Search This Blog

13.7.11

அனுமதியின்றிக் கோயில்கள் கட்டப்படுவது அநாகரிகம் - உச்சநீதிமன்றம்


நடைபாதைக் கோயில்கள், பொது இடங்களில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கோயில்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டன. மதுரை யில் 2005ஆம் ஆண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டன. இன்னும் இடிக்கப்பட வேண்டியவை மதுரையில் 300-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

மதுரையில் மட்டுமல்ல - இந்தியாவிலேயே அனுமதி பெறாமல் தானடித்த மூப்பாக மிக அதிகமாகக் கோயில்கள் கட்டப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அத்தகைய கோயில்கள் தமிழ்நாட்டில் 77,450 என்றும், அடுத்து ராஜஸ்தானில் 58253 என்றும் குஜராத்தில் 15000 கோயில்கள் என்றும் உச்சநீதி மன்றமே தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே பொது இடத்தில் ஒரு வழிபாட்டுத்தலம் கூட கட்டப்படாத மாநிலம் அருணாசலம் பிரதேசம் என்றும் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் அது மிகவும் நாகரிகமான மாநிலம் என்றும் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

அனுமதியின்றிக் கோயில்கள் கட்டப்படுவதை அநாகரிகம் என்று உச்சநீதிமன்றம் சொல்லாமல் சொல்லுகிறது!

உச்சநீதிமன்ற ஆணைப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கோயில்களை இடிக்காத மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற ஆணையையும் உச்சநீதி மன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப் பித்தது (14.9.2010).

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற ஆணைப்படி மதுரையில் இடிக்கப்பட வேண்டிய கோயில்களை இடித்திட விட மாட்டோம் என்று இந்து முன்னணி அமைப்புகள் போர்க் கொடி தூக்கியுள்ளனவாம்.

ஆன்மீக திமுக (அதிமுக) அரசாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் இந்த அரசு என்ன செய்யப் போகிறது? இடிக்கப் போகிறதா அல்லது உச்சநீதிமன்றத்தின் முன் கைகட்டி நிற்கப் போகிறதா என்று தெரியவில்லை.

மதுரையில் கோயில் இடிக்கப்பட்ட இடத்திலே செருப்புக் கடை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாம்! அது எப்படி? விட்டேனா பார்? என்று எகிறிக் குதிக் கின்றனராம் - பக்தியின் கிறுக்குத்தனம் என்பார்களே அதற்குப் பெயர் இதுதான் போலும்!

அப்படிப் பார்த்தால் பூமிகூட இந்து மதத்தில் பூமாதேவிதானே - அதன் மீது நடக்கலாமா? அதுவும் செருப்புக் காலால் நடக்கலாமா?

கோயிலில் பக்தர் களுக்கு கடவுளின் செருப்பை சடகோபம் என்று பக்தர்களின் தலையில் வைத்து ஆசீர்வதிக்கிறார்களே!

காஞ்சீபுரத்தையடுத்த ஓரிருக்கை கிராமத்தில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் 3 கோடி ரூபாய் செலவில் எழுப்பப் பட்டுள்ள மணிமண்டபத்தில், அவரது செருப்பு வைத் துப் பூஜிக்கப்படுகிறதே - (ஆனந்த விகடன் ஜூன் 1997) அதற்கு என்ன பதிலாம்?

இராமனின் ஒரு ஜோடி செருப்பு 14 ஆண்டுகள் நாட்டை ஆண்டதே! செருப்பு என்றால் கேவலமா?

-------------- மயிலாடன் அவர்கள் 13-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: