Search This Blog

16.9.09

பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்பு




எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலாசிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக பண்பட்ட அரசியல்வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

இவர், ஏழை எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர். தமிழ்ச் சொற்றொடர் அமைப்பிலே புதிய நடை கண்டு, எழுச்சிமிகு எழுத்தால், இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து, எழுத்துலகில் புரட்சியை உண்டாக்கிய மேதை. அடக்கத்தின் வடிவம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை நாட்டு மக்களுக்கு நல்கியவர். முதல்முதலாக, அரசியலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான், மாபெரும் ஜனநாயகத் தலைவர்.

திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி, சுயமரியாதைக் கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுப் பலமுறை சிறைவாசம் ஏற்றார். தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, சுயமரியாதை இயக்கத் தலைவர் தந்தை பெரியாருக்கு அன்புப் பரிசு என்று அறிவித்தார். தமிழ் மக்களின் சிந்தனையில் படிந்து கிடந்த அழுக்குகளை அகற்றி தமிழ்நாட்டை மாற்றியமைக்க தம் நாவையும், எழுதுகோலையும், இறுதி மூச்சு வரை பயன்படுத்தினார்.

வாழ்க்கை குறிப்பு

1909 _ காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில், எளிய நெசவாளர் குடும்பத்தில், நடராசன் - பங்காரு அம்மாள் தம்பதியருக்கு செப்டம்பர் 15 அன்று பிறந்தார். இவரது வளர்ப்புத் தாய் சிற்றன்னை இராசாமணி அம்மையார்.

1914_ காஞ்சிபுரம், பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் சேர்ந்தார். பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார்.

1927_ காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சில மாதங்கள் பணிபுரிந்தார்.

1928_ சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்ட்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்து படித்தார்.

1929_ பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கற்பட்டு நகரில் நடந்த, முதல் மாநில சுயமரியாதை மாநாட்டில் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.

1930_ பச்சையப்பன் கல்லூரி முதல்வரின் உதவியால், உதவித்தொகை பெற்று பி.ஏ(ஆனர்ஸ்) வகுப்பில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே, பெற்றோர் விருப்பப்படி, காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கும், இராணி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது.

1931_ மார்ச் 19 இல் தமிழ் மருத்துவர் மாசிலாமணி முதலியார் நடத்திய தமிழரசு என்ற ஏட்டில் மகளிர்கோட்டம் என்னும் கட்டுரையே இவர் எழுதி வெளிவந்த முதல் கட்டுரையாகும்.

1932_ நீதிக்கட்சி அரசின் முதலமைச்சரான பொப்பிலி அரசர் தொடர்பு அண்ணாவுக்கு ஏற்பட்டது.

1934_ திருப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் முதன் முதலாக தந்தை பெரியாரைச் சந்தித்து உரையாடினார். அன்று முதல் பெரியாரைத் தனது ஒரே தலைவராக ஏற்றார். பி.ஏ (ஆனர்ஸ்) பட்டம் பெற்றதும், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பொருளாதார வசதி இன்மையால் மூன்று மாதங்களுக்கு மேல் சட்டப்படிப்பை தொடர முடியவில்லை.

1935_ சென்னையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றினார்.

நீதிக்கட்சித் தலைவர் சி.பாசுதேவ் அவர்களோடு சேர்ந்து தொடங்கிய பாலபாரதி என்ற வார ஏட்டிற்கு ஆசிரியராக இருந்து தொழிலாளர் நலம் பேணும் கட்டுரைகளை வரைந்தார்.

1936_ சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாயக்கன் பேட்டையில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

1938_ விடுதலை குடியரசு ஏடுகளின் துணை ஆசிரியர் ஆனார். ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏட்டிற்கும் துணைஆசிரியராக இருந்தார். செப்டம்பர் 26 இல் பெரியார் தலைமையில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று நான்கு மாதம் சிறைவாசம் ஏற்றார்.

1939_ நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940_ மும்பையில் (பம்பாய்) தந்தை பெரியார் _ டாக்டர் அம்பேத்கர் சந்திப்பின்போது, மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

1942_ மார்ச் 7: திராவிடநாடு வார ஏட்டின் ஆசிரியர் ஆனார்.

1944_ சேலம் நீதிக்கட்சி மாநாட்டில், அண்ணா தீர்மானம் மூலம், நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது.

1945_ டிசம்பர்: சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்னும் நாடகம் அரங்கேற்றம். இதை அண்ணா அவர்களே எழுதி அதில் காகப்பட்டர் பாத்திரம் ஏற்று நடித்தார்.

1946_ ஜூலை 29: நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணா பொற்கிழி அளித்தார்.

1947_ ஆகஸ்ட் 15: இந்நாளை பெரியார் துக்கநாள் எனல் பொருந்தாது என்றும், இந்நாள் திருநாளே என்று திராவிடநாடு ஏட்டில் அண்ணா எழுதினார்.

1948_ ஜூலை 17: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைவாசம் ஏற்றார்.

1949_ஜூலை 9: தந்தை பெரியார் மணியம்மையார் திருமணம் நடந்தது.

அண்ணாவும் மற்றும் பலரும் திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து செப்டம்பர் 17இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பைத் தோற்றுவித்தனர்.

திமுகவின் முதல் பொதுச்செயலாளராக அண்ணா பொறுப்பேற்றார்.

1950_ ஆரியமாயை என்னும் நூல் எழுதியதற்காக ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1952_ இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு இந்தி எழுத்துகளை அழித்தார்.

1953_ ஜூன் 15: நம்நாடு நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

ஜூலை 15: மும்முனைப் போராட்டத்தில் முன்னாதாகவே கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1955_ ஜனவரி 14: அண்ணா, கதை வசனம் எழுதிய சொர்க்கவாசல் என்னும் திரைப்படம் வெளிவந்தது.

1956_ மே17_20: திருச்சிராப்பள்ளியில் நடந்த திமுக இரண்டாவது மாநில மாநாட்டில் பொதுத்தேர்தலில் பங்கேற்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தி திமுக பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொதுமக்கள் அனுமதியைப் பெற்றார்.

1957_ காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன்9: ஹோம்லேண்ட் ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

1958_ ஜனவரி 3: பிரதமர் நேரு அவர்கள், ஜனவரி 6இல் சென்னைக்கு வரும்போது, கருப்புக்கொடி காட்டத் திட்டமிட்டதால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் ஏற்றார்.

1962_ காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதித் தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

ஹோம்ரூல் ஆங்கில வார இதழ் ஆசிரியர் ஆனார். ஜூலை 19: விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டத்தில கைதாகி, வேலூர் சிறையில் பத்து வாரம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. விடுதலையான அண்ணா நாட்டின் யுத்த முயற்சிகளுக்குப் பல உதவிகள் செய்தார்.

1963_ ஜனவரி: கட்சியின் கோரிக்கை பிரிவினை அல்ல என்பதற்கேற்ற மாற்றம் செய்து கட்சியைக் காப்பாற்றினார். நவம்பர் 17: கட்டாய இந்தி 17ஆவது மொழிப் பிரிவுச் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் நவம்பர் 16 அன்றே கைதாகி, ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

1964_ஜூலை 26: ஆசிரியர் பொறுப்பேற்று காஞ்சி வார ஏட்டைத் தொடங்கினார்.

1965_ஜனவரி 26 முதல், இந்தியை, இந்திய யூனியன் ஆட்சி மொழியாக்க நாடாளுமன்ற ஆட்சி மன்றக்குழு பரிந்துரை செய்ததை எதிர்த்து, ஜனவரி 26 துக்கநாள் என திமுக அறிவித்தது தொடர்பாக அண்ணா சிறைவாசம் ஏற்றார்.

ஜூலை: சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், கம்போடியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.

1967_ பொதுத்தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுத்தேர்தலில் சட்டமன்றத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை வென்றது.

மார்ச் 6: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஏப்ரல் 26: தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்றார்.

மே 15: ரூபாய்க்குப் படியரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

ஜூலை 18: சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்றுஅழைக்க அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் பெயர் மாற்றத் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றச் செய்தார்.

ஜூலை 23: சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்ற, மய்ய அரசை வற்புறுத்திட, தமிழ்நாடெங்கும் சேலம் எழுச்சி நாள் நடத்தினார்.

ஆகஸ்ட் 16: சீரணி என்னும் அமைப்பினை உருவாக்கினார்.

செப்டம்பர் 19: சென்னையில் கூவம் சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

1968_ ஜனவரி 1: உலகத் தமிழ் மாநாட்டினை ஒட்டி, டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் வழங்கப்-பட்ட பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச்சிலை சென்னை மவுண்ட் சாலையின் (தற்போதைய அண்ணா சாலை) மய்யத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஜனவரி 2: தமிழ் வளர்த்த சான்றோருக்கு, சென்னை கடற்கரைச் சாலையில் சிலைகள் அமைத்துப் போற்றினார்.

ஜனவரி 3: உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை, சென்னை மாநகரில் நடத்தினார். திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூ.9 இலட்சம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.

ஜனவரி 23: தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார்.

ஏப்ரல், மே: அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் சென்று வந்தார். அமெரிக்காவில் யேல் பல்கலைக் கழகத்தில் சப் பெலோஷிப் விருது பெற்றார். வாட்டிகன் நகரில் போப் அவர்களைச் சந்தித்தார்.

செப்டம்பர் 8: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 16: அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற புற்றுநோய் மருத்துவமனையான மெமோரியல் மருத்துவமனையில், டாக்டர் மில்லர் என்பவரால் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நவம்பர் 6: சிகிச்சை முடிந்து அண்ணா சென்னை திரும்பினார்.

டிசம்பர் 1: உடல்நலம் கெட்டிருந்தும் மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

1969_ ஜனவரி 14: பொங்கல் தினத்தில் சென்னை தியாகராய நகரில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அதுதான் அண்ணா கலந்துகொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி.

ஜனவரி 25: அமெரிக்க டாக்டர் மில்லர் சென்னை வந்து அண்ணாவுக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்.

பிப்ரவரி 3: (பிப்ரவரி 2 நள்ளிரவு 12.20 மணி) சென்னையில் இயற்கை எய்தினார். அண்ணாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

பிப்ரவரி 4: அண்ணாவின் உடல் அரசு மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழகக் கட்டத்திற்கு எதிரில் மெரினா கடற்கரையில் காலை 11.30 மணிக்கு சந்தன மரப்பெட்டியில் வைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

------------------------நன்றி:-"விடுதலை" 15-9-2009

0 comments: