Search This Blog

3.8.10

குடிஅரசு பத்திரிக்கை பற்றி பெரியார் -7


(குடிஅரசு இதழ் ஒவ்வொருவருடமும் எப்படியெல்லாம் சாதித்தது அதன் பரிணாம வளர்ச்சி எப்படியிருந்தது என்பது பற்றி பெரியார் எழுதிய கட்டுரை இது. படியுங்கள்!தெளீயுங்கள்!உண்மையை உணருங்கள்!! ---- நன்றி)

ஒன்பதாவதாண்டு


நமது “குடி அரசு”க்கு எட்டாண்டு நிறைந்து ஒன்பதாமாண்டு துவக்கமாகின்றது என்னும் விஷயத்தை அறியும் வாசகர்கள் மகிழ்ச்சி அடையாமல் இருக்க மாட்டார்கள்.

குடி அரசு தோன்றும் போது இன்னாட்டில் எல்லாத் துறையிலும் செல்வாக்குப் பெற்று, சகல விதத்தும் ஆதிக்கம் அடைந்து, மக்களை வஞ்சித்து அழுத்தி வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு விரோதமாகவே காணப்பட்டது. அதன் பயனாய் குடி அரசு எங்கு பார்த்தாலும் “பார்ப்பனத் துவேஷமயமாக”வே விளங்கி வகுப்புத் துவேஷியாயிற்று. இதன் பயனாய் சர்வ வல்லமையுடைய பார்ப்பன சமூகத்தினுடையவும், பார்ப்பன பத்திரிகைகளினுடையவும், பார்ப்பன அதிகாரிகளினுடையவும் சர்வ சக்தி கொண்ட எதிர்ப்புகளை சமாளித்து முதல் ஆண்டைக்கழித்து இரண்டாம் ஆண்டில் பிரவேசித்தது.

இரண்டாமாண்டில் அப்பார்ப்பனர்களின் “வஜ்ஜிராயுத” மாய் இருந்த “காங்கிரசிற்கு விரோதமாய்” த் தோன்றி அதனோடு வாதாட வேண்டியதாகி குடி அரசு தேசத்துரோகியாக விளங்கி தேசிய வாதிகளின் எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் ஈடு கொடுத்து வந்தது. இந்த சமயத்தில் குடி அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய வேலை மாத்திரம் அல்லாமல் பார்ப்பனர் களாலும், அவர்களது ஆயுதங்களான காங்கிரசினாலும் முறியடிக்கப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்பட்டிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கும் உழைக்க வேண்டியதாகி அதன் பயனாய் குடி அரசு “சர்க்கார் தாசனாக”விளங்கிற்று. எப்படியோ ஒரு விதத்தில் காங்கிரசினுடையவும் தேசபக்தர்களுடையவும் எதிர்ப்புகளையும், தொல்லைகளையும் சமாளித்து இரண்டாம் வருஷத்தைக் கடந்து மூன்றாம் வருஷத்தில் பிரவேசித்து விட்டது.

மூன்றாம் வருஷமும் குடி அரசு மேற்கண்ட மகத்தான எதிர்ப்புகளில் சிக்கி சண்ட மாருதத்தில் சிக்கிய குப்பை கூளம் போல் பறக்கடிக்கப்பட வேண்டி இருந்தாலும் அவ்வெதிர்ப்புகளைச் சிறிதும் லக்ஷியம் செய்யாமல் அதிலிருந்து மற்றுமோரடி,முன்னேரிற்று என்று சொல்லும்படியாக பார்ப்பன அஸ்திவாரங்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்று சொல்லும்படியான மகத்தான செல்வாக்கும், மதிப்பும், மரியாதையும் பெற்றிருந்த ஆதாரங்க ளுக்கும் விரோதமாய் தோன்றி குடி அரசு எங்கு பார்த்தாலும் “இந்து மதத் துவேஷியாய்” விளங்கி பார்ப்பனர்கள், காங்கிரசுக்காரர்கள், ஆகியவர் களுடைய எதிர்ப்புக்கு மாத்திரமல்லாமல் இந்து சமூக பண்டிதர்கள் பாமர மக்கள் என்பவர்கள் எல்லோருடைய எதிர்ப்புக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி அதிலிருந்தும் மீண்டு மூன்றாம் ஆண்டைக் கடந்து நான்காம் ஆண்டில் பிரவேசித்து விட்டது.

நான்காம் ஆண்டில் குடி அரசு இந்து மதம் என்னும் பழம் பெரும் பூதத்தோடு வெளிப்படையாய் போர் புரிய ஏற்பட்டது மாத்திரமல்லாமல் பார்ப்பனீயத்துக்கும், காங்கிரசுக்கும், இந்து மதத்துக்கும் அபயஸ்தம் கொடுத்து “உலகம் போற்றும் மகாத்மா” என்று விளங்கிவந்த தோழர் காந்தியாருடன் போராடவும் அவரது “சக்ராயுதம்” ஆகிய கதருடன் போராட வுமான ஒரு கஷ்டத்தில் சிக்கி இந்தியா முழுவதுமுள்ள இந்திய மக்கள் எல்லோருடையவும் எதிர்ப்புக்கும் ஆளாகி ஆலையில் சிக்கிய கரும்பு போல் நசுக்குற்று சத்து வேறு சக்கை வேறாகப் போய் விட வேண்டிய நிலை மையை சமாளித்து நான்காம் ஆண்டைக் கடந்து ஐந்தாம் ஆண்டில் பிரவேசித்து விட்டது.

ஐந்தாம் ஆண்டில் குடி அரசு பார்ப்பனர், காங்கிரஸ், மத ஆதாரங்கள், தோழர் “மகாத்மா” காந்தி, “கதர்” என்பவைகளின் யோக்கியதைகளை வெளியாக்கி அவதிப்பட்டு அது சம்பந்தமான எதிர்ப்புகளை சமாளிக்கின்ற கஷ்டத்தோடு இல்லாமல் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் கொண்டது என்று சொல்லப்படும் “கடவுள்” உடனேயும் போராடவேண்டிய அளவுக்கு “பச்சை நாஸ்திகமாகி” உலகிலுள்ள எல்லா மக்களுடைய வெறுப்பும், அதிருப்தியும், எதிர்ப்பும் சமாளிக்க வேண்டியதாகி ஓரளவு அதிலிருந்தும் சமாளித்து ஐந்தாம் ஆண்டைக் கடந்து ஆறாவது ஆண்டிற்குள் பிரவேசித்து விட்டது.

ஆறாவது ஆண்டில் குடி அரசுக்கு சற்று பொது ஜன எதிர்ப்பு பலமாகத் தோன்றியதாக சிலர் நினைத்தவுடன் குடி அரசு குன்றி விடுமோ என்று கருதிய சிலர் அதாவது குடி அரசின் பெயரைச் சொல்லிக்கொண்டும் சுயமரியாதை இயக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டும் வாழ்க்கையை நடத்தத் தீர்மானித்திருந்த சில “சுயமரியாதை நண்பர்களின்” ஆசைக்கு பங்கமேற் பட்டதால் அக்கூட்டத்தினர்களின் எதிர்ப்புக்கும் ஆளாகியதோடு குடி அரசை ஆதரிப்பவர்களாக வேஷம்போட்டுபயனடைந்து கொண்டிருந்த சில “பெரிய மனிதர்கள்” (அதாவது ஜஸ்டிஸ் கட்சியார்கள்) என்பவர் களுடைய அதிர்ப்த்திக்கும், அலட்சியத்திற்கும் ஆளாகவேண்டி இருந்தது. இதை சமாளிப்பது ஒரு முக்கிய காரியமாய் இருந்தாலும், முற்பட்ட புதிய எதிர்ப்புகளையும் அது அடையத் தவரவில்லை. அதுமாத்திரமல்ல, ஆறாவது ஆண்டில் “எல்லா மதங்களுக்கும் விரோதி” என்ற பெயரையும் பெற்றது. எப்படி இருந்தும் இவையனைத்திற்கும் தலைகொடுத்து ஆறாவதாண்டைக் கடந்து ஏழாம் ஆண்டில் பிரவேசித்து விட்டது.

ஏழாம் ஆண்டோ மிக மிக நெருக்கடியான ஆண்டாய் கழிய வேண்டியதாயிற்று. “சகல மதங்களும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று வெளிப்படையாய் தீர்மானம் போடப்பட்டுவிட்டது. ஏழை பணக்காரத் தன்மை அழிக்கப்படவேண்டுமென்றும் பிரசாரம் தொடங்கப்பட்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது. வாலிபர்களே கும்பல் கும்பலாய் வந்து கூடினார்கள். கொள்கைகள் “பெரியோர்” களால் பரிகசிக்கத்தக்கதாய்விட்டது. பழிப்புகள் பலத்துவிட்டன. இவைகள் எல்லாம் சுலபமாய் சமாளிக்கக் கூடியதாய் இருந்தாலும் மற்றொரு பக்கம் பத்திராதி பருக்கு உடல் நிலை குன்றிவிட்டது. ஓய்வெடுக்கவேண்டிய அவசியமேற் பட்டுவிட்டது. கடைசியாய் பத்திராதிபர் பொறுப்பை தோழர் சிதம்பரனார் வசம் ஒப்படைத்துவிட்டு, பத்திராதிபர் மேல்நாட்டுக்கு சென்றுவிட்டார். இந்தச்சமயத்தில் இவ்வளவு எதிர்ப்பும், உள் கலகமும், பொருளாதார நெருக்கடியும் இருந்தும் ஒன்றையும் சட்டை செய்யாது தென்னாட்டில் இயக்கத்தை சந்து பொந்துகளிலும், கிராமங்களிலும் பரவும்படி செய்துவிட்டதுடன் தாராளமாய் ஏழாவது ஆண்டைக்கடந்து எட்டாவது ஆண்டில் நுழைந்து விட்டது.

எட்டாவது ஆண்டு சமதர்ம ஆண்டாய் திகழ்ந்தது. பத்திராதிபர் மேனாட்டு சுற்றுப்பிரயாணத்தில் இருந்து திரும்பியதும் வழக்கம்போல் எதிர்ப்புகள் ஒரு புறமிருந்தாலும், புதிய எதிரிகள் பலர் தோன்றி இருந்தாலும், சர்க்கார் பயம் நிமிஷத்துக்கு நிமிஷம் இருந்தாலும் குடி அரசு எட்டாவது ஆண்டில் புரட்சி கோலம் கொண்டுவிட்டது. வாசகர்களுக்கு சமதர்மப் பைத்தியத்தை ஊட்டி விட்டது. அதன் நோக்கத்தையும், திட்டத்தையும் உறுதியுடன் வெளிப்படுத்திவிட்டது. அதன் பயனாய் உண்மை தோழர்களை வடிகட்டி வருகின்றது.

இந்த நிலையில் எட்டாம் ஆண்டைக்கடந்து 9-ம் ஆண்டில் பிரவேசிக்கின்றது. ஆரம்பம் வெகு உக்கிரமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய பொருப்புகள் அதன் தலைமீது விழுந்து கிடக்கின்றது என்பதை இந்து முஸ்லீம் கிறிஸ்துவ வருணாச்சிரமக் காரர்களும், சனாதனதர்மிகளும் உருமும் உருமலைப்பார்த்தாலே தெரிய வரும். அவர்கள் தங்கள் குற்றத்தைச் சிறிதும் கவனியாமல் தங்கள் சனாதன தர்மங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை குடி அரசு போன்ற முயற்சிகளைக் குறைகூறி பாமர மக்களுக்கு போதை உண்டாக்கி உசுப்படுத்தி விடுவதினாலும் ஆபத்தினின்று தப்பித்துக் கொள்ளலாம் என்று மனப்பால் குடித்துவருகிறார்கள். இது அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

பாமர மக்கள் என்றும் மூடர்களாகவே இருந்துகொண்டு மதப் பைத்தியத்தால் கடவுள் உணர்ச்சியால் பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு உழைத்துப் போட்டுக்கொண்டே இருப்பவர்கள் என்று நினைப்பது பெரியதொரு முட்டாள்தனமேயாகும். எல்லா “புண்ணிய மதத்திலும், எல்லா புண்ணிய வேதத்தை மார்க்கத்தை ஒப்புக்கொண்டவர்களிலும் ஏழையும், பாடுபட்டு பட்டினி கிடப்பவனும், இழிதொழில் செய்பவனும் இருந்து கொண்டுதான் இருக்கிறான்.

பணக்காரனும் சோம்பேரியும் பாடுபடாமல் மேன்மையாய் மதிக்கப் படுபவனும் இருந்துகொண்டுதான் இருக்கிறான். இந்தப்புரட்டை ஒழிக்க எந்த சத்தியவேதத்தாலும், புண்ணிய மார்க்கத்தாலும் முடியவில்லை. அப்படியானால் பின்னை எதற்காக இந்த மதங்கள் இருக்க வேண்டும்? இனியும் எய்த்துப்பிழைக்கவா என்பதை யோசிக்கும்படி வேண்டுகிறோம்.

சமீப காலத்தில் இரண்டுமாத காலமாய் சிறப்பாய் ஒரு மாத காலமாய் கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரிகளின் அட்டகாசம் தலைகால் தெரியாமல் தாண்டவமாடுகின்றது. வியாதியின் பயனாய் ஏற்பட்ட ஜன்னி சேஷ்டைக்கு சற்று பலம் அதிகமாக இருக்கும். ஜன்னி நின்றவுடன் உள்ள பலமும் போய் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்க வேண்டியதாகும். அதுபோலவே சமீபத்தில் அழிந்து மறையப் போகும் கத்தோலிக்க மதம் சுயமரியாதை இயக் கத்தை அழித்துவிட வேண்டுமென்று கூட்டம் கூடி தீர்மானித்து இந்த 10 நாளாய் மதிப்புக்குறிய ‘மெயில்’ பத்திரிகையில் பக்கம் பக்கமாய் கண்டண வியாசங்களும் அதற்கு ஏற்ற தலையங்கங்களும் வந்த வண்ணமாயிருக் கின்றன.

கத்தோலிக்க மதம் இந்த காரியங்கள் செய்வது நமக்கு சிரிப்பை உண்டாக்குகின்றதே தவிர சிறிதுகூட அதை ஒரு லட்சியம் செய்யவேண்டிய காரியம் என்றே நமக்குத் தோன்றவில்லை.

இன்றைய நிலையில் உலகில் உள்ள சூட்சி மதங்களில் இந்து மதத் தைவிட கத்தோலிக்க மதம் ஒன்றே தலைசிறந்த மதம் என்றே கருத வேண்டியிருக்கின்றது. மத சம்மந்தமான காரியங்கள் ஒருபுரம் இந்து மதத்தோடு நீ சிறந்தவனா, நான் சிறந்தவனா என்று போட்டி போடுவதாயிருந்தாலும் அதன் அரசியல் சூட்சிக்கு எதுவும் நிகரில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனெனில் இந்தியாவில் கிறிஸ்துமதத்திற்கு, ஆக்கமும் அஸ்திவார முமான இடம் தென்னிந்தியாவாகும். தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்களின் பெருக்குக்கு கத்தோலிக்க மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களேயாகும்.

கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் பகுதிக்கு மேற்பட்ட ஜன சமூகம் தாழ்த்தப் பட்ட கிறிஸ்தவர்கள். இந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுடைய எண்ணிக்கையை சர்க்காருக்கு எடுத்துக்காட்டி அதற்காக அந்த விகிதாச்சாரம் கிராண்டு தொகை, ஓட்டர் தொகை, உத்தியோகத்தொகை, ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர் தொகை, சட்டசபை அங்கத்தினர் தொகை, ஆகியவைகளை அதிகமாகப் பெருகின்றார்கள். இப்படிப்பட்ட ஸ்தல ஸ்தாபனங்கள் ஏதாவது ஒன்று இந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அடையமுடிகின்றதா என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது. மதத்தின் பேரால் செய்யப்படும் இழிவான மோசம் என்பதற்கு இதைவிட வேறு எதையாவது உதாரணம் காட்டமுடியுமா என்று கேட்கின்றோம்.

மதம் ஏழை மக்களை பாமர மக்களை வஞ்சிக்க மோசம்செய்ய சதிசெய்ய ஏற்பட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். இந்து மதத்திலாவது சுயமரியாதை இயக்கத்தின் “நாஸ்திகத்தினாலும்” “மதத்துரோகத்தினாலும்” “வகுப்புத் துவேஷத்தினாலும்” தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு அளவுக்காவது எல்லாவற்றிலும் பிரதிநிதித்துவம் ஏற்பட்டு விட்டது. இதற்குக்காரணம் என்னவென்று பார்த்தால் “இந்து ஆதித்திராவிட மக்கள் மதத்தை விட்டு வெளியே போய்விடத் துணிந்ததும் சிலர் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியது, சிலர் பச்சை நாஸ்திகர்கள் ஆனதுமே தவிர வேறில்லை. அதுபோலவே ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் என்பவர்களும் தங்கள் விடுதலைக்கு, சுதந்திரத்துக்கு, சுயமரியாதை பெறுவதற்கு மதத்தை விட்டு வெளியாகி தான் தீருவார்கள். யார் சொன்னா லும் இனி அது தடைப்படப் போவதில்லை என்பதே நமது அபிப்பிராயம். கத்தோலிக்க பாதிரிகள் சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஓட்டு வாங்கி கொடுக்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்த்தால் அவர்களுடைய யோக்கி யதை விளங்காமல் போகாது, கத்தோலிக்க ஆதிதிராவிடர்கள் எப்போது உத்தியோகம் பெறுவது? எப்போது சட்ட சபை அங்கத்தினராவது? எப்போது மந்திரியாவது இதற்குத்தக்க சமாதானமான பதில் நடுநிலையிலிருந்து செல்லட்டும் என்று தான் கேட்கின்றோம். இந்து ஆதிதிராவிடர்கள் பலபேர் பி.ஏ., பி.எல்., ஆகி பலபேர் சட்டசபை அங்கத்தினர்கள் ஆகி, பல பேர் ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்கள் ஆனதோடல்லாமல் நாளைக்கு அவர்கள் மந்திரிகளும் ஆகப்போகின்றார்கள் என்று பந்தயம் கூற தயாராய் இருக்கிறோம்.

கத்தோலிக்க பாதிரிகள் சர்க்கார் தங்கள் கையில் இருக்கின்றதென்ற ஆணவத்தால் வண்டி வண்டியான பொய்யும் புழுகும் கூறி உங்களுக்கு அதை செய்கின்றோம், இதை செய்கிறோம் என்று வாயடி அடித்து பல லட்சக் கணக்கான மக்களை தங்கள் மதத்திற்கு இழுத்து அதன் பேரால் சீமையில் இருந்து சில பாதிரிகள் இந்தியாவுக்கு வந்து ஐ.சி.எஸ். வெள்ளைக்காரர்கள் ஒரு கூட்டம் பிழைக்க வழித்தேடிக் கொண்டதல்லாமல் இவர்கள் செய்த காரியம் என்ன என்று தான் மறுபடியும் கேட்கின்றோம். நமது ஒன்பதாம் ஆண்டு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியை கத்தோலிக்க பாதிரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கவே தெரிவித்துக் கொள்ளுகிறோம். நமக்கு எந்த மதமானாலும், எந்த தேசமானாலும் ஜாதிமத தேச வித்தியாசமில்லாமல் ஏழை மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் நம்மால் கூடிய வரை கவனித்து அவர்களது இழிவையும், துன்பத்தையும் அழிக்க வேண்டுமென்பது தான் கொள்கையாகும். ஆகவே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெயரினால் சர்க்காரிடம் பெற்ற பங்கில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட பறைய, சக்கிலிய, பள்ள கிறிஸ்தவர்களுக்கு விகிதாசாரம் கொடுத்து கிறிஸ்தவரானாலும் பறையனாய், சக்கிலியனாய், பள்ளனாய், பார்ப்பானாய், உடையாராய், சைவ வேளாளராய், நாடாராய் இருக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியையும், புரோகிதக் கொள்ளையையும் ஒழிக்காத வரை இந்திய கத்தோலிக்க உலகம் அஸ்தமாகித்தான் தீரும் என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளு கிறோம். இதற்காக சுயமரியாதை இயக்கத்தோடு முட்டிக் கொள்ளுவது கல்லில் முட்டிக் கொள்ளுவதேயாகும்.

-------------------- தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 30.04.1933

0 comments: