Search This Blog

17.9.11

பார்ப்பனர்களின் குதர்க்கமும் பெரியாரின் பதிலடியும்

பெரியார் இராமாயணத்தை நாசம் செய்ய வேண்டுமென்று சொன்ன போது சூத்திரனை ராமன் கொன்றது இராமாயணத்தில் இல்லையென்று ஒருவர் கூட்டத்தில் எழுந்து சொன்னார். அவரை ஜனங்கள் வெறுத்து வெளியில் தள்ள முயன்றனர். பெரியார் அவரைப் பேச அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் அக்கதைக்குச் சம்பந்தமில்லாத அர்த்தம் சொல்ல வந்தார். அதை மக்கள் பொறுக்காமல் அவரை அடக்க முயன்றனர்.

கடைசியாகப் பெரியார் அப்பார்ப்பனரைப் பார்த்து ஒரு இராமாயணம் உங்களிடத்திலிருந்தாலாவது நீங்கள் சொல்லும் கருத்து எந்த இராமாயணத்தில் இருந்தாலாவது தயவு செய்து கொண்டு வாருங்கள். நீங்கள் சொல்லுகிற தத்துவார்த்தம் அதிலிருந்தால் அல்லது இக்கதையாவது இராமாயணத்தில் இல்லாதிருந்தால் (சம்பூகன் தபசு செய்தது) தனது கருத்தை மாற்றிக் கொள்வதாகவும் கூறி அக்கதை இருக்குமானால் அந்த இராமாயணத்தை நாசம் செய்ய நீங்கள் சம்மதிப்பீர்களா? என்று கேட்டார்.

பிறகு அந்த பார்ப்பனர் எப்படி இருந்தாலும் தான் அந்தக் கதையை அதிலிருப்பதாக ஒப்பமுடியாது, பெரியாரிடம் நான் நேரில் பேசிக் கொள்கிறேன் என்று மக்களைப் பார்த்துக் கூறி உட்கார்ந்தார். ஆனால் அவர் நேரில் வந்து பேசவில்லை.

மற்றொரு பார்ப்பனர்


4 வர்ணம், பிறவியில் கிடையாதென்றும் கீதையில் தொழில் பற்றி இருப்பது தவிர பிறவியைப் பற்றி இல்லை என்று இருப்பதாகவும் சொன்னார். அதற்கும் பெரியார் மனுதர்மசாத்திரம், ஸ்மிருதி இன்றைய அரசாங்க சட்டம், பழங்கால அரசர்கள் நடந்து கொண்டமுறை, அன்றைய அனுபவம் ஆகியவைகளின் நான்கு வர்ணத்தோடு மற்றும் ஒரு வர்ணம் இருந்து வருகையில் கேவலம் பாரதம் என்கின்ற ஒழுக்கம் கெட்ட கதையில் கிருஷ்ணன் என்கின்ற ஒழுக்கமும் நாணயமும் அற்ற ஒருவனால் சொல்லப்பட்டதாகக் காணப்படும் குறிப்பை எடுத்துக் கொண்டு நடப்பை மறைத்து பேசுவதென்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? அராபிநைட் என்ற கதைப் புத்தகத்தில் அல்லாவுதீன் அல்லது அற்புத விளக்கு என்ற ஒரு கதை இருப்பது போல் பாரதம் என்கிற ஒரு காட்டுமிராண்டிக் கால கதையில் கீதை என்கின்ற ஒரு அத்தியாயம் இருக்கிறது.

அந்த ஒரு சாதாரண விஷயத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு பெரிய காரியத்திற்குச் சமாதானம் சொல்ல வருவது பொருத்தமாகாதென்றும் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் சொன்னார். அதை அப்பார்ப்பனர் ஒப்புக் கொண்டு வேதம் தான் கீதையாகச் சொல்லப்பட்டு இருக்கிறதென்றும், வேதத்தில் பிறவியில் ஜாதிக்கு இடமில்லை என்றும் இந்து மதத்திற்கு வேதம் தான் ஆதாரம் என்றார்.

அதற்குப் பெரியார் அப்படியானால் அதை வேதம் படிக்கப் பாத்தியமும், வசதியும் அளிக்கப்படாத என்னிடத்தில் வந்து சொல்வதை விட வேதத்தைப் படித்துவிட்டும், படிக்கும் பாத்தியமும், வசதியும் பெற்று இருக்கிற ஜனங்களிடம் போய்ச் சொல்லி பிறவியின் பேரால் ஜாதி இருக்கிறது என்று கருதி, பிறவியின் பேரால் ஜாதியை வகுத்து அனுபவத்தில் பாராட்டுகிற தன்மை, அயோக்கியத்தனம் என்றும், மடத்தனம் என்றும் சொல்லித் திருத்துங்கள், சர்க்காரிடம் சொல்லி சட்டத்தை மாற்றுங்கள், பிறப்பினால் ஜாதி இருக்கிறது என்கின்ற புத்தகங்களைக் கொளுத்துங்கள், இங்கு ஏன் அனாவசியமாய்ப் பேசி எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் கெடுக்கிறீர்கள் என்று சொன்னார். பக்கத்திலுள்ளவர்கள் சிரிக்க அப்பார்ப்பனர் பதில் பேச முடியாமல் வெட்கப்பட்டு வாயடங்கிச் சென்றார்.

பெரியாரின் கடைசி நாள் சொற்பொழிவில் நம்முடைய சீர்திருத்தத்தின் முயற்சி இவ்வளவு தீவிரமாக வந்ததினாலேயே இப்பொழுது நம் எதிரிகள் மதத்தின் பேரால் வேதசாத்திரத்தின் பேரால் அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்திற்கு ஆதாரம் இல்லை என்கிற அளவுக்கு வந்து இருக்கிறார்கள். இதுவே நம்முடைய ஒரு சிறிய முயற்சிக்கு ஏற்பட்ட வெற்றியாகும் என்றும், இது போல் நாம் ஒவ்வொரு துறையிலும் தீவிரமாகச் செல்லவேண்டுமென்றும்,

உதாரணமாகத் திருவாங்கூர் வைக்கம் சத்தியாகிரக பிரசாரத்தின் பயனாய் அநேக வாரங்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் நாத்திகர்களாகவும், இந்து மதத்தை விட்டு விலகினவர்களாகவும், இஸ்லாம் மதத்தில் சேர்ந்தவர்களாகவும் ஆகி விட்டதாக துணிந்து தீர்மானித்து காரியத்தில் இறங்கின பிறகே திருவாங்கூர் அரசாங்கத்தில் கோயில், குளம், சத்திரம், சாவடி, ரோட் எல்லாம் நாயாடி என்கிற மிகுந்த தாழ்ந்த ஜாதியார் உள்பட யாவருக்கும் பொது பிரதேசத்திற்கு இடமாயிற்று.

ஆதலால் நீங்கள் பேசுவதற்குப் பயந்தால் இப்பார்ப்பனர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள் என்றும், அடியோடு அஸ்திவாரத்தையே பேர்த்துக் தள்ளி நொறுக்கவும், நெருப்பு வைத்துக் கொளுத்தவும், துணிந்தால்தான் கிரமமான மாறுதல் ஏற்படும் என்றும் கூறியதோடு சீர்த்திருத்த வேலை என்பது அழிவு வேலையின் பயனாக ஆகுமே தவிர ஆக்கவேலையின் பயனாக ஆகக்கூடியது அல்ல என்பதை பல உதாரணங்களால் எடுத்து விளக்கினார். அதே விஷயங்கள் அவ்வூர் மக்கட்கு புதியதாக இருந்த படியால் இதை இப்பிரசங்கத்தை பெரிய ஞானமார்க்கம் என்றும் மற்றும் பலவிதமான மூடநம்பிக்கை கருத்துக்களைச் சொல்லி பாராட்டி பேசிக் கொண்டார்கள்.

------------------------"குடிஅரசு", 11.08.1945

0 comments: