Search This Blog

24.9.09

ஆதிதிராவிடர்களை தெருவில் நடக்கவிடாமல் தடுத்த பார்ப்பனர்கள்


தெருவில் நடத்தலும் சர்க்காரின் மனப்பான்மையும்

கோயமுத்தூர் ஜில்லா உடுமலைபேட்டை தாலுக்கா குமரலிங்கம் என்னும் கிராம அக்கிரஹாரத்தில் ஒரு சர்க்கார் பொது தபாலாபீசு இருந்து வந்தது. அவ்வூர் அக்கிராமவாசிகளாகிய பிராமணர்கள் தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப்படும், ஆதி திராவிடர்களை தீண்டாதார் என்னும் காரணத்தால் அந்தத் தபாலாபீசுக்கு செல்லவும் அவ்வீதியில் நடக்கவும் விடுவதில்லை.

அதைப்பற்றி ஸ்ரீமான்ஆர். வீரய்யன் சட்டசபையில் ஒரு கேள்வி கேட்டார். அதாவது 1924 செப்டம்பர் 25ந் தேதி சகல பொதுத்தெருக்களிலும் சகல ஜாதி மனிதர்களும் நடக்கலாம் யாரும் ஆட்சேபிக்கக் கூடாது, என்ற 2660_ம் நெம்பர் அரசாங்க உத்தரவு குமரலிங்கம் பிராமணர்களுக்கு தெரிந்திருந்தும், அவர்கள் ஆதிதிராவிடர்களை தெருவில் நடக்கவிடாமல் தடுக்கிறார்களே; இதைப்பற்றி கேள்வியில்லையா என்று கேட்டார். அதற்கு சர்க்கார் மெம்பர் பதிலளித்ததாவது:

இது விஷயத்தைப்பற்றி போஸ்ட் மாஸ்டர் ஜனரலுக்கு எழுதியிருக்கிறது; அவரும் - (மேற்படி) தபாலாபீசை வேறு வீதிக்கு மாற்றிவிட்டார். என்று பதிலளித்தாராம். இந்தப் பதிலைப் பார்த்தால், சாத்தூருக்கு தடம் எது என்று ஒருவர் கேட்டால், சாராயம் திராம் அஞ்சணா என்று பதில் சொல்வது போலிருக்கிறது. 2660 நெ. சர்க்கார் உத்தரவுப்படி வீதியில் மனிதர் நடக்கும் உரிமையைப் பிராமணர் பிடுங்கிக் கொள்ளுகிறார்களே என்று கேட்டால், போஸ்டாபீசு வேறு வீதிக்கு மாற்றப்பட்டு விட்டது என்று சொல்லும் பதில், கேள்விக்கு சமாதானமாகுமா? ஸ்ரீமான் வீரய்யனுக்கும் நமக்கும் போஸ்ட்டாபீசைப் பற்றியா அதிக கவலை? இவ்விஷயங்களை கவனிக்கும் போது குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போலிருக்கிறது. இதுபோலவே பாலக்காட்டிலும் கல்பாத்தி தெருவு பொதுத் தெருவு அங்கு யாரும் நடக்கலாம் என்று சொல்லிவிட்டு, இவர்கள் வார்த்தையை நம்பி நடந்தவர்களை அங்குள்ளவர்களால் அடிபட்ட பிறகு, இப்படி அடித்து விட்டார்களே என்று சொன்னால், நீ ஏன் அங்கு போனாய் என்று கேட்டு விட்டார்கள். மறுபடியும் ஒரு தடவை, அங்கு நடந்ததற்காக கேசு ஏற்பட்டு, மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டின் மூலம் நடந்தது குற்றமில்லை என்று விடுதலையாகியும்கூட, மறுபடியும் நடக்கும்போது வழிமறித்து அடித்துப் பயப்படுத்தி நடந்தவரிடமிருந்து, அந்த வீதிக்கு புண்யார்ச்சனை செய்ய 10 ரூபாய்க்கு பாண்டு எழுதி வாங்கிக் கொண்டார்களாம். இதைப்பற்றி கேசு நடப்பதாகவும் தெரிகிறது.

இம்மாதிரியெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நல்ல சர்க்காருக்கு அழகாகுமா? நல்ல அரசு என்பது தன்னால் _ தன் பரிசனத்தால் திருடரால், அயோக்கியர் முதலியவர்களால், தன் குடிஜனங்-களுக்கு தீங்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதைவிட்டுவிட்டு ஒருவனைப் பார்த்து நீ நட; வந்ததுக்கு நான் ஆச்சு என்பதும், மற்றவனைப் பார்த்து நீவிடாதே; வந்ததுக்கு நானாச்சுது என்பதும், இரண்டு பேரும் உதை போட்டுக் கொண்டும் வக்கீலுக்கும், போலீசாருக்கும், அதிகாரிக்கும் பணம் கொடுத்து, வாயுங் கையுமாய் அலைவதைப் பார்த்து, இப்படியும் நம்ம ஆள்களுக்கு ஒரு வரும்படி ஆச்சுதே என்றும், ஒருவருக்கொருவர் வெகு சுலபமாய் உதைபோட்டுக் கொள்ளும்படி செய்து விட்டோமே என்றும் சிரித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதை நல்ல சர்க்கார் என்று சொல்ல முடியுமா?

ஸ்ரீமான், வீரைய்யன் இம்மாதிரி பித்தலாட்டமான சட்டசபையைக் கட்டி அழுவதைவிட, மகாத்மா சொல்படி சத்யாகிரகம் செய்து குறைந்தது ஒரு ஆயிரம் தொண்டர்களையாவது ஜெயிலுக்கனுப்பவோ, அவசியமானால் உயிரைக் கொடுக்கச் செய்யவோதயாராயிருப்பாரானால், நம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஆதிதிராவிட மக்களை நகரத்திலிருந்து விடுதலை செய்தவராவார்.

----------------பெரியார் -"குடிஅரசு" 7.3.1926

0 comments: