Search This Blog

6.9.11

கிரிக்கெட் சர்ச்சை!


கிரிக்கெட்(டு) சர்ச்சை!

விளையாட்டில்கூட வர்ணாசிரமம் உண்டு என்று சொன்னால் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்து மதச் சிந்தனை ஊடுருவியுள்ள இந்நாட்டில் இந்த வருணப் பார்வை என்பது நீக்கமற நிறைந்துள்ளது என்பது உண்மையே!

எடுத்துக்காட்டாக இந்திய மண்ணுக்குச் சம்பந்தமான ஹாக்கி, சடுகுடு போன்றவைகளுக்கு எந்த அளவுக்கு அரசோ ஊடகங்களோ முக்கியத்துவம் கொடுக்கின்றன? அதே நேரத்தில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கலாச்சார மிச்ச கொச்சத்தில் முதன்மையானதாக இருக்கும் கிரிக்கெட்டுக்கு இந்தப் பாரத புண்ணிய பூமியில் இருக்கும் மகோன்னத்துவத்தைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள் - விளக்கம் யார் துணையில்லாமலேயே கிடக்குமே.
கிரிக்கெட் விளையாட்டில் ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் யாராக இருக்கிறார்கள் என்பதில் எண்ணிக்கைக் கணக்குப் பாருங்கள். பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்யப்படுவதைப் பளிச் சென்று தெரிந்து கொள்ளலாமே!

வேறு எந்த விளையாட்டு வீரர்களுக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குக் கொடுப்பது போல சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறதா?
வருட சம்பளம், ஒவ்வொரு விளையாட்டின்போதும் சம்பளம், நான்கு ஓட்டங்கள் எடுத்தால் (Boundry) அதற்கொரு பரிசு, ஆறு ஓட்டங்கள் எடுத்தால் (Sixer) அதற் கொரு தொகை, பந்தைப் பிடித்தால் (Catch) அதற்கொரு தனிப் பரிசு என்று, விளையாட்டுக்குள்ளேயே கூறு போட்டுப் பரிசையும் பணத்தையும் மழையாகக் கொட்டு கிறார்கள்.

வெற்றி பெற்றால் மாநில அரசுகள், மத்திய அரசு போட்டி போட்டுக் கொண்டு வீட்டுமனைகள் என்ன, பரிசுத் தொகைகள் என்னென்ன? அப்பப்பா சொல்லுந் தரமன்று.

கிரிக்கெட் போர்டு என்று ஒன்று இருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரவு - செலவு! இதன் தலைவர் பதவிக்கு மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய சரத்பவார் போட்டிப் போடுகிறார்; மாநில அளவில் பரூக் அப்துல்லா போன்றவர்கள் போட்டியிடுகின்றனர்; தொழில் அதிபர்களும் கச்சைக் கட்டிக் கொண்டு தலைவருக்கான தேர்தல் களத்தில் குதிக்கிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன?

இதன் தலைவராக இருந்த டால்மியாமீது - கிரிக்கெட் போர்டு பணத்தில் விளையாடினார் என்று வழக்கு நீதிமன்றத்தில்.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரிவிலக்குகள் உண்டு, எஞ்சிய வருமானத்திற்காவது ஒழுங்காக வருமான வரி கட்டுவதில்லை என்று குற்றச்சாற்று வேறு.

ஆட்டத்தில் கிடைக்கும் செல்வாக்கை வைத்து விளம்பரங்களில் கதாநாயகனாகப் பவனி வருகிறார்கள். அதற்கும் கோடிக் கோடியாக பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. அமைச்சரவையிலும் பிளவு ஏற்பட்டதால் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக அமையும் வகையில் தேசீய விளையாட்டு மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய்மக்கான் அறிமுகப்படுத்தியுள்ளார்.

(1) கிரிக்கெட் வாரியம் உள்பட அனைத்து விளையாட்டு வாரியங்களையும் தகவல் அறியும் சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது (2) நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிருவாகிகளுக்கான தேர்தலைக் கட்டாயப்படுத்துவது (3) 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிருவாகியாக இருக்கக் கூடாது (4) தொடர்ந்து ஒருவர் இரண்டு பதவி காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது மற்றும் ஒருவரே இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் வயது மற்றும் ஊக்க மருந்து பரிசோதனைக்குக் கட்டாயமாக உட்படுத்துவது என்கிற விதிகளும் புதிய மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

நடுநிலையோடு நேர்மை, வெளிப்படையான செயல்பாடுகள் இவற்றில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் எவரும் இதில் உள்ள ஒவ்வொரு சொல்லையும், பொருளையும் கண்களை மூடிக் கொண்டு வரவேற்பார்கள்.

யாரும் தட்டிக் கேட்காத முறையில் தனிக்காட்டு ராஜாவாக தலை தூக்கித் திரிந்தவர்கள். இப்பொழுது அதற்கொரு மூக்காணங்கயிறு என்றவுடன் படபடக் கிறார்களே!

அரசு உதவியைப் பெறாத நிறுவனம் என்பதால் தகவல் அறியும் சட்டத்துக்குக் கீழ் வராது என்று வக்கீல் விவாதம் செய்கிறார்கள். அதற்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் பிடரியில் அடிகொடுத்தது போல் பதிலடி கொடுத்துள்ளார். டில்லியில் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை உருவாக்க மய்ய அரசு பணம் கொடுக்க வில்லையா என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ள விளையாட்டு அரங்கங்களுக்கு (Stadium) இலவச நிலம் கொடுத்தது அரசுதானே என்ற அமைச்சரின் கேள்விக்கு விடை கொடுக்க முடியாமல் மவுனவிரதம் கடைப்பிடிக்கிறார்கள்.

கணக்குக்கூட காட் டவேண்டாம். மக்கள் கேட்கும் விவரத்தைக் கொடுக்க என்ன தயக்கம் என்பதுதான் கேள்வி. மடியில் கனமிருக்கிறது, அதனால் பயந்து தொலைக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பார்ப்பான் பண்ணையம்கேட்பாரில்லை என்ற காலம் மலையேறி விட்டது - நினைவில் கொள்க!

------------------- "விடுதலை” தலையங்கம் 5-9-2011

0 comments: