Search This Blog

23.7.11

வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (3) வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?


இந்தியாவின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் பாடு பட்டதாகவும், ஆனால் அதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைப்படி நீதிக்கட்சி தொடங்கப் பட்டது என்றும் அவதூறு செய்கிறார் துக்ளக்கில் திரு.கே.சி. லட்சுமி நாராயணன்.

இதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத்தானே சாட்சிக்கு அழைக்கிறார்கள்? அவர் எழுதிய விடுதலைப் போரில் தமிழகம் என்ற நூலைத்தானே என்ற சாட்சிக்குக் கூப்பிடுகின்றனர்?

அந்த ம.பொ.சி.யே அந்த நூலிலே என்ன எழுதுகிறார்? அவர்கள் கொண்டு வந்த ஆயுதத்தைப் பறிமுதல் செய்து, அவர்களைத் தாக்குவது தானே சுவாரசியமானது.

காங்கிரசைத் தோற்றுவித்தவனே ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்காரன்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

முதல் மாநாடு 1885 டிசம்பர் 28,29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையின் முதல் மாநாட்டை ஹ்யூம் கூட்டினார். அதற்காக விடுத்த சுற்றறிக்கையில், வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆங்கில மொழியில் ஞானமுள்ள அரசியல் பிரமுகர்களைக் கொண்ட தாக மாநாடு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆம், இந்திய தேசியத்தின் பெயரால் முதன் முதலாக ஒரு மாநாடு, இங்கிலீஷ்காரர் ஒருவரால், இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்ற வர்களைக் கொண்டதாகக் கூட்டப் பெற்றது. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் மாநாடு நடந்தது என்று ம.பொ.சி. அதே நூலில் குறிப்பிட்டுள்ளாரே -இதற்கு என்ன பதில்?

வெள்ளைக்காரன் ஹ்யூமால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஓராண்டல்ல, ஈராண்டல்ல, 22 ஆண்டுகள் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார் அவர். அடுத்தடுத்து வெள்ளையர்கள் தலைமை வகித்தும் மகாசபை கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜவாழ்த்துப் பாடப்பட்டதும், பிரிட்டீஷ் அரசுக்கு விசுவாசம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஹ்யூம் காலத்தில்தான்.

சுருக்கமாகச் சொன்னால் எவ்வித எதிர்ப்புமின்றி படித்த இந்தியர்களுக்கு உயர் உத்தியோகங்களும் சலுகைகளும் தேடித் தரும் ஸ்தாபனமாகக் காங்கிரஸ் செயல்பட்டது ஹ்யூம் சகாப்தத்திலேயே! இது ஒன்றும் அவர்களுக்குக் குறைபாடோ, குற்றமோ அல்ல. காங்கிரசை அவர் தோற்றுவித்ததே இந்தக் காரியங்களுக்குத்தான். இவை எல்லாம் நமது சரக்கல்ல; அதே ம.பொ.சி. - அதே நூலில் காணக்கிடப்பவைதான்.

வெள்ளைக்காரனால் தொடங்கப்பட்டது
பதவிகளைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்டது
அந்தப் பதவிகள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே! என் பதை இந்நூலில் ம.பொ.சி. வெளிப்படையாகவே கூறுகிறார்.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் நீதிக் கட்சி வெள்ளைக்காரர்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தது - பதவிகளைத் தேடி அலைந்தது என்று சொல்லுகிறார்கள் என்றால் அவர்களின் யோக்கியதையை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.

மேலும் ம.பொ.சி. எழுதுகிறார் கேளுங்கள், கேளுங்கள்.

சென்னையில் கூடிய காங்கிரஸ் மகா சபையிலே பிரிட்டிஷ் அரசுக்கு வாழ்த்து பாடப்பட்டது. வெள்ளையரான சென்னை கவர்னர் கன்னிமரா விட மிருந்து வாழ்த்துச் செய்தியைப் பெற்று , அதை மிகுந்த பக்தி விசுவாசத்துடன் படித்த பிறகே நடவடிக்கை தொடங் கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியார், இந்தியாவின் சக்கரவர்த்தினியுமாகிய விக்டோரியாவுக்கு, அவர் அய்ம்பதாண்டு காலம் வெற்றிகரமாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடத்தியதற்காகப் பாராட்டு தெரிவித்து, அவரது ஆட்சி மேலும் நீடிக்க வேண்டும் எனவும் பிரார்த் தித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்று, பேசியவர்கள் எல்லோரும் பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழ்ந்தனர்.

(ம.பொ.சி. அதே நூல் பக்கம் 133,134)

வெள்ளையர்களுக்கு சாதாரண விசு வாசத்தோடு அல்ல; பக்தி விசவாசத்தோடு பிரார்த்தித்து வாழ்த்துப் பாடியதாக ம.பொ.சி. எழுதி இருக்கிறாரே. இதற்கு என்ன பதில் லட்சுமி நாராயணரே?

திருவாளர் கே.வி. லட்சுமி நாராயணன் துணைக் கழைத்த ம.பொ.சி.தான் பிறழ் சாட்சியாகிவிட்டார். அவாளின் சுதேசமித்திரனாவது அவாளுக்குத் துணை போகிறாதா என்று பார்க்கலாம்.

காங்கிரஸ் தோற்றமே
பிரிட்டிஷாருக்கு பல்லக்கு தூக்கவே


இதோ ஆதாரம்: 1855 ம் வருடம் டிசம் பர் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு காங் கிரஸ் மாநாடு துவங்கப்பட்டது.

வங்கத்துக் கீர்த்தி மிகுந்த பாரிஸ்டர் உமேசசந்திர பானர்ஜி அந்த சபையிலே அக்கிராசனம் வகிக்க வேண்டும் என்று ஏ.ஓ. ஹியூம் பிரேரணை செய்ய, அதை காசிநாத தெலங்கரும் நீதிபதி மணி அய்யரும் ஆமோதித்தனர்.

நம்மை பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு விரோ தமாகச் சூழ்ச்சிகள் செய்யும் ராஜ விரோதிகளின் கூட்டம் என்று சில கனவான்கள் ஞானக் குறைவினால் சொல்லி விட்டார்கள். பிரிட்டன் அரசு நமக்கு அனுகூலமாக எவ் வளவோ காரியங்களைச் செய்தி ருக்கிறது. அதன் பொருட்டு அதற்கு நாம் நன்றி செலுத்துவோம். அய்ரோப்பாவில் உள்ள ஜனங்கள் ஆட்சி முறையைப்பற்றி எவ்வித மான கொள்கைகள் உடையாரோ அதே விதமான கொள்கைப்படி இங்கும் ஆட்சி நடத்த விரும்பு கிறோம். இந்த விருப்பத்துக்கும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தினிடமுள்ள பூர்ண விசுவாசத்திற்கும் விரோதமே யில்லை.

(1835_ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி நடைபெற்ற முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் உமேசசந்திர பானர்ஜி தலைமை வகித்துப் பேசியது.)

இங்கிலீஷ் ராஜ்யத்திடம் நாம் பூர்ணமான அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமக்குச் செய்த நன்றிகளை எல்லாம் மறக்கமாட்டோம். அவர்கள் நமக்குக் கொடுத்த கல்வியினால் புதிய ஒளி பெற்றோம். ஆசியாவின் கொடுங் கோன்மையாகிய இருளுக்கிடையே ஆங்கிலேய நாகரீகத்தின் விடுதலை ஒளி நமக்குக் கிடைத்தது (கரகோஷம்)

- 1906 ம் வருடத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் தாதாபாய் நவ்ரோஜி தலைமை வகித்துப் பேசியது.

மகாராணியின் அனுகூலமான, என்றும் மறப்பரிய கீர்த்தி மிக்க ஆட்சியில் அய்ம்பது வருஷம் முடிவு பெற்றதைக் குறித்து சக்ரவர்த்தினி யிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகளைத் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்யத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல வருடம் ஆளவேண்டும் என்று வாழ்த்துகிறது.

- 1906 ம் வருடம் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்.

இந்த ஜனசபையை ஏற்படுத்தினோர் பிரிட்டிஷ் ராஜ்யத்திடம் மிகுந்த பற்றுதலுடையவர்கள். இதை விட்டு ருஷ்யாவினுடைய ஆட்சியின் கீழ்ப் புகுவதை அவர்கள் ஒரு நாளும் விரும்பமாட்டார்கள். இங்கி லீஷ் ராஜ்யம் நாகரீகமானது; ருஷ்ய ஆட்சியோ கொடுங் கோன்மை.

- 1889 டிசம்பர் 26 இல் பம்பாயில் நடைபெற்ற 5ஆவது காங்கிரஸ் மகா சபையில், வில்லியம் வெட்டர்பர்ன் என்ற ஆங்கிலேயர் தலைமை வகித்துப் பேசியது.

கருணை தங்கிய சக்கரவர்த்தினி யின் ஆட்சி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தின் சரித்திரத்தில் நீண்டதும், மிக உபகாரமானதும், மனித சந்தோஷத் தாலும், நாகரீகத்தாலும் மிக முக் கியமான அபிவிருத்திகளுடன் பிணைக்கப்பட்டது மாதலால், இந்த ஆட்சியில் அறுபதாண்டு முடிவு பெற்றமை கருதி அவருக்கு இந்த ஜன சபை வணக்கத்துடன் நன்றி தெரிவிக்கிறது.

- 1896ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நடைபெற்ற 12 வது காங்கிரஸ் மகாசபையில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம். சுதேசமித்திரன் வெளியிட்ட காங்கிரஸ் வரலாறு முதல் பாகத்திலிருந்து.

இதற்குப் பதவுரை, பொழிப்புரை தேவைப்படாதே! வெள்ளைக்காரர் களிடம் வேலைகள் பெறுவதற்காக மனு போட்டு அவர்களுக்கு ராஜ வாழ்த்துப்பாடி மண்டியிட்டுக் கிடந்த பரம்பரையா பெரியார் இயக்கம் பற்றிப் புழுதி வாரித் தூற்றுவது?

பெரியார் ஈரோட்டில் நடத்திய (10-5-1930) இளைஞர் மாநாட்டின் தீர்மானம் என்ன தெரியுமா?

எந்தப் பொதுக் கூட்டங்களிலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜவணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டும் என்று இம்மாநாடு தீர் மானிக்கிறது.

இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் வெத்து வேட்டு வாணங்களை விட்டு வேடிக்கை காட்ட ஆசைப்பட வேண்டாம் அக்ரஹாரமே என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

சுதந்திரம் கேட்கவா காங்கிரஸ் தொடங்கப்பட்டது?

At that time was the foundation of the Indian National Congress laid not for Swaraj, nor Swadesh, no Swadhinta or Swadharma but for few crumbs that may fall from the table of the British - whose power in India had been established on firm foundation.

அந்த நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் சுயராஜ்யத்திற்காகவோ, சுதேசிக்காகவோ, சுவாதீனத்திற்கா கவோ, சுயதர்மத்துக்காகவோ அமை யப் பட்டதல்ல. ஆனால் பிரிட்டி ஷார் மேஜையிலிருந்து விழுகிற எலும்புத் துண்டுகளுக்காகவும், அவர்களு(From sixty Years of Congress by Sajyapal and Praboth Chandra M.A.) போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

1885-இல் வெள்ளைக்காரரால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் பூர்ண சுதந்திரம் கேட்டது 1929 லாகூர் மாநாட்டில்தானே!

1916 இல் நீதிக்கட்சி தோற்றுவிக் கப்பட்டது. அதன் முதல் குறிக்கோள் பார்ப்பன ஆதிக்கப் பிடியிலிருந்து பார்ப்பனர் அல்லாதார் விடுதலை பெறுவதே அதுவும் காங்கிரஸ்காரராக இருந்த பிட்டி தியாகராயர் டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் டாக்டர் சி. நடே சனார் துணையோடு நீதிக் கட்சியை நிறுவினார்கள். 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறிய தந்தை பெரியர் 1932 டிசம்பரில் வெளியிட்ட சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத் திட்டமும் என்பதில் முதல் திட்டமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா?

பிரிட்டிஷ் முதலிய எவ்வித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்து இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது என்று திட்டம் கொடுத்தவர் அல்லவா ஈரோட்டுச் சிங்கம்.

1942 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு (Quit India) தீர்மானத்தை நிறைவேற்றியது காங்கிரஸ்.

(பார்ப்பனர்களின் குலதர்ம வீரரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் எதிர்த்தார் - பின் வாங்கினார். ஆகஸ்டு துரோகி என்று தூற் றப்பட்டார் என்பதையும் துக்ளக் கூட்டத்துக்கு இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.)

அதனைத் தொடர்ந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. எங்கும் கலவரம், கொலை, கொள்ளை, தீ வைப்பு இத்தியாதி, இத்தியாதி!

காந்தியார் கைது செய்யப்பட்டார். பின் விடுதலையானார். வெளி வந்த வேகத்தில் அவசரம் அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சட்டமறுப்பு ஆரம்பிக்கும் நோக் கம் எனக்கில்லை. முன் நிகழ்ந்தது இனி நிகழாது. 1942 ஆம் வருடத்து நிலைமைக்கு இனிமேல் இட்டுச் செல்லமாட்டேன். சிவில் நிர்வாகத்தில் உள்ள தேசிய சர்க்கார் போதும். (சுதேசமித்திரன் 14_-7_-1944) என்று கூறிடவில்லையா?

அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களை ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்.

இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண் டும்? என்று குடி அரசில் (29-12-1933) தலையங்கம் எழுதியதற்காக. வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசாங்கம் 124 ஆ. அரசு வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு (30-_12_1933) சிறையில் அடைக்கப் பட்டாரே.

எதிர் வழக்குக் கூட ஆடாமல் வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர் அல்லவா பெரியார்? 9 மாத சிறைத் தண்டனை 300 ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் தண்டனை என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தண்டனை அளித்ததே - சிரித்த முகத்துடன் தண்டனைகளை ஏற்றுச் சிறை சென்றவர் அல்லவா வெண்தாடி வேந்தர்? தந்தை பெரி யாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாளும் தண்டனைக்குள்ளானாரே?

ஆச்சாரியார் போல அண்டர் கிரவுண்ட் ஆனாரா? அப்படி அண்டர் கிரவுண்ட் ஆனவருக்குத்தானே இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்ற லாட்டரி பரிசு அடித்தது _ பார்ப்பனர் சூழ்ச்சியாலும், ஆதிக்கத்தாலும்

துக்ளக் கூட்டமே! கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்!

-----------------------(இன்னும் இருக்கிறது)

---------------கலி.பூங்குன்றன் அவர்கள் 23-7-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


0 comments: