Search This Blog

9.9.11

புராண, இதிகாசங்கள் அடியோடு ஒழிய வேண்டும் - ஏன்?

புராண இதிகாசங்கள் அடியோடு ஒழிந்தால்தான் மனிதன் மானத்தோடும், உரிமையோடும் சமநிலையோடும் வாழ முடியும் தமிழர் தலைவர் தெளிவான விளக்கம்

புராண, இதிகாசங்கள் அடியோடு ஒழிந்தால்தான் தமிழன் மனித உரிமை யோடும், மானத்தோடும் வாழ்ந்து சமநிலையை அடைய முடியும் என்று பெரியார் கூறிய கருத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கினார்.


தந்தைபெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் இரண்டாம் தொடர் சொற்பொழிவு 11.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


ஜோலார்பேட்டையில் நாடகம்


அடுத்து 24.3.1943இல் ஜோலார்பேட்டையில் பெரியார் பேசியிருக்கின்றார். தமிழருக்கு கேடானவை கலையாயிருந்தாலும் கடவுளாயிருந்தாலும் ஒழிய வேண்டியதே - ஒழித்தே தீருவோம் கலை என்பது பற்றி பெரியார் பேச்சு 10.4.1943 விடுதலை ஏட்டில் வெளிவந்த செய்தியைப் படிக்கின்றேன்.

இரணியன் அல்லது இணையற்ற வீரன்


24.3.1943 தேதி இரவு ஜோலார்பேட்டைக்கு பெரியார் வருவதை உத்தேசித்து நூர்ஜஹான் டாக்கீஸ் கொட்டகையில் மிட்டாதார் தோழர் வி.பார்த்தசாரதி அவர்களது முயற்சியால் இரணி யன் அல்லது இணையற்ற வீரன் என்னும் நாட கத்தை சேலம் தோழர் ஜி.குப்புசாமி நாயுடு கம் பெனியாரால் நடத்திக் காட்ட ஏற்பாடு செய்யப் பட்டதுடன் அந்த நாடகத்திற்கு பெரியாரே தலைமை வகிக்க வேண்டும் என்றும், கலை என்பதைப் பற்றி பேச வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 10 மணிக்கு நாடகம் துவக்கப் பட்டிருந்தது.


கொட்டகையில் இடம் போதாத அளவுக்கு


நாடகத்துக்கு நாட்டரம்பள்ளி, திருப்பத்தூர், அம்பலூர், வாணியம்பாடி, வடசேரி, ஆம்பூர், வேலூர் முதலிய பல இடங்களிலிருந்தும்...

1500 பேர்களுக்கு மேல் கொட்டகையில் இடம் போதாத அளவுக்கும் வெகு நெருக்கமாக ஜனங்கள் அடக்கி ஆள முடியாத அளவுக்கும் 9 மணிக்கு முன்பே வந்து கூடிவிட்டார்கள்.

கொட்டகையின் அடைப்புத் தட்டிகள் எடுக்கப் பட்டுவிட்டன. முதலில் ஒரு மணி நேரம் தோழர் ஆர்மோனியம் விஸ்வநாதம் அவர்கள் ஜஸ்டிஸ், சுயமரியாதை சீர்திருத்தம் முதலியவை பற்றியும் தமிழர் பாட்டுகளும் பெரியார், பன்னீர் செல்வம், பொப்பிலி ராஜா குமாரராஜா, சண்முகம், சவுந்திர பாண்டியன் முதலிய தலைவர்கள் பாட்டும், பார்ப் பனீயக் கொடுமைப் பாட்டும் 11 மணி வரை ஏராள மாகப் பாடினார். மக்கள் கை தட்டிய வண்ணமே இருந்தார்கள்.

பெரியார் வந்தவுடன் பெருத்த ஆரவாரம்


தலைவர் பெரியார் அவர்கள் கொட்டகைக்கு 11 மணிக்கு வந்தார் (பெரியார் பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு அங்கு வந்திருக்கின்றார்). தலைவர் பெரியார் அவர்கள் கொட்டகைக்கு 11 மணிக்கு வந்தார். வந்த உடன் மக்கள் பெருத்த ஆரவாரம் செய்தார்கள்.

நடிகர்கள் வரிசையாக வந்து பெரியாரை வணங்கிச் சென்றார்கள். பிறகு பெரியாரைத் தலைமை வகிக்கும்படி தோழர்கள் வீ.பார்த்தசாரதியும், சின்னராஜும் பிரரேபித்து ஆமோதித்தார்கள். பெரியார் தலைமை வகித்து முகவுரையாக ஒன்றரை மணி நேரம் நாடகம், நாடகக் கலை என்பவை பற்றியும் நமக்கு வேண்டிய சீர்திருத்தம் என்பது பற்றியும் பேசினார்.

பெரியார் பேச்சு


தோழர்களே! இன்று இந்த மேடையில் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் ஒரு கதை நாடகமாக இப்போது நடிக்கப்படப் போகிறது. இது ஒரு ஆரியப் புராண சம்பந்தமான கதாநாயகனைக் கொண்ட நாடகமாகும். ஆனால் அக்கதையை புராணத்தில் உள்ளது போல் நடத்திக் காட்டப் போவதில்லை.

கதை உண்மையாய் நடந்திருக்குமானால்


புராணத்தில் உள்ள தெய்வீகத்தையும் மூடநம் பிக்கைத் தத்துவங்களையும் எடுத்துவிட்டு, கதையில் உள்ள முக்கிய தத்துவத்தை தமிழர் ஆரியர் பற்றிய முன்பின் சரித்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பொருந்தி, ஆரியர், திராவிடராக வைத்தும், இக் கதை உண்மையாய் ஒரு சமயம் நடந்திருக்குமானால் எந்த மாதிரியாக நடந்திருக்கும் என்பதாக பகுத்தறிவுக்கு ஒத்த முறையில் சிந்தித்தும், சித்தரித்தும் அதன்படி நடத்தப்படப் போவதாகும்.

இக்கதை காட்டுமிராண்டி காலத்தில் அதாவது புராண காலத்தில் ஆரியர்கள் கற்பனை செய்யப் பட்டதாதலால், பெரும்பாலான விஷயங்களை தெய்வீக சக்தியாக ஆக்கி அசாத்தியமான விஷயங்களாலேயே தங்கள் ஆசைகளையும் ஆத்திரத்தை யும் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆரியர்கள், அரக்கர்கள்


இக்கதையிலும் இனியும் இது போன்ற கதை களிலும் வரும் கடவுள்கள் என்பவர்களை ஆரியர் களாகவும் ராட்சதர்கள், அரக்கர்கள், அசுரர்கள், தஸ்யூக்கள், சூத்திரர்கள், மிலேச்சர்கள் முதலாகிய பெயர்கள் கொடுக்கப்பட்ட ஆரியரல்லாதவர்கள் என்பவர்களை திராவிடர்கள் என்பதாகவும், இக்கதை ஆசிரியர் (பாரதிதாசன் அவர்கள்) கருதி ஏனெனில் இந்நாட்டுக்கு அதாவது திராவிட நாட் டுக்கு ஆரியர்கள் வருவதற்கு முன்பு திராவிடர்களே சிறப்பாக தமிழ் மக்களே பூர்வ குடிகளாகவும் அரசர்களாகவும் இருந்திருப்பதாலும், இப்புராணம் எழுதப்பட்ட காலமும் ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்துக்கு உட்பட்ட காலமேயானதாலும், அறிவு ஆராய்ச்சி வல்லோர் கண்டுபிடித்த உண்மைப்படி அக்கால ஆரியர், திராவிடரை வஞ்சித்து ஆதிக்கம் பெற இம்மாதிரி காரியங்கள் செய்திருப்பதாக முடிவு செய்து கொண்டு சிந்தித்து உண்மையில் இக்கதை நடந்து இருந்தால் எப்படி நடந்திருக்கும் என்று அறிவுக்கண் கொண்டு சித்தரித்து இருக்கிறார்.

நமக்கு செய்திருக்கும் கேட்டை ஒழிக்க


ஆரியப் புராணங்கள் அநேகம் கலை இலக்கியம் ஆகியவைகளுக்குள் புகுந்து நமக்குச் செய்திருக்கும் கேட்டை ஒழிக்க இந்தப்படியே ஒவ்வொரு புராண இதிகாசங்களையும் சிந்தித்து சித்தரிக்க வேண்டியது அவசியமாகும். எதற்கு ஆகவென்றால் நமக்குள் அவற்றை ஆரியர்கள் எழுதி வைத்தபடியே உண்மை என்று நம்பியும் தங்களை அக்கதைகளில் இழிவுபடுத்தி வைத்து இருப்பதை லட்சியம் செய் யாமல் ஏற்றுப் போற்றிப் பாவித்துக் கொண்டும் பின்பற்றியும் வருகிறார்கள்.

எதை பலிகொடுத்தாவது மாற்றியாக வேண்டும்


ஆதலால் மானத்தில் கவலையுள்ள நாம் எதை பலி கொடுத்தாவது இந்த நிலையை மாற்றியாக வேண்டும், அடியோடு ஒழித்தும் ஆக வேண்டும்.

தமிழர்கள் மனிதத்தன்மை பெறாததற்கு


ஏனெனில் இப்படிப்பட்ட முன்னேற்றமான காலத்திலும் கூட தமிழர்கள் மனிதத் தன்மை பெறாததற்கும் அதைப்பற்றி சரியான கவலை கொள் ளாததற்கும் இந்தப் புராண இதிகாச கதைகளின் உண்மை அறியாத மூடநம்பிக்கையே முதற் காரணம். இந்த மூட நம்பிக்கைகளே தான் தமிழர் களாகிய நமக்கு மதமாகவும், பக்தியாகவும், கடவு ளாகவும் இருப்பதோடு மாத்திரமல்லாமல் இவை களை நான் முன் சொன்னபடி கலையாகவும், நாடகமாகவும், சங்கீதமாகவும், சினிமாவாகவும், இலக்கியங்களாகவும், மக்களை மேன்மையாகவும், கீழ்மையாகவும் கருதவும், வாழ்க்கை நடப்பதற்கு நீதியாகவும், உபமான உபமேயமாக எடுத்துச் சொல்லுவதற்கு ஆதாரமாகவும் இருப்பதாலும் அறி வாளிகள், கவியாளர்கள், பண்டிதர்கள், மேதாவி கள், மகாத்மாக்கள், மகான்கள், என்பவர்களுக்கும் அவர்களது வாழ்வுக்கும், மேன்மைக்கும் விளம் பரத்துக்கும் மூலப்பொருள் பொக்கிஷங்களாய் இவைகளே இருப்பதாலும் மொழி, சமுதாயம் ஆகிய துறையிலும் அறிவு, கலை, இலக்கியம், சமயம் முதலாகிய துறைகளிலும் நம் மக்களுக்கு இருந்து வரும் இழிவுகள் ஒழிந்து மேன்மைகள் ஏற்பட வேண்டும் என்று உண்மையாய் கருதுகிறவர்கள். இதுபோன்ற பெருத்த தொகு புரட்சிகரமான முயற்சிகள் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

பெரிய மனிதர்களுக்கு இராமாயணம், மகாபாரதம்


(இந்த நாட்டில் இருக்கின்ற பெரிய மனிதர்கள் எல்லாம் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் சொல்ல வேண்டும். கீதையைப் பற்றி சொல்வதுதான் பெருமையாகக் கருதுகிறார்கள். திருக்குறளைப் பற்றி யாராவது 2 வார்த்தை சொல்லுகிறார்களோ. அல்லது அறிவார்ந்த கருத்துக்களை சொல்லுவ கிறார்களா என்றால் இல்லை. இது அந்த காலத்தில் பெரிய புரட்சி இவ்வளவு பெரிய மக்கள் மத்தியில் மாறுபட்ட ஒரு நிலை) அடியோடு ஒழிக்கப்பட்டால் ஒழிய

உண்மையாகச் சொல்லுகிறேன். வடமொழி சாஸ்திர புராண இதிகாசங்களை (தமிழர் களாலேயே ஆனாலும்) அவை எந்த ரூபத்தில் நுழைக்கப்பட்டு இருந்தாலும் அல்லது தானாகவே நுழைந்திருந்தாலும் அவை அடியோடு ஒழிக்கப் பட்டால் ஒழிய தமிழன் மனித உரிமையோடும் மானத்தோடும் வாழ்ந்து சமநிலை அடைய முடியவே முடியாது என்பதை உணருங்கள். (இதெல்லாம் கல்லில் செதுக்கி வைக்க வேண்டிய உண்மைகள் நாளைக்கும் தமிழன் வெளியே வரவேண்டும் என்றால் இந்த பண்பாட்டுப் புரட்சி யிலிருந்து வெளியே வரவேண்டும். புராண, இதிகா சங்களை சொல்லுவது, கம்பன் விழா நடத்துவது இலக்கியம் என்ற பெயரில் பெரிய புராணத்தில் அவர் அப்படி செய்தார் என்று சொல்லி நமது மூளையைத் துருபிடிக்க வைக்கின்றானே.

கெட்ட வாய்ப்பாக


நாம் அறிவுப்பிரச்சாரம் செய்கிறோம். அதுவும் இப்பொழுது கெட்ட வாய்ப்பாக என்று சொல்ல வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சி, சினிமாக் களில் எல்லாம் இராமாயணம் வாராவாராம் இராமாயணம் தொடர் நிகழ்ச்சிகளைப் போடு கிறார்கள்.

இராமாயண நாடகத்தைப் போட்டு எவ்வளவு கெடுதி வந்தது. எத்தனை குழந்தைகள் செத்தார்கள். அம்பை விட்டு கண்போனது என்பதெல்லாம் அப்பொழுது வெளியே வந்தது. எப்படி இந்த போதை தெளியக் கூடாது என்பதற்காக அவர் களிடம் இருக்கின்ற பொருள்களை கவருவதற்கு மேலே மேலே ஊற்றிக்கொண்டிருப்பானோ, அதே மாதிரிதான் இன்றைக்கு அறிவியல் கருவிகளை, மின்னணுவியல் கருவிகளை முழுக்க முழுக்க இதற்கே பயன்படுத்துகின்றார்கள்).

எனது முடிவு


மேலும் சொல்லுகிறேன் அந்த வடமொழி புராண இதிகாசங்களின் விஷயங்கள் வட மொழியில் இருப்பதைவிட தமிழில் இருப்பவை களே நமக்கு மிகுதியும் கேடு செய்யக்கூடியதாகும். (அது வடமொழியில் இருந்து விட்டால் அதைத் தெரிந்தவுடனோடு போய்விடும். அதை தமிழில் சொல்லி எல்லோரும் தூக்கி வைத்துக் கொண்டாடு கிறார்கள்.

வால்மீகி இராமாயணத்தில் யாரை வணங் கினார்கள்? பிராமணர்களாகிய எங்களைத்தான் வணங்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியத் துவமாக வலியுறுத்தப்படும்.

கம்பராமாயணத்திலே அதையே பாயிரமாகப் பாடியிருக்கிறார்கள். பார்ப்பான் என்று போடு வதற்காக அந்தணர்களாக ஆக்கியிருக்கிறார்கள். கடவுளை கும்பிடுவது முக்கியமல்ல. பார்ப்பனர் களை வணங்குவதுதான் முக்கியம்.

நம்ம தோழர்கள் கம்பன் விழா கொண்டாடு கிறவர்கள் எத்தனை பேர் இதைப்படித்தார்கள். எத்தனை பேருக்கு இந்த உணர்ச்சி இருக்கிறது என்று தெரியவில்லை.

வயிற்றுப் பிழைப்பிற்காக


சிலர் நம்மாட்கள் வயிற்றுப் பிழைப்பிற்கு அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது சிறந்த பாத்திரமா? கைகேயி ரொம்ப மிக முக்கியமா? சீதை ரொம்ப மிக முக்கியமா? என்று நினைத்துக் கொண்டு இவர்கள் நமது அறிவை பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.)

அன்றியும் அவை வெறும் கதை, காவியம், புராணம் ஆகிய உருவில் இருப்பவைகளைவிட கலை உருவில் இருப்பதும் இலக்கணம், இலக்கியம், நாடகம், சங்கீதம் ஆகியவற்றின் உருவில் இருப் பதும் மிக மிகக் கேடு செய்பவையாகும். என்பதே எனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டிய முடிந்த முடிவாகும்.என்று பெரியார் சொல்லுகிறார்.

...................................... தொடரும் ..........."விடுதலை” 8-9-2011

0 comments: