Search This Blog

12.6.10

அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டி காட்டி மிரட்டுவதா?


அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டியா?
மதவெறியாளர் மீது நடவடிக்கை தேவை

அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டி காட்டி மிரட்டுவதா? இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள் மீது சட்டம் பாயவேண்டும். நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் அறிவியல் துறை

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பெரியார் அறிவியல் மய்யத்தில் அறிவியல் சிந்தனைகளை மாணவர்களிடையே பரப்பிட ஒரு முகாம் (3 நாள்களுக்கு) தமிழக அரசின் அறிவியல் துறை நடத்திடும் நிலையில், நேற்று பார்ப்பன நாளேடு ‘தினமலரில்’ ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்த ஒரு முகாமா?’ என்று தலைப்பிட்டு, விஷமத்தனமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்து மத ரீதியான அதிசயங்களாம்!

“அதில் உள்ள செய்தியின் ஒரு பகுதியில் இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்கால தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்’’ என்று போடப்பட்டிருக்கிறது.

அந்த ‘பிரகஸ்பதி’மீது நடவடிக்கை

இது சரியான தகவலாக இருந்தால், முகாம் நடத்துவதுபற்றி கூறிய அந்தப் ‘பிரகஸ்பதி’மீது சட்டப்படி, பள்ளிக் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தாகவேண்டும்.

இந்து மத பெருமைக்காகவா முகாம்?

மத சார்பற்ற அரசில் அதுவும் பெரியார் அறிவியல் மய்யத்தில், இந்து மதப் பெருமைக்காகவா முகாம் ஏற்பாடு செய்திருப்பார்கள்? இது எப்படி சரியாகும்?

அதே செய்தியில்,

கீழே, “மேலும், மத ரீதியான அதிசயங்கள் உண்மையில்லை என்றும், பகுத்தறிவைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தார்.’’

திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பு

ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திரு-விழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பை திரையிட்டுக் காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.

பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்

இந்த முகாமின்போதே, இதில் கலந்துகொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், இந்து மதத் தலைவர்களையும் பழிக்கும் விதமாகப் பேசினர். மத ரீதியான உணர்வுகளைப் புண்படுத்திப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!’’ என்று எழுதியதோடு, இதை நடத்திட வந்த பேராசிரியர் நரேந்திர நாயக் (கருநாடக அறிவியல் அறிஞர்) அவர்களுக்கு சில பார்ப்பன மதவெறியர்கள் தொலைபேசிமூலம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம்!

இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதென்ன?

இந்திய அரசியல் சட்டத்தின் 51_ஏ பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை கடமைகள் (Fundamental Duties) பற்றி கூறுகையில்,

‘‘It shall be the duty of every citizen of India to develop scientific temper, spirit of inquiry, humanism and reform’’ என்று கூறப்பட்டுள்ளதே!

அடிப்படை உரிமை போன்றதே அடிப்படை கடமைகளும்கூட!

அறிவியல் மனப்பான்மை முக்கியம்

இதன் அறிவியல் மனப்பான்மையை, கேள்வி கேட்டுத் துளைக்கும் பண்பை, மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்பி வளர்க்கச் செய்வதே அடிப்படைக் கடமையாகும்.

என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா?

இதனை அரசு, அதுவும் மதச் சார்பற்ற செக்யூலர் அரசு, அதன் அறிவியல் மய்யத்தில் தக்காரைக் கொண்டு நடத்தினால், அது மத உணர்வை இந்து மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி மிரட்டல் விடுவதா? பூச்சாண்டி காட்டுவதா?

அறிவியல் உண்மைகளைப் பரப்பி, மத, மூட நம்பிக்கைகளை ஊசிகொண்டு, ஊதப்பட்ட பலூன்களைக் குத்தச் செய்வதுபோல் அவசியமாகச் செய்யவேண்டிய பணி அல்லவா இது?

சைபர் க்ரைம் குற்றப்பிரிவு

இந்த மிரட்டல் விட்டவர்மீது ‘செல்போனில்’ சைபர் க்ரைம் குற்றப் பிரிவினர் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க முன்வரவேண்டும்!

உலகம் தட்டை என்று கருதப்பட்ட மூட நம்பிக்கை அதனை அடிப்படையாக, இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்ற கதை, கற்பனை என்று விளக்கம் சொன்னால் தவறு என்ன?

குடும்பக் கட்டுப்பாடு மதத்திற்கு விரோதம்தான்!

அரசின் குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடைகூட மதக் கருத்துக்கு விரோதம்தான். அத்திட்டம் மதவாதிகள் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி, அரசைக் கைவிடச் சொல்ல முடியுமா?

கிரகணம் ராகு, கேது, பாம்பு விழுங்கும் கதையை அறிவியல், வானவியல் ஏற்குமா? இதை அம்பலப்படுத்தி மூடநம்பிக்கையை மாணவரிடையே போக்க முயற்சித்தால், அது ‘மனம் புண்படும்’ என்றால், அவ்வளவு மோசமான மனம் படைத்தோருக்கு சமூகத்தில், நாட்டில் எங்கே இடம் இருக்கவேண்டும்?

இன்னமும் கதை விடுவதா?

மனிதன், நிலா உலகிற்குச் சென்று வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.

இன்னமும் ‘‘தாரை, குருபத்தினி’’, நிலா ஏன் தேய்கிறது - சாபம் நிலாவுக்குசந்திரனுக்கு 27 மனைவிகள் கதை கூறிட முடியுமா?

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் போக்கத்தானே அறிவியல்!

தி.க., ப.க. உடனே உரிய நடவடிக்கையில் இறங்கும்!

அம்மை குத்திக் கொள்வது ஆத்தாளுக்கு
விரோதம் என்று நம்பும் வடிகட்டிய மூடர்கள் மனம் முக்கியமா? நாற்றங்கால் பயிர்களாக உள்ள மாணவர்களை அறிவியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவது முக்கியமா?

பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் வேடிக்கை பார்க்காது. உடனே உரிய நடவடிக்கைகளில் இறங்கும்!


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை,
19.5.2010

------------------" விடுதலை” 19-5-2010

3 comments:

AkashSankar said...

இவர்கள் எல்லாம் எப்போது திருந்துவார்கள்...

லெனின் said...

ராச ராசன் நீங்க சொல்வது இந்த கட்டுரையாளர்களை தானே ?

நம்பி said...

//Blogger லெனின் said...

ராச ராசன் நீங்க சொல்வது இந்த கட்டுரையாளர்களை தானே ?

June 13, 2010 1:28 PM//

உம்மை சொல்லமுடியுமா...? கண்டம் கேஸ் என்று தெரியுமே...? ஊரை ஏமாத்த இந்த பெயர் என்றும் தெரியுமே..?