Search This Blog

7.9.11

பார்ப்பனர் உள்ளத்தின் ஆழம் அறிந்தவர் டாக்டர் டி.எம்.நாயர்

டாக்டர் டி.எம்.நாயர்

காலஞ்சென்ற தலைவர் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களின் வாழ்க்கையில் சில ருசிகரமான நிகழ்ச்சிகள்.

ஈடில்லா நாட்டுப் பற்று

1907 ஆம் ஆண்டில் நமது நாட்டில் அரசப் பிரதிநிதியாக இருந்த கர்சன் பிரபு, வங்காளத்தைப் பிரித்தார். அதனால், குறிப்பாக வங்காளத்திலும், பொதுவாக நாடு முழுவதிலும் பெருங்கொந்தளிப்பு உண்டாயிற்று. வந்தே மாதரம் என முதலில் வங்காளத்தில்தான் கோஷமிட்டனர். ஆங்கில அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளும் உச்ச கட்டத்திலிருந்ததால், வந்தே மாதரம் என யாராவது கோஷமிட்டால், அப்படி கோஷமிட்ட வர்களையும் போலீசார் துன்புறுத்தினர். இந்த அநீதியான நடவடிக்கையைக் கண்டனம் செய்ய நாடெங்கிலும் காங்கிரசுக்காரர்களாலும், பொதுக் கூட்டங்களைக் கூட்டி கண்டனக் குரல் எழுப்பப்பட்டது. அப்படி சென்னையிலும் கூட்டப்பட்டக் கூட்டத்தில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களும் கலந்து கொண்டு சொற்பொழிவாற் றுகையில், “Hard words break no bones, Vandemataram breaks no skull” எனக் கூறினார். அதாவது கடுமையான வார்த் தைகளைப் பேசுவதால் எலும்புகள் முறிந்துபோவதில்லை; வந்தே மாதரம் என்று கூறிய மாத்திரத்தில் மண்டை உடைந்துபோவதுமில்லை என்றார்.

பேச்சில் சிலேடை அழகு

மிண்டோ மார்லி சீர்திருத்தங்களின் படி இயங்கிக் கொண்டிருந்த சென்னை சட்டசபையில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களும், திவான் பகதூர் பி.கேசவ பிள்ளை அவர்களும் அங்கத்தினர்களாக இருந்தபொழுது, ஒரு நாள் சட்டசபை நடவடிக்கையில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் ஓர் மசோதா வின்மீது உரையாற்றிக் கொண்டிருக்கையில், திவான் பகதூர் பி.கேசவ பிள்ளை அவர்கள் இடைமறித்து ஏதோ கூறினார். அதற்கு டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள்; சாந்தமாக, ஆனால் “My friend Dewan Bahadur P.Kesava Pillai is fit to be either in jail or forest” எனக் கூறி பரிகசித்தார். அதாவது எனது நண்பர் திவான் பகதூர் பி.கேசவ பிள்ளை அவர்கள் சிறையைப் பற்றியும், காட்டைப் பற்றியும் மட்டுமே அவர் நன்கறிந்தவராதலால், மற்றவைகளில் அவருக்கு போதிய அனுபவம் கிடையாது. இந்நிகழ்ச்சி சென்னை மருத்துவர் பதிவு சட்டம் இயற்றுவதற்காக நடந்த சட்டசபை விவாதத்தின் பொழுது நடந்ததென ஞாபகம்.

பார்ப்பனர் உள்ளத்தின் ஆழம் அறிந்தவர்

ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்து ஜஸ்டிஸ் என்ற தினத்தாளுக்கு டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் கவுரவ ஆசிரியராக இருந்து நடத்தி வரும்பொழுது, ஓர் நாள் அரசினர் பணிமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த சில பார்ப்பனரல்லாத சிப்பந்திகள், டாக்டர் டி.எம்.நாயர் அவர்களிடம் வந்து, அய்யா, ஜஸ்டிஸ் இயக்கம் ஆரம்பித்த பிறகு எங்கள் பணிமனைகளில் எங்கட்கு மேலுள்ள பார்ப்பன அதிகாரிகள் எங்களுக்கு கொடுக்கும் தொல்லை மிகவும் அதிகமாக இருப்பதால் நாங்களும் காங்கிரசில் சேர்ந்து விடுவது நலமெனக் கருதுகிறோம் எனக் கூறினார்களாம். அதற்கு டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் நகைத்துக் கொண்டு, “Don’t do any such foolish thing. You become related to some influential Brahmin” அவ்வாறு அறிவீனமாக ஒன்றும் செய்துவிடாதீர்கள். நீங்கள் செல்வாக்குள்ள பார்ப்பனர்க்கு உறவினராக ஆகிவிடுங்கள் என்று பதில் கூறினாராம்.

கொள்கைக்காக பாடுபடும் அஞ்சாநெஞ்சர்

ஒரு நாள் ஜஸ்டிஸ் பத்திரிகையில், பார்ப்பனரல்லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியது அவசியமென்பதற்குண்டான காரணங்களை விளக்கி தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து, மெயில் பத்திரிகை கண்டித்து எழுதினதில், “A political Nair does well” அதாவது ஓர் அரசியல் நாயர் நன்றாக செயலாற்றுகிறார் என எழுதியிருந்தது.

ஜஸ்டிஸ் பத்திரிகைக்கு டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் ஆசிரியராக இருந்து தலையங்கம் எழுதினதால் மெயில் பத்திரிகை தனது கண்டனத்தை அவ்வாறு குறிப்பிட்டது. இந்தக் கண்டனத்தைப் பார்த்ததும், டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் ஜஸ்டிஸ் பத்திரிகையில ‘Broken Reed’ அதாவது ஒடிந்து போன நாணல் தட்டையென தலையங்கமிட்டு கண்டித்து எழுதினார். அத்தலையங்கத்தில், இங்கிலாந்து நாட்டில் தெருவில் பத்திரிகை விற்க கூவித்திரியும் ஆட்களெல்லாம் இந்தியாவில் பத்திரிகை ஆசிரியர்களாக வந்து விடுகின்றனர். ஆதலால் இவர்கட்கு பத்திரிகை தர்மம் அதாவது நடத்தும் முறையே தெரிவதில்லை.

ஓர் பத்திரிகையை மற்றொரு பத்திரிகை கண்டித்து எழுதுவதானால் பத்திரி கையின் பெயரை மட்டும் குறிப்பிட்டு எழுதவேண்டுமே ஒழிய அதை எழுதிய ஆசிரியரைக் குறிப்பிடலாகாதெனக் கூறி இந்த மெயில் பத்திரிகையின் ஆசிரியருக்கு ஜஸ்டிஸ் பத்திரிகையின் ஆசிரியரின் கால் செருப்பிலுள்ள கயிற்றைக் கூட அவிழ்க்க யோக்கியதை கிடையாது (‘He is unfit to unloose the latchet of my shoes’) எனத் தலையங்க மிட்டு எழுதினதற்குக் காரணம் என்னவெனில் அவ்வமயம் மெயில் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரின் பெயர் பிரோக் இன் ரீட். அதற்காக டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் Broken-in - Reid) புரோகன் ரீட் என பரிகசித்து எழுதினார்.

சிறந்த அரசியல்வாதி

ஜஸ்டிஸ் இயக்கம் ஆரம்பித்த பிறகு சர் லயோனெல் கர்டிஸ் என்ற ஓர் ஆங்கிலேயர், பொது நலத்திற்கு உழைத்துக் கொண்டிருந்த அரசியல் அறிஞர். இந்தியாவில் உள்ள அரசியல் நிலைமையைக் கண்டறிந்து கொள்ள தானாகவே இந்நாட்டிற்கு வந்து டில்லி, பாட்னா, கல்கத்தா, அலகாபாத், நாகபுரி, பம்பாய் முதலிய ஊர்கட்குச் சென்று, ஆங்காங்கிருந்த எல்லா முக்கிய அரசியல் தலைவர்களையும் கண்டு பேசி அவர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொண்டு சென்னை வந்து கன்னிமாரா ஹோட்டலில் தங்கினார்.

அவர் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களை, தான் பார்த்துப் பேச வேண்டுமென கருதுவ தால், தன்னை வந்து சந்திக்குமாறு வேண்டி ஓர் கடிதம் எழுதினார். அதற்கு நாயர் அவர்கள் (Mountain will not go to Mohahommed, Mahommed should go to the Mountain) முகம்மது அவர்களிடம் மலை போகாது, முகம்மதுதான் மலையிடம் போகவேண்டுமென்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி தாங்கள் எவ்வளவு பெரிய மனிதரா னாலும் என்னைச் சந்திக்க வேண்டுமா னால் நீங்கள்தான் வந்து என்னைச் சந்திக்க வேண்டுமென பதிலெழுதிவிட் டார். இந்தப் பதிலைப் பார்த்ததும் சர் லயோனெல் கர்டிஸ் தன் தவற்றை உணர்ந்து உடனே டாக்டர் டி.எம்.நாயர் அவர்கட்கு, நாயர் அவர்களைத் தன்னை வந்து சந்திக்குமாறு எழுதினது தவறுதான் எனவும், அதற்காக தன்னை மன்னிக்க வேண்டுமெனக் கோரியும், நாயர் அவர்களை அவரது வீட்டிலேயே வந்து சந்திப்பதாகவும் பதில் எழுதி விட்டு அது போன்றே டாக்டர் டி.எம். நாயர் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் பயணம் முடிந்த பிறகு இந்திய அரசியல் நிலையைப் பற்றி ஓர் புத்தகம் வெளியிட்டார். அதில் அவர், தான் இந்தியா முழுவதும் சுற்றி அநேகமாக எல்லா முக்கிய அரசியல் தலைவர் களையும் சந்தித்துப் பேசியதாகவும், அவர்களில் டாக்டர் டி.எம்.நாயரைப் போன்று தெளிந்ததும், சாத்தியமானது மான (Practical Politician) கருத்துடைய தலைவர் வேறு யாரையும் தான் காண முடியவில்லை என எழுதியுள்ளாராம்.

ஊழல் எங்கிருந்தாலும் தாக்க அஞ்சா வீரர்

அக்காலத்தில் சென்னைக்கு புழலேரியிலிருந்து கொண்டு வந்து வினி யோகிக்கப்பட்ட குடிநீர் முழுவதும் சுத்தம் செய்யப்படாமலேயே இருந்து வந்தது. 1917 ஆம் ஆண்டு வாக்கில்தான் முதன் முதலாவதாக சுத்தம் செய்வதற்கு கட்டப்பட்ட கட்டடங்கள் (Fillter beds) சுமார் பாதி அளவிற்குதான் சுத்தம் செய்யப் போதுமானதாக இருந்தன. அவ்வமயம் தண்ணீர் வழங்கும் சம்பந் தப்பட்ட கார்பொரேஷன் பிரதம அதிகாரியாக மலோனி (Malony) என்ப வர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீ ரையும், சுத்தம் செய்யப்படாத தண்ணீ ருடனேயே கலந்து வினியோகிக்குமாறு உத்தரவு செய்தார். அதுபோலவே குடிநீர் வழங்கப்பட்டது.

அதைக் கண்டித்து ஜஸ்டிஸ் பத்திரிகையில் டாக்டர் மலோனியின் கலப்படம் (Doctor Malony’s mixture) என தலையங்கமிட்டு ஓர் கட்டுரை டாக்டர் நாயர் அவர்களே எழுதினார். அதில் பெருவாரியாக செலவு செய்து நீரை சுத்தம் செய்த பிறகு சுத்தம் செய்யாத தண்ணீருடன் கலந்து வினியோகிப்பதால் யாதொரு பயனுமில்லையெனவும், சுத்தம் செய்த தண்ணீரை மட்டும் தனியாக விட்டும், பாக்கி சுத்தம் செய்யப்பட வேண்டியதற்கு, வேண்டிய கட்டடங்களையும் (Fillter beds) விரைவில் கட்டி முடித்த பிறகு எல்லா நீரையும் பிறகு ஒன்றாக விட வேண்டிய ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி இப்படி அறிவில்லாத ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார் எனவும் கண்டனம் செய்து எழுதினார்.

- விடுதலை 10.3.1963

0 comments: