Search This Blog

2.9.11

சித்திரைதான் தமிழ் ஆண்டுப் பிறப்பு -பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு


தமிழ்த் தேசியவாதிகளின் பரிதாப நிலை!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் முதல் அமைச்சராக இருந்து நிறைவேற்றிய சட்டம் யார் எந்தக் கண்ணோட்டத்தில் விமர்சித்தாலும் - தமிழ் தமிழர் பண்பாட்டுச் சிகரத்தில் ஏற்றப்பட்ட வெற்றிக் கொடி என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் தான் - பெரும்பாலும் பார்ப்பன ஊடகங்கள் தான்.

வரலாற்றின் போக்கை உணர்ந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

தினமணி முதல் நாள் கருத்தரங்கம் என்ற தலைப்பில், சித்திரைதான் தமிழ் ஆண்டுப் பிறப்பு என்று அடித்து எழுதியது - மறுநாளே அ.தி.மு.க. அரசு அவ்வாறு சட்டம் இயற்றுகிறது.

தொடக்க முதல் துக்ளக் தை முதல் நாளை ஏற்கவில்லை என்ற முறையில், இப்பொழுது இயற்றப்பட்டுள்ள சட்டம் அவர் உச்சியைக் குளிர வைப்பதிலும் ஆச்சரியம் இல்லை.

இந்த வார துக்ளக்கூட (7.9.2011) யாரோ திராவிடர் சான்றோர் பேரவையின் தலைவராம்; அவரை இழுத்து வந்து குளிர் காய்ந்திருக்கிறது.

திராவிடர் என்ற வரலாற்றுச் சொல்லை தந்தை பெரியார் தேர்ந்தெடுப்பதற்கே காரணம் பார்ப்பனர்களுக்குச் சம்பந்தம் இல்லாதது என்பதைக் காட்டத்தான்! அந்தப் பேரில் உள்ளவர்கள்கூட சுலபமாகப் பார்ப்பனர்களுக்கு விலைபோகக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

காலம் காலமாகப் பார்ப்பனர்களுக்கு இத்தகையவர்கள் கிடைக்கப் பெற்று ஆழ்வார் பட்டமும் பெற்றுக் கொள்வார்கள்.

இப்பொழுது ஏன் இந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும்? முன் ஏன் இயற்றவில்லை என்று எளிதில் கேள்வி கேட்டு விடலாம். ஏற்கெனவே சட்டத்தை இயற்றாததால் இப்பொழுது இயற்றக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை.


1942 ஆகஸ்டில் ஏன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்க வேண்டும்? அதை ஏன் 1930இல் தொடங்கவில்லை என்று கேட்கலாம்தான்.

1921இல் நீதிக் கட்சிதானே ஆட்சியில் இருந்தது? அப்பொழுதுதே ஏன் தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்கவில்லை என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டு விட்டார்களாம்.

சென்னை மாநிலம், ஆந்திரா, மலையாளம் உள்ளிட்ட பகுதிகள் அப்பொழுது சென்னை மாநிலம். அந்த நிலையில் இதனை நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மேலும் இரட்டை ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அரசுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் மிகச் சிறிய அளவில்தான்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவிப்பும் - சட்டமும் நீண்ட காலப் பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு எதிர்ப்பு என்ற தொடர்ச்சியின் ஒரு கட்டமாகும்.

தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாக்கப்படவில்லையா? அதற்கு முன்பு இருந்த தமிழ்ப் பெயர்களை ஏன் சமஸ்கிருத மயமாக்கினார்கள்?

மயிலாடுதுறை எப்படி மயூரம் ஆயிற்று? திருமரைக்காடு எப்படி வேதாரண்யமாயிற்று! திருமுதுகுன்றம் எப்படி விருத்தாசலம் ஆயிற்று? திட்டமிட்ட பார்ப்பனீய சமஸ்கிருத ஆதிக்கத்தின் மேய்ச்சல்தானே!

அதே நிலைதான் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதும், அறுபது தமிழ் வருடங்களின் பெயர்கள் அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்டதும் ஆகும்.

அதற்காக எழுதி வைக்கப்பட்ட ஆபாசமான - அருவருப்பான கதையை நாம் சுட்டிக் காட்டினால், அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்காது நழுவுகிறதே, துக்ளக் உள்ளிட்ட கூட்டம்! ஏன்? ஏன்?

திரு என்ற சொல்லுக்குப் பதில் ஸ்ரீ என்று போட வேண்டும் என்று ராஜாஜி முதல் அமைச்சராக இருந்த போது 1938இல் ஆணை பிறப்பித்தது ஏன்?

பார்ப்பனர் அல்லாதவர்கள் ஆச்சாரி என்று போடக் கூடாது; ஆசாரி என்றுதான் போட வேண்டும் என்று பதிவுத் துறைக்கு உத்தரவு போட்டாரே அதே ஆச்சாரியார் - ஏன்?

இருப்பதை மாற்றி இவர்கள் உத்தரவு போடலாம். ஆனால் இருந்ததை இழந்தவர்கள் மீண்டும் மீட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தால் சட்டம் இயற்றினால் அதற்கு நான்கு கால் பாய்ச்சலா?

தமிழன் தோல் தடித்துக் கிடக்கிறது - பக்தி நோயால் அவன் அறிவு பாழ்பட்டுப் போய் விட்டது என்ற துணிச்சலால் தானே இவையெல்லாம் நடக்கின்றன - எதிரிகள் ரொம்பவே துள்ளுகிறார்கள்.

பெரியாரின் மாணவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சிலர் சட்டமன்றத்தில் வாலைச் சுருட்டிக் கிடந்தார்களே, வெட்கப்பட வேண்டியதுதான். இவர்கள் இதற்குப் பின்பும் பெரியார் பெயரை உச்சரித்தால் அதைவிட வெட்கக்கேடு வேறு ஒன்றும் இல்லை. ஆமாம் இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் எங்கே போனார்கள்? அவர்களுக்கு ஓர் அனுதாபக் கண்ணீர்!

--------------------”விடுதலை” தலையங்கம் 2-9-2011

1 comments:

புகல் said...

தமிழன் அழிந்துபோவதற்க்கு முதன்மை காரணமே
இந்த பாலாய் போன இந்து மதம்தான் மற்றும்
இந்தியா என்ற மாயயை உணர்வு(இதை பற்றி நாம் பின்பு பார்ப்போம்).
இதை வைத்தே தமிழர்களை நன்றாக ஏமாற்றுகிறார்கள்.

*தமிழன் இயற்கையை மட்டுமே வணங்கி வந்தான், வேடிக்கை என்னவென்றால்
*இந்து மதத்தை தமிழர் மதம் என்று பொய் பரப்புரை செய்து தமிழர்களை சுரண்டுகிறார்கள்,
*தமிழர் மதம் இந்து என்றால்
--ஏன் கடவுள் வழிபாடு தமிழில் நடப்பதில்லை,
--தமிழக அரசு ஆணை பிறப்பித்தும் தமிழில் பூசெய் செய்யமுடியாது என்று சொல்ல என்ன இறுமாப்பு இவர்களுக்கு,
--இந்து மத பண்டிகை என்று சொல்லபடும் பண்டிகைகள் எதாவது தமிழர்களின் வாழ்கை முறையோடு ஒன்றிபோகிறதா,
--அந்த பண்டிகைகளின் பெயர் விநாதயகர் சதுத்திர்த்தி, சரஸ்வதி பூசை, தஸ்ரா, நவராத்திர, அஷ்டமி, தீபாவளி இன்ன பிற... எதாவது தமிழ் மொழியோடு ஒன்றிபோகிறதா.
--இந்து மதங்களின் நூல்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை,
--இந்து கடவுளின் பெயர்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை.

*எவனோ பெற்ற பிள்ளைக்கு நீ எப்படி தகப்பனாய் இருக்க முடியும்
*உன் இனம், உன் மொழி, உன் பண்பாடு ஆகியவற்றை உண்ர்ந்து அதுபடி நடப்பதே சாலச் சிறந்தது,
இது மற்ற மொழி, பண்பாடு மீதான எந்த காழ்புணர்ச்சி எதுவும் கிடையாது சில விசமிகள் இதை தப்பாக திரித்து சொல்ல கூடும், மற்ற இனத்தின் ஆதிக்கம் தமிழ் பண்டாடு, நெறி மீது இருத்தல் கூடாது என்பதே என் அவா.

*சிறுவயது முதல் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் நூல்களை கற்ப்பிக்க வேண்டும்,
*குறைந்தபட்சம் தினம் ஒரு திருக்குறளை கற்ப்பிக்கலாம் அதை திணிக்காமல் நல்ல பொருள்பட சொல்லி தரும்போது அந்த குழந்தைக்கு தித்திப்பாகவும், வரும் நாளில் நல்ல பண்புடன், அறநெறியுடன் வாழவழி செய்யும்

*நம் தமிழ் நூல்களில், இலக்கியங்களில்;
--நம் வாழ்கைக்கு முறைகளுக்கு தேவையான
அன்பு, பண்பு, அறம், நெறிமுறை, பண்பாடு, இன்பம்,
கோட்பாடுகள், மாந்த நேயம் இன்ன பிற.. உள்ளன.

*பிற மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பின்பற்ற தமிழரும், தமிழ் மொழியும் ஒன்றும் ஊனம் அல்ல.
*பிறமொழியை சேர்ப்பதால் தமிழுக்கு நல்லது என்று சொல்லி சமற்கிருத்தை தமிழில் தணித்து தமிழை சீரழித்ததுபோதும் வேண்டுமானால் வடவர்கள் தமிழை சமற்கிருதத்தில், இந்தியில் சேர்த்து கொள்ளட்டும்

*தமிழ்மொழி உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் மூத்த மொழியாக உள்ளது
இது தற்பெருமையோ, தம்பட்டமோ இல்லை
இந்த பெருமையும், பட்டம் உலக அறிஞர்களால் உணர்ந்து கொடுக்கபட்டது.

வாழ்க தமிழ்,
வளர்க தமிழ்,
வெல்க தமிழ்

இவன் புகல்,
pugal.na@gmail.com