Search This Blog

19.9.11

கடவுள் உண்டு என்று நிரூபிப்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு


ஒல்லியான உருவம், சிறிய தாடி மீசை, கழுத்துப் பட்டி, ஊடுருவும் பார்வை யுள்ள கண்கள், கூரிய நாசி, வளமான குரல், அளவான பேச்சு, ஆழமான அறிவு, அர்த்தமுள்ள விவாதங்கள் சவால்கள், நாத்திக நண்பர்கள் புடைசூழல் - இவற்றிற்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் ஆபிரஹாம் கோவூர்.

கேரளாவில் பிறந்து இலங்கையில் வாழந்து மறைந்தவர். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர்தான். ஆனால் கடவுள் அருளியது பைபிள் என்பதை ஒத்துக் கொள்ள மறுத்து, பிறந்த நாட்டையும் துறந்து இலங்கை சென்று ஆசிரியர் பணியினை ஏற்றவர். ஆவியுலக மோசடிகள் மனோவிகார ஏமாற்றுகள் இவற்றின் முகத்திரையைக் கிழித்தெறிந்தவர்.
பேய் பிடித்தல் - உள்ளிட்ட நம்பிக்கைகளை அறிவியல் கோல் கொண்டு விளக்கம் தந்து மக்களின் அறியாமையை நேருக்கு நேர் நின்று விரட்டியடித்தவர்.

கடவுள் உண்டு என்று நிரூபிப்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு என்று அறி வித்தவர் - சவால் விட்டவர்! ஆனால் அவர் சவாலை ஏற்றுக் கொள்ள எவரும் முன் வரவில்லை. அந்த அளவுக்குப் பகுத்தறிவு நாத்திகச் சிந்தனைகளில் அறிவியல் அணுகுமுறைகளில் கம்பீரமாக வாழ்ந்து காட்டி 80 வயது வரை வாழ்ந்த மானுடம் மறக்கவொண்ணா மாமேதை.

இரவில் கல் விழுகிறது - திடீர் என்று வீடு தீப்பற்றி எரிகிறது என்று தகவல் வரும் இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று, அவற்றின் பின்னணியில் இருந்த ஏமாற்று வேலைகளை, எத்து வேலைகளை, சூழ்ச்சி வலைப் பின்னல்ளை அம்பலப் படுத்திக் காட்டியவர்.


பொது மேடைகளில் அந்தரத்தில் மனிதனை மிதக்க வைப்பது போன்ற காட்சி களை அரங்கேற்றி, அதில் உள்ள உளவியலை அறிவியல் ரீதியாக விளக்கியவர்.

ஒரு தகவலைச் சொல்லு கிறார் டாக்டர் ஏ.டி. கோவூர். டாக்டர் கோவூரும், குன்னி ராமன் என்ற பணியாளரும் (கேரளாவில்) ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென் றனர். அப்பொழுது அவ்வூர் நம்பூதிரிப் பார்ப்பான் படகில் நின்று கொண்டிருந்தான். நம்பூதிரிக்கோ துடுப்புப் போடத் தெரியாது.

கோவூர் உதவி செய்ய முன்வந்தார். குன்னிராமன் தீண்டத்தகாத ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் அந்தப் படகில் ஏறியது நம்பூதிரிப் பார்பப்னருக்குப் பிடிக்கவில்லை. ஆற்றில் ஆழம் கூடத் தெரியாமல் நம்பூதிரி ஆற்றின் குதித்து விட்டான். நீந்தத் தெரியாமல் உயிருக்குப் போராடினான் நம்பூதிரி.

கடைசியில் அந்த ஈழவத் தோழன் தான் ஆற்றில் குதித்து நம்பூதிரியைக் காப்பாற்றினான்.

கண் விழித்துப் பார்த்த நம்பூதிரியைப் பார்த்து ஆத்திரத்தில் ஆற்றில் குதித்து விட்டீர்களே, இப்பொழுது உம்மைக் காப்பாற்றியது அந்த ஈழவச் சகோதரன் தானே என்று கேட்டார் கோவூர். இதுபோல எத்தனை எத்தனை நிகழ்வுகள் அவர் வாழ்வில் உண்டு. தன் மரணத்துக்குப் பிறகு தன் உடலை கொழும்பு மருத்துவ மனைக்கு ஈந்த அந்த மனித நேய - நாத்திகப் பெருவுள்ளத்தை மரியாதையாக நினைவு கூர்வோம்! இன்று அவரின் நினைவு நாள் (1978) ஆகும்.

----------- மயிலாடன் அவர்கள் 18-9-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: