Search This Blog

10.9.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -10

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (10) யார் வன்முறையாளர்கள்?


காமராஜரைக் கொல்ல முயற்சி என்ற தலைப்பில் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண அய்யர் துக்ளக் இதழில் (27.7.2011) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

இதனை நினைத்தால் விலா நோக சிரிப்புதான் வந்து தொலைக்கிறது.

இதே காமராசரை -அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின்தலைவராக இருந்த பச்சைத் தமிழரை பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் இந்தியாவின் தலை நகரமான டில்லியில் (7.11.1966) உயிரோடு கொளுத்தி அவர் உயிரை ஏப்பம் விடலாம் என்று கருதிய கொலைகாரக் கூட்டமா இந்தக் குற்றச்சாற்றை முன் வைப்பது?

ஆர்.எஸ்.எஸ். குண்டர்களும் ஜனசங்கப் பேர் வழிகளும், நிர்வாண சாமியார்களும், சங்கராச்சாரியார்களும் (பூரி சங்கராச்சாரியார், ஜோசிமடத்து சங்கராச்சாரியர்) லட்சக்கணக்கில் திரண்டு நின்று காட்டு விலங்காண்டித் தனமாக வெறியாட்டம் போட வில்லையா?


நரகத்தின் வேட்டை நாய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டனவோ வென்று பிளட்ஸ் எழுதியது. டில்லியில் சாதுக்கள் நடத்திய போர்க்களத்தை விரைந்து சென்று பார்த்த பத்திரிகை யாளர்களுக்கு நரகத்தின் வேட்டை நாய்கள் கட்டவிழ்த்து விடப்பட் டனவோ என்று எண்ணும் வகையில் வளைந்து உடைந்த திரிசூலங்களும், தீஜ்வாலைகளும், ஏராளமான மலைப் பிஞ்சுகளும், எரிந்த கட்டடங்களையும் கார்களையும் ஏன், மனிதர்களையும்கூட கொளுத்திய காட்சிகளே பார்லி மென்டிற்கு முன்பும், அதன் அருகாமையிலும் தென்பட்டன என்று பிளிட்ஸ் எழுதியது. திட்டமிட்ட தாக்குதல் என்று இந்துவின் டில்லி நிருபர் எழுதினார்.

பார்ப்பன ஃபாசிஸ்டுகளின் கோரக் கூத்து! என்று லிங்க் படம் பிடித்துக் காட்டியது.

பாங்குகளும், மருத்துவமனைகளும் கூட தாக்குதலுக்குத் தப்பிப் பிழைக்க வில்லை.

வெளியூர்களிலிருந்து திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தால் எங்கே டில்லி நகரமே அடித்துச் செல்லப்பட்டு விடுமோ என்பதுபோல் தோன்றியது கோமாதாக்கி ஜெ என்று இரண்டரை லட்சம் மக்கள் தெருக்களில் ஊர்வல மாக முழங்கிக் கொண்டே சென்றனர் என்கிறது பம்பாயின் கரண்ட் இதழ்.

இந்தக் கொலை வெறி வன்முறையைக் கண்டித்து மக்கள் மத்தியில் ஆரோக்கியமான மனித உணர்வை அந்தக் கால கட்டத்தில் வளர்த்தது திராவிடர் கழகமும் தந்தை பெரியாரும் தான்.

காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என்ற நூலை வெளியிட்டு, வன்முறைக் கும்பலின் முகத்திரையைக் கிழித்த எங்களைப் பார்த்தா வன்முறையாளர்கள் என்று சொல்லுவது, வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

தமிழ்நாட்டில் ஒரு கறுப்புக் காக்கை இருக்கிறது. அதைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று காமராஜரை ஜாடை காட்டி ஆச்சாரியார் ராஜாஜி சென்னை கடற்கரையில் முழங்கினாரே -_ என்ன அர்த்தம்?

வன்முறை என்பது துக்ளக் உள்ளிட்ட இந்துத்துவா கும்பலுக்கு உடன் பிறந்த நோயாயிற்றே! இந்துக் கடவுள்கள் கைகளில் கொலை ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளவில்லையா? இந்துக் கடவுள்களும், அவதாரங் களும் சண்டைகள் போடவில்லையா? கொலை செய்யவில்லையா? கொள்ளை அடிக்கவில்லையா?

ராமன் சம்பூகனை வெட்டிக் கொன்றானே? துரோணாச்சாரி ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிக் காணிக்கையாக பெற்றவன்தானே?

சண்டை செய்! உற்றார் உறவினரைக் கொல்லு! கொல்லு!! என்று சொன்னவன் தானே உங்கள் பகவான் கிருஷ்ணன்! இந்தக் கொலை தூண்டல் நூலான கீதைதான் இந்துத் தர்மத்தின் மிக உயர்ந்த பொக்கிஷமாம்!

கொலை செய்வதைத் தர்மம் என்று உலகில் எந்தக் கிறுக்கனாவது சொல்லி யிருக்கிறானா? இந்து கிறுக்கு மதத்தில்தான் இந்த அசிங்கம்!

இந்தக் கீதையின் சுலோகத்தை எடுத்துக்காட்டி தானே நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் அகிம்சைவாதியான காந்தியாரையே சுட்டுக் கொன்றான்.

அந்த நேரத்தில் மட்டும் தந்தை பெரியார் நினைத்திருந்தால் காந்தியை ஒரு பார்ப்பன வெறியன் சுட்டுக் கொன்று விட்டான் _ கிளர்ந்து எழுங்கள் என்று உத்தரவிட்டிருந்தால் _ ஏன் கொஞ்சம் ஜாடை காட்டியிருந் தால்கூட ஒரு அக்ரகாரம் மிஞ்சியிருந்திருக்குமா? ஒரு புழு பூச்சி பரம்பரையை நினைவூட்ட மிச்சம் இருந்திருக்குமா?

அதற்காக தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் காலா காலத்திற்கும் நன்றி கூற வேண்டுமே அக்கிரகாரம்!

அதே நேரத்தில் மும்பையில் என்ன நடந்தது? அக்கிரகாரத்தில் எத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன? பார்ப் பனக் கல்வி நிறுவனங்கள் எரியூட்டப் பட்டன?

பார்ப்பானே காந்தியாரைக் கொலை செய்துவிட்டு கொன்றவன் முஸ்லிம் என்று புரளியைக் கிளப்பி விட்ட புல்லர் கூட்டமா வன்முறைபற்றி எகத்தாளம் போடுவது! இஸ்மாயில் என்று கோட்சே கையில் பச்சை குத்தியிருந்தானே _ சுன்னத்தும் செய்து கொண்டு இருந்தானே? அரசாங்கத்தார் தந்தை பெரியாரை அழைத்துத்தானே வானொலியில் பேசச் சொல்லிக் கேட்டுக் கொண்டனர். அந்தக் கடமையை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றினாரே!

தந்தை பெரியார் என்ன கட்டளை யிட்டார் திராவிடர் கழகத்தினருக்கு?

ஊருக்கு ஊர் கூட்டம் போடச் செய்து தீர்மானம் நிறைவேற்றச் செய்தாரே!

இக்கூட்டமானது உலக மக்களால் போற்றப்பட்ட வரும் இந்திய தேசிய காங்கிரஸ் நடப்புக்கு மூலகாரணமாயிருந்து, அதை நடத்தி வந்த முக்கிய தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை முதலிய உயர் குணங்களை சதா சர்வகாலம் மக்களுக்குப் போதித்து வந்த உத்தமரும் ஆன ஒப்பற்ற பெரியார் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரணமடைந்தது குறித்து தனது ஆழ்ந்த துயரத்தையும், துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இம்மரணத்துக்குக் காரணமாக இருந்த கொலை பாதகனையும் அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும், மக்களையும் வெறுப்புக் காட்டிக் கண்டிக்கிறது.

இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவை படிப்பினையாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் யாவரும் ஜாதி, மத, இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்வோமாக!

அன்பும், அறிவும், சத்தியமும் என்றும், எங்கும் நிகழ்வதாகுக! அவையேயாவற்றினும் வெற்றி பெறுவதாகும். என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய நிலையத்துக்கும், காந்தியின் மகன் தோழர் தேவதாஸ் காந்திக்கும்; பண்டித ஜவகர்லால் நேரு அவர்களுக்கும் அனுப்ப வேண்டியது, செய்தியை எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பவும்.

-------------------------- ஈ.வெ. ராமசாமி

என்று கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்ட தலைவரைப் பார்த்தா பார்ப்பனத் தலைப் பிரட்டைகள் தாவிக் குதிப்பது?

காந்தியார் மரணத்தைத் தொடர்ந்து மக்களை இதுபோல் வழி நடத்திய தலைவரோ, அமைப்போ உண்டா? வேறு எங்கும் உண்டா?

1948இல் புல்லேந்தும் கைகளில் வாளேந்துவோம்! என்று பார்ப்பனர்கள் மாநாடு போட்டு அறிவித்த நேரத்தில்கூட

தூத்துக்குடி மாநாட்டில் தந்தை பெரியார் என்ன சொன்னார்? விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்? என்று எச்சரித்து விட்டு, சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறி. உண்மை நிலையை அழ கான உவமானத்தில் எடுத்துரைத்தாரே!

என் அருமைப் பார்ப்பனத் தோழர்களே! நீங்கள் வாழை இலையைப் போல் மென்மையானவர்கள் நாங்கள், நாங்கள் என்றால் திராவிட இனத்தவர்கள், முள்ளுச் செடி போல வன்மையும், கூர்மையும் வாய்ந்தவர்கள் முள் வாழை இலைமீது உராய்ந்தாலும், வாழை இலைதான் கிழியும்; வாழை இலையே வந்து முள்ளுடன் மோதினாலும் வாழை இலைதான் கிழியும். அதுபோல நீங்களாக வந்து எங்கள் இனத்துடன் மல்லுக்கு நின்றாலும் உங்களுக்குத்தான் நஷ்டம். அல்லது நாங்களாக வந்து உங்களிடம் போரிடத்தக்க நிலை நேரிட்டாலும், உங்களுக்குத்தான் நஷ்டம்.

ஆகையால்தான் கூறுகிறேன்; நம் இருவருக்குள்ளும் போரோ, பிணக்கோ, பூசலோ, பகையோ நேரும் விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள்! அப்படி நடந்து கொண்டால் கஷ்டம் உங்களுக் குத் தான்; எங்களுக்கல்ல என்று எச் சரிக்கையுடன் கூடிய அறிவுரையை வழங்கிய நல்லவர்தான் தந்தை பெரியார்!

கழகம் அறிவிக்கும் போராட்டங் களுக்குக்கூட அதில் கலந்து கொள்ளும் கறுஞ்சட்டைத் தோழர்களுக்கு, தொண்டர்களுக்குத் தந்தை பெரியார் பிறப்பித்த கட்டளைகளைப் போல வேறு எந்த அமைப்பிலாவது உண்டா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சராக இருந்தபோது இந்தி திணிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து தந்தை பெரியார் போராட்டத்தைத் தொடங்கினார். அப்பொழுது வெளியிட்ட 14 கட் டளைகள் இதோ:

1. தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது.

2. கடின வார்த்தை, கேவல வார்த்தை, மனவருத்தம் அல்லது ஆத்திரமூட்டும் வார்த்தை கண்டிப்பாய் பிரயோகிக்கக் கூடாது. 3. போலீஸ்காரரிடம் நமக்கு சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.

4. போலீஸ்காரர் முன் வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்ட வேண்டும்.

5. கூப்பிட்டால், கைது செய்ததாய்ச் சொன்னால் உடனே கீழப்படிய வேண்டும்.

6. போலீஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடி வாங்க வேண்டும். நன்றாய் அடிப்ப தற்கு வசதி செய்து கொடுக்க வேண் டும்.

7. போலீஸ்காரர் பக்கத்தில் வந்த வுடன் நீங்கள் மெய்ம்மறந்து பக்தியில் இருப்பது போல், ஒரு மகத்தான காரியத்தை நாம் சாதிப்பதற்கு இந்த அற்ப அதாவது நம் சரீரத்துக்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலி கொடுக்கக்கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு (பாக்கியம்) நமக்குக் கிடைத்திருக்கிறது என்று வரவேற்கும் தன்மையில் இருக்க வேண்டும்.

8. போலீஸ்காரர் அடிக்கும்போது தடுக்கும் உணர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.

9. அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரியாராக இருந்தாலும் அவர்கள் அருள் கூர்ந்து கிட்டவே வரக்கூடாது.

10. ஒலி ஒலிப்பதில் அசிங்கமான வார்த்தைகள், தனிப்பட்ட மனிதர் களைக் குறிக்கும் வார்த்தைகள் கண்டிப்பாய் உச்சரிக்கக்கூடாது.

11. எந்த காரியத்தின் மூலமும் தொண்டர்கள், நடத்துபவர்கள், தலைவர்கள் பலாத்கார உணர்ச்சி, பலாத்கார பயன் உள்ள எண்ணங்கள், செய்கைகள் கொள்ளக் கூடாது.

12. போலீஸார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஓடலாம். ஆனால் தொண்டர்கள் மார்பை காட்டியே ஆக வேண்டும்.

13. இந்தி எதிர்ப்பு இயக்கம், காரி யாலயம், நிர்வாகம், நிர்வாகஸ்தர்கள் ஆகியவர்களுக்குத் தொண்டர்கள் அடிமைபோல் கட்டுப்பட்டாக வேண்டும்.

14. பெண்கள் இடமும், மற்றும் இயக்கத்தில உள்ளவர்களிடமும், வெளியே உள்ளவர்களிடமும், வெளியில் உள்ளவர்கள் இடமும் அன்பாய், மிகமிக யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட இன்னும் பல காரியங்களில் மிகுதியும் கண்டிப்பாய் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அவசியமாகும்.

------------------------------------(குடிஅரசு 7.8.1948)

இதற்கு இணையான எடுத்துக் காட்டு உலகில் எந்த மூலையிலாவது உண்டா?

கூட்டங்களில் கலகம் செய்வது, கற்களை வீசி எறிவது, பாம்புகளை விடுவது, கறுப்புக் கொடிகளைக் காட்டு வது, சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தடிகொண்டு தாக்குவது ஆபாசச் சொற்களில் ஏசுவது போன்ற வன்முறைக் காரியங்களை அவர்கள் செய்தார்கள் என்று கூறுகிறது துக்ளக் (27.7.2011.)

இதைவிட அபாண்டம் வேறு உண்டா? உண்மையை அப்படியே தலைகீழாகப் புரட்டுவது என்று சொல்வார்களே - அது இங்குதான் அப்படியே பொருந்தும்.

சின்னாளப்பட்டியில் பொதுக்கூட் டம். அங்கு என்ன நடந்தது?

குடிஅரசு இதழ் கூறுவதைப் படியுங்கள்:

சின்னாளப்பட்டி கலவரம்!


16.1.1946 மாலை 4 மணிக்குத் தனிக்காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந் தனர். உடனே ஒரு மாபெரும் ஊர் வலம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாகச் சென்றது. வழி நெடுக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. 4.30 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகியது. ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அமைதி யுடன் உட்கார்ந்து பெரியாரவர்களின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இவ் வுணர்ச்சியைக் கண்ட காங்கிரஸ் காலிகள் தூரத்தில் நின்று கூச்சலிட்டுக் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஒலிபெருக்கி நன்றாக இருந்ததால் பெரியாரவர்கள் காலிகளின் கூச்சலை லட்சியம் செய்யாமல் மிக உணர்ச்சி யுடன் பேசிக் கொண்டிருந்தார். பெரி யார் விடாமல் பேசுவதையும் மக்கள் கேட்டுக் கொண்டிருப்பதையும் கண்ட காலிகளுக்கு மிகவும் அவமானம் உண்டாகவே எப்படியேனும் இங்கு காலித்தனம் செய்ய வேண்டுமென்று கருதி கற்களை வீசினர்.

