Search This Blog

1.7.11

ஆரிய சம்பந்தமுடையதெல்லாம் நமக்கு எமனே!


பார்ப்பன ஆட்சி இன்னும்
என்ன செய்ய வேண்டும்?

"தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து, மனிதனைக் கடிக்க ஆரம்பித்து விட்டது"

என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போல் பார்ப்பனீயம் அதாவது பார்ப்பன ஆட்சி, அங்கு கை வைத்து இங்கு கை வைத்து அடிமடியில் கையைப் போட்டுவிட்டது என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது.

காங்கரசைப் பற்றியும், காந்தியைப் பற்றியும் நாம் எதிர்த்தும் மக்களை ஜாக்ரதையாய் இருக்க வேண்டுமென்று எச்சரித்து வந்ததுமானது, அரசியல் ஆதிக்கம் நமக்கு கூடாதென்றோ வெள்ளையர், அன்னியர் இந்நாட்டை விட்டு போகக் கூடாதென்றோ அல்ல என்பதை அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கின்றோம்.

காந்தியையும் காங்கரஸையும் எதிர்ப்பதேன்?

ஆனால் மற்றென்ன காரணம் என்றால் இந்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வயிறு பிழைக்க வந்து இந்நாட்டு ஆதி மக்களை பல வழிகளிலும் ஏய்த்தும், கொடுமைப்படுத்தியும் வெற்றி கொண்டு, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிந்த 3 - வகையாரில் அதாவது ஆரியர், முஸ்லீம்கள், ஐரோப்பியர் ஆகியவர்களில் ஆரியர்களே மிக மிக கொடுமை செய்து மக்களை காட்டுமிராண்டிகளாக்கி மதத்திலும், சமுதாயத்திலும், அரசியலிலும் அடிமை கொண்டு ஆட்சி புரிகின்றவர்கள். ஆதலால் எந்தக் காரணம் கொண்டும் அதாவது ஐரோப்பியரே இன்னமும் ஆயிரம் வருஷம் ஆட்சி புரிவதாய் இருந்தாலும் முஸ்லிம்களே இன்னம் பதினாயிரம் வருஷம் ஆட்சி புரிவதானாலும் ஆரியப் பூண்டின் ஆதிக்கம் மாத்திரம் கூடவே கூடாது என்று கருதி காங்கரசும், காந்தியும் ஆரிய ஆதிக்கத்துக்கு ஆயுதமாகவும், கூலியாகவும் இருந்து வருவதால் ஆரிய ஆதிக்கம் ஒழிவதற்கு இவ்விரண்டும் அதாவது காங்கரசும், காந்தியும் அடியோடு ஒழிய வேண்டும் என்று சொல்லி எதிர்த்து வந்தோம்.

ஆரியர் பிறவிக் குணம்

ஆரியர்களின் பிறவிக்குணம், ஜாதிக் குணம் இவ்விரண்டும் ஆரியரல்லாதவர்களை ஒழிப்பது அல்லது அடிமை கொண்டு அவர்கள் உழைப்பில் வாழ்வது என்பதேயாகும். இதற்கு உதாரணம் வேண்டுமானால் ஜர்மெணியரை - ஹிட்லரைப் பார்த்தால் விளங்கும். ஆரியரல்லாதவர்கள் ஒழிய வேண்டும் என்பதே ஹிட்லருடையவும், நாசி ஸ்தானத்தினுடையவும் கொள்கையாகும். நம் நாட்டு காங்கரஸ் கொள்கையும், ஆரியர் கூலியாக உபயோகப்படுத்தும் காந்தியின் கொள்கையும் அதுவேயாகும். அதாவது காங்கரஸ் மனுதர்மம், வருணாச்சிரம முறை ஆகியவைகளின்படி இந்தியா புதுப்பிக்கப்படவேண்டு" மென்று சொல்லப்படுவதே இந்த நமது கூற்றை மெய்ப்பிக்கும். மற்றும் ஆரியருடைய எந்த ஆதாரங்களை எடுத்துப் பார்த்தாலும் ஆரியரல்லாதார் நாடு மிலேச்ச நாடு, ஆரியரல்லாதார் பாஷை மிலேச்ச பாஷை, ஆரியரல்லாதார் மிலேச்சர், அசுரர், ராக்கதர் என்பதாகக் காணக்கிடப்பதை இன்றும் பார்க்கலாம்.

இவை இந்நாட்டு ஆதி குடிகளுக்கும் ஆரியர் கொள்கைகளை ஒப்புக்கொள்ளாத முஸ்லிம்களுக்கும் அவர்களது பாஷைக்கும் அவர்களது தேசத்துக்கும் தான் பொருந்தக்கூடியதாய் இருக்கிறதே தவிர மற்ற ஜர்மனியர் போன்றவர்களுக்கு பொருத்தப்படுவதில்லை.

ஆரிய சம்பந்தமுடையதெல்லாம் நமக்கு எமனே

ஆகவே இந்த கொள்கைகள் கொண்ட ஆரியர்கள் நமது நாட்டுக்கும் நம் நாட்டு பழங்குடி சமூக மக்களுக்கும் ஆரியம், ஆரிய பாஷை, அவர்களது மத உபதேசங்கள் முதலியவை எமன் என்றும் கூடாது என்றும் கூறி வருகிறோம்.

இதில் நம்மவர்களான அதாவது ஆரியரல்லாதாரான சிலருக்குப் பல காரணங்களால் இக் கொள்கை பிடிக்காததாகக் காணப்படலாம். அவர்கள்"ஆரியரும் நாமும் இந்நாட்டு மக்கள்” என்றும்"உடன் பிறந்த முறை கொண்டவர்கள்” என்றும் நமக்கு உபதேசம் செய்ய வரலாம். இதை அறியாமை என்றும் அல்லாவிட்டால் கூழுக்குப் பாடும் கூலிக் கவி என்றும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஏனெனில் இன்று நம் பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடங்களிலும் உயர்தரக் கல்லூரிகளிலும் படிக்கக் கொடுத்திருக்கும் இந்து தேச சரித்திரம் என்னும் புத்தகத்தில் ஆரியர்கள் என்பவர்கள் யார் என்னும் தலைப்பின் கீழும் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து இந்நாட்டுப் பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்கி வெற்றி பெற்று அடிமை கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் யார், யார் என்பதின் தலைப்பின் கீழும் உள்ள சேதிகளைப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

ஆரியர் குடிபுகுந்த கதை

ஆரியர்கள் இந்த நாட்டுக்கு மத்திய ஆசியாவில் இருந்து ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு கணவாய் வழியாக வந்தவர்கள் என்றும் ஆரியர் என்றால் உழவர்கள் - பயிரிடுவோர்கள் என்று அர்த்தமென்றும், அவர்கள் வருவதற்கு முன் இந்த நாட்டில் வடக்கில் தஸ்யூக்கள் என்பவர்களும் தெற்கில் திராவிடர்கள் என்பவர்களும் ஆதிகுடிகளாய் இருந்தார்கள் என்றும் இந்த இரு சமூகத்தாரை விட ஆரியர்கள் தந்திரசாலிகளாகவும், பலசாலிகளாகவும் இருந்ததால் இவர்கள்மீது படையெடுத்து அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் கொண்டார்கள் என்றும் பார்ப்பனர்களால் எழுதப்பட்ட சரித்திரங்களிலேயே இருந்து வருகிறது. மேலே குறிப்பிட்டபடி அதை இன்றும் பள்ளிப் பிள்ளைகள் படிக்கிறார்கள்.

வேதத்தில் காணப்படுவதென்ன?

மற்றும் இதை மெய்ப்பிக்க ஆரியர்களின் வேதம் என்று சொல்லப்படும் ஏடுகளைப் பார்த்தாலும் அவற்றுள்ளும் ஆரியர்கள் ஆடுமாடுகளை மேய்த்துப் பயிரிட்டதையும் அதற்கு அனுகூலமானவற்றை கடவுளாக கற்பித்துக்கொண்டு அக்கடவுள்களை மழை பெய்யவும், வெள்ளாமை விளையவும் பிரார்த்தனை செய்வதும், அவர்களுக்கு அக்காலத்தில் எதிரிகளாகக் காணப்பட்ட தஸ்யூக்கள் என்பவர்களையும், திராவிடர்களையும் கண்டபடியெல்லாம் வைது சபித்தும் இவர்கள் அடியோடு அழிந்தொழிய வேண்டுமென்று தங்கள் ஜாதிக் கடவுளாகக் கற்பித்துக் கொண்ட இந்திரன் முதலியவர்களை பிரார்த்திப்பதுமான பல பாசுரங்களைக் காணலாம். இன்றும் ஆரியர்களின் வேதமாக மாத்திரம் அல்லாமல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒழிந்த, கிறிஸ்தவர்கள் ஒழிந்த மற்ற எல்லா மக்களுக்குமே மத வேதம், புராணம், இதிகாசம் என்று சொல்லப்படும் எல்லா ஆதாரங்களிலும் நூல்களிலும் இவற்றைக் காணலாம்.

ஆனால் இவைகளை சரித்திர மூலமாகவும் பழந்தமிழ் நூல்கள் மூலமாகவும், வடநூல் படித்ததின் மூலமாகவும் படித்தறிந்த சில தமிழ் மக்கள் தங்கள் இழி பிறப்பினாலும் தங்களுக்கு மானத்துடன் பிழைக்க வேறு வழியில்லாத இழி தன்மையினாலும் இவைகளை மறைத்துக்கொண்டு ஆரியர்க்கடிமையாக வாழ்ந்து காலம் கழிக்க ஒருப்பட்டிருக்கிறார்கள்.

இவை எப்படி இருந்தாலும் இந்த ஆரிய ஆட்சி அல்லது ஆதிக்கம் இந்நாட்டு பழங்குடி மக்களுக்கு முஸ்லிம் ஆட்சி செய்ததாய்ச் சொல்லுவதைவிட ஐரோப்பிய ஆங்கில ஆட்சி செய்ததாய்ச் சொல்லுவதை விட மிக மிகக் கொடுமை செய்து வந்திருக்கிறது என்பதல்லாமல் இன்னமும் சகிக்க முடியாத துன்பங்களடையும்படி வதைத்து வருகின்றது என்று சொல்லவேண்டியிருக்கிறது.

ஆரிய அடிமைகள்

நம் நாட்டைப் பொறுத்தவரை ஆரிய ஆதிக்கத்தில் திராவிட மேன்மக்களுக்கு சிறிதும் இடமில்லை. வீணர்கள், ஈனர்கள் ஆரியர்களுக்கு கையாளாக ஆனதினால் அவர்களே இன்று பிரகாசிக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களையே பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களை அடியோடு நசுக்க அதாவது ஆரிய ஆட்சி ஒழிந்து முஸ்லிம்களாலும், ஆங்கிலேயர்களாலும் தமிழ் மக்கள் பெற்ற சமுதாய (பொருளாதார) கல்வி விடுதலையை அடியோடு ஒழித்து மறுபடியும் பழயபடியான அடிமைகளாக்கவே முயற்சிக்கிறார்கள்.

ஆரிய நீதி

ஆரிய ஆட்சியில் மனுதர்ம சாஸ்திரப்படி - வருணாச்சிரம தர்ம முறைப்படி ஆரியரல்லாதவன் கல்வி கற்கக் கூடாது. பொருள் (பணம்) வைத்திருக்கக் கூடாது, சமுதாயத்தில் ஆரியருக்கு சமமாய் இருக்கக் கூடாது. அதாவது கீழ் ஜாதியானாகவும், சூத்திரனாகவும், சண்டாளனாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

இந்த முறை வெகுகாலம் இந்தியாவில் ஆரியர்களால் கையாளப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஆரியர்களின் புராண இதிகாசங்களின் சாட்சியங்கள் மாத்திரமல்லாமல் இன்றும் கூட இந்த முறை இருந்து வருகிறதை திராவிடர்கள் - தமிழர்கள் சூத்திரர்களாகவும், சண்டாள ஜாதியாகவும் கூப்பிடப்பட்டும் பல விஷயங்களில் நடத்தப்பட்டும் பொது ஓட்டல், சத்திரம், கோவில், இந்து லா சட்டம் ஆகியவைகளில் பேதம் காட்டி தாழ்மைப்படுத்தப்பட்டும் வருவதைப் பார்க்கலாம்.

காந்தியார் உபதேசம்

அவ்வளவோடு மாத்திரமல்லாமல் தோழர் காந்தியார் ஆரியரல்லாதவர்களைப் பார்த்து "நீங்கள் பாடுபட்டு மற்ற மக்களுக்கு உழைத்துப் போட வேண்டுமே ஒழிய உங்கள் பெட்டிகளில் சிறிய வெள்ளி நாணையம் கூட இருக்கக் கூடாது" என்று சொல்லி வருவதும் "பழய வருணாச்சிரம முறையை அமைக்கவே சுயராஜ்ஜியம் கேட்கிறோம்" என்று சொல்வதும் "வருண முறைப்படி அவனவன் தகப்பன் செய்த தொழிலை தான் அவனவன் மகன் செய்ய வேண்டும்" என்று சொல்லுவதும் "அதற்காகவே தான் வார்தா திட்டம் வகுத்திருக்கிறேன்" என்பதும் அதை அனுசரித்தே இன்று மதுவிலக்கு என்கின்ற சாக்கை வைத்து கிராமப் பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு "ஊர்ச் சாவடியில், கிணற்று மேட்டில் நத்தத்தில் - அட்டையில் வாசகம் எழுதிக் கட்டச் செய்து அதை தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களைக் கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்வதின் மூலம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று சொல்லுவதும் ஆகும்.

ஆங்கிலம் செய்த நன்மை

"ஆங்கிலத்தினால்தான் மக்களுக்கு அறிவும் சுதந்திர உணர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் ஏற்பட்டது” என்று அனேக இந்திய கல்விமான்களும் தேசீயவாதிகள் எனப் பெயர் பெற்ற பெரியார்களும் பல காங்கரஸ் மகாசபை தலைவர்களும் உலகம் மதிக்கும் இந்தியக் கல்வியாளர்களும் சொல்லி இருக்க இன்றும் சொல்லிக் கொண்டிருக்க அவைகளை ஆணவமாய் அலட்சியம் செய்துவிட்டு வேறு பாஷையை அதாவது மேற்குறிப்பிட்ட எந்தக் காரியங்களுக்கும் பயன்படாததும் ஆரிய ஆதிக்கத்தை மாத்திரம் வலியுறுத்துவதுமான ஆரிய பாஷையை (இந்தியை) கற்கும்படி இளங் குழந்தைகளை கட்டாயப்படுத்துவது அது கூடாது என்பவர்கள் எவ்வளவு பெரிய மதிப்பு வாய்ந்தவர்களாய் இருந்தாலும் சிறைபிடித்து கடின காவல் கொடுத்து வருஷக்கணக்காய் தண்டித்து துன்புறுத்துவதும் ஆகிய காரியங்கள் இவைகளை மெய்ப்பிக்கிறதா இல்லையா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

தமிழனை ஒடுக்கும் சூழ்ச்சி

மற்றும் ஆங்கில ஆதிக்கத்தில் அரசியலிலும் சமுதாய இயலிலும் பெற்ற சில சம சந்தர்ப்பங்களையும் அழித்து மற்றும் ஆரியரல்லாதவர்கள் என்றென்றும் தலையெடுக்கவே முடியாதபடி கொடுமை செய்வது எவ்வளவு கொடுங்கோன்மையானது என்பதையும் யோசிக்க வேண்டுகிறோம். ஆங்கில ஆட்சியும் ஆதிக்கமும் உள்ள காலத்தில் ஆரியரல்லாதவர்களுக்கு படிப்புக்கு செளகரியம் செய்து கொண்டது, இன்று மறுபடியும் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் படிக்க முடியாத மாதிரி செய்யக் கருதி அந்த சவுகரியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன.

எப்படியெனில் முதலாவது பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் இருந்த இடம் பார்ப்பனர்களாலேயே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாவது கல்லூரிகளில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளும் அளவுக் கிரமப்படி சேர்த்துக் கொள்வதற்காக செய்யப்பட்ட முறை ஒழிக்கப்பட்டு விட்டது.

மூன்றாவது பார்ப்பனரல்லாத பிள்ளைகள் சுலபத்தில் படிக்க முடியாதபடி சமஸ்கிருதத்தை (இந்தியை) சிறுவயதிலேயே கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.

நான்காவது சென்னை தவிர வெளியில் பட்டணங்களில் பெரிய கிராமங்களில் இருந்து வருகிற மத்தியதரப் பள்ளிக் கூடங்கள் மூடப்பட சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அதாவது மேல் படிப்புகளுக்கு சம்பளம் உயர்த்தப்படுகிறது. இன்னும் பல இரகசிய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. (அதாவது வார்தா திட்டம் முதலியன)

உத்தியோகங்களுக்கு முட்டுக்கட்டை

உத்தியோக விஷயத்தில் பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கைக்கு கிரமமாய் கிடைக்க வேண்டிய அளவுக்கு 3-ல் ஒரு பங்கோ 4-ல் ஒரு பங்கோ ஆவது கிடைக்கும்படி செய்திருந்த சில முறைகள் அடியோடு ஒழித்து பார்ப்பனர் தவிர மற்றவர்கள் உத்தியோகம் என்று நினைப்பதற்கு கூட யோக்கியதை இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. சில செய்தும் ஆய்விட்டன.

அதாவது சர்க்கார் வக்கீல் என்னும் பொறுப்பு வாய்ந்த (பப்ளிக் பிராஸிகூட்டர்) உத்தியோகம் வக்கீல்களின் ஓட்டின்மீது தெரிந்தெடுக்கும் படியான தேர்தல் முறையில் விட்டாய் விட்டது. அத்தேர்தல் முறைப்படி பார்ப்பனரல்லாதாருக்கு அந்த ஸ்தானம் கிடைக்கவே எவ்விதத்திலும் முடியாது.

அல்லாதார் கதி என்னாகும்?

மற்றும் இந்த முறைப்படியே அதாவது வக்கீல் ஓட்டின் மீதே மேஜிஸ்ட்ரேட், பிராசிக்கூஷன், இன்ஸ்பெக்டர்கள் ஆகிய உத்தியோகஸ்தர்கள் தெரிந்தெடுக்கப்படுவார்களாம். ஒரு பிராசிகூட்டிவ் இன்ஸ்பெக்டர் கூட பார்ப்பனராக தெரிந்தெடுக்கப்பட்டாய் விட்டது. ஆகவே கிரிமினல் பவர் என்னும், மக்களை விரட்டி, அடக்கி, தண்டித்து துன்பப்படுத்தும் அதிகாரம் அடியோடு பார்ப்பனர்கள் கையிலேயே இருக்கும்படி செய்துகொள்ளப்பட்டு விட்டால் இனி பார்ப்பனரல்லாதார் சுதந்திரமும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ளவர்கள், யோக்கியர்கள், அப்பாவிகள் ஆகியவர்கள் கதி என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.

மற்றபடி சர்க்காரால் கொடுக்கப்படும் உத்தியோகங்களிலும் பழைய முறைகள் கூட அழிக்கப்பட்டு விட்டன. பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயர் வேலை 10- காலியானதற்கு 10 -ம் பார்ப்பனருக்கே கொடுக்கப்பட்டுவிட்டன.

மிருக வைத்தியர் வேலை 26-க்கு 19 பார்ப்பனருக்கே கொடுக்கப்பட்டாய் விட்டன.

சப் ரிஜிஸ்டரார் பதவியில் இருந்து ஜில்லா ரிஜிஸ்டரார் பதவிக்கு உயர்த்தும் வேலை 15-ல் 11 - பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன.

ஒரு பார்ப்பனரல்லாதார் ஹைகோர்ட் ஜட்ஜ் வேலை காலியானதும் உடனே ஒரு பார்ப்பனருக்கு கொடுக்கப்பட்டு விட்டது.

புது நியமனங்கள் எல்லாம் பார்ப்பனருக்கே

மற்றும் இப்போது செய்யப்படும் புதிய நியமனங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதோடு மாத்திரம் அல்லாமல் கலெக்டர் முதலிய மேல் வேலைக்குப் போகத் தகுதியுள்ள பெரிய உத்தியோகஸ்தர் விஷயங்களிலும் தயாராய் அடுத்தபடி லிஸ்ட்டிலுள்ள பார்ப்பனரல்லாதார்களை மட்டம் தட்டி விட்டு அவருக்கும் கீழிருக்கும் பார்ப்பனர்கள் உயர்த்தப்படுகிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி இருக்கும் இடங்களில் உள்ள பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களை மாற்றிவிட்டு பார்ப்பனர்களாகப் போட்டு விடப்படுகிறது.

இவை தவிர இன்னமும் காங்கரஸில் வெறும் சாதாரண காலியாகவும் கூலியாகவும் இருந்த பார்ப்பனர்களுக்கு இன்று பெரிய பொறுப்புள்ள உத்தியோகங்கள் கொடுக்கப்படுகின்றன.

விசுவ பிராமணர் துன்பம்

சமுதாயத் துறையிலோ"பிராமணர்” வேறு பிராமணரல்லாதார் வேறு. அதாவது ஆரியர் தவிர வேறு யாரும் பிராமணர் என்ற தலைப்பில் வரக் கூடாது என்று கருதி இதுவரை சில சமூகங்களுக்கு இருந்து வந்த பிராமணப் பட்டமும் பிரம்ம ஸ்ரீ பட்டமும் ஆச்சாரியார் பட்டமும் சட்டபூர்வமாய் எடுக்கப்பட்டுவிட்டது. சமுதாயத் துறையில் இனியும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்ய யோசிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வளவும் போதாமல் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் பேரால் இருந்துவரும் தெருவு, பார்க்கு, பள்ளிக்கூடம் முதலிய ஸ்தாபனங்களுக்கும் அப்பெயர்களை மாற்றி ஆரியப் பெயர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சில நாளைக்கு முன்பு திருநெல்வேலியில் தோழர் ரங்கநாத முதலியார் பேரில் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயரை மாற்றி சன்னதி தெருவென்று பெயர் வைக்கப்பட்டு பழைய பெயர் பணச் செலவு செய்து அழிக்கப்பட்டு விட்டது.

தெருப்பெயரிலும் கோபமா?

அது நிலைத்த உடனே சென்னையில் பார்ப்பனரல்லாத சமூகத்தின் ஒரு பிரபலஸ்தர் அச் சமூகத்துக்கு ஆக உழைத்தவரென்று பெரிதும் பாராட்டப் பெற்றவரான காலம் சென்ற தணிகாசலம் செட்டியார் பேரால் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயர் எடுக்கப்பட்டு ஒரு பார்ப்பனர் பெயர் அதாவது ரங்கசாமி அய்யங்கார் தெரு என்று பெயர் இடப்பட்டு விட்டது. இது சாதாரண சங்கதி என்று சொல்லிவிட முடியாது. செட்டியாருடைய பெயர் மறைந்துவிட்டதே என்பதற்கு ஆக நாம் இதை பெரிதாக்க வரவில்லை. இதன் கருத்து என்ன என்பதை பொதுமக்கள் உணரவேண்டுமென்பதே நமது நோக்கம். சீனிவாசபுரம், தாசில் சீனிவாசபுரம், முனிசீப்பு சினிவாசபுரம், சிவசாமிபுரம், ராஜகோபாலபுரம் என்பது போன்ற புரங்களும் ராமதாஸ் வீதி, பிரகாசம் வீதி, சுப்பய்யர் வீதி, வரதய்யர் வீதி என்பது போன்ற 100 - கணக்கான அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி வீதிகள் இருக்க ஒரு பார்ப்பனரல்லாத பிரபலஸ்தருடைய - அதுவும் சாகும் வரை 30 மீ காலம் கவுன்சிலராய் இருந்தவரின் பெயர் ஒரு வீதிக்கு இருந்ததை மாற்றி அதற்கு பதிலாக ஒரு பார்ப்பனர் பெயரை கொடுப்பது என்றால் அதுவும்”ஜனநாயகத்தின் பேரால் அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தின் மெஜாரட்டி ஓட்டைக் கொண்டு செய்யப்படுகின்ற காரியம்” என்பதே இப்படி இருக்கும்படியாய் இருந்தால் இனி அவர்களது ஆட்சியுள்ள ஸ்தாபனங்களில் நம் மக்கள் கதி என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம். இந்தக் காரியம் இதுவரை பார்ப்பனர்கள் செய்து வந்த கொடுமைகளில் எல்லாம் மிக மிக கொடுமையான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இனி இந்த பார்ப்பன ஆதிக்கத்தால் என்ன ஆபத்து நாம் எதிர்பார்க்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதாருக்கு சுயமரியாதை இருந்தால்

பூரண சுயராஜ்யம் என்பது பூரண பார்ப்பன ராஜ்யமாகத்தான் ஆகிவிட்டது.

கார்ப்பரேஷனில் காங்கரஸ் கட்சியில் பார்ப்பனரல்லாத கவுன்சிலர்கள் பலர் இருந்தும் அத்தனை பேரும் இந்த சண்டாளத்தனமான காரியத்துக்கு ஓட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டால் உண்மையிலேயே பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு சுயமரியாதை இருக்கிறதா என்று பார்ப்பனர்களே கேட்க மாட்டார்களா என்று வெட்கப்படுகின்றோம்.

தோழர்கள் சாமி வெங்கடாசாலம் செட்டியார், முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆகியவர்கள் இத்தீர்மானத்தில் பங்கு கொள்ளக்கூடாது என்றுதான் கவுன்சிலர்கள் பதவியிலிருந்து ராஜிநாமாக் கொடுத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. காங்கிரசின் பேரால் கார்ப்பரேஷனில் உள்ள பார்ப்பனரல்லாத மற்ற மெம்பர்களும் மானமிருந்தால் ராஜிநாமா செய்திருக்க வேண்டாமா என்றுதானே மற்றவர்கள் கேள்ப்பார்கள். எனவே கார்ப்பரேஷனின் இத்தீர்மானத்தால் ஒரு வீதிக்கிருந்த தனிகாசலம் செட்டியாரின் பெயரை எடுத்துவிட்ட அவமானத்தைவிட பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு மானமே இல்லையே என்று அன்னியர் கருதும்படி ஆகிவிட்டதே என்கின்ற துக்கம்தான் நம்மை வாட்டுகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

-------------------தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 07.08.1938

0 comments: