Search This Blog

5.3.10

சாமியார்களுக்கு வக்காலத்து வாங்கும் ராம.கோபாலன்கள்


வக்காலத்து வாங்கும் ராம.கோபாலன்கள்

பரமஹம்ச நித்யானந்தர் என்ற காவி வேடதாரியான இளைஞரின் கொக்கோக விளையாட்டு சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டது.

பொதுமக்களில் பக்தர்களே கிளர்ந்தெழுந்து இந்த சாமியாரின் ஆசிரமங்களைத் தாக்கி வருகின்றனர். கல்லூரி மாணவர் பட்டாளம் இந்தப் பேர்வழியின் உருவப் படங்களைத் தீயில் போட்டுப் பொசுக்குகிறது காலணியால் மொத்துகிறார்கள். பெண்களை வைத்து விளையாடுவதால் பெண்கள் கொந்தளித்துக் கிளம்பிவிட்டார்கள். கேவலமான முறையில் விமர்சிக்கிறார்கள்.

காவிக் கும்பலில் ஒரு சிலர் இதனால் இந்து மதத்துக்குக் கெட்ட பெயர் வருவதைத் திசை திருப்பும் நோக்கத்தோடு அவர்களுக்குச் சாமியாரின் நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாததுபோல காட்டிக் கொள்வதற்காக பொதுமக்களோடு சேர்ந்து அவர்களும் கண்டனக் குரலை எழுப்புகிறார்கள்.

ஆனால், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் மாநில அமைப்பாளராக இருக்கக் கூடிய திருவாளர் ராம.கோபாலனும், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் இதிலும்கூட வித்தியாசப்படுகிறார்கள்!

தன்னந்தனியாக விடப்பட்ட நித்யானந்த் என்கிற வாலிபனுக்கு ஆறுதல் தரும் வகையில் பேட்டி கொடுத்துள்ளனர்.

சுவாமி நித்யானந்த் புகழ் பெற்றவர். அவர்மீது இதுவரை எந்தவித புகாரும் இல்லை. இப்பொழுது வெளிவந்துள்ள குற்றச்சாற்றுபற்றி விசாரிக்காமலேயே தண்டிக்கப்பட்டுள்ளார். நிஜங்களைத் தேடவில்லை. இந்து விரோதத்தை வளர்க்கிறார்கள். இந்த விவகாரத்தில் உள்ள நோக்கம்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இராம.கோபாலய்யர்வாள் புலம்பித் தள்ளியிருக்கிறார்.

இதே பாணியில்தான் மாநில பா.ஜ.க. தலைவரும் கூறியிருக்கிறார்.

நித்யானந்த் பற்றி இவ்வளவு தெளிவாகத் தகவல்கள் வெளிவந்தும், விஞ்ஞானபூர்வமாக குட்டு உடைபட்ட நிலையிலும் அந்த வாலிபனைக் காப்பாற்றும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுவதைக் கவனிக்கவேண்டும்.

மதம் மக்களின் மரியாதையிலிருந்தும், மதிப்பிலிருந்தும் விலகிவிட்டால், இந்தக் கூட்டத்தின் பிழைப்பும், சுரண்டலும் புதைகுழிக்குப் போய்விடுமே!

இதுபோன்ற காவி வேட்டிகளின் பிரச்சாரத்தாலும், யுக்திகளாலும் தானே இந்து மதம் நடமாடிக் கொண்டிருக்கிறது. அதன் ஆணிவேருக்கே ஆபத்து என்றால், இவர்களால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? அதனால்தான், ஆசை வெட்கம் அறியாது என்பதுபோல துடிதுடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் பல பகுதிகளிலும் கிளைகளை ஏற்படுத்திக் கொண்டு பெரும்பணத்தைச் சுருட்டிக்கொண்டே இந்து மதத்தையும், கீதையையும் பரப்புகிறார்கள் அல்லவா!

நித்யானந்தத்தின் நித்திரையில்லாத சேஷ்டைகளை தொலைக்காட்சிப் பெட்டிமூலம் உலகம் முழுவதும் உள்ளவர்கள் அப்பட்டமாகப் பார்த்து முகம் சுழிக்கிறார்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அந்தக் கண்ணறாவியைப் பார்க்கக் கூசுகிறார்கள்.

இதிலிருந்து இந்து மதத்தை மீட்பது என்றால், எளிதா? நாத்திகர்களுக்கு இடம் கொடுத்தாயிற்றே அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைக் கை நழுவவிட்டு விடுவார்களா?

ஏற்கெனவே லோகக் குரு என்று கூறப்பட்ட சங்கராச்சாரியின் லீலா வினோதங்கள் இந்து மதத்தை சாக்கடைக் குழிக்குள் தள்ளிவிட்டன. இதில் கொலைக் குற்றம் வேறு. அதனைத் தொடர்ந்து அதே காஞ்சிபுரத்தில் கோயில் கர்ப்பக்கிரகத்திற்குள்ளேயே அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதனின் காமக் களியாட்டம்!

மதம் என்று சொல்லி, கோயில் என்று கூறி வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அடுக்கடுக்காக சாமியார்களின் லீலைகளும், கொள்ளைகளும், தகிடுதத்தங்களும் வந்துகொண்டேயிருக்கின்றன.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவரும் கொஞ்சம் வக்காலத்து வாங்கிப் பார்க்கிறார்கள்.

இதன்மூலம் இவர்களின் யோக்கியதையும்தான் அம்பலமாகுமே தவிர, பிள்ளை பிழைக்காது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

------------------"விடுதலை” தலையங்கம் 5-3-2010

0 comments: