Search This Blog

14.9.11

அறிஞர் அண்ணாவின் சிந்தனைத்துளிகள்


அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?

சட்டையில்லாத சங்கரன், வேட்டியில்லாத வேலன், புடவையில்லாத பொம்மி, சோப் கிடைக்காத சொக்கி, செருப்பு வாங்க முடியாத சிங்காரம் - நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் நல்ல தங்காள் என்ற பெண் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவள் பச்சை மட்டையை வைத்து நெருப்பு எரித்தாள் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பத்தினிதான், தனது நாட்டில் பன்னிரெண்டு வருடம்வரையில் மழையில்லாததால் பட்டினியாகத் தனது குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் மாண்டதாகச் சொல்லப்படுகிறது. பச்சை மட்டையில் நெருப்பு எரித்த பத்தினி, இந்த நாட்டின் மழையில்லாமையையும் போக்கி இருக்கலாமே! அப்பொழுதெல்லாம் நாஸ்திகம் பரவவில்லையே. ஏன் அந்தப் பத்தினியார் மழையைப் பொழியும்படிச் செய்யவில்லை?

நான்கு வேதங்களும் நேரம் தவறாமல் ஓதப்பட்ட காலத்தில்தானே இந்த நாட்டை அன்னியர்கள் பிடித்தனர். ஆயிரமாயிரம் கடவுள்கள் இங்குத்தானே தோன்றியிருக்கின்றனர். மிருதங்கம் கொட்ட நந்தியும், நடனமாட ஊர்வசியும் ஆக, இப்படிக் கடவுள்கள் இருந்த காலத்தில் தானே ஆங்கிலேயன் இந்த நாட்டைப் பிடித்தான். ஒன்று இந்தக் கடவுள்கள் திறமையற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது ஆங்கிலேயனிடம் ஏதாவது லஞ்சம் பெற்றுக்கொண்டு சும்மா இருந்திருக்கவேண்டும்.

கண் இருந்தும் குழியில் விழ வேகமாகச் செல்பவனைக் கண்டால், கைகொட்டிச் சிரிக்கமாட்டோமா? கனியிருக்கக் காயைத் தேடித் திரிபவனைக் கண்டு கேலி பேசாதிருப்போமோ? வெண்ணெயை ஒருவன் பறித்துக்கொண்டு போக இடம் கொடுத்துவிட்டு நெய் தரும்படி வேறோர் இடத்திலே நின்று கெஞ்சுபவனைக் கண்டால் சிரிப்பு வராமலிருக்குமா?

விழுப்புரம் ஜங்ஷனிலிருந்துகொண்டு பாண்டிக்குப் போகிறவன் வழி பார்ப்பது போலவும், திருச்சி ஜங்ஷனிலுள்ளவன், மதராசுக்குப் போவதற்கு வழி பார்ப்பதுபோலவும், மக்கள் பிறந்தவுடனேயே அண்ணாந்து மேலே பார்த்துக்கொண்டு அப்பா! இதைவிட்டு எப்போது அந்த லோகத்திற்கு வருவேன் என்று இந்த லோகத்தை ஒரு ஜங்ஷனாக்கிவிட்டார்கள்.


************************************


மாயம் எந்த அளவுக்கு மயக்கத்தை மக்களிடையே உண்டாக்கிற்று என்றால், நாற்பது வயது ஆளைப் பார்த்து, என்ன சௌக்கியமாயிருக்கிறீர்களா? என்றால், சௌக்கியமாயிருக்கிறேன் என்று சொல்லமாட்டான். ஏதோ இருக்கிறேன் என்று மேல்ஸ்தாபி இறங்கிக் கீழ்ஸ்தாபியிலே சொல்லுவான். சொல்லுவதிலே சுரங்குறைந்திருக்குமென்பதோடு மட்டுமல்ல; பேச்சுடன் பெருமூச்சும் கலந்து வரும். அந்தக் கலப்பு கேட்டவனுக்கே பயத்தையும் கவலையையும் உண்டாக்கிவிடும்! நன்றாயிருக்கிறேன் என்று சொன்னால் என்ன? மேல்நாடுகளிலே ஆங்கிலத்திலே டூ யூ டூ என்றால் உடனே ஓ.கே. நன்றாயிருக்கிறேன் என்று சொல்லுவார்கள் அதனால்தான் அவர்கள் வாழ்கிறார்கள்; நாம் ஏதோ இருக்கிறோம்.

தமிழர்களுக்கு ஒரு வீசை இருப்பு; ஓர் சிறிய உலைக்கூடம். கொஞ்சம் மூளை இவை இருந்தால் போதும் வாள் வடிக்க. வாள் வடித்துவிட்டார்களானால், அவர்களுக்கு முன்னமேயே இருக்கின்ற அஞ்சா நெஞ்சமும்,, அருமைக் கையும் போதும். பர்ணசாலைகள் அமைக்க வேண்டியதில்லை. அய்யனின் அருளைப் பெற; எப்பொழுது அம்மையும் அப்பனும் சண்டை சச்சரவுகள் இல்லாமலிருக் கிறார்கள் என்று நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை!

சந்திர மண்டலத்திலே ஏற்படும் ஒலியைக் கண்டறிந்து. இங்கு ஒலிக்கும்படிச் செய்யும் விஞ்ஞானக் கருவியின் வெற்றியால், சென்ற கிழமை அரைமணி நேரம் சந்திரமண்டலத்தின் ஒலி எதிரொலித்து ஆராய்ச்சி நடைபெற்றது.

தீபாவளிப் பண்டிகைகளுக்காகப் பட்டாசுக் கட்டுகள் வெடித்த ஒலி. இங்கு புராணங்களின் துணையால், சென்ற கிழமை பழைமை விரும்பிகளின் மனம் குளிருமளவுக்குக் கேட்டது. நரகாசுர வதை பற்றிய புராணம் படிக்கப்பட்டது.

*************************

பட்டினத்தடிகள் காலத்திலிருந்துதான் மாயா வாழ்வைப்பற்றி மக்கள் அதிகம் நினைக்க ஆரம்பித்தனர். காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராது காண் என்ற மாயா வாழ்க்கைத் தத்துவம், இன்றும் உலவுகிறது. நாடகங்களிலே இதை நீங்கள் எதிர்பார்க்கலாம். அங்கிருந்து அரசன் வருவான். அரசனைப் பார்த்து ஒருவன் கேட்பான்; இந்த அரண்மனை யாருக்குச் சொந்தம்? இந்த நந்தவனம் யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டி யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டியிலுள்ள இருபது லட்சம் யாருக்குச் சொந்தம் எனவும். அரசன், யாருக்கும் சொந்தமல்ல? என்று சொல்வான். உண்மையிலேயே அவன் இறந்த பிறகு அதை அவன் மகன் அனுபவிப்பான்; மகன் இல்லாவிட்டால், அவனது வாரிசுகளில் ஒருவன் அனுபவிப்பான். வாரிசும் இல்லாவிட்டால், தர்மகர்த்தாக்கள் அனுபவிப்பார்கள். இதை மக்கள் உணருவதில்லை. உணர அவர்கள் மனம் இடம் கொடுக்காது.

*******

ஓர் தலைமகன் காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறான். தன் வேல் தைத்த யானை எப்பக்கம் ஓடிவிட்டது என்று தேடிக்கொண்டு வந்தவன்முன், ஓர் ஆரணங்கு எதிர்ப்படுகிறாள். நல்ல அழகி; பக்கத்திலே பளிங்கு நீரோடை; கட்டழகன் அந்த மங்கையை மணந்து கொள்ள இச்சைப்படுகிறான். மணந்துகொள்வதென்றால், இந்தக் காலத்தைப் போலப் பொருத்தம் பார்க்க அய்யரைத் தேடுவது தேவையில்லாதிருந்த காலம் அது. காதலரிருவரும் கண்களாற் பேசினார்கள். வாய் அச்சுப் பதுமை போலிருந்தபோதிலும், அருகே சென்றான். வஞ்சி அஞ்சினாள். அஞ்சாதே; அஞ்சுகமே என்றான். ஆனால், சற்று நேரத்தில் ஓர் அலறல் கேட்டது. அது என்னவென்று கேட்கிறாள் அந்த ஏந்திழையாள். அது என் வேல் வலிக்குத் தாங்க முடியாமல் பிளிறும் யானையின் குரல் என்கிறான். பாவைக்கு யானை என்றால் பயம் போலிருக்கிறது! அய்யோ, யானையா! அச்சமாயிருக்கிற தென்றாள், அச்சமானால் அருகே வா! என்றான். வந்தாள்; அணைத்துக் கொண்டான்! திருமணம் முற்றிற்று!!

இந்த ஒரு சம்பவத்தைப் பிற்காலத்தில் வள்ளி கதையாக்கி, அந்த வீரனை வேலனாக்கி, கிழவனாக்கி, தேனும் தினைமாவும் கேட்டான் என்று சொல்லி வளையற்காரன் ஆக்கிவிட் டார்கள்.

*******

கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்துவிட்டுக் காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்தவர்களுக்குக்கூட, இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. மிகக் கஷ்டப்பட்டு நாலு நாள் லீவு பெற்றாலும், குழந்தைக்கு மொட்டை அடிக்கத் திருப்பதிக்கோ, அம்மா சிரார்த்தத்துக்கு காவிரிக்கோ போய் வருவார்களேயொழிய, களிப்புக்காக, இயற்கை தீட்டிக் காட்டும் இனிய ஓவியங்களை காணச்செல்பவர் இரார்.

இருவருக்கும் சந்தேகம்

சார்! ஒரு சந்தேகம்.

என்னடா?

சரஸ்வதி எங்கே இருக்கிறாள்?

வெண்டாமரையில்.

அவள் இருக்கும் அப்பூ எங்கே இருக்கிறது சார்?

பிரம்மாவின் நாவில்.

பிரம்மா எங்கே இருக்கிறார் சார்?

மஹாவிஷ்ணுவின் உந்தியில் (அதாவது தொப்புளில்).

மஹாவிஷ்ணு எங்கே இருக்கிறார்?

ஆதிசேஷன் என்ற பாம்பின்மேல்.

அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?

அதுவா திருப்பாற்கடலில்.

திருப்பாற்கடல் எங்கே இருக்கிறது சார்?

(உபாத்தியார் பெரிய சந்தேகத்துடன்) உனது பூகோளப் படத்தை எடு. அதில் இருக்கிறதா என்று பார்ப்போம்.)

பல ஜாதி, பல தெய்வ வணக்கம், பற்பல வகையான மூடநம்பிக்கைகள், தெய்வத்தின் பெயர் கூறி தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு - இது ஆரியம்.


நாட்டிலே நல்ல நல்ல தேவாலயங்கள் இருக்க, தாங்க முடியாத தரித்திரம் தலைவிரித்து ஆடுவதேன்? பாரதமும் பகவத்கீதையும் இருக்க, பக்தர்கள் அல்லலுறுவானேன்? கேட்கிறோம் நாம்! கேட்கக் கூடாதா?


வைதிகம் என்னும் நோய்க்கு டாக்டர்கள் மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது. அந்த நோயை வாலிபப் பருவத்திலுள்ள மாணவர்களால்தான் குணப்படுத்த முடியும்.


நாம் அறிவுத் துறையில் முன்னேற்றமடைந்தால்தான் நம்மிடம் உள்ள பழைய கருத்துகள் அகலும்; பாசி பிடித்துப் போன கண்மூடிப் பழக்கங்களும் தொலையும்; மற்ற மூடநம்பிக்கைகள் முறியடிக்கப்படும்.

கடவுள் வடிவங்கள்மீது ஊற்றப்படும் பாலை, அவ்வடிவங்களாவது ஏற்றுக் கொள்கின்றனவா என்று பார்த்தால் அதுவும் இல்லையே! கடைசியாக அந்தப் பால் முழுதும் சாக்கடை வழியாக வெளிப்பட்டுத் துர்நாற்றத்தைத் தருவதுமன்றி, அத்துர்நாற்றம் பல துஷ்டக் கிருமிகள் உற்பத்தியாவதற்கும், அக்கிருமிகளால் பலவிதமான தொற்றுநோய்கள் உண்டாகி மக்களின் உயிரை மாய்ப்பதற்குமே காரணமாகின்றது.

புராணங்கள்தான் மாணவர்களுக்குப் பாடங்களாக்கப்படும் என்றால், இதற்குப் பள்ளிக்கூடங்கள் ஏன்? பஜனைக்கூடங்களே போதுமே!


எல்லாப் புத்தகங்களையும்விடச் சிறந்த புத்தகம் இந்தப் பரந்த உலகம்தான். உலகத்தைவிட உன்னதமான புத்தகம் வேறு கிடையாது.

பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு செய்துவிட்ட பிறகு மனிதனிடம் வாதிடுவது செத்துப் போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.

மானம் பெரியது; உயிரல்ல. மக்கள் பெரியவர்; மதமல்ல. விடுதலை வேண்டும்; எவருக்கும் நாம் அடிமையல்ல. நமக்கு யாரும் அடிமையாக இருக்க வேண்டா. இதுவே நமக்குக் கீதை.


மனிதனுக்கு ஏற்படக்கூடிய எத்தனையோ நோய்களுக்கு மருந்துண்டு; ஆனால் உடைந்த உள்ளத்திற்கு மருந்து கிடையாது!


வீட்டிற்கோர் புத்தக சாலை என்ற இலட்சியம், நாட்டிற்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு அடிப்படை.

ஒரு பலமான தாக்குதலை நடத்தினால் - ஒரு தன்னலமற்ற முயற்சியைச் செய்தால், மக்கள் வாழ்வில் நஞ்சைக் கலக்கும் விதி எனும் அடிமைத் தளையை நம் நாட்களிலேயே வீழ்த்த முடியும். செய்வோமா? நீங்கள் தயார்தானா?



பகுத்தறிவு வாதம் என்பது அடிப்படை உண்மைகளை - நெறிகளை மறப்பது என்பதல்ல. போலித்தனமான எண்ணங்களையும் செயல்களையும் அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவுவாதம்.


நீரிலே நெருப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள், நீரோட்டத்தை இன்று மனித வாட்டத்தைக் குறைக்கும் சாதனமாக்கியுள்ளனர். மந்திரத்தின் துணை கொண்டல்ல; மதியின் துணை கொண்டு.

கட்டிடத்திற்குச் செங்கல்போல, வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் படிப்பு தேவை; திறமை தேவை; தேர்ச்சி தேவை.


இல்லாதது, நடவாதது, நம்பமுடியாதது அறிவுக்கு முரணானது, அநாகரிகத்துக்கு இடமாவது ஆகிய கருத்துகள் அடங்கிய கதைகளைப் புனித ஏடுகள் என்று போற்றுவது முறையா?

விஞ்ஞானத்தைத் துணைக்கழைத்து மழையைப் பொழியச் செய்து காட்டியவர் மகான்களல்லர்; மகாசாமான்யர்கள். அருள்பெற்றவர்களல்லர்; அறிஞர்கள். முட்டையிலிருந்து குஞ்சு, அடை காத்திடாமல் விஞ்ஞான முறையினாலேயே வெளியே கொண்டுவரப்படுகிறது.


-------------- நன்றி: - “உண்மை” 01-15 செப்டம்பர் 2011

0 comments: