Search This Blog

15.9.11

அண்ணா கொடியில் இல்லை; கொள்கையில் இருக்கிறார்


நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா-

வெளிச்சம் போட்டு விழாக் கொண்டாடுவதால் மட்டும் பயனில்லை. அண்ணா வாழுகிறார், மறையவில்லை என்பது அவரது படங்களிலோ, பதாகைகளிலோ அல்ல. மாறாக, அவரது கொள்கைள், லட்சியங்கள் மூலம்தான் நிரந்தரப்படுத்த முடியும். அண்ணா சுட்டிக் காட்டிய ஆரிய மாயை உள்ளிட்ட கொள்கை லட்சியங்களை கிரகணமாகப் பற்றிக் கொள்ளச் செய்தால், அதை விடக் கொடுமை அண்ணாவுக்கு வேறில்லை. 1967இல் அண்ணாவின் ஆட்சியில் சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், இந்திக்கு இடமில்லாத இருமொழிக் கொள்கை - இவற்றின் அடிப்படைத் தத்துவம் என்ன? ஒரு பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழர்களை - திராவிடர்களை - அடிமைப்படுத்தப்பட்ட மக்களை மீட்டெடுப்பது என்பதுதானே!

தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., பேராசிரியர் கா.சு. பிள்ளை, நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் முதல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,டாக்டர் மு.வ. என்றழைக்கப்பட்ட மு. வரதராசனார் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இங்கு பச்சையப்பன் கல்லூரியில் கூடி மட்டுமல்ல; அதற்குப் பிறகு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும்கூடி, தமிழ்ப் புத்தாண்டு என்பது தை முதல் நாள் முதலே என்று அறிவித்ததை ஏற்று, திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் போலவே சட்டத்தின் மூலம் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என முதல் சட்டம் 2008இல் கொணர்ந்து தி.மு.க. ஆட்சியில் அதன் முதல்வர் கலைஞர் சட்டம் இயற்றினார். அண்ணா பெயரில் கட்சி வைத்து, அண்ணாவை வழி காட்டியாக்கிய எம்.ஜி.ஆர். அரசு என்று கூறும் இன்றைய அரசு அதை ரத்து செய்தது ஒரு பச்சை பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல; பகுத்தறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். அண்ணா படம் அல்ல; பாடமாக வேண்டும்! 60 ஆண்டுகளில் ஒரு ஆண்டுகூட தமிழ்ப் பெயர் இல்லை. 60 ஆண்டு பிறந்த கதையோ ஆபாசம்! அருவருப்பு!! எனவே அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடு முதல்வருக்கு நமது வேண்டுகோள் - அருள்கூர்ந்து இதை மறுபரிசீலனை செய்து தமிழ்ப்புத்தாண்டு சட்டத்தை மீண்டும் உயிரூட்டுவதுதான் அண்ணாவுக்குச் செய்யும் உண்மை மரியாதையாகும். வாழ்க அண்ணா!

**********************************************


அறிஞர் அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி தோழர்கள் புடை சூழ இன்று காலை 10.45 மணிக்கு மாலை அணிவித்தார்.

இன்று (செப்.15) அண்ணா அவர்களது 103ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ் உள்ள அண்ணா படத்திற்கு இன்று காலை 10.45 மணிக்கு திராவிடர் கழக தோழர்கள், தோழியர்கள் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விண்ணதிர ஒலி முழக்கம்


அப்பொழுது தந்தை பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணா வாழ்க! மக்களின் உள்ளம் கவர்ந்த அண்ணா வாழ்க! என்ற ஒலி முழக்கங்களை தோழர்கள் விண்ணதிர முழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், க. பார்வதி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், க. திருமகள், கு. தங்கமணி, வெற்றிச்செல்வி, இரா. வில்வநாதன், எம்.பி. பாலு கொடுங் கையூர் தங்கமணி, கி. இராமலிங்கம், தனலட்சுமி கோ. அரங்கநாதன், ராயபுரம் நாகேந்திரன், து. மீனாட்சி, மணியம்மை பா. சிவக்குமார், வே. சிறீதர், செந்தில், பாரதிதாசன், சுரேசு, பிரபு, சங்கர் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

அண்ணா இருக்கும் இடம்


சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களது 103ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அண்ணா சிலையின் கீழ் உள்ள அண்ணா படத்திற்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்த பின் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பொழுது கூறியதாவது:

பெரியார் வழியே அண்ணா வழி


இன்று அறிஞர் அண்ணா அவர்களது 103ஆம் ஆண்டு பிறந்த நாளாகும். தந்தை பெரியார் அவர்களது கொள்கை வழி நின்று வெற்றி பல கண்டவர் அண்ணா. தாம் பெற்ற வெற்றியை தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கியவர் அண்ணா.

பண்பாட்டுப் படை எடுப்பைத் தடுத்தவர்


அண்ணா அவர்கள் எந்த பண்பாட்டுப் படைஎடுப்பை முறியடிக்க வேண்டும் என்று சொன்னாரோ அந்த பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிப்பதுதான் நமது நோக்கம். தை முதல் நாளே தமிழர்களுக்குப் புத்தாண்டு! அதன்படி தை முதல் நாள் தான் தமிழர் களுக்குப் புத்தாண்டு என்பதை நிச்சயம் வெற்றி பெறச் செய்வோம்! அண்ணா கொடியில் இல்லை; கொள்கையில் இருக்கிறார். அதுதான் அண்ணா அவர்களுக்கு நாம் செலுத்துகின்ற மரியாதை. - இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி கூறினார்.

**********************************************************

அண்ணா பிறந்த நாளில்...

இன்று அறிஞர் அண்ணா அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்த நாள். அண்ணா அவர்கள் 60 ஆண்டு காலம்கூட வாழ முடியாத நிலை என்பது தமிழ்ச் சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும்.

அந்தக் கால கட்டத்தில் எம்.ஏ., என்பது பெரிய படிப்பாகும். எம்.ஏ. படித்த அண்ணா, ஏ.பி. ஜனார்த் தனம் போன்றவர்கள் தந்தை பெரியார் அவர்களின் கரம் பிடித்து சமுதாய மாற்ற பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்டது சாதாரணமானதல்ல.

நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் கூறுவதுண்டு எம்.ஏ. படித்த நாங்கள் எல்லாம் நான்காம் வகுப்பே படித்த பெரியாரை பின்பற்றியதற்குக் காரணம் - யாரும் சொல்லிடாத சமுதாயப் புரட்சிக் கருத்துகளை, சிந்தனைகளை அவர் எடுத்து வைத்ததுதான் காரணம் என்றார்.

தந்தை பெரியார் நினைத்திருந்தால் அரசியலில் நுழைந்து பெரும் பதவிச் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்கலாம்; இரண்டு முறை தமிழகத்தின் முதல் அமைச்சர் பதவி அவரைத் தேடி வந்து கதவைத் தட்டியபோதும்கூட மறுதலித்தவர் அந்த மகத்தான தலைவர்.

பகுத்தறிவு, தன்மான இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் அண்ணா அவர்களின் உரையும், எழுத்துகளும் பெரும் ஈர்ப்பைப் பெற்றன.

நாடகங்களை அவரே படைத்து, அவரே நடிக்கவும் செய்தார்; அய்யா அவர்களோடு அண்ணா அவர் களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தமிழர்களின் வளர்ச்சித் திசையில் ஏற்பட்ட இடர்ப்பாடே!

ஆனாலும் அண்ணா அவர்கள் குறைந்த கால அளவு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு, பகுத்தறிவுத் திசையில் யாரும் அழிக்க முடியாத - கை வைக்க முடியாத முத்திரை களைப் பொறித்துச் சென்றார்.

தருமபுரி மாவட்டம் நாகரசம்பட்டியில் பெரியார் ஈ.வெ. ராமசாமி உயர்நிலைப்பள்ளி விழா ஒன்றில் தந்தை பெரியார் அவர்களுடன் கலந்து கொண்ட முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் அய்யா ஆணை யிட்டால் முதல் அமைச்சர் பதவியை விட்டு மீண்டும் பெரியார் அவர்களுடன் இணைந்து பகுத்தறிவுப் பணியைத் தொடரத் தயார் என்று கூறினார் என்றால், அண்ணாவின் இதயத்தில் எது முதன்மை யாகக் குடி கொண்டிருந்தது என்பதை எளிதில் அறியலாம்.

மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்கூட, தி.மு.க.வுக்கு அரசியல் கொள்கைகளைவிட சமுதாயக் கொள்கைக்குத்தான் முதலிடம் என்று தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவுப் பாதையில் தி.மு.க.வினர் நடைபோட வேண்டும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் பொழு தெல்லாம் கட்டளையிட அவர் தவறுவதும் கிடையாது.

அதிமுகவைப் பொறுத்தவரை அது அசல் ஆன்மீக திமுக என்ற நிலையில் உச்சத்தில் இருக்கிறது. காரணம் அதன் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய அம்மையார் அப்பட்டமாக ஆன்மிகப் பண் பாட்டில் திளைத்து நிற்பதுதான்.

அந்த ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்க்கத்தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது என்பது அந்த அம்மையாருக்குத் தெரியாதா? தெரியும்; ஆனாலும் அந்தக் கொள்கைகளைக் கடைப் பிடிக்காதவராக - கடைப்பிடிக்க முடியாதவராக இருக்கிறார் என்றால் அது திராவிடர் இயக்கத்தில் ஏற்பட்ட ஊடுருவல் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

விநாயக சதுர்த்திக்கும், கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்துச் சொல்லும் அளவுக்கும் மண்சோறு தின்பதை ஊக்குவிக்கும் அளவுக்கு ஒரு கட்சி அக்கட்சியின் தலைமை சென்று விட்ட பிறகும், அண்ணா பெயரை திராவிட என்ற இனச் சுட்டுப் பெயரையும் தரித்துக் கொள்ள அடிப்படை உரிமை உண்டா?

அண்ணாவின் பிறந்த இந்நாளில் இந்தச் சிந்தனை மிக மிக அவசியமே! அனைத்துத் திராவிட அரசியல் கட்சிகளும் பகுத்தறிவுச் சிந்தனைகளை கட்சி மட்டத்தினர் கண்டிப்பாக கடைப்பிடிக்கச் செய்வதற்கும், மக்கள் மத்தியில் அந்தக் கருத்துகளைப் பரப்புவதற்குமான செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல் படுவது மிகவும் அவசியமாகும். இது அண்ணா பிறந்த நாள் சிந்தனையாக அமையட்டும்!

பகுத்தறிவுச் சிந்தனை பரவினால்தான் அரசியலில் கூட ஒரு தெளிவும், வாக்காளர்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வும் ஏற்பட முடியும்.

அண்ணாவின் பிறந்த நாளில் இது தொடர்பாக உரத்த சிந்தனைகள் வெடித்துக் கிளம்பட்டும்!

-----------------------"விடுதலை” தலையங்கம் 15-9-2011

0 comments: