Search This Blog

18.7.11

தமிழ்நாடு பெயர் மாற்றிய வரலாறு

தமிழ்நாடு

1967ஆம் ஆண்டின் இந்நாள் (ஜூலை 18) தமிழ் நாட்டின் வரலாற்றில் பொன் அத்தியாயம் பூத்த நறுமண நாள். முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் தீர் மானம் ஒன்றை சட்டப் பேர வையில் முன்மொழிந்தார்.

மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அந்தப் பிராந்தியத்தைக் குறிக்கும்போது நமது மாநிலத்துக்கு மட்டும் தமிழ்நாடு அல்லது தமிழகம் என்ற பெயரில்லாமல் அதன் தலைநகரின் பெயரைக் குறித்தே வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இதை மாற்றித் தமிழர்கள் வாழும் இடம் என்பதைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு என்று பெயரிடுவதற்குத் தமிழக அரசு முயற்சி செய்து வருகின்றது. இந்தக் காரியம் மத்திய அரசின் அனுமதி பெற்று இந்திய அரசியல் சட்டத்தைத் திருத் தியாக வேண்டிய காரியம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்திய பேரரசை உறுதியாகக் கேட்டுக் கொள்வ துடன், அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது.

- முதல் அமைச்சர் அண்ணா அவர்களால் முன் மொழியப்பட்ட இத்தீர்மானம் அனைத்துக் கட்சி உறுப் பினர்களாலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது என்பது மகிழ்ச்சி மணக்கும் செய்தியாகும். முதல் அமைச்சர் அண்ணா முன்னெடுத்துச் சொல்ல அனைவரும் தமிழ்நாடு வாழ்க! என மும்முறை முழங்கினர்.

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றுவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் எடுக்கப் பட்ட நாள் 21.11.1968. மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் 22.11.1968.

சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் விழா 1.12.1968 அன்று அன்றைய பாலர் அரங்கில் (பிற்காலத்தில் கலைவாணர் அரங்கம் என்று பெயர்) வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது.

முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரும்பிய கால கட்டம் அது. அந்த நிலையிலும் அவ்விழாவில் மகிழ்ச்சி பொங்க பங்கேற்றவர்.

நான் இந்த மகிழ்ச்சியான விழாவில் கலந்து கொண்டால், அதிக நேரம் பேசினால் உடலுக்கு ஊறு நேரிடுமென்று என் உடல் நலத்தில் அக்கறை உள்ள மருத்துவர்களும், நண்பர்களும் சொன்னார்கள்: ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த வாய்ப்பு ஒருவரது வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும். பலமுறை வருவதில்லை. நான் பேசுவதால் இந்த உடலிருந்தே உடலுக்கு ஊறு நேரிடுமென்றால் இந்த உடலிருந்தே பயனில்லை என்று முதல்வர் அண்ணா சொன்ன பொழுது கூடியிருந்தோர் அனைவரின் கண்களும் கசிந்தன. தமிழ்நாடு என்ற பெயர் பெற்ற மாநிலமாக இன்று திகழ்கிறது என்கிற போது இந்த நேரத்தில் நினைவிற்குக் கொண்டு வரப்பட வேண்டியவை.

(1). 11.9.1938 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு தமிழருக்கே! என்று முழங்கியவர் தந்தை பெரியார்.

(2). தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் (27.7.1956 முதல் 13.10.1956 வரை).

தமிழ்நாடு பெற்று விட்டோம்! தமிழ், தமிழர் பண்பாடுமீது தொடுக்கப் பட்ட ஆரிய பண்பாட்டுப் போரை என்று முடிவுக்குக் கொண்டு வரப் போகிறோம்?
சிந்திப்போம், இந்நாளில்!

--------------- மயிலாடன் அவர்கள் 18-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்ட சமூகக் குடிமகன் இந்தியாவின் முதல் குடிமகன்!


நான் பல்கலைக் கழகத்தின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யர் என்னை நீ ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்படிப்பு படிக்க வேண்டும், நான் உன்னை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். அவர் டில்லியில் இருந்து திரும்பியதும் மீண்டும் அவரைச் சந்திக்கும்படி கூறினார். ஆனால், அவர் திரும்பி வந்தபோது, அவர் மன நிலை மாறியிருந்தது. நான் உன்னிடம் சொன்னதைப் மீண்டும் பரிசீலனை செய்தேன். உன்னை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவதற்கு பதில், உனக்கு அரசு வேலை தருகிறேன் என்றார்.

அவருடைய மாறிய இம்மன நிலையைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். அய்யா, அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு விரிவுரையாளர் வேலை கொடுப்பீர்களா? என்று கேட்டேன். அவர் கோபமடைந்து கத்தினார். உன் முகவரி மற்றும் பிற தகவல்களை என்னுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டுப் போ என்றார். பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணம் ஜாதிதான் என்பதை நான் உணர்ந்தேன்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பாதுகாவலர் ஒருவருடன் நான் மாலையில் நடைப்பயிற்சியின் போது சந்தித்து உரையாடுவேன். ஒரு நாள் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார் : திவான் என்ன சொன்னார்? அவர் உனக்கு உதவுவதாக இல்லை என்று கேள்விப்பட்டேன். திவான் இப்படிச் சொன்னார்: சில்க் ஜிப்பா, தங்கக் கடிகாரத்துடன் என்னை வந்து சந்தித்த அந்த அரிஜன பையன் யார்? நான் சொன்னேன்; அய்யா, என்னிடம் சில்க் ஜிப்பா இல்லை. அது எனக்குச் சொந்தமானதும் அல்ல. நான் காதி உடை மட்டுமே அணிவேன். நான் காந்தியாரைப் பின்பற்றுகிறேன். இந்த கடிகாரம் தங்கம் அல்ல. தங்க முலாம் பூசப்பட்டது. இதை ஒருவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். திவான் இப்படி ஒரு அற்புதமான மனிதராக இருப்பார் எனில், அவரிடமிருந்து எனக்கு எந்த உதவியும் வேண்டாம்.

என்னுடைய வாழ்க்கையில் அது ஒரு துயரமான காலகட்டம். என்னுடைய இரு அண்ணன்களும் தொடர்ந்து காச நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். மிகவும் துன்பகரமான நாட்கள் அவை. அநீதியைக் கண்டு எப்போதும் நம் ரத்தம் கொதிக்கும். கோபத்தையும் துயரத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியாது. உனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு நீ கோபப்படவில்லையா? என்றார் அவர். திவான் என்னை நிலை குலையச் செய்துவிட்டார். நான் கோபமடைந்தேன். நான் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான் அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டார். நான் காந்திய வழியில் ஈர்க்கப்பட்டிருந்ததால், நான் அவரிடம் வெறுப்பை வளர்த்துக் கொள்ளவில்லை. நான் என்னை ஒரு போதும் ஒடுக்கப்பட்டவனாகவோ, நசுக்கப்பட்டவனாகவோ, துன்புறும் தாழ்த்தப்பட்டவனாகவோ எண்ணியதில்லை. பல நல்ல மனிதர்கள் எனக்கு உதவி புரிந்துள்ளனர். நான் அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

-டாக்டர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் மாதிரி மார்செல் தெக்கேகரா என்பவரிடம் பகிர்ந்து கொண்டவை

நன்றி: தி இந்து 22.4.2005

குறிப்பு: தீண்டாமை என்னும் கொடிய புற்று நோய் இந்து மதத்தின் பிதுரார்ஜித சொத்து. அந்தக் கொடுமை விலங்குகளைச் சுக்கல் நூறாக்கி இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற இந்தியாவின் முதல் குடிமகனாக முதன் முதலில் மகுடம் சூட்டப் பட்டவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன். அந்த வெற்றி நாள்தான் இந்நாள் (1997)
--”விடுதலை” 18-7-2011