 டிசம்பர் 6 இல் ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான காவிகள் கூடி, திட்டமிட்ட வகையில் பெரிய தலைவர்களின் நேரடி வழிகாட்டு தலில், 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினார்களே அந்தக் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாதது தான்.

கொடிய குற்றம் செய்த அந்தத் தலைவர்கள் இந்தியாவின் பிரதமராகவும், துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும், மத்திய அமைச்சர்களாக வும் மாநில முதலமைச்சர்களாகவும் வர முடிந்தது என்றால், இதைவிட கேடுகெட்டத் தனத்தை உலகில் எந்தச் சந்தில் போய்த் தேடுவது?

குஜராத் மாநிலத்தில் அரச பயங்கரவாதமாக காவல்துறையின் துணை கொண்டு, முதலமைச்சரின் வழிகாட்டுதல்படியும், கட்டளைப்படியும் அம்மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை நரவேட்டையாடி, பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று கிழித்து, அவர்கள் வணிக நிறுவனங்களையும், வீடுகளையும், உடைமைகளையும் தீக்கு இரையாக்கிய நிலையில் அவர்களின் மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்றால், காவிகள் கொட்டம் உற்சாகத்துடன் நடைபெறத்தானே செய்யும்! இந்தக் குற்றங்கள்மீது விசாரணை நடத்த நியமிக் கப்பட்ட ஆணையங்கள் நத்தை வேகத்தில் நடந்து, பல்லாண்டு களை விழுங்கி, கோடிக்கணக்கான ரூபாய்களைச் சாப்பிட்டு, பாம்பும் நோகாமல், பாம்பை அடித்த கொம்பும் நோகாமல் அறிக்கை கொடுக்கின்றன என்றால், இந்த நாட்டில் எந்த அதீதமான குற்றங்களையும், வன்முறை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எப்படி தயக்கம் காட்டுவார்கள்?

பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோம். உங்களால் என்ன செய்ய முடியும் என்று நாடாளு மன்றத்திலேயே பா.ஜ.க.வின் நாடாளுமன்றத் தலைவர் சுஷ்மா சுவராஜ் முழங்கினாரே இதற்குமேல் என்ன இருக்கிறது?

இந்தியாவின் முகத்தில் உலகம் பூசிய கறுப்புச் சாயத்தின் மேல் மேலும் அழுத்தமாக தார் அடித்துக் கொண்ட கேவலம்தான் இது!

மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளி யான சிறீகாந்த் புரோகித் என்பவர் இசுரேல் நாட்டுடன் கையிணைத்து, இந்தியாவிற்குள் ஓர் இந்து சாம்ராஜ் ஜியத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் என்பதும், அவர் இராணுவத்தில் உயர் அதிகாரி என்பதும் எவ் வளவு பெரிய திடுக்கிட வைக்கும் அபாயகரமான சேதி.

அந்த ஆசாமி பிணை பெற்று இந்த நாட்டில் ராஜ கம்பீரமாக நடைபோட முடிகிறது என்றால், இந்திய நாட்டின் நிருவாக லட்சணமும், காவல்துறை, நீதித்துறையின் நீர்த்துப்போன செயல்பாடுகளையும் கண்டு உலகம் நகைக்காதா?

96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பா.ஜ.க. வில் சேர்க்கப்பட்டனரே அதன் பொருள் என்ன? உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களுக்குப் புரியாதா?

பா.ஜ.க. மத்திய ஆட்சியில் இருந்தபோது, இராணுவத்தில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திணிக்கப்பட்டனர் என்று சொன்னவர், தெருவில் போகும் குப்பனும், சுப்பனும் அல்லர் விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத்.

2006 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமி யாவில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு வருகை தந்த இந்திய நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களை, பெட்ரோல் குண்டுவீசி தீர்த்துக் கட்டத் திட்டமிட்டிருந்தனர் என்பதை அறிந்த பிறகும் கூட, உள்துறை புதிதாகத் தெரிந்துகொள்வதற்கோ, புலனாய்வதற்கோ எஞ்சியிருப்பது என்ன?

மக்களைக் கூட்டி வைத்து, கிறித்துவர்களையும், முசுலிம்களையும், மதச் சார்பின்மை பேசும் இந்துக் களையும் குத்திக் கிழிக்க பொதுக்கூட்டம் போட்டு, பல்லாயிரக்கணக்கானவர்களைக் கூட்டி வைத்து பகிரங்கமாக திரிசூலங்களை வழங்குகின்றனர் என்றால், இது நாடா? கடும் புலிகள் துள்ளிக் குதிக்கும் காடா? என்ற கேள்வி கண்டிப்பாக எழுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறார் புதிதாக காவி தீவிரவாதம் தலையெடுத்திருக்கிறது என்று. இன்னும் தொடக்க நிலையில்தான் மத்திய அரசு இருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்று கிறது.

இந்தக் கூட்டம் தேர்தலில் நிற்க அருகதை உடையதுதானா? சட்டம் இதற்குச் சம்மதிக்கிறதா? இந்தக் கோணத்தில் இந்திய அரசு ஏன் சிந்திக்கக் கூடாது? அதிகாரத்திற்குச் செல்லும் விறகை இழுத் தால், இந்தக் கூட்டம் அந்தக் கணமே அஸ்தமனம் ஆகிவிடுமே!

-------------------------”விடுதலை” தலையங்கம் 27-8-2010

0 comments: