Search This Blog

23.3.10

பகத்சிங், ராசகுரு, சுகதேவ் செய்த குற்றமென்ன?

தூக்குக் கயிறு!

1931 மார்ச் திங்கள் இதே நாளில்தான் மூன்று புரட்சியாளர்கள் லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்கள். அந்த மாவீரர்கள் தாம் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகியோர் ஆவர்.

அவர்கள் செய்த குற்றமென்ன? மதத்தின் பிடியிலிருந்த இளைஞர்களைப் புரட்சிப் பாதைக்கு அழைத்து வந்த சீலர்கள்.

1928 ஆம் ஆண்டு சைமன் ஆணையத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணிக்குத் தலைமை தாங்கிய லாலாலஜபதி ராய் காவல்துறையின் காட்டுவிலங்காண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்தார்.

அந்தத் தாக்குதலின் தாக்கம் இந்த வீர இளைஞர்களைப் பழிவாங்கும் உணர்ச்சியின் பக்கம் தள்ளியது. அதன் விளைவு, லாகூரில் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த சாண்டர்ஸ் பகத்சிங்கால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த நேரத்தில் ஜவகர்லால் நேரு எழுதியது என்ன தெரியுமா? பகத்சிங் லாலாலஜபதியின் கவுரவத்தைக் காப்பாற்றினார் என்று எழுதினார்.

இன்னொரு முறை நாடாளுமன்றத்தில் எந்த உயிரும் பலியாகாத வண்ணம் வெடிகுண்டை வீசி, தாங்களே முன்வந்து கைதியாகி, அதன்மூலம் தங்கள் இலட்சியத்தைப் பரப்புவதற்கான பிரச்சார வாய்ப்பாக அதனைப் பயன்படுத்திக் கொண்டனர்.

சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட புரட்சி வாசகங்கள் அடங்கிய காகிதங்களை வீசி எறிந்தனர்.

நீதிமன்றத்தில் நின்றபோதும் கூனிக் குறுகவில்லை. வீரச் சிங்கமாக முழக்கமிட்டனர்.

காந்தியார் நினைத்திருந்தால் அவர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற ஒரு கருத்துண்டு.

புரட்சியாளர்களைத் தனிமைப்படுத்தி, காந்தி இர்வின் ஒப்பந்தம்மூலம் மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். காந்தியார் இதில் துரோகம் இழைத்துவிட்டார் என்று பேசப்பட்டது.

1931 மார்ச் 25 அன்று (பகத்சிங் தூக்கிலிடப்பட்ட இரு நாள்கள் கழித்து) கராச்சிக்குக் காந்தியார் வந்தபோது அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.

பகத்சிங் தூக்குக் கயிறை முத்தமிடும் நிலையில், குருவாகையைத் துதி செய் என்று கேட்டுக் கொண்டபோது, நான் இறுதிவரை நாத்திகன் என்று கூறி அதனை மறுத்துவிட்டார்.

இந்த வீரர்கள் தூக்கிலிடப்பட்டபோது தந்தை பெரியார் குடிஅரசு இதழில் தலையங்கம் தீட்டினார்.

பகத்சிங் தூக்கிலிடப் பட்டு உயிர் துறந்திருக்கா விட்டால், இந்த வெற்றி இவ் வளவு பிரபலத்தில் ஏற்படுவதற்கு ஆதாரமே இருந் திருக்காது. மேலும், பகத் சிங்கைத் தூக்கிலிடாமல் இருந்திருந்தால், காந்தியத் திற்கு இன்னமும் ஆக்கமும் ஏற்பட்டிருக்கும். சும்மாதானாக நோய் கொண்டு அவஸ்தைப்பட்டு செத்து சாம்பலாகியிருக்கவேண்டிய பகத்சிங்கு இந்திய மக்களுக்கு ஏன் உலக மக் களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத் தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு எவரும் அடைய முடியாத பெரும் பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மன மார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம்! பாராட்டு கிறோம்!! பாராட்டுகிறோம்!!! இதே சமயத்தில் நமது அர சாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களைப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாகத் தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம் என்று குடிஅரசில் (29.3.1931) எழுதினார் தந்தை பெரியார்!

தூக்குத் தண்டனை ஏற்றதன்மூலம் தம் புகழைத் தூக்கி நிறுத்திய நாத்திக சீலர்கள் வாழ்க!

-------------- மயிலாடன் அவர்கள் 23-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: