Search This Blog

1.3.10

பெரியார் தேவைப்படுகிறார்!

"சமூக சீர்திருத்தத் துறையைத் தட்டி எழுப்புக"

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் இருஞ்சிறைக் கிராமம் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சலவை செய்து கொடுப்பதில்லையாம்; முடிவெட்டுவதில்லையாம்.

பிரச்சினை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இப்பொழுது அங்கு என்ன நிலைமை?

தந்தை பெரியார் நினைவு சமத்துவ முடிதிருத்தகம்.

தந்தை பெரியார் நினைவு சமத்துவ முடிதிருத்தும் நிலையம்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் முத்துராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவர்தான் அனைத்து ஜாதியினருக்கும் முடிதிருத்த ஒப்புக்கொண்டவர். கமுதியைச் சேர்ந்த முத்துமாரி என்பவர்தான் அனைத்து ஜாதியினரின் துணிகளையும் சலவை செய்ய முன்வந்துள்ளார்.

அந்த இரு தோழர்களுக்கும் ஒரு சபாஷ் போட்டு இங்கிருந்தே மானசீகமாகக் கைகுலுக்குவோம்.

அதுவும் சமத்துவச் சிந்தனைக்குப் பொருத்தமாக தந்தை பெரியார் அவர்களின் பெயரைத் தேர்ந்தெடுத்து தங்கள் நிலையங்களுக்குப் பெயர் சூட்டியுள்ளார்களே, அந்தப் பகுத்தறிவுச் சிந்தனைக்காக மீண்டும் ஒருமுறை கைதட்டி கைலாகு கொடுத்து கண்ணியத்துடன் வரவேற்போம்!

வாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்காக மூச்சை வைத்துக்கொண்டிருந்த உன்னதத் தலைவர் அவர்.

தன்னை விருந்துக்கு அழைத்த தாழ்த்தப்பட்ட தோழரின் வீட்டுக்குச் சென்று மாட்டுக் கொட்டிலில் சாணிக் குவியலுக்கும் மேலே விரிக்கப்பட்டிருந்த சாக்குப் படுதாவில் அமர்ந்து விருந்துண்டு, அழைத்த தோழர்களின் அக முக மகிழ்ச்சியைக் கண்டுகளித்த தலைவர் அவர்.

வைக்கம் வரை சென்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமைப் போர் நடத்தி, மகாராணியாரின் மதியையும், மனத்தையும் கீழே இறங்கச் செய்து வெற்றி முரசு கொட்டிய வைக்கம் வீரர் அவர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் ஜாதியை அடைகாக்கிறது என்று சொல்லி அந்தப் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தி, உலகத்தின் விரிந்த கண்களை தன் பக்கம் ஈர்த்த ஜாதி ஒழிப்புப் போரின் தளகர்த்தர் அய்யா!

ஆம், அவர் பெயரால் நிலையங்களை நிறுவுவது சிறந்ததுதான். அதைவிட அவரின் சிந்தனைகளை, சமத்துவக் கொள்கைகளை அம்மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் நிரந்தரத் தீர்வுக்கான திறவுகோலாகும். பிரச்சாரம், போராட்டம் என்ற பீரங்கிகளால் வருணாசிரமத்தின், சனாதனத்தின் வேரினைச் சுட்டுப் பொசுக்கிய சூரிய மண்டலம் அவர்.

மானமிகு கலைஞர் அவர்கள் பெரியார் நினைவு சமத்துவப்புரம் கண்டதே ஜாதியின் சல்லி வேர்களையும், ஆணிவேர்களையும் அடிதெரியாமல் அழித்து முடிக்கத்தானே!

தமிழ்நாடே பெரியார் சமத்துவபுரங்களாக மாறவேண்டும் என்ற வேட்கையின் முன்மாதிரித் திட்டம் இது. இந்தியத் துணைக் கண்டத்துக்கே ஒளி கொடுக்கும் தூண்டா விளக்கும் இதுவே!

இப்பொழுது ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் தந்தை பெரியார் சிலையினை நிறுவி, மக்கள் மத்தியில் சிந்தனைத் தூண்டலுக்கும் ஒரு வழி ஏற்படுத்தியுள்ளார்.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய கிராமங்களில் தீண்டாமை தன் தீய தலையைத் தூக்கி ரணகளம் நடத்திய தீமைக்கு மூடு விழா நடத்தி, பத்தாண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த ஊராட்சித் தேர்தல்களை நடத்தச் செய்து, தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை தலைநகருக்குக் கம்பீரமாக நடைபோட்டு வரச் செய்த பெரியாரின் பெருமைமிக்க சீடர் மானமிகு கலைஞர் அவர்கள்.

இருஞ்சிறை போன்ற கிராமங்களைக் கணக்கெடுத்து, அந்தப் பகுதியில் எல்லாம் தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கருத்துகளைப் பரப்பிட உரியது செய்யலாமே! திராவிடர் கழகம் தயார்! தயார்!

இந்தியத் துணைக் கண்டத்திலேயே எடுத்துக்காட்டாக சமூக சீர்திருத்தத் துறையைக் கொண்டு வந்த சாதனையும், கலைஞர் அவர்களையே சாரும்.

அந்தத் துறையைக் கொஞ்சம் தட்டி எழுப்பி துரிதமாகப் பணியாற்றச் செய்வது அவசியம்!

இருஞ்சிறைகள், இருட்டுச்சிறையிலிருந்து விடுபட்டு, தந்தை பெரியார் காண விரும்பிய வெளிச்ச உலகிற்குச் சிறகடித்துப் பறந்துவிடுமே!

மானமிகு கலைஞர் அவர்கள் சமூக சீர்திருத்தத் துறை பக்கம் தன் பகுத்தறிவுக் கண்களைத் திருப்புவார்களாக!


--------------------கருஞ்சட்டை எழுதிய கட்டுரை-”விடுதலை” 1-3-2010

2 comments:

Jawahar said...

கிராமங்களில் இன்னமும் இந்த அவலம் நீடிப்பது வருத்தத்துக்குரியது.

ஏற்கனவே தீண்டாமை ஒழிப்புச் சட்டம் அமலில் இருக்கிறது, நீதி மன்றம் என்ன சொல்லப் போகிறது? இது தவறு, இவ்வளவு ரூபாய் அபராதம் அல்லது இத்தனைக்காலம் சிறைத் தண்டனை என்று சொல்லப் போகிறது.

மனமாற்றத்தைக் கொண்டு வருவது எப்படி என்றுதான் யோசிக்க வேண்டும்.

முடி திருத்தவும், துணி வெளுக்கவும் முன் வந்த நல்ல உள்ளங்களைப் பாராட்டுவதில் நானும் இணைகிறேன்.

http://kgjawarlal.wordpress.com

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Jawahar