Search This Blog

20.5.12

திராவிடர் - வார்த்தை விளக்கம்


திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப் படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவை போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். அவற்றிற்கு உங் களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண் டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம்.

திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்து அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல் லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்ல வில்லை. நமக்குச் சிறு பிரயாயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினை விலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற் பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க் கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட் பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ் வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென் படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள்.

நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள் ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப் பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழி நிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனி யாமல் அது திறக்கப்படவும், உடைக்கப் படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப் பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப் பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங் கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண் டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டு கோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகி விட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதே போல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக் கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து

இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லு வதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுப விப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயன் அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த் திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும்.

கலந்துவிட்டது என்பது...

ஆரியன் திராவிடன் என்பது கலந்து போய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ் டானங்கள் கலந்துவிட்டனவா? பிரா மணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தா லென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கறுப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள்.

ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது.

நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமு மில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்து கொண்டிருந்த அவனைப் பறையனாக்கு வதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்துவிட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையது களுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை இன்றைக்கும் அப்படியே பின்பற்றப் படவேண்டும் என்றால் அது அறியாமையே யாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார் கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக் காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற் போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகிப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித் தாவது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டுபிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறை களை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

------------------09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு "குடிஅரசு" - சொற்பொழிவு - 14.07.1945

3 comments:

தமிழ் ஓவியா said...

கருத்தரங்கில் தி.க. பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங் குன்றன் கலந்து கொண்டு திராவிடரா? தமிழரா? என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசும் போது: திரா விடர் இயக்கம் தான் தமிழர் களுக்கு பாடுபட்டு வருகிறது. திராவிடரா? தமிழரா? என் பதில் பார்ப்பனர்களிடமிருந்து தமிழரை பாதுகாக்கும் குறிச் சொல், திராவிடர் என்பது திரா விட இயக்கம்தான் என்றைக் கும் தமிழுக்காகவும், தமிழின மக்களின் உணர்வுக்காகவும் பாடுபட்டு வருகிறது. திராவிடர் இயக்கத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லக் கூடிய தமிழ் தேசியவாதிகள், பார்ப்பனர் களின் கைக்கூலிகளாகவும், ஆர். எஸ்.எஸ்.சின் ஒலிபெருக்கிகளா கவும் செயல்படுகின்றனர்.

திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழரின் கதி என்னவாகியிருக்கும்? சற்று யோசித்து பாருங்கள். இன் றைக்கு திராவிடர் இயக்கத்தை யும், திராவிடர் இயக்க கொள் கையையும் கொச்சைப்படுத்தி பேசுகிறவர்கள், இந்த இயக்கத்தால்தான் சமுதாயத் தில் உயர்ந்திருக்கிறார்கள். இந்த நாட்டில் கல்விப் புரட் சியை செய்த கல்வி வள்ளல் காமராசரின் ஆட்சிக்கு தந்தை பெரியார் அவர்கள் பெரும் உறுதுணையாக திகழ்ந்தார்கள். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த பொருளாதார உச்சவரம்பு சட் டத்தை கடுமையாக எதிர்த்தது முதல் தமிழர்களுடைய வாழ் வுக்கும், சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் என்றைக்கும் திராவிடர் கழகம் தான் போராடி வந்துள்ளது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 20-5-2012

தமிழ் ஓவியா said...

நான்கு மொழிக்காரர்களுக்கிடையே தொடரும் ஒற்றுமை
நான்கு மொழிக்காரர்களுக்கிடையே தொடரும் ஒற்றுமை


இப்போது திராவிடம் என்ற கருத்தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்குவங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளச் சொல்லாடல் ஆகும். அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென்மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமைக்கூறுகள் நிலவுகின்றன. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். தாய் மாமனுக் கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர்களுக் கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய்தெய்வ வழிபாடு. மூன்றாவது இறந்த உடலுக்கான மரியாதை. இது நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது.

இன்றைக்கும் பிராமணர்கள் சடலத்துக்கு மரியாதை கொடுப்பதில்லை. பிராமணர் களுக்கும் பிராமணர் அல்லாதவர் களுக்கும் இன்னும் நீடித்திருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவ தில்லை. ஏனெனில் கீழ்ஜாதியின ராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ்கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்லமுடியவில்லை. ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவதில்லை. ஆம்லேட் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டுகிற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது? கோடையில்தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம்பரில் சங்கீத கச்சேரிகளை வைத்தார்கள். அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடுமுறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு? இது இன்றும் தொடர்கிறது.

அவர்களின் சாமிக்குக்கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் கடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டிருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.

பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடுகளை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் தானே செய்தார். வேறு எந்த தமிழறிஞரும் முன்வரவில்லையே. அவர் காலத்து தமிழறிஞர்களான மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவையங்காரோ செய்ய வில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா, உரைநடை என்பது மணிக்கொடியால் தான் வளர்ந்தது என்று வேதவசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925இல் பெரியாரின் தலையங்கங்களைப் பார்க்கவேண்டும். பெரியாரின் உரைநடை அத்தனை அற்புதமாக இருக்கிறது. இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள்தான்.

பார்ப்பனர்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார் அரசியலை முன்வைத்து உண்மையான சமூக அதிகாரத்தையும் அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியலைச் செய்தவர் பெரியார். அதை வெறுப்பரசியல் என்று குறுக்கக் கூடாது. இன்று மாறியிருக்கும் தமிழ்ச் சமூகநிலையை வைத்து, அவர் செய்த அரசியல் வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

- தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன்
நன்றி: த சன்டே இந்தியன், 29.04.2012

தமிழ் ஓவியா said...

பெரியார் அம்பேத்கர் உழைப்பு


அம்பேத்கர் பிறந்த மாநிலத்தில் அவர் படித்த பள்ளியில்கூட அவருக்கு தண்ணீர் மறுக்கப்பட்டது. அந்த காலத்தில் அந்த அளவுக்கு ஜாதி வேற்றுமை இருந்தது. அதனால்தான் அவர் படித்து முடித்தவுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய அடிதட்டு மக்களுக்காக பாடுபட்டார்.

எத்தனையோ மாற்றங்களும் வளர்ச்சியும் இரட்டை குவளை முறை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. தமிழகத்தின் பெரியாரின் தீவிர முயற்சியால் ஜாதி வேற்றுமை ஒரு சில கிராமங்களை தவிர முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளது.

பெரியாரின் முயற்சியால்தான் இடஒதுக்கீடு முறை தமிழகத்தில் முதன்முதலில் அமலுக்கு வந்தது. அதனால்தான் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு களை பெற்றுள்ளனர். தீண்டா மை இருக்கும் வரை அம்பேத்கர் மாதிரியான பெருமக்கள் போராடிக்கொண்டுதான் இருப்பார்கள். எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஜாதி வேறுபாடுகளும், ஒடுக்குமுறைகளும் கடந்த காலத்தில் நிலவின என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்திய வரலாற்றில் அவை இருண்ட காலமாகும். தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் சில கிராமங்களில், அடக்கு முறை அல்லது இரட்டைக் குவளை முறை தொடர்ந்து நிலவுகிறது; அனைத்து வழிகளிலும் இக்கொடிய மறை ஒழிக்கப்பட வேண்டும்.

- எம்.ஒய்.இக்பால், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்


அரவிந்தரின் ஆன்மீகம்

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஏற்கெனவே பாலியல் புகார்கள் உள்ளன. இப்போது அரவிந்தர் பற்றிய நூல் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. தி லைவ்ஸ் ஆஃப் அரபிந்தோ என்ற அரவிந்தரின் வாழ்க்கை குறித்த நூலை அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் பீட்டர் ஹீஸ் என்பவர் 2008இல் எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில், அரவிந்தரின் சுதந்திரப் போராட்டம் மதச்சாயத்துடன் கூடியது; அவர் தனது உளவியல் சிக்கல்களில் இருந்து விடுபடவே ஆன்மீகத்திற்குள் நுழைந்தார்; அவருக்கும் ஸ்ரீ அன்னை என்றழைக்கப்படும் மிரா அல்ஃபசாவுக்கும் இடையிலான உறவு முற்றிலும் காமம் சாராத உறவு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது என பீட்டர் ஹீஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை அரவிந்தர் பக்தர்கள் எதிர்க்கின்றனர். இந்த நூலாசிரியர் பீட்டர் ஹீஸ் 30 ஆண்டுகள் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர். ஆன்மீகவாதி, புரட்சி செய்தவர், துறவி என்றெல்லாம் போற்றப்பட்டவருக்கு வாழ்வில் இப்படி ஒரு முகம் இருந்ததா என நூலைப் படிப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.