உடனே பெரியாரவர்கள், சால் வையை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு எல்லோரும் தலையில் துண்டைக் கட்டிக் கொள்ளுங்கள்; ஒருவரும் கலைய வேண்டாம் என்று கூறி மீண்டும் பேசிக் கொண்டே இருந்தார். இதைக்கண்ட காலிகள் மிகவும் அதிகமாக கூச்சலிட்டுக் கற்களை மாரிபோல் வீசினர். உடனே அங்கு வந்திருந்த போலீசார் தடியடிப் பிரயோகம் செய்தார்கள். உடனே கூட்டம் கலைய ஆரம்பித்தது. அவ்வூரில் போலீஸ் இல்லாததால் வெளியூரிலிருந்து இங்கு ஒன்றும் கலவரம் நடக்காதென்று கருதி இரண்டு போலீஸ்காரர்களும், ஒரு சப்_இன்ஸ் பெக்டர் மட்டுமே வந்திருந்தனர். கலவரம் அதிகமாகவே சப்-_இன்ஸ் பெக்டர் பெரியாரிடம் கூட்டத்தை கலையுங்கள் என்றார். உடனே பெரியார் நீங்கள், என்னால் சமாளிக்க முடிய வில்லை கலைத்துவிடுங்கள் என்று எழுதிக் கொடுங்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

பின்பு சப்_இன்ஸ்பெக்டர் நாளையோ, மறுநாளோ வேண்டு மானால் நான் பாதுகாப்போடு உங்கள் கூட்டத்தை நடத்தித் தருகிறேன் என்று கூறிவிட்டு அவரே ஒலிபெருக்கி முன்னால் நின்று காலிகள் கலகம் செய்வதாலும் நான் போதிய பந்தோ பஸ்துடன் வராததாலும் இக்கூட் டத்தைக் கலைக்கிறேன் என்று கூறி னார். பின்பு உள்ளூர்த் தோழர்களும் பெரியாரை வேண்டிக் கொள்ள, பெரியார் கூட்டத்தை முடித்தார். இவ் வளவு கலவரம் நடந்தும் பெரியார வர்கள் 1 மணி நேரம் பேசினார். திராவிடர் கழகம் சார்பிலும், முஸ்லீம் லீக்கின் சார்பிலும், சித்தையன் கோட்டை திராவிடர் கழகம் சார்பிலும் வாழ்த்திதழ்களும் மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டன. அன்றிரவே பெரியாரவர்கள் திண்டுக்கல் வந்து சென்னை செல்ல புறப்பட்டு ஈரோடு வந்து சேர்ந்தார்.

-----------------------------ஆதாரம்: குடிஅரசு 19.1.1946

இதற்குமேலும் என்ன ஆதாரம் தேவை? அன்றைய காங்கிரஸ் பார்ப் பனர்கள் இத்தகைய கலவரங்களின் பின்னணியில் இருந்தார்கள்.

மரத்தின் மறைவிலிருந்து வாலியைக் கொன்ற ராமன் பரம்பரை அல்லவா? அந்தப் புத்தி அவ்வளவு சுலபத்தில் போய் விடுமா?

மதுரையில் நடைபெற்ற முதலாவது மாகாண கறுப்புச்சட்டைப் படை மாநாட்டுப் (12.5.1946) பந்தல் மதுரை தேசிய வியாதி திருவாளர் வைத்தியநாதய்யர் தூண்டுதலால் காலிகள் கொளுத்தவில்லையா! மதுரையில் நடமாடிய அத்தனைக் கறுஞ்சட்டைத் தோழர்களையும் பெண்களையும் கூலிகளை ஏவிவிட்டு அடித்து நொறுக்கவில்லையா?

அந்த நேரத்தில்கூட தந்தைபெரியார் நிதானத்தை இழக்கவில்லையே! பொறுமையைத்தானே கடைபிடித்தார்? 20 ஆயிரம் கறுஞ்சட்டைத் தோழர்கள் திரண்டிருந்தனரே அவர்களை ஏவி விட்டு இருந்தால் என்ன நடந்திருக்கும்?

பேனா கிடைத்தது என்று எழுதித் தொலைக்கக் கூடாது. நிதானம் தேவை.

அந்த வன்முறையைக் கண்டு அஞ்சிடவில்லை. மாறாக பெரியார் குடிஅரசில் என்ன எழுதினார்?

மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம்தான் நாம் மனிதத் தன்மை பெற்று, திராவிடத்தைப் பெறப் போகி றோம். ஆகவே நாம் செய்ய வேண்டி யது யாவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும். எங்கும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும்; உடையிலும் கறுப்புக் கொடி சின்னம் துலங்க வேண்டும்.

இந்தக் காரியம்தான் மதுரையைக் கண்டு பயந்தோமா, துணிவும், வீரமும் கொண்டோமா என்பதை உறுதிப் படுத்தும் (குடிஅரசு 19.5.1946)

_ என்று மதுரை படிப்பினை என்ன என்ற தலைப்பில் கருத்துக் கூறியி ருக்கிறார் காலக் கதிரவனாம் தந்தை பெரியார்.

வன்முறையைக்கூட எந்த வகையில் எதிர் கொண்டார் இந்த ஈரோட்டு ஏந்தல் என்பதைக் கவனிக்க வேண்டும் கணிக்கவும் வேண்டும்.

நம்மில் ஒருவரைக் கொல்வதால் நம் கொள்கைகள் அழிந்து போய் விடாது. 5 கோடி தமிழர்களையும் கொன்றால் தான் நமது கொள்கைகள் அழியும் என்று திருவத்திபுரம் பொதுக் கூட்டத் தில் தந்தை பெரியார் பேசினாரே (விடுதலை- 3.10.1971) _ இத்தகு இயக் கத்தை யார்தான் என்ன செய்ய முடியும்?

திருச்சியில் பெரியார் மாளிகையைக் கொளுத்த சதி நடந்ததே!

திருவில்லிப்புத்தூரில் தந்தை பெரியாரைத் தாக்க திருக்கைவாலுடன் ஒரு கூட்டம் தயாராக இருந்ததே - சிறிது நேரத்துக்கு முன்னதாக அந்த இடத்தை தந்தை பெரியார் வாகனம் கடந்து விட்டதால் ஆபத்திலிருந்து தப்பும் நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கழகத் தோழர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனரே!

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மம்சாபுரம், தம்மம்பட்டி வடசென்னை முதலிய இடங்களில் உயிருக்குக் குறி வைக்கப் படவில்லையா!

உடையார்பாளையத்தில் கழக மாவீரன் ஆசிரியர் வேலாயுதம் அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விடப்படவில்லையா?

எத்தனை எத்தனையோ கொலை வெறித் தாக்குதல்களைக் கடந்துதான் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் இலட்சியப் பயணத்தை நோக்கி வீர நடைபோட்டு வந்திருக்கிறது.

வன்முறையில் நாட்டம் கொண்ட தில்லை. ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக தனி மாநாட்டில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் உரையாற்றுகையில் ஒன்றைக் குறிப் பிடுகின்றார்..

திராவிட மக்களுக்கு நல் வழிகாட்ட பெரியார் அவர்கள் நம் அடிமை வாழ்க்கையை மாற்றி, இன்ப வாழ்வு அமைத்துக் கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார்தான் நமது ஈரோட்டுப் பெரியார் ஆவார்.

இயற்கையின் அருமைப் புதல்வர் இவர். ஆதலால்தான் காந்தியையும் மிஞ்சிய அகிம்சாவாதியாகவும், சாக்ரட்டீசையும் மிஞ்சிய அளவுக்குச் சமுதாய சீர்திருத்தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார்

(திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஈரோட்டில் திரு.வி.க. அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.. விடுதலை 30.10.1948)

கல்லால் அடித்தார்கள்

செருப்பு வீசினார்கள்
.
கத்தியைப் பாய்ச்சினார்கள்.

எந்த மக்களுக்காக பெரியார் போராடினாரோ, அந்த மக்களாலேயே தொடக்கக் கால கட்டத்தில் அவமதிக்கப்பட்டார்.

அந்த அவமதிப்புகளைப் பெரியார் இப்படித்தான் சந்தித்தார்:

உண்மையான சமுதாயத் தொண்டன் என்பவர் சமுதாய நலனுக்குச் செய்யும் காரியங்களில் மானக்கேடு ஏற்பட நேர்ந்தால் அதைத் துணிவுடன் ஏற்க முன்வர வேண்டும். குடிநலத் தொண்டர்கள் மானம் பார்க்கில் கெடும் என்ன கெடும்? லட்சியம் கெடும்.... அப்படி மானத்தைக் கருதாதவன்தான் லட்சியவாதியாவான். மற்றவன் சுயநலவாதியாவான்.

--------------------------(விடுதலை 20.11.1966)

என்றாரே - இந்த பெரியாரிடம் வன்முறைச் சிந்தனை முகத்தைக் காட்டுமா?

அபாண்டம் பேசுவது, வீண் பழி சுமத்துவது என்பது பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலை. அதைத்தான் துக்ளக்கும் செய்து கொண்டிருக்கிறது.

-------------------------(மீண்டும் சந்திப்போம்)


*********************************

கழகத்தோழர்கள்தாக்கப்படுவதுபற்றிபெரியார்

ஓ சர்க்காரே நீ கனவு கண்டிருக்கலாம், ஒரு தடையுத்தரவு பிறப்பித்து விட்டால் இவர்கள் ஆத்திரப்பட்டு ஏதாவது செய்வார்கள். அதையே சாக்காக வைத்துக் கொண்டு திராவிடர் கழகத்தையே அடியோடு கலைத்துவிடலாம் என்று. நாங்க ளென்ன மடையர்களா? நம்மாளை நம்மவனையே கொண்டு அடிக்கச் செய்ய? தடையுத்தரவு பிறப்பிக்குமுன் உனக்கு அறிவிருந்தால் சிந்திக்க வேண்டாமா? இந்த இயக்கம் எத்தனைக் காலமாக இருந்து வருகிறது? இதுவரை எந்தெந்த இடத்திலாவது சர்க்காருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருக்கிறதா என்று?

நமக்கு வேண்டுமானால் சர்க்கார் இதுவரை எவ்வளவோ தொல்லை கொடுத்திருக்கிறது. மதுரையில் நடந்த கருஞ்சட்டை மாநாட்டின்போது சில காலிகள் எங்கள் பெரிய பந்தலுக்கு பட்டப்பகல் பன்னிரண்டரை மணிக்கு தீ வைக்கப்பட்டபோது ஜில்லா சூப்ரிண்டென்டென்ட், முதல் அதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட் அனைவரும் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், ஒழுங்காக தீ மூட்டப்படுகிறதா என்று. கொஞ்சம் தடுத்திருந்தால்கூட அன்று ஒரு 50 ஆயிரம் ரூபாய் பொருள் சேதம் ஏற்பட்டிருக்காது. ஏனென்று ஆட்சியாளர்கள் கேட்டதுண்டா? ஏதோ விசாரணை ஒன்று தலைவர்கள் நடத்தினார்கள்.

அதன் முடிவு என்ன என்று கேட்டால் அது ரகசியம், சொல்ல முடியாது என்று பதில் கூறிவிட்டார்கள். சமீபத்தில் சங்கீத மங்கலத்தில் (விழுப்புரம் - _ செஞ்சி அருகில்) எங்கள் கழகத் தோழர்கள் காங்கிரஸ் காலிகளால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். போலீசார்கூட தமது F.I.R. புத்தகத்தில் குற்றவாளிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். என்றாலும் அவர்கள்மீது ஏதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சேலத்தில் சில காலிகளால் சோடாபுட்டி வீசப்பட்டு எங்கள் தோழர் ஒருவருக்கு கண்ணில் காயப்பட்டு 20 நாள் ஆஸ்பத்திரியில் கிடந்தார். முடிவில் கண்ணை இழந்தார். அதற்காக Nuisance Charge செய்து இரண்டு ரூபாய் அபராதம் விதித்தார்கள். அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இரண்டு ரூபாய் அபராதம் விதித்தார்கள். அண்ணாமலை யுனிவர்சிட்டியில் திராவிடர்கழக மாணவர்களை நடு ஜாமத்தில் போலீசை வைத்துக் கொண்டு அடித்துப் புடைத்து கடைசியாக அடித்தவர்கள்மீதுள்ள பிராது பைசா வாங்கிக் கொண்டு அடித்துப் புடைத்து கடைசியாக அடித்தவர்கள் மீதுள்ள பிராது; பைசா வாங்கிக் கொண்டு உதைபட்டவர்கள் மீது கேசு நடக்கிறது! வேறு எந்த அரசாங்கமாவது இப்படிப் பட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்துமா?

இவ்வளவையும் நாங்கள் பொறுத்துக் கொண்டுதானே வந்திருக்கிறோம்?

எங்கள் கழகத் தோழர்கள் சிலர் ஆத்திரப்படும்போதுகூட ஆத்திரப்படா தீர்கள். ஆத்திரப்பட்டால் இரண்டு கட்சிகயிலும் அடிபடுபவர் நம்மவராகத் தான் இருக்க நேரிடும்; ஆகவே சமா தானமாக நடந்து காங்கிரஸ் திராவிடத் தோழர்களின் அன்புக்கும் பாத்திர மாகுங்கள் என்று தானே அவர்களுக்குச் சமாதானம் கூறி வந்திருக்கிறோம்? இதை யாராவது இல்லையென்று கூற முடியுமா? அல்லது எங்கள் நடத்தையாவது இதற்கு மாறுபட்டிருந்தது என்று யாராவது கூற முடியுமா? இந்த உண்மைகளெல்லாம் சர்க்காருக்குத் தெரியாமலா இருக்கிறது? தெரிந்திருந்தும் ஏன் இந்த வீண் வேலை?

கனம் சுப்பராயன் (போலீஸ் உள்துறை மந்திரி) அவர்கள், பலாத்காரத்தைக் கையாளாத யாரையும் நாங்கள் வீணாகத் தொல்லை கொடுக்கப் போவதில்லை, என்று தம் வானொலிப் பேச்சில் கூறினார் என்று கேட்டு அவருடைய நல்லெண்ணத்தில் நம்பிக்கை கொண்டு அதற்காக அவரைப் பாராட்டி மெமோரியல் ஹாலில் பேசிவிட்டு வீட்டிற்குப் போகிறேன். அங்கு தந்தி வந்து சேருகிறது. திருவண்ணாமலையிலிருந்து கருஞ்சட்டை போட்டுக் கொண்டு இருந்ததற்காகவும் கழகத்தில் கருப்புக்கொடியை இறக்காத தற்காகவும் கழகத்துக்கு வந்து ஆறு தோழர்கள் கைதியாக்கப்பட்டு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள்


--------------------சென்னை பெரியமேட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து 7.3.1948

இதுதான் கழகத்தின் வரலாறு - கண்டமாதிரி எழுதவேண்டாம் துக்ளக்கே

--------------------தி.க.பொதுச்செயலாளர் மானமிகு கலி.பூங்குன்றன் அவர்கள் 10-9-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: