Search This Blog

4.9.09

புதிய தமிழகம் உருவாக பார்ப்பனியம் அழிய வேண்டும்!


(போர்வாள்படப்பிடிப்பு

அந்த நாள் என்று வரும்?

தமிழ்நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் போராட்டம்

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - தந்தை பெரியார் அவர்களின் பணிகள் குறித்து போர்வாள் தீட்டிய அரிய கட்டுரைக் கருவூலம் இது
)


1924 இல் ஆரியத்தின் திருவிளையாடல்

கதர் போர்ட், தென்னாட்டில் கதர் நிர்வாகம் பற்றிய அலுவல்களைக் கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. அதன் செயலாளராய் இருந்த சிறீமான் சந்தானம் என்பவர் பிரமன் முகத்துதித்த வகுப்பினர். அந்த நிலையத்தின் அலுவல்கள் அத்தனைக்கும் ஆரியரையே நியமித்தார் வரிசை வரிசையாக. கண்டார் பெரியார். ஏதோ தற்செயலாக, நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் ஆரியராக உள்ளனர் போலும் என்றெண்ணினார் முதலில். பிறகு அதுவே நித்திய நிகழ்ச்சியாக இருப்பதைக் கண்டதும் கொதித்தெழுந்து கேட்டார், என்ன சந்தானம், ஏன் இப்படி என்று. தக்க பிராமணல்லாதார் கிடைக்கவில்லை. கிடைக்கும் பிராமணரல்லாதார்க்கோ தகுதியும் திறமையுமில்லை என்று விடை கூறினார் சந்தானம். பெரியார் நம்ப வில்லை இதனை. அலசிப் பார்த்தார் உண்மைகளை. உத்தியோக நியமனங்களை ஆராய்ந்து பார்த்தார். ஆரியர்களே அடுக்கடுக்காக, வரிசை வரிசையாக, வேண்டுமென்றே, நெஞ்சுத் துணிவுடன் நியமிக்கப் படுகின்றனர் என்பதை உணர்ந்தார். ஓகோ! அந்த ஜஸ்டிசுகள் சொல்வது மெய்தான் போலிருக்கிறது என்றெண்ணினார். எண்ணியது மட்டுமா, இந்தப் போக்கை இனி நீர் வளரவிடக் கூடாது. பிராமணர்களையே வரிசையாக நியமிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார் செயலாளர் சந்தானத்திற்கு, தான் தலைவர் என்ற முறையில். சந்தானம் உடனே காரியதரிசி பதவியை ராஜினாமா செய்தார். வழக்கு காந்தியாரிடம் சென்றது. விசாரணைக்கு! அப்போதுதான் காந்தியார் நாய்க்கர்ஜீயை (பெரியாரை காந்தியார் அப்படித்தான் குறிப்பிட்டு வந்தார் அந்த நாளில்) அழைத்து ஏன் இந்த சிக்கலென்று கேட்டார். அதற்குப் பெரியார் கொடுத்த பதில், காந்தியார் அளித்த தீர்ப்பு, ஆச்சாரியார் செய்த வியாக்யானம், உண்மை நிலையைக் கண்டு சங்கர்லால் பாங்கர் திடுக்கிட்டது இவை அத்தனையும் உள்ளடக்கியதுதான் இக்கட்டுரை துவக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள உரையாடல்.

தகுதியும் திறமையும் ஒரு கூட்டத்தார்க்கு மட்டுமே உரிய சொந்த சொத்து என்று இன்று கூறப் படுவது போலத்தான் அன்றும் கூறப்பட்டது என்றால் சாதாரண மனிதர்களால் அல்ல.அன்பர் ஆச்சாரியார் போன்ற மதிப்பு மிக்க தேசியத் தலைவர்களால்! தகுதியையும் திறமையையும் காட்டிக் காட்டி ஆரியம் திராவிடத்தை ஏய்த்த கதை புதிதல்ல - பழையது; மிகப் பழையது. தம் இனத்தவரே அறிவின் திருவுடையார்; பிறரெல்லாம் அத்துணை கூர்மதி அமையாதார் என்று ஆரியர் நெஞ்சு நிமிர்ந்து சொல்லி வருகின்றனர் இன்று நேற்றிலிருந்தல்ல. பலப்பல ஆண்டுகளாக, ஒரு துறையில் இரு துறையில் அல்ல. எல்லாத் துறைகளிலும், கதர் போர்ட் நிர்வாகம் இந்த விபரீத வாதத்திற்கு இரையான பரிதாப நிகழ்ச்சிகளில் ஒன்று. பெரியாரின் உள்ளத்தை ஒரு குலுக்கு குலுக்கி விட்டது இந்த நிகழ்ச்சி. அதுவரையில் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று பிரித்துப் பார்க்க ஒவ்வாத பெரியாரை பிராமணர்களென்றும் பிராமணர் அல்லாதார் என்றும் உள்ள பாகுபாடுகளைத் தன் உள்ளமென்னும் உலகத்தில் உலவா வண்ணம் துரத்தியடித்த பெரியாரை இந்தியாவைச் சுரண்டி வந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டுவதிலேயே தன் உள்ளம், உரை, செயல் அத்தனையையும் பறிகொடுத்துவிட்ட பெரியாரை என்ன இருந்தாலுமே இந்தப் பேத புத்தி ஆகுமோ என்று ஜஸ்டிசுகளை நோக்கி கேலிக்கவிதை பாடிவந்த பெரியாரை முதன்முதல் சிந்திக்க வைத்தது இந்தக் கதர் போர்ட் நிகழ்ச்சி.

பார்ப்பனியத்தின் சலசலப்பு :
பெரியார் உள்ளத்தில் சிந்தனை


சந்தானத்திற்கு ஆரிய உணர்ச்சியா! நான் உள்ளன்போடு நேசித்து வந்த என்னருமை நண்பர் இராசகோபாலாச்சாரியர் உள்ளத்திலும் பிராமணீய உணர்ச்சி இத்துணை ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறதா! ஆரியம் உண்மையிலேயே இவ்வளவு சூழ்ச்சியும் கரவும் வஞ்சமும் நச்சுத் தன்மையும் நிறைந்ததா! ஒரு குலத்துக்கொரு நீதி என்றுரைக்கும் மனுநீதி இன்னும் மாயவில்லையா! காங்கிரசிலும் இந்த அநீதியா! எல்லாரும் ஓர் குலம்; எல்லாரும் ஓர் இனம்; எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று கவி பாடும் கலைவாணர்களும், அதைக் காட்டி உரையாடும் நாவாணர்களும் நனிநிறைந்த தேசிய இயக்கத்திலும் இது இருக்கிறதா! பெரியார் இது போல எண்ணலானார், கதர்போர்ட் பிராமண போர்ட் என உருமாறிய விந்தை கண்டு. முதன் முதலாக அவருடைய உள்ளத்தில், பிராமணர் - அல்லாதார் என்ற இரு சொற்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி, மிகப் பயங்கரமான, மிக மிக ஆழமான, பலப்பல நூற்றாண்டுகளாகக் கொஞ்சமும் குறையாது உள்ள இடைவெளியின் சாயல் படர்ந்தது.முதலில் லேசாக; பிறகு கொஞ்சம் அழுத்தமாக; பிறகு மேலும் மேலும் அழுத்தமாக.
*****************

மகரிஷி வ.வே.சு.அய்யர் எல்லோருடைய மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்றவர். சீமையில் வெள்ளைக்காரர்கட்கு எதிராகப் பயங்கரப் புரட்சி செய்யத் திட்டமிட்டு வந்த வீரசவர்க்காருக்கு உற்ற துணைவராகவும் உரிய நண்பராகவும் இருந்தவர். கலை பல பயின்றவர்; திருக்குறள் உணர்ந்தவர்; அறிஞர், விவேகி, வீரர், தீரர் என்றெல்லாம் புகழுரைகள் சூட்டப்பட்டவர். அப்படிப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சேரன்மா தேவியில் பரத்துவாச ஆசிரமம் என்ற பெயரில் தேச பக்தர்களையும், தேசிய வீரர்களையும் தயாரிப்பதற்கு என்பதாகக் காரணம் காட்டி ஒரு குருகுலம் அமைக்கிறார் என்ற சேதி கேட்டபோது தமிழ் நாட்டுக் காங்கிரஸ் துள்ளிக் குதித்தது, மகரிஷியின் வீரம், தியாகம், மேல்நாட்டில் வாழ்ந்ததால் பெற்றஅநுபவம், ஆழ்ந்த கலைப் பயிற்சி, ஆங்கில அறிவு, பயங்கரப் புரட்சியில் ஏற்பட்ட பழக்கம் இத்தனையும் குருகுலத்தை எத்தனை வளப்படுத்தும் என்று எண்ணி எண்ணி தேசிய வட்டாரம் களிப்புக் கடலில் குதித்துக் குதித்துக் கூத்தாடிற்று. அவர் உதவித் தொகை வேண்டுமென்று கேட்டதும் தமிழ் மாகாண காங்கிரஸ் 10,000 ரூபா நன்கொடை தருவதாக உடனே பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டது.

அப்போது தமிழ் மாகாண காங்கிரசிற்கு இரண்டு கூட்டுக் காரியதரிசிகள். ஒருவர் பெரியார், மற்றவர் கே.எஸ்.சுப்பிரமணிய அய்யர் என்பவர். பெரியாரின் பணி செக்கிலே கையெழுத்திடுவது. பிற கடிதங்கள் ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு மற்ற செயலாளருக்கு. வ.வே.சு.அய்யர், மாகாண காங்கிரஸ் தீர்மானித்தபடி என் குருகுலத்திற்கு தரவேண்டிய நன்கொடையைத் தாரும் என்று பெரியாரிடம் கேட்டபோது, பெரியார், தாராளமாகத் தருகிறேன். அதற்கென்ன? நீங்கள் குருகுலம் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? அதனுடைய சட்ட திட்டங்கள், நடைமுறை விதிகள் முதலியவற்றைக் கொண்டு வாரும்; அவற்றைப் பதிவு செய்து கொண்டு பணம் தருகிறேன் என்று சொன்னார். அவர் சரி என்று சொல்லிவிட்டு, இன்னொரு செயலாளராக சுப்பிரமணிய அய்யரிடம் சென்று, பெரியாருக்குத் தெரியாமல் ரூபா 5,000 க்கு செக் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

குருகுலப் போராட்டம் மூட்டிவிட்ட தீ

இதற்கு இடையில் வ.வே.சு. அய்யரின் குருகுலம் துவக்கப்பட்டுவிட்டது. துவக்கிய சில நாட்களுக்குள் அங்கு பிராமணர்- பிராமணரல்லாதார் வேற்றுமை மிகவும் பாராட்டப்படுவதாகத் தமிழ்நாடு முழுவதும் ஒரு சேதி காட்டுத்தீப் போல பரவிற்று. தமிழகம் முழுவதும் அதே பேச்சு. அரசியல் உணர்வுடையார் அனைவர் உரையாடலிலும் குருகுல வேற்றுமையைப் பற்றிய கருத்துப் பரிமாறல். எங்கும் எவரும் இதைப் பற்றியே சிந்திக்கவும் பேசவும் எழுதவும் முனைந்தனர்.

ஒரு நாள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (ஆமாம்! இப்போது சென்னை மாகாண முதலமைச்சராய் உள்ளவர்தான்) பெரியாரைக் கூப்பிட்டு, பரத்வாஜ குருகுலத்தில் பயின்றால் நல்ல பண்பாடும், அறிவு வளர்ச்சியும், சகோதர நேயமும், ஜாதி வேற்றுமையற்ற பரந்த உள்ளமும் ஏற்படும் என்று கருதி தன் மகனை அங்குப் பயிலும் பொருட்டுத் தான் அனுப்பியதையும், அவன் தன்னை ஒரு பிராமணர் அல்லாதவன் என்ற காரணத்தற்காக அங்கு இழிவாகக் கருதி பிராமணப் பிள்ளைகள் உண்ணாத இடத்தில் இருக்க வைத்து உணவு கொடுத்ததாகத் தன்னிடம் தெரிவித்ததையும் விளக்கமாக எடுத்துச் சொல்லி, இந்த அநி
ய-யத்திற்கு நாம் ஒரு பரிகாரம் தேட வேண்டாமா என்று மனம் வருந்திக் கேட்டார்.

மகரிஷி என்றும், சிறந்த அறிஞர் என்றும், கலைஞர், தியாகி, புரட்சி வீரர் என்றும், அஞ்சாமையின் சின்னம் என்றுமெல்லாம் போற்றப் பட்டு வந்த வ.வே.சு. இந்த வேற்றுமையைப் பாராட்டுவதில் முனைந்து நிற்கிறார் என்று அறிந்த போது பெரியார் திடுக்கிட்டுப் போய் விட்டார். அவரைப் போலவே, காங்கிரசில், அதுபோது, இரவு பகல் எனப் பாராது, ஓய்வு ஒழிவு என்பது கருதாது, அலைச்சல் திரிச்சல் என்பன அறியாது, சுழலும் சூறாவளி என நாடெங்கும் சுழன்று, சுழன்று பணியாற்றி வந்த திரு வி.கலி.யாணசுந்தரனாரும் டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் நெஞ்சம் துணுக்குற்றனர். நாயுடு _நாயக்கர் - முதலியார் என்று தமிழகத்தால் செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்த இம் மூவரும் குருகுல சம்பவத்தால் பாறையில் மோதிய மரக் கலமென மனங் கலங்கிப் போயினர். காங்கிரசுக்கு வெளியே பெருத்த ஆரவாரம் புரிந்து வந்த ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாத நச்சுக் கருத்தினர் என்று அன்று வரை எள்ளி நகையாடி வந்த இவர்கள் உள்ளம் இச்சேதி கேட்டதும் இவர்களையே எள்ளி நகையாடத் தொடங்கிற்று. ஆம்! முதன் முதலாக, காங்கிரசில் பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் என்ற வேற்றுமை வித்து ஊன்றப்பட்டது. வ.வே.சு. வின் குருகுல அமைப்பால் அது நடத்தப்பட்ட முறையால் அதனால் எழுந்த புகைச்சலால் புகைச்சல் தமிழரிடையே கிளம்பிய மனக்கொதிப்பால்!

சில நாள் பொறுத்து, டாக்டர் டி.எஸ்.எஸ். இராஜன் வீட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி கூடியபோது, முன்னர் கமிட்டியால் ஒப்புக் கொள்ளப் பட்ட தீர்மானப்படி 10,000 ரூபா நன்கொடை தர வேண்டியதில் ரூபாய் 5,000 கொடுக்கப்பட்டது. போக மிச்சப் பணம் இன்னும் தரப்படவில்லை என்று வ.வே.சு. அய்யரின் நண்பரான ஓர் ஆரியர் புகார் செய்தார். பெரியார் வெகுண்டெழுந்து, முன்வாங்கிக் கொண்ட 5,000 ரூபாயே முறை தவறுதலாகவும், தன் விருப்பத்திற்கு மாறாகவும், தனக்குத் தெரியாமலும், நேர்மையற்ற வழியில் வாங்கப்பட்டதென்பதை எடுத்துரைத்தார்.

அய்யர் குருகுலத்தில் பிராமணர்க்கு உயர்வும் அல்லாதார்க்குத் தாழ்வும் காட்டப்படுவதாக ஏராளமான தோழர்கள் எனக்கும் கடிதம் எழுதி உள்ளனர், ஏன் தமிழ்நாடு இதழில் வெளியிட என்று உடனே குறிப்பிட்டார் டாக்டர் வரதராஜுலு நாயுடு. ஓமந்தூர் ரெட்டியார் எழுந்து, சாப்பாட்டில் மட்டுமல்ல, படிப்பு சொல்வதிலும் வேறுபாடு உள்ளது; பார்ப்பனருக்கு சமஸ்கிருதக் கல்வியும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்க் கல்வியும் மட்டும்தான் கற்பிக்கப்படுகின்றன என்று கூறினார். குருகுலத்தில் ஆசிரியராய் உள்ள மற்றொருவர் எழுந்து தமிழ்ப் பிள்-ளைகள் வேத சுலோகங்களைச் சொல்லக்கூடாது என்பதாக ஒரு தடை இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வ.வே.சு. அய்யர் வைதிகர்கள் உள்ள இடத்தில் நான் என்ன செய்வது என்பதாக சமாதானம் சொன்னாரே தவிர இப்படியெல்லாம் இல்லை என்பதை மறுத்துரைக்கவில்லை என்பதையும், ஆச்சாரியாரும், டாக்டர் ராஜனும் இந்தப் பிரச்சினையிலும் வ.வே.சு. அய்யர் பக்கமே நிற்பதையும் கண்ட பெரியார் இனம் இனத்தோடு என்பது இதுதான் போலும் என்பதை நன்குணர்ந்து கொண்டு, திரு. வி.க., டாக்டர் நாயுடு இருவரிடமும் கலந்து பேசிக் கொண்டு, இந்த மனுநீதி குருகுலத்தை ஒழித்தே தீர்வது என்ற திட்டமான முடிவுக்கு வந்தார்.

திரு.வி.க. நவசக்தியிலும் டாக்டர் நாயுடு தமிழ்நாட்டிலும் குருகுலத்தைக் கண்டித்தனர். பெரியாரும் நாயுடுவும் தமிழகத்தைச் சுற்றிச்சுற்றி வலம் வந்து குருகுலத்திற்கு இருந்து வந்த ஆதரவைக் குலைத்தனர். தேசிய குரு குலத்திற்குப் பணம் தருவது தேசிய பாவம் என்று டாக்டர் நாயுடு முழங்கினார். குருகுலம் ஒழிந்தது. ஆனால் அது தமிழ் நாட்டு அரசியலில் மூட்டிவிட்ட தீ ஒழியவில்லை வளர்ந்தது. மேலும் மேலும் வளர்ந்தது. வளர்ந்து வளர்ந்து, பெரிய பெரிய அநீதிகளையெல்லாம் சுட்டுப் பொசுக்கிற்று. பொசுக்குகிறது இன்றும்.


*********************

சதிச் செயல்கள் சாய்ந்தன - நீதியும் நேர்மையும் நிலைத்தது

1924 இல் திருச்சியில் கூடிய தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பெரியார், காங்கிரஸ் செயலாளராகவும் கொஞ்ச நாள் அதன் இடைக்காலத் தலைவராகவும் இருந்து செய்து வந்த வேலையைப் பாராட்டி ஒரு தீர்மானம் செய்யப்பட்டு, அந்த ஆண்டு திருவண்ணாமலையில் கூடும் மாகாண காங்கிரசுக்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத் தீர்மானம் நிறைவேறியது கண்டு மனம் குமுறிய வ.வே.சு. அய்யர் பெரியார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார் - அப்போதே, அதே இடத்தில்! அது கண்ட திரு.வி.க. பாழும் பார்ப்பனர் - அல்லாதார் என்ற உணர்ச்சியைத் தமிழ்நாடு காங்கிரசில் வ.வே.சு. புகுத்தி விட்டமை கண்டு வருந்துகிறேன். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிற்பாடு, இன்றுதான் ஒரு பார்ப்பனரல்லாதார் மாகாணக் காங்கிரஸ் தலைவரானார். அவர் பண்புகளைப் பாராட்டிப் பேசிய பத்து விநாடிகளுக்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தவறு என்று இடித்துரைத்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றது. ஆனால் பிராமணர் - அல்லாதார் உணர்ச்சி வலுத்தது.

*************************

1925 இல் டாக்டர் வரதராஜுலு நாயுடு தமிழ் மாகாண காங்கிரஸ் தலைவர். அவர் ஒரு தமிழர் என்ற காரணத்தை உள்ளத்திற் கொண்டு அவர் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது ஆரியரால். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், சி.ஆர். இருவரும் அதை ஆதரித்தனர். ஆனால் பெரியார் அவர்கள் உடனேஅதை எதிர்த்துப் பேசித் தோற்கடித்தார். பிறகு டாக்டர் நாயுடு மீது நம்பிக்கை இருப்பதாக ஒரு தீர்மானம் பெரியாரால் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களிலும் ஆரிய உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பக்கமாகவும், திராவிட உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பக்கமுமாக வாக்களித்தனர்.

அதோடு வ.வே.சு. அய்யர் குருகுலத்தைக் கண்டித்தும், அங்கு காட்டப்படும் ஜாதி வேறுபாடு தொலைய வேண்டுமென்பதை வலியுறுத்தியும், தீண்டாமையோடு ஜாதிப் பாகுபாடும் தொலைய வேண்டுமென்பதை வலியுறுத்தியும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனே சி.ஆர்., டாக்டர் ராஜன், டாக்டர் சாமிநாத சாஸ்திரி, கே. சந்தானம், என்.எஸ்.வரதாச்சாரி முதலிய பதின்மர். பதின்மரும் ஒரே இனத்தவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்தே ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினர்.

காங்கிரசில் நிகழ்ந்த ஆரிய - திராவிடப் போரின் மற்றுமோர் அத்தியாயம் அது.


*******************************

இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா பனகால் அரசரால் - ஜஸ்டிஸ் அமைச்சர் குழுவினால் - கொண்டு வரப்பட்டது. ஏறத்தாழ இதே காலத்தில், இதனால் மதத்திற்கு ஆபத்து! ஆண்டவனுக்கு ஆபத்து! என்று அபாயக் குரல் எழுப்பினர் ஆரியர் அனைவரும் காங்கிரஸ் பிராமணர் உட்பட. மசோதா ஜஸ்டிஸ் கட்சியினரால் கொண்டு வரப்படுகிறது என்றாலும் இதைக் கண்ட பெரியார், கட்சி வேற்றுமை பாராட்டாது பொதுமக்கள் நன்மைக்கான இம்மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார். டாக்டர் நாயுடுவும், திரு வி.க.வும் இதனை ஆதரித்தனர். பார்ப்பனர் அனைவரும் கட்சி வேற்றுமையின்றி மசோதாவை எதிர்க்கவும், அல்லாதார் அனைவரும் அதே போல கட்சித் திரைகளைக் கிழித்துக் கொண்டு அதனை ஆதரிக்கவுமான நிலை ஏற்பட்டது. காங்கிரசில் நிகழ்ந்த பிராமணர் -அல்லாதார் போராட்டத்தின் மற்றொரு பகுதி இது.

******************************

காங்கிரசில் தமிழர்களுக்கு பார்ப்பனர்கள் மீது வெகு வேகமாக வளர்ந்து வரும் அதிருப்தியை அடியோடு ஒழிக்க வேண்டுமானால், அந்தந்த வகுப்புகளின் தொகைக்கேற்ப அவரவர்கட்கு உரிமை தரப்படவேண்டும். அதாவது வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் அதிகார பூர்வமாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பெரியார் இந்த நிகழ்ச்சிகளின் பின்பு வற்புறுத்தலானார்.

1925 இல் காஞ்சிபுரத்தில் தமிழ் மாகாண காங்கிரஸ் கூடிற்று. பெரியார் வகுப்பு வாரித் தீர்மானத்தை அங்கு கொண்டு வந்தார். அது பல்வேறு சூழ்ச்சிகளின் விளைவாக ஒதுக்கப்பட்டது.

உடனே பெரியார் மாநாட்டில் எழுந்து, இன்று காங்கிரஸ் என் சொல்லை ஏற்க மறுக்-கிறது. ஆனால் என்றேனும் ஒரு நாள் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவமே வகுப்புப் பூசலைத் தீர்ப்பதற்குரிய சரியான வழி என்பதை அது உணரவே போகிறது. பார்ப்பனியம் காங்கிரசிலும் வெளியிலும் விளைவித்து வரும் கொடுமைகளை நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதே இனி என் வேலை என்று சூளுரைத்து விட்டு வெளியேறினார்.

உண்மை உலவுகிறது - 22 ஆண்டுகளுக்குப் பின்

அவர் 1925 இல் உரைத்த அந்த நாளும் வந்தது - 1947 நவம்பர் 20 இல்,
இடையே உள்ள காலப் பள்ளம் 22 ஆண்டுகள்! ஆம், 22 ஆண்டுகள் தேவைப்பட்டது உண்மை உலவுவதற்கு!

20.11.1927 இல் வெளியான சென்னை காங்கிரஸ் அரசியலார் அறிக்கை இது:

இதுவரையில் உள்ள வகுப்பு விகிதாசர உத்தரவுப் படி காலியாகிற ஒவ்வொரு 12 ஸ்தானங்களுக்கும் பிராமணல்லாதார் 5, பிராமணர் 2, முகமதியர் 2, ஆங்கிலோ இந்தியர், கிறித்துவர் 2, அரிஜன் 1 என்ற முறையில் வழங்கப்படும்.

ஹரிஜனங்களுக்குப் போதுமான படியும், பிராமணல்லாதாரில் பிற்போக்கானவர்க்கும், பதவிகள் கிடைப்பதில்லை என்பதனால் சர்க்கார் இந்த வகுப்புவாரி உத்தரவைப் பின்கண்டவாறு மாற்றுகிறது. இனி காலியாகிற ஒவ்வொரு 14 ஸ்தானங்களுக்கும் கீழ்க்கண்ட முறைப்படி ஆளெடுக்கப்படும்.

1. பிராமணரல்லாதார்
2. ஹரிஜன்
3. பிற்போக்கு பிராமணரல்லாதார்
4. பிராமணரல்லாதார்
5. பிராமணர்
6. பிராமணரல்லாதார்
7. முசல்மான்
8. பிராமணரல்லாதார்
9. ஆங்கிலோ இந்தியர், கிறிஸ்தவர்
10. பிராமணரல்லாதார்
11. ஹரிஜன்
12. பிராமணரல்லாதார்
13. பிராமணர்
14. பிற்போக்கு பிராமணரல்லாதார்


புதிய உத்தரவு மத்திய சர்க்காரின் விகிதாசார ஏற்பாட்டுக்கும், ஜனத் தொகைக்கும் ஏற்றதாகப் பொதுவாக இருக்கிறதென்று தெரிவிக்கப்படுகிறது.

**************************
காங்கிரஸ் சர்க்கார் பழைய விகிதாசாரத்தை மாற்றி புதிய விகிதாசாரத் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறது. அதாவது பழைய விகிதாசாரம் தவறு என்று எண்ணிற்றே தவிர, காங்கிரஸ் சர்க்கார், விகிதாச்சாரப்படி பதவிகளை வழங்கும் முறையே தவறு என்று எண்ணவில்லை. வழங்கும் அளவு தவறு என்றதே தவிர வழங்கும் முறை தவறு என்று கூறவில்லை. ஆகவே, வழங்கும் முறையை வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்பவே பதவிகளை வழங்கவேண்டுமென்ற திட்டத்தை வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ற தத்துவத்தை அது ஒப்புக்கொண்டது என்று பொருள்.

காங்கிரஸ் சர்க்கார் இன்று அந்தந்த வகுப்புகளுக்குத் தந்துள்ள உரிமைகளின் அளவு சரியா? சரியில்லை என்றே நாம் கருதுகிறோம். ஆனால் அது வேறு பிரச்சினை.

அந்தந்த வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப உத்தியோகங்களின் எண்ணிக்கை வகுக்கப்பட்டு இருக்கிறதா? இல்லை. பார்ப்பனர்கட்கு உரியதைவிட அய்ந்து மடங்கு அதிகமாகவும், திராவிடர் ஆதிதிராவிடர் முசுலிம்-கள் ஆகியோருக்கு உரியதிலும் பார்க்க மிகக் குறைவாகவும் விகிதாசாரம் உள்ளது. ஆனால் அதுவும் வேறு பிரச்சினை. ஆனால், காங்கிரஸ் சர்க்கார் வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்பவே பதவிகளை வழங்கவேண்டும் என்ற தத்துவத்தை 1925 இல் பெரியார், காங்கிரசை ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்திய, ஆனால், காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுத்த தத்துவத்தை - இன்று 1947 இல் மனமுவந்து ஒப்புக்கொள்வது கண்டு நாம் மிக மகிழ்கிறோம்.

பெரியார் 1925 இல், 1947 அய்க் கண்டார். காங்கிரஸ் சர்க்கார் 1947 இல் 1925 அய்க் காண்கிறது. ஆனால் இன்றேனும் காண்கிறதே அதுவரை மகிழ்ச்சி நமக்கு.

சென்னை சர்க்கார் அறிக்கையில் இங்கே மட்டுமல்ல, மத்திய சர்க்காரிலும் இது போன்ற விகிதாசார ஏற்பாடு இருக்கிறது என்கிற அந்தப் பகுதி உண்மையிலேயே அனைவரும் கவனித்தற்குரியது. சின்னத் தலைகள் (கல்கியின் பாஷை!) மட்டுமல்ல, பெரிய தலைகளும்கூட வகுப்புவாரி ஏற்பாட்டினையே ஒப்புகின்றன என்பது நம் கவனத்திற்குரியதுதானே!

பெரியார், 1925 இல் சொன்னதை இன்று சாதித்து விட்டார். வகுப்பு வாரித் திட்டம் ஒன்று தவிர வகுப்புச் சிக்கல் தீர மருந்தில்லை என்பதை, காங்கிரஸ் நடை முறையிலேயே ஏற்கும் அந்த நாளைக் கண்டுவிட்டார். பார்ப்பனியம் அழியும் நாளையே இன்னும் அவர் காணவில்லை. அதையும் காண்பார் விரைவில் என்பதில் ஏது அய்யம்?

காஞ்சி மாநாட்டிலிருந்து வெளியேறிய விநாடி முதல் இன்று வரை அந்த மாவீரர் பார்ப்பனியத்தின் கொடுமைகளை மக்களுக்கு விளக்கியே வந்திருக்கிறார். ஆரியத்தின் ஆணவத்தை - வர்ணாசிரம ஏற்பாட்டின் அநீதியை தமிழ் வீரர் கூட்டம் நன்குணர்ந்த வீறுகொண்டெழுந்து வீரப் போர் தொடுக்கச் செய்துவிட்டார். பார்ப்பனியம் என்னும் மாறு பெயர் கொண்ட பழமையை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எத்தனையோ ஆயிரமாயிரம் இளங்காளைகளின் உள்ளத்தில் தூவி விட்டார். பெரியதோர் பட்டாளத்தை - அறிவும் திறமும் சிந்தனையும் படைத்த தமிழர் சேனையை உருவாக்கி விட்டார். வாழ்க வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்கவே! என்னும் பண் பாடச் செய்துவிட்டார். சிறுத்தையின் குகையில் சிறுநரிகளின் வாசமா என்னும் கேள்வி எங்கணும் எழச் செய்து விட்டார். புதிய தமிழகம் இனி உருவாகவேண்டும் - அது ஒன்றுதான் பாக்கி - அதற்கான பாதை வகுக்கும் பணியைச் செம்மையுறச் செய்து முடித்துவிட்டார். புதிய தமிழகம் உருவாக வேண்டுமானால் பழைய பார்ப்பனியம் அழிய வேண்டும். அது கல்லறை புகும் நாள் என்று வரும்? ஆம், புரட்சித் தமிழகம் பூக்கும் அந்த நாள் என்று வரும்?


-------------------------போர்வாள், 6.12.1947

0 comments: