Search This Blog

2.9.11

பிள்ளையாரை வணங்க தோப்புக்கரணம் - தலையில் குட்டிக் கொள்வது -புளுகடா புளுகு போக்கிலியே!


தீபாவளி கொண் டாடப்படுவதற்கான கதையைக் கேலி செய்து தந்தை பெரியார் ஒரு கதை சொன்னார்:

ஒரு புளுகனைப் பார்த்து இன்னொரு புளுகன் எங்கேடா உன் பையன்? என்று கேட்ட தற்கு அவன், வானம் ஓட்டையாகப் போய் விட் டது. அதை அடைக்க எறும்பைப் பிடித்து, அதன் தோலை உரித்து வானத்தில் போய் தையல், போட்டுத் தைப்பதற்குச் சென்றிருக்கின்றான் என்றானாம்.

இதற்கும், இந்தத் தீபாவளி பண்டிகைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டுமென்கின்றேன். சிந்தனையுள்ள - பகுத்தறிவுள்ள மனிதன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடலாமா என்று சிந்திக்க வேண்டுகிறேன் (விடுதலை 29.12.1970) என்றார் அறிவாசான் தந்தை பெரியார்.

தீபாவளிக்கே இந்தக் கதையென்றால் இந்தப் பிள்ளையாராகிய விநாயகனுக்காக கொட்டிவாரி இறைத்திருக்கும் கதைகள் இருக்கின்றனவே - அப் பப்பா! சொல்லுந்தரமன்று.

பிள்ளையாரை வணங்குவதில்கூட - ஒரு வித்தியாசம்தான்; தோப்புக்கரணம் போடுவார்கள்.

தலையில் குட்டிக் கொள்வார்கள். ஏன் தலையில் குட்டிக் கொள்வார்களாம்? அதற்கும் ஒரு கதை.

அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென் திசை நோக்கி வரும்போது குடகுமலையில் சிவபூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனைப் பார்த்து, அகத்தியருடைய கமண்ட லத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார்.

இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய கமண்டலத்தின்மீது அமர்ந்தார். (சூழ்ச்சி செய்பவன் கடவுளா?) அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது.

அகத்தியர் காகத்தின் மீது சீறிப் பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச் சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஓடினார்.

அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். அய்ந்து கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார்.

அகத்தியர் திகைத்துப் போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்கா கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண் டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள் என்று அருளினார்.

இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.

இவ்வாறு புராணம் புளுகுகிறது.


ஏதாவது புரிகிறதா? ஊகூம்! புரியபடாது. அப்படியிருந்தால்தான் அதற்குப் பெயர் மகா தத்துவார்த்தம்.

அவனோ ஏற்கனவே பயித்தியக்காரன் - அவன் சாராயம் குடித்த நேரத்தில் தேளும் கொட்டினால் என்னவெலாம் உளறுவான் என்று தந்தை பெரியார் கேட்பார்.

இந்தப் பிள்ளையார் சங்கதிபற்றி உளறி வைத்தவனுக்கும், அந்த சாராயம் குடித்த பயித் தியக்காரனுக்கும்தான் என்ன வித்தியாசம்?


தலையில் குட்டிக் கொள்வதற்கு வேறு மாதிரியாக வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.

இந்தக் கேவலமான - அறிவுக்கு சிறிதும் சம்பந்தமற்ற நம்பிக்கைகளில் அறிவைத் தொலைத்து விட்டோமே என்ற முட்டாள்தனத்தை எண்ணி, எண்ணி அதன் அறிகுறியாக தலையில் குட்டிக் கொள்வதாக எடுத்துக் கொள்வோமே!

--------------------"விடுதலை” 2-9-2011

0 comments: