Search This Blog

16.10.08

பூணூல் அறுப்பதும் குடுமி வெட்டுவதும் என் திட்டத்தில் இல்லாமலில்லை!



யாரையாவது ஒருவரை ஒத்துக்கொள்ளச் சொல்லுங்கள்

ஓர் அதிசயமான சம்பவம்! நான் சிறையிலிருந்து வந்ததும் சொன்னார்கள்; சிறையிலிருந்து வரும் போதே போலீஸ்காரர்களைக் கேட்டேன். காரில் வரும்போது சொன்னார்கள் - ஏதோ நாலுபேர் குடுமி பூணூல் வெட்டப்பட்டிருப்பதாகப் புகார் கொடுத்துள்ளார்கள்; செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை என்றார்கள். இங்கு வந்ததும் சிலர் சொன்னார்கள். சேர்ந்து பார்ப்பனர் தாங்களே இப்படிச் செய்து கொண்டு புகார் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஒரு பார்ப்பன மிராசுதாரர் தூண்டி விட்டிருக்கிறார். தன் ஆட்களை இதுபோல ஒரு காரியம் செய்து இருக்கிறார்.

நம் தோழர்கள் மீது பழி சுமத்த முயற்சி நடக்கிறது; (காவல்துறையினர்) போலீஸ்காரர்கள் இதற்குக் குப்பைக்கூளம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். அவர்களே இது போலச் செய்துகொள்கிற நிலை வந்துவிட்டது என்றால் மகிழ்ச்சிதான்.

இன்றும் சொல்கிறேன். கழகக்காரர்கள் அதுபோல நடந்திருப்பார்களானால், வெட்கப்படாமல் சொல்கிறேன். அது தவறு. அவர்கள் கழகக்காரர்கள் அல்ல; கழகக்காரர்கள் அதுபோல நடந்திருக்க மாட்டார்கள், பூணூல் அறுப்பதும் குடுமி வெட்டுவதும் என் திட்டத்தில் இல்லாமலில்லை; ஆனால் அதை இப்போது செய்தால் அது தவறுதான்.

உயர்ந்த சாதிக்காரன் என்பதற்காக அதைக் காட்டிக் கொள்ளத்தானே உச்சிக்குடுமி, பூணூல். அதைப் பார்க்கும்போது எங்கள் இரத்தம் கொதிக்குமா இல்லையா?


ஆகவே ஓட்டல் போர்டுகளில் (உணவகப் பெயர்ப் பலகைகளில்) பிராமணாள் என்பதை அழிக்க வாய்தா கொடுத்ததுபோல் இதற்கும் வாய்தா கொடுப்பேன். ஆனால் இப்போது நடந்திருப்பது கழகத் தோழர்களால் என்று சொல்வது தப்பு.

உங்களுக்குத் தெரியாது. சென்னையில் பார்ப்பான் முகத்தில் தார் ஊற்றியதாகப் புகார் வந்தது. அவனே ஊற்றிக் கொண்டானா? யார் ஊற்றினார்கள். என்பது தெரியாது. போலீஸ்காரர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. யாரையாவது ஒருவரை ஒத்துக் கொள்ளச் சொல்லுங்கள். எச்சரிக்கை செய்து விட்டுவிடச் சொல்கிறோம். இல்லாவிட்டால் எங்களுக்குக் கஷ்டமாகும் என்றார்கள் நானும் ஏமாந்துதான் போய்விட்டேன். தோழர்களிடம் சொல்லி ஒருவரை ஒத்துக் கொள்ளுமாறு சொல்லச் செய்தேன். ஒரு குற்றமும் அறியாத ஒருவர் ஒத்துக் கொண்டார். அபராதம் போட்டார்கள். அதைக்கூட போலீஸ்காரர்கள் தான் தந்தார்கள். ஆனால் அது என்ன ஆயிற்று என்றால் அதை வைத்துத்தான் தடையுத்தரவு போட்டார்கள்; போட முடிந்தது.

-------------------28.11.1957 அன்று திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு "விடுதலை", 30.11.1957

0 comments: