Search This Blog

29.3.10

குலக்கல்வித் திட்டம்-தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருக்க பெரியார் அறிவிப்பு


குலக்கல்வி!

இந்த நாளை எந்த சூத்திரத் தமிழனும், பஞ்சமத் தமிழனும் மறக்கவே முடியாது, மறக்கவும் கூடாது.

இந்த நாளில்தான் (1954) நாகப்பட்டினத்திலிருந்து, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் படையொன்று சென்னைக்குப் புறப்பட்டது.

என்ன படை அது? குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படைதான் அது. நாகப்பட்டினத்தில் 1954 மார்ச் 27, 28 ஆகிய நாள்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்தப் படை புறப்பட்டது.

1952 இல் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்தார். வந்ததும், வராததுமாக அவர் செய்த ஒரு காரியம் அரை நேரம் படிப்பு; அரை நேரம் அவரவர்களின் குலத்தொழில் என்ற ஒரு கல்வித் திட்டத்தை அறிவித்தார். 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினார்.

இப்பொழுது மட்டுமல்ல, 1937 இல் அன்றைய சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோதும்கூட 2500 கிராமப்புறப் பள்ளிகளுக்கு மூடுவிழா செய்தார்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பதுதானே பார்ப்பனர்களின் மனுதர்ம சாஸ்திரம்?

1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார் (ராஜாஜி) எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது? நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இதோபதேசம் செய்தார்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பெரும் புயலைக் கிளப்பினார் தந்தை பெரியார். 1954 சனவரி 24 இல் டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டினைக் கூட்டி, அனல் பறக்கும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தால் 50 விழுக்காடு மாணவர்களும், 70 விழுக்காடு மாணவிகளும் படிப்பை நிறுத்திய அதிர்ச்சிக்கு உரிய தகவலை தந்தை பெரியார் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்துதான் நாகப்பட்டினத்தில் 1954 மார்ச் 27, 28 இல் மாநாடு கூட்டி, மார்ச் 29 இல் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப்படை நாகையிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட முடிவு செய்யப்பட்டது.

ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால், கழகத் தோழர்களே, தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருங்கள். நாள் குறிப்பிடுவேன், அக்ரகாரத்திற்குத் தீ வையுங்கள் என்று அபாய அறிவிப்பைச் செய்தார்!

நாகையிலிருந்து படையும் புறப்பட்டது. ஆச்சாரியாரால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை; உடல்நலம் சரியில்லை என்று பதவியிலிருந்து ஓடினார் (30.3.1954). தந்தை பெரியார் அவர்களின் ஆதரவோடு காமராசர் முதலமைச்சர் ஆனார் (14.4.1954). ஏப்ரல் 18 இல் குலக்கல்வித் திட்டத்தின் கழுத்தில் கத்தியை வைத்துத் தீர்த்துக் கட்டினார். கல்வி வள்ளலாக மாறினார் காமராசர்.

அன்றைக்குக் குலக்கல்வித் திட்டம் தந்தை பெரியாரால், கழகத்தால் ஒழிக்கப்-படவில்லையானால், டாக்டர்களையும், பொறியாளர்களையும் தமிழர்களில் காண முடியுமா? நன்றியோடு தமிழர்களே, சிந்திப்பீர்!

--------------- மயிலாடன் அவர்கள் 29-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: