Search This Blog

20.9.11

பார்ப்பனர்கள், காவிக் கூட்டம் மோடியைப் பிரதமராக்கத் துடிப்பது - ஏன்?


மோடியின் உண்ணாவிரதம்

மத நல்லிணக்கத்துக்காக குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி மூன்று நாள் உண்ணாவிரதமாம்! ஆம், ஆடுகளுக்காக ஓநாய் உண்ணாவிரதம் இருக்கிறது - புள்ளிமான்களின் உரிமைக்காக, நன்மைக்காக புலிகள் மாநாடு நடத்துகின்றன; எலிகளின் வாழ்வுரிமைக்காக பூனைகள் கூடிப் பேசுகின்றன என்பதைக்கூட நம்பினாலும் நம்பலாம்! மதநல்லிணக்கத்துக்காக மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை நம்ப முடியுமா? பைத்தியக்காரன்கூட நம்ப மாட்டான்.

தமிழ்நாட்டில் உள்ள சோ குருமூர்த்திகள் அடுத்த பிரதமர் மோடிதான் என்று கொஞ்ச காலமாகவே காற்றடித்துக் காற்றடித்து விளம்பரப் பலூனை ஆகாயத்தில் பறக்க விட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், மாவட்ட நீதிமன்ற அளவிலேயே மோடி மீதான வழக்கைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாம்; அவ்வளவு தான் மோடியைக் குற்றமற்ற நிரபராதி என்றே உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது போல வாண வேடிக்கைவிட ஆரம்பித்து விட்டனர்.

எவ்வளவுப் பெரிய மோசடி! இதே உச்சநீதிமன்றம் இதே மோடியைப்பற்றி இதற்குமுன் என்ன கூறியது?

ஆதரவற்ற குழந்தைகள், அபலைப் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்ட பொழுது முதல் அமைச்சர் நரேந்திரமோடி அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த நீரோ மன்னன் என்று சொல்லவில்லையா? உச்சநீதிமன்றத்தில் இந்த விமர்சனத்துக்குப் பிறகு மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமாவா செய்தார்?

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு 95 பேர் மரணம் அடைந்த போது, மோடியின் ஆட்சியில் 22 மணி நேர இடைவெளியில் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படவில்லையா?

ராம பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டதன் எதிர்விளைவே இஸ்லாமிய மக்களின் படுகொலை என்று தான் ஒரு முதல் அமைச்சர் என்ற பொறுப்பை மறந்து விமர்சனம் செய்யவில்லையா மோடி?

சர் அய்சக்நியூட்டன் கூறியதையெல்லாம் எடுத்துக்காட்டவில்லையா? எந்த வினைக்கும் எதிர்வினையுண்டு என்று இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது விஞ்ஞான ரீதியாக சரிதான் என்று சொன்ன கொடுங்கோலன் - இப்பொழுது மத நல்லிணக்கத்துக்காக உண்ணா விரதம் இருக்கிறாராம்.

பெரு முதலாளிகள் பார்ப்பனர்கள், காவிக் கூட்டம் மோடியைப் பிரதமராக்கத் துடிப்பது - ஏன்? நாட்டை இந்துக்கள் ஒரு பக்கம், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட வேற்று மதக்காரர்கள் இன்னொரு பக்கம் என்று பிரித்து நாட்டை மதவாரியாகத் துண்டு போட்டு ஆட்சி நடத்த வேண்டும்; ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் சதியாகும்.
மதச் சார்பின்மை என்பது பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதல்ல. இதில் மாற்று மதக்காரர்களுக்கு சலுகைகள், வாய்ப்புகள் இருக்க வாய்ப்பு உண்டு. வேறு சில நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருக்கும் போது, இந்தியா ஏன் ஒரு இந்து நாடாக இருக்கக் கூடாது? என்பதுதான் அவர்களின் நோக்கமும் - ஆசையும். அந்த இந்து ராஜ்ஜியம் என்பது என்ன? மனுதர்ம ராஜ்ஜியம்தானே? நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கும் பார்ப்பனர்கள், நூற்றுக்கு 97 மக்களாக இருப்போர்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதானே அந்த இந்து ராமராஜ்ஜியம்?

ஒரு பார்ப்பான் பிரதமராக இருந்து இந்து ராஜ்ஜியம் நடத்தினால் பார்ப்பனர் அல்லாதார் மக்கள் மத்தியில் விரைவில் அடையாளம் காணப்பட்டு விடும் என்பதால் நரேந்திரமோடி போன்ற சூத்திரர்களைப் பிடித்து காரியம் சாதித்துக் கொள்வது என்ற தந்திரம்தான் இதன் பின்னணியில்!

உண்மையான புலிகளைவிட வேடம் போட்ட புலிகள்தானே அதிகமாகக் குதிக்கும்?

இருப்பதிலேயே மிகவும் குரூரமான ஓர் ஆளைப் பிடித்து பிரதமராக்க வேண்டும் என்பது - பார்ப்பனர்களின் ஆழமான சதி; எச்சரிக்கை! எச்சரிக்கை!!

-------------------”விடுதலை” தலையங்கம் 20-9-2011

0 comments: