Search This Blog

18.6.10

பார்ப்பனீயத்துடனான பரம்பரை யுத்தம் இன்னமும் முடியவில்லை!

இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாதை போட்டவர்கள் யார்?
பாலத்தில் பயணம் செய்வோர் நன்றியோடு நினைக்க வேண்டும்
திருத்துறைப்பூண்டியில் பெரியார் சிலை திறந்து தமிழர் தலைவர் பேச்சு

பாலத்தின் மீது வசதியாகப் பயணம் செய்வோர் அதற்கான பாலத்தை, பாதையைப் போட்டவர்கள் பற்றி நன்றியுடன் நினைவு கூற வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

12.6.2010 அன்று மாலை திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தி.க.-தி.மு.க இரட்டைக் குழல் துப்பாக்கி

மிகுந்த எழுச்சிக்கும் வரலாற்றில் பெருமைக்குரியதுமான அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா மானமிகு சுயமரியாதைக்காரன் என்று ஒரே வரியிலே தன்னை விமர்சித்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இந்தியாவினுடைய தலைசிறந்த முதல்வர் இவர்தான் என்ற பெருமையோடு மாற்றாரும், வேற்றாரும் சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்து, நாளும் சாதனை சரித்திரத்தை அடுக்கிக்கொண்டே போகக்கூடிய நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய 87ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா, என்ற நிலையிலும், மற்றும் திராவிடர் கழகத்திற்கு நிதியுதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழாவும் இணைந்து முப்பெரும் விழா இன்றைக்கு இந்தத் திருத்துறைப்பூண்டி மாநகரிலே நல்ல உற்சாகத்தோடு திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா அவர்கள் சொல்லி அதற்குப் பிறகு கலைஞர் அவர்களாலே இன்றளவும் எடுத்துச்சொல்லப்படக் கூடிய அளவிலே அதை நடைமுறையிலே நாட்டுக்குப் பறை சாற்றக்கூடிய விழாவாக இந்த முப்பெரும் விழாக்கள் அமைந்து, வெள்ளம் போல் தமிழர் கூட்டம்

வீரம்கொள் கூட்டம்; அன்னார்

உள்ளத்தால் ஒருவரே மற்றுடலினால் பலராய்க் காண்பர் என்று சொல்லக் கூடிய அளவில் மிக சிறப்பான நிகழ்வாக இந்த நிகழ்வு மிக அருமையாக நடைபெற்றுக்-கொண்டிருக்கிறது.

திருத்துறைப்பூண்டி வரலாற்றில் குறிப்பிடத்தக்க விழா

திருத்துறைப்பூண்டி வரலாற்றிலே குறிப்பிடத்தக்க விழாவாக இந்த விழா நடைபெற்றுக்-கொண்டிருக்கிறது. அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய சிலை இன்றைக்கு கம்பீரமாக நிற்கிறதே.

நம்முடைய மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என எல்லோரும் வந்திருக்கிறார்கள். இந்தக் குடும்பம் ஒரு கொள்கை உறவுள்ள குடும்பம் என்பதை அகிலத்திற்குக் காட்டக் கூடிய அளவிற்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சி நடைபெறுகின்ற காலத்தில் என்னுடைய சிந்தனைகள் எல்லாம் பழைய காலத்திற்குச் சென்றது. இந்த ஊரிலே அற்புதமான ஊர்வலம் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம். அதிலே கார் இழுத்தார்கள். தாய்மார்கள், சகோதரிகள் எல்லாம் தீச்சட்டியை கையிலே ஏந்தி யார் ஏந்தினாலும் சுடாது காரணம் அந்த தீச்சட்டியினுடைய அமைப்புதான். ஆகவே பக்திக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. புத்திக்கும், இதற்கும்தான் சம்பந்தம் நியாயமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே எடுத்துக்காட்டி மிக அருமையாக நடத்தினார்கள்.

மத்திய, மாநில அமைச்சர்கள் இன்றைக்கு இவ்வளவு பெரிய விழாவாக மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் எல்லாம் பங்கேற்கக் கூடிய விழாவாக நடைபெற்றுவருகிறது.

இதற்கு அடித்தளம் அமைத்தவர்களைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

இயக்க வளர்ச்சிக்குப் பாதை போட்டவர்கள்

பழைய தோழர்களுக்கு வேண்டுமானால் இந்தப் பெயர்கள் ஞாபகத்தில் இருக்கும். ஆனால் இளைய தலைமுறையினர்களாக இருக்கக் கூடியவர்களுக்கு இந்தப் பெயர்கள் எல்லாம் தெரிய வேண்டும்; பதிய வேண்டும். இந்த இயக்க வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் பாதை போட்டவர்கள் யார்? பாலத்தின் மீது பயணம் செய்யும்பொழுது ரொம்ப சுலபமாக இருக்கும். ஆனால் அந்தப் பாலத்தைக் கட்டக் கூடியவர்கள் யார்? என்று நினைத்து, இது நன்றி காட்டக்கூடியத் திருவிழாவாகவும் இந்தப் பெருவிழா அமைய வேண்டும்.

சித்திரச் சோலைகளே!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பூங்காவுக்குள்ளே போனார். பூங்காவைப் பார்த்து அங்குள்ள பூக்களைப் பார்த்து, சோலைகளைப் பார்த்து அவர் மயங்கிவிடவில்லை. மற்றப் புலவர்களைப் போல காதலனையும், காதலியையும் உலவவிடவில்லை. மாறாக அவருடைய சிந்தனை எங்கே சென்றது என்று சொன்னால்,

சித்திரச் சோலைகளே_ உமைத்

திருத்தஇப் பாரினிலே_ முன்னர்

எத்தனைத் தோழர்கள் இரத்தம் சொரிந்தன

ரோ!உங்கள் வேரினிலே

என்று அந்த சித்திரச் சோலைகளை அமைப்பதற்காக எத்தனைப் பாட்டாளிகள் எத்தனை உழைப்பாளிகள் எத்தனைத் தொழிலாளர் தோழர்கள் அதற்காகத் தங்கள் இரத்தத்தை வியர்வையாக்கி அங்கே சிந்திருப்பார்கள் என்று அழகாக அந்த எண்ணத்தை செய்திருப்பார்கள். அது போல இந்த மேடை.

கம்பீரமாக பெரியார் சிலை

அது போல கம்பீரமாக நிற்கிற தந்தை பெரியார் அவர்களுடைய சிலை குறிப்பாக திருத்துறைப்பூண்டி வட்டாரத்திலே யாரெல்லாம் உதவினார்கள் என்று பார்க்கும்பொழுது எத்தனையோ பேர்.

நீதிக்கட்சிக் காலத்திலிருந்து சொல்ல முடியும். நான் மாணவப் பருவத்திலே கலைஞர் அவர்கள் மாணவப் பருவத்திலே இருந்து நாங்கள் எல்லாம் இந்த ஊரிலே எப்படிப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டோம் என்ற வரலாற்றையும் இன்றைக்கு புதிய தலைமுறையினர், இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஹாஜாபீர் வீட்டுத் திண்ணைதான்

ஹாஜாபீர் வீடு நீங்கள் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து இறங்கி வந்தால் பழக்கடைகள் இருக்குமே அங்குதான் ஹாஜாபீர் அவர்களுடைய அந்த வீட்டில் எங்களைப் போன்றவர்கள், கலைஞரைப் போன்றவர்கள் எத்தனையோ முறை உணவு உண்டுவிட்டு திண்ணையிலே நாங்கள் படுத்திருந்து பிறகு ரயிலிலே ஏறிப்போயிருக்கிறோம். இப்படி எத்தனையோ முறை. ஹாஜாபீர் அவர்கள் இங்கே துணிக்கடை வைத்திருந்தவர்கள். அவருடைய மகள் மும்தாஜ் அவர்கள் கூட கல்லூரிப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். பிறகு நான் நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே ஒரு முறை 1967லே கோலா லம்பூருக்குப் போகும் பொழுது அங்கே எனக்கு வரவேற்பு கொடுத்த பொழுது திடீரென்று ஒருவர் தோன்றினார். அவர்தான் ஹாஜாபீர் அவர்கள். அய்யா அவர்களுடைய தொண்டராக அவர்கள் இருந்தவர்.

அப்துல்காதர்

அதுபோலவே வரிசையாக ஒரு பெரிய பட்டியல் அப்துல்காதர் அவர்கள் ஹவேஸ் துறையிலே வேலை செய்தவர்கள். அவர்கள் மிகவும் தீவிரமான உணர்வு படைத்தவர். இந்த இயக்கத்திலே எப்படிப்பட்டவர்கள் எல்லாம் இருந்தார்கள் என்ற ஒரு நீண்ட பட்டியலைச் சொல்லலாம். முத்துப்பேட்டை தர்மலிங்கம் தந்தை பெரியாருடைய தொண்டராக பேட்டை த.நா. என்று அழைக்கப்படக் கூடிய முத்துப்பேட்டை தர்மலிங்கம் அவர்கள். அவர்கள் எல்லாம் எதற்கும் துணிந்து நிற்கக்கூடியவர். எதிர்ப்புகள் இருந்த கால கட்டம் சாதாரண காலகட்டமல்ல. உயிருக்கே சவால் விடக்கூடியதாக இருந்தநேரத்திலே அவர்கள் எல்லாம் துணிந்து நின்றவர்கள். ஆலத்தம்பாடி பரிசுத்தம்

அதுபோலவே ஆலத்தம்பாடி பரிசுத்தம் அவர்கள். கையிலே ஒரு சுருட்டை வைத்துக்கொண்டு எப்பொழுதுமே பேசக்கூடியவர்கள். அவர் தீவிரமானவர். கறுப்புத்துண்டைப் போட்டுக்-கொண்டுவந்து மிக இலாவகமாக மரியாதை காட்டியவர்.

கணபதி, சுந்தர்

அதுபோலவே அதற்கடுத்த கட்டத்திலே நம்முடைய மறைந்தும் மறையாமல் இருக்கக்கூடிய கோஆபரேட்டிவ் அர்பன் பேங்க் செக்ரட்டரியாக இருந்து, பகுத்தறிவாளர் கழகத்தினுடைய தலைவராக இருந்த நம்முடைய அய்யா கணபதி அவர்கள். அதுபோல நம்முடைய செயலாளர் அவர்களுடைய தந்தையார் சுந்தர் அவர்கள்.

கீரக்களூர் சாந்தன்

கீரக்களூர் சாந்தன் மிகப்பெரிய அளவுக்குப் பிரச்சாரம் செய்தவர். இரத்தம் கக்கிக் கக்கி இறந்தார். அவருடைய கனவுகளிலே ஒன்று. திருத்துறைப்-பூண்டியில் தந்தை பெரியாருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று விரும்பியவர்.

பராங்குசம்

பழைய பஸ்ஸ்டேண்டுக்குப் பக்கத்திலே பராங்குசம் ஒரு சாதாரண தோழர். அவர் விடுதலை முகவராக இருந்தவர். அது போலவே நாரணப்பெயர் சத்திரம் திரும்புகிற பாலத்திற்குப் பக்கத்திலே ஒரு பெரியவர் அவருடைய பெயரை நான் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். சிறைச்சாலைக்குப் போனவர். பல போராட்டங்களிலே கலந்து-கொண்டவர். ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தியவர்.

இராமலிங்கம்

அவருடைய பெயர் இராமலிங்கம். எனவே இப்படி ஒரு நீண்ட பட்டியலைச் சொல்லக்கூடியவர்கள். இப்படி எத்தனையோ பேர் உண்டு.

அது மட்டுமல்ல; இந்த இயக்கம் ஏதோ திடீரென்று வந்து விடவில்லை. இந்த இயக்கத்திற்கு எப்படிப்பட்ட உழைப்பு அடித்தளமாக இருந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

கலைஞருக்கு 87ஆம் ஆண்டு பிறந்தநாள்

கலைஞர் அவர்களுடைய 87ஆவது ஆண்டு பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுகின்ற நிலையிலே நீங்கள் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இது அய்யாவின் அடிச்சுவட்டில் என்னும் நூல். என்னுடைய நினைவுகளிலே இருந்து எழுதிய நூல். திருத்துறைப்பூண்டியைப் பற்றி ஒரு மிக முக்கியமான சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கின்றேன்.

திருத்துறைப்பூண்டியில் மாநாடு அந்த மாநாட்டைப் பற்றி எழுதியிருக்கின்றேன். இந்த நூலிலே தெளிவாக செய்திகள் இடம் பெற்றுள்ளன. கருப்புச் சட்டைப்படை மாநாடு

அது போலவே கருப்புச்சட்டைப் படை என்ற அமைப்பிற்கு தற்காலிக அமைப்பாளர்களாக ஈ.வி.கே சம்பத், கவிஞர் எஸ்.கருணானந்தம். கருணானந்தம் திருத்துறைப்பூண்டிக்கு உரியவர். ஆகியோர் அய்யாவால் நியமிக்கப்பட்டு கருப்புச்சட்டை அணியும் கட்டுப்பாடு மலரத்தொடங்கிய காலகட்டம். அப்பொழுதுதான் எல்லா மாவட்டங்களிலும் பிரச்சார மாநாடுகள்.

1946இல் திருத்துறைப்பூண்டியில்....!

6.11.1946 இந்த ஆண்டை நீங்கள் நினைவிலே வைத்துக்கொள்ளவேண்டும். அன்றைய தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இரண்டு மாநாடுகள். இந்த ஊரிலே இரண்டு மாநாடுகள். காலை முற்பகல் வரை ஒரு மாநாடு.

ஏனென்றால் இரண்டு நாள்கள் எல்லாம் நமக்கு நடத்துவதற்கு வாய்ப்பு கிடையாது. அதுவும் மாநாடு நடத்த ஒரு சினிமா தியேட்டர் கிடைத்தாலே பெரிய விசயம். ஆகவே இங்கே இருக்கக் கூடிய ஒரு தியேட்டரில்தான் அந்த மாநாட்டு நிகழ்ச்சி நடந்தது.

திராவிடர் மாணவர் மாநாடு

காலை 8 மணி முதல் முற்பகல் 1 மணி வரை. தஞ்சை மாவட்ட மூன்றாவது திராவிட மாணவர் மாநாடு; இரண்டு மணி முதல் இரவு 10 மணி வரை முதலாவது தஞ்சை மாவட்ட கருஞ்சட்டைப் படை மாநாடு.

மாணவர் மாநாட்டிற்கு தோழர் எஸ்.கருணானந்தம் வரவேற்புக் குழுத் தலைவர். தோழர் இராம.அரங்கண்ணல் செயலாளர். கருப்புச்சட்டை மாநாட்டிற்கு பி.எஸ்.மணியம் வரவேற்புக் குழு தலைவர். தோழர் வி.எஸ்.பி.யாகூப் வரவேற்புக் குழு செயலாளர்.

வாழ்த்தொலி முழக்கங்களுடன்

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பெயரால் பந்தல், வாழ்த்தொலிகளுடன் தலைவர்களை ரயிலடியில் வரவேற்று பெரியார் படம் வைத்து உற்சாகத்தோடு முழங்கிக்கொண்டு மாநாட்டுப் பந்தலை அடைந்தனர். ஏறத்தாழ மூவாயிரம் மக்கள் உள்ளும் புறமும் நிறைந்திருந்தனர். இது குடிஅரசு ஏட்டிலே வந்த செய்தியை அப்படியே எடுத்துக்காட்டியிருக்கின்றோம்.

தோழர் வீரமணி அவர்களின் உரை

கடலூர் இளந் தோழர் வீரமணி அவர்கள் வீர உரையாற்றி அது வீரஉரையா என்ன என்பது தெரியாது. அந்தக் காலத்தில் தட்டிக்கொடுக்க இளைஞர்கள் வரவேண்டும், நெஞ்சிலே வீரம் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக் காலத்திலே எப்படி எல்லாம் எழுதியிருக்கிறார் பாருங்கள்.

வீர உரையாற்றி மாணவர் செங்கொடியினை ஏற்றி வைக்க, அன்றைக்கே 66 ஆண்டுகளுக்கு முன்னாலே கொடி ஏற்றி வைத்திருக்கின்றோம். 1963_1964ஆம் ஆண்டுகளுக்கு முன்னாலே.

தோழர் கருணாநிதி அவர்களின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவு

காலை 9.30 மணிக்கு தஞ்சை மாவட்ட மூன்றாவது திராவிடர் மாணவர் மாநாடு ஆரம்பமாயிற்று. தோழர் மு.கருணாநிதி அவர்கள் உணர்ச்சி மிக்க சொற்பொழிவாற்றி மாநாட்டைத் திறந்து வைத்தார்கள்.

கொடி ஏற்றி வைத்தவன், ஒரு இளந்தோழன் நான். மாநாட்டைத் திறந்து வைத்தவர் இன்றைக்குப் பாராட்டுதலுக்குரிய 87 வயது இளைஞராக இருக்கிறாரே, நம்முடைய முதிய இளைஞர் பாராட்டுக்குரிய முதல்வர் கலைஞர் அவர்கள்.

விவேகம் அதிகமாகியிருக்கிறது

இன்றைக்கு அந்த வேகம் கொஞ்சம் குறைந்திருக்கலாம். காரணம் விவேகம் அதிகமாகிவிட்ட காரணத்தினாலே.

இடைவேளைக்குப் பின் தோழர் ஈ.வி.கே சம்பத் அவர்களுடைய தலைமையிலே கருப்புச்சட்டைப் படை அணிவகுப்பு நடந்தது.

சுமார் 600 தொண்டர்கள் வந்திருந்தனர். கடலூர் ஆ.திராவிடமணி அவர்கள் தான் எனக்கு ஆசிரியர். அவர்தான் என்னை அழைத்து இயக்கத்திற்குக் கொண்டுவந்தவர். கருப்புக்கொடியினை ஏற்றி வைத்தார்.

நாவலர் நெடுஞ்செழியன் உரை

மாநாட்டைத் தோழர் சம்பத் திறந்து வைத்தார். பிறகு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தாடியுடன், கம்பீரத் தோற்றத்துடன் சுமார் 2 மணி நேரம் தலைமை உரை நிகழ்த்தினார். இதெல்லாம் சாதாரணம். அடுத்து வருகின்ற செய்திதான் மிக முக்கியமானது.

--------தொடரும் ”விடுதலை” 14-6-2010
*****************************************************************

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சி கலைஞருடைய ஆட்சி
திருத்துறைப்பூண்டியில் பெரியார் சிலை திறப்பில் தமிழர் தலைவர் பாராட்டு

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக் கூடிய ஆட்சி திமுக ஆட்சி என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்றினார்.

திருத்துறைப்பூண்டியில் 12.6.2010 அன்று தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்த திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நீண்ட செர்வாணி அணிந்த கலைஞர்

அன்று எல்லோரும் கருப்புச்சட்டையில்தான் இருந்தோம். நான் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டிலும் இந்தச் செய்தி இருக்கிறது. ஏனென்றால் மாநாடே கருப்புச்சட்டைத் தோழர்கள் மாநாடு அப்பொழுதுதான் ஆரம்பம்.

திருவாரூரிலிருந்து வந்த திருவாரூர் மு.கருணாநிதி அவர்கள் நீண்ட செர்வாணி_செர்வாணி என்றால் வடநாட்டு உடை மாதிரி நீளமான உடை. சிகப்பு பொத்தான்களுடன் புதிதாக தைக்கப்பட்டதை அணிந்து வந்தார்.

நாங்கள் அவரை வரவேற்பதற்கு முதலிலே வந்துவிட்டோம். எல்லோரும் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்திற்குப் போயிருக்கிறோம். 1946இல் நடந்த சம்பவம் இது. கலைஞர் திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு ரயிலில் வருகிறார்.

எனக்கு உடலில் அம்மைக் கொப்புளங்கள்

மேலும் படிக்கிறேன். செர்வாணி அணிந்து வந்தார். அப்பொழுது கலைஞர் சொல்கிறார், கொஞ்சம் தாமதமாக வரவேற்க வேண்டிய அளவுக்கு ஆகிவிட்டது. நான் முதலிலேயே வரவேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் என்ன சங்கடம் என்று சொன்னால் எனக்கு உடலிலே அம்மைக் கொப்பளங்கள் இருக்கின்ற.ன அம்மை வந்துவிட்டது என்று சொல்லி சட்டையை நீக்கிக் காட்டினார். அவருக்கு உடம்பெங்கும் அம்மைக் கொப்பளங்கள் அத்துடன் உணர்ச்சி சொற்பொழிவாற்றினார்.

நாங்கள் எல்லோரும் அவரது உடலில் அம்மைக் கொப்பளங்கள் கண்ட நிலையிலும் அவர் கடமையாற்றிய கட்டுப்பாட்டினைக் கண்டு வியந்தோம். வியந்தார்கள். பிறகு ஓய்வெடுக்க அனுப்பப்பட்டார்கள்.

நண்பர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது தோழர்களுக்கும் இதை நான் பல நேரங்களில் சொல்வதுண்டு. இலேசாக இருமல் தலைவலி வந்தாலே கூட்டத்தைத் தள்ளி வையுங்கள் என்று சொல்லுவதெல்லாம் உண்டு.

அம்மைக் கொப்புளத்துடன் கருப்புச்சட்டை, சிவப்பு பட்டன்

ஆனால் அன்றைக்கு கலைஞர் அவர்களுக்கு அம்மைக் கொப்புளம் அதற்கு மேல் அதுவும் கருப்புச்சட்டை போட்டால் அதுவும் செர்வாணியைப்- போட்டால் எப்படியிருக்கும்? இதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அவரைப் பார்த்து எங்களுக்கெல்லாம் கண்கள் குளமாகக் கூடிய அளவுக்கு உணர்ச்சியாக இருந்தது. நாங்கள் கூட நீங்கள் வேண்டாம். ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னோம். அவர் பேசிவிட்டுத்தான் சென்றார்.

கொள்கையில் பிடிவாதமுள்ளவர்

இன்றைக்கு எப்படி அவர் கொள்கையிலே பிடிவாதமாக இருந்தாரோ அதே கொள்கைப் பிடிவாதம் அன்றைக்கும் கலைஞர் அவர்களிடத்திலே இருந்தது-. இது ஒரு நீண்ட சரித்திரம். இவர் முதல்வராக வருவார். பேசுவோம் என்று கனவுகூட காண முடியாத காலம். கொள்கையைப் பற்றி மட்டுமே சிந்தித்த காலம்.

கடமையை ஆற்றிவிட்டுத்தான் சென்றார்

எனவே அந்த வேளையிலே அவர் வீர உரையாற்றிவிட்டுத்தான், அவர் தன்னுடைய கடமையை ஆற்றிவிட்டுத்தான் சென்றார்கள். இப்படி எத்தனையோ நிகழ்வுகள்.

சங்கேந்தி முச்சந்தி

அதைவிட பக்கத்திலே இருக்கின்ற பாண்டி. சங்கேந்தி முச்சந்தி இருக்கிறதல்லவா? இப்படி ஒவ்வொரு ஊரும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது.

பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. இப்பொழுது காரிலே வருகிறோம். வேனிலே வருகிறோம். ஆனால் அன்றைக்கு கேஸ் விளக்குதான். அதுவே பெரிய விசயம். அரிக்கேன் விளக்கிலிருந்து புரமோசன், எங்களுக்கு கேஸ் விளக்கு கிடைத்தாலே, பெரிய விசயம்.

சங்கேந்தி முச்சந்தியில் ஒரு கிறிஸ்தவ நண்பர் வீட்டில் சாப்பாடு கொடுத்தார். கலைஞரும், நானும் மாணவர் சுற்றுப்பயணத்தில் போயிருக்கிறோம். அங்கே உரையாற்றி விட்டு இரவு உணவெல்லாம் முடித்து, நாங்கள் ஹாஜாபீர் வீட்டுக்கு வந்து படுக்க வேண்டும்.

மாட்டுவண்டியில் இருவரும்!

என்ன, கார் வந்து எங்களை எல்லாம் அழைத்துப் போய்விடுமா என்றால் இல்லை. முளைக்குச்சி வைக்கப்பட்டிருந்த மாட்டுவண்டி. மாட்டுவண்டி போகும்பொழுது மாட்டு வண்டியில் உட்கார்ந்திருப்பவர்கள் வண்டி வேகமாகச் செல்லும் பொழுதோ வண்டி மேடு பள்ளத்தில் இறங்கும்பொழுதோ முளைக்குச்சியை கையில் பிடித்துக்கொள்வார்கள்.

மாட்டு வண்டியில் நான்கைந்து பேர் வருகிறோம். அவரும், நானும் மாட்டு வண்டியில் உட்கார்ந்திருக்கிறோம் அருகருகே. அதுவே ஓவர் லோடு. ஆனால் ஒரே ஒரு வசதி. எவ்வளவு பள்ளத்தில் விழுந்தாலும் நாங்கள் ஒருவர்மீது ஒருவர் அமருவோமே தவிர கீழே விழக்கூடிய வாய்ப்பு கிடையாது.

தம்பிதான் தூங்கட்டுமே!

அதிலும் நான் சிறுவன். என்னை விட மூத்தவர் கலைஞர். நான் தூங்கி விழுவேன். சரி நமது தம்பி தூங்கட்டும் என்று நினைக்கின்ற அளவுக்கு நாங்கள் இரவு இரண்டரை மணிக்கு மேல்தான் வந்தோம். மாட்டுவண்டி எப்படி மேடு, பள்ளத்தில் இறங்கி போகும் என்பது தெரியும். அந்த மாட்டுவண்டியில் வந்துதான் ஹாஜாபீர் இல்லத்திற்கு வந்தோம். முடித்திருத்தும் கடைதான் தங்குமிடம்

கதவு தட்டினால் ரொம்ப சங்கடம் என்பதற்காக வீட்டுத் திண்ணையில் வெளியிலேயே படுத்துக்கொண்டோம். இதுமாதிரி எத்தனையோ இடங்கள். அதுபோல விளக்குடி போன்ற பகுதிக்கெல்லாம் வந்திருக்கிறோம்.

அங்கே முடித்திருத்தக இடங்கள்தான் எங்களுக்கு வசதி. இரவு முடிதிருத்தக் கடையில்தான் படுத்துக்கொள்வோம். இருங்க, பாயை விரித்துப் போடுகிறேன் என்று தோழர்கள் வருவார்கள்.

அன்றைக்கெல்லாம் மிகப்பெரிய சர்க்யூட் ஹவுஸ் எது என்றால் முடித்திருத்தகம்தான். பொழுது விடிய 4 மணிக்கு எங்களை எழுப்பி விட்டுவிடுவார். ஏனென்றால் அவர் கடையை நடத்த வேண்டும். நாங்களும் முதல் பேருந்துக்குப் போயாக வேண்டும்.

இப்படி எல்லாம் இருந்து வளர்த்த இயக்கம்தான் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இதோ சிலையாக இருக்கிறாரே. நம்முடைய முதல்வர் அவர்கள் மிகச்சிறப்பான வகையிலே இன்றைக்கு நாளும் சாதனை செய்கிறார்.

ஏழை, எளிய மக்களின் கஷ்டம் தெரிந்தவர்

அவருக்கு எழை, எளிய மக்களின் கஷ்டம் என்ன என்பது தெரியும். ஏனென்றால் அவர் உப்பரிகையிலே உலாவியர் அல்லர். அப்படி எல்லாம் இல்லாமல் இன்றைக்கு மக்கள் முதல்வராக இருக்கின்றார்.

மக்களுடைய தேவைகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளக்கூடிய அளவிலே இருக்கிறார். இந்த இயக்கம் இந்தக் கொள்கையைப் பற்றி நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினரும் சரி, நம்முடைய சகோதரியார் அவர்களும் சரி, பெண்ணுரிமையாக இருந்தாலும் இந்த நாட்டிலே ஜாதிக் கொடுமை என்று சொல்லுகின்ற நேரத்திலே எப்படிப்பட்ட கொடுமைகள் என்று சொன்னால், இன்னமும் நம்முடைய நாட்டிலே ஒரு மிகப்பெரிய சமுதாயப் புரட்சியை செய்தார் என்று சொன்னால் பெரியாருக்கு எதற்கு சிலை? பெரியாருடைய சிலையின் தத்துவம் என்ன? கடவுளைக் கும்பிட தகுதி அற்றவர்கள்

ஏன், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் எல்லாம் இருந்து சிறப்பாக இதனை நடத்துகிறார்கள் என்று சொன்னால், நண்பர்களே, என்ன காரணம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இதுவரையிலே நம்முடைய நாட்டிலே கடவுளைக் கும்பிடக் கூட தகுதி அற்றவர்கள் என்று ஆக்கி வைத்திருந்தார்கள். ஹரிஜன் என்று பெயர் வைத்தார்கள். ஹரி என்றால் மகாவிஷ்ணு, ஜனங்கள் என்றால் அந்த மகாவிஷ்ணவிற்குப் பிள்ளைகள் என்று.

கோவிலுக்குள் நுழைந்தது கிடையாது

ஆனால் அந்தப் பிள்ளைகள் கூட கோவிலுக்குள் நுழைந்தது கிடையாது. நந்தனார் சரித்திரமே என்ன? நந்தனார் சிதம்பரம் கோவிலுக்குள் உள்ள நடராஜரை தரிசிக்க விரும்புகிறார். எத்தனையோ சங்கடங்களை பார்ப்பனர்கள் விளைவிக்கின்றார்கள்.

நீ இவ்வளவு நெல்லையும் விளைவித்து விட்டுத்தான் போக வேண்டுமென்று நடராஜர் சொல்லுகிறார்.

கையெடுத்து கும்பிடுகிறார்

கதையில் இரவோடு இரவாக கடவுளே வந்து உதவி பண்ணினாராம். கதிர் ஓர்களம் கட்டு முக்களம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்து நந்தன் நடராஜரை தரிசிக்க சிதம்பரத்திற்குச் சென்று விடுகின்றார். அங்கே என்ன நடக்கிறது?

தீயிலே குளித்துவிட்டு அக்னிப் பிரவேசம் செய்துதான் நடராஜனைப் பார்ப்பதற்கு நந்தனுக்கு அனுமதி. தீயிலே குளித்திருந்தால் அவர் எப்படி வந்திருப்பார் என்பது தெரியும். எவ்வளவு தந்திரமாக நம்மாளை குளோஸ் பண்ணியிருக்கிறான் பாருங்கள்.

தில்லைவாழ் எம்பெருமானைப் பார்ப்பதற்காக கையெடுத்து கும்பிடுகிறார் நந்தனார். நடராஜரை நேரில் பார்க்க வேண்டுமே என்று பக்தியோடு கும்பிடுகிறார்.

நெருப்பிலே நந்தனாரை இறங்கச் சொன்னார் சிவபெருமான். அவரும் இறங்கினார். இப்பொழுது நீ புது அவதாரம், உள்ளே வா என்று சொல்லவில்லை. தீட்சிதர்களுக்குள்ள உரிமை

தீட்சிதர்களுக்குத் தந்த உரிமையை நந்தனாருக்குத் தரவில்லை. மாறாக நடராஜர் என்ன சொன்னார் என்றால் குறுக்கே நந்தி இருந்தது பாருங்கள். அந்த நந்திதான் நடராஜரை மறைத்துக்கொண்டிருந்தது.

நந்தியே சற்று விலகியிரும் பிள்ளாய்....!

உடனே நந்தியே சற்று விலகியிரும் பிள்ளாய் என்று நந்திக்குத்தான் உத்தரவு போட்டார் நடராஜர். ஆனால் இருந்த இடத்திலிருந்து இவருக்குப் புரமோஷன் கிடையாது. எனவே இவ்வளவு சங்கடங்களைப் பெற்ற நந்தனாருக்குக் கூட நந்தியை தள்ளி இருக்கச் சொல்லித்தான் நடராஜர் புராணம்.

ஈரோட்டு குருகுலத்திலே பயின்றவர் கலைஞர்

ஆனால் கலைஞர்தான் தந்தை பெரியாரிடத்திலே, பயின்று, ஈரோட்டு குருகுலத்திலே பயின்று அம்மைக் கொப்பளங்களோடு இந்த ஊருக்கு வந்து பிரச்சாரம் செய்த கலைஞர் முதல்வராக வந்தபிற்பாடுதான். நந்தர்களே மணியாட்டுவதற்கு உங்களுக்கு உரிமை என்று சொல்லி நந்தனே நீ வெளியே நிற்காதே. நந்திகளைப் பற்றிக் கவலைப்படதே, நந்திகள் என்னைப் பார்த்தவுடன் தானே போய்விடும்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகவே உன்னாலும் முடியும் என்று சொல்லி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற ஒரு சட்டத்தைக்கொண்டு வந்தார் என்று சொன்னால் பெரியார் வென்றிருக்கிறார். அதனால்தான் வெற்றியோடு நிற்கிறார் என்று அர்த்தம். சமூகப் புரட்சியை செய்யும்பொழுது அது சாதாரணமாக ஆகாது.

பகுத்தறிவு பார்வை உண்டு

ஒவ்வொன்றிலும் அவருக்கு அந்த பகுத்தறிவுப் பார்வை உண்டு. இப்பொழுது பாருங்கள். ரொம்ப சொல்லலாம். நேரம் அதிகமாகிவிட்டது. நிறைய சொல்ல முடியும். இன்றைக்கு மக்கள் மத்தியில் பார்க்கிறோமே. திடீரென்று ஒரு தெருவிலோ அல்லது ஒரு வீட்டிலோ யாருக்காவது நெஞ்சுவலி என்று சொன்னால் அல்லது மூச்சுத் திணறல் என்று சொன்னால் சாதாரணமாக இருக்கிற குப்பாயி, முத்தாயி, முனியாண்டி எல்லோரும் என்ன சொல்லுகிறார்கள்.

111-ம் 108-ம்

உடனே 108_க்கு போன் பண்ணுங்கள் என்று. இதற்கு முன்பு பிரபலமாகியிருந்தது வேறு. (சிரிப்பு கைதட்டல்). ஆனால் இப்பொழுது 108 பிரபலமாகியிருக்கிறது. நான் கலைஞர் அவர்களிடத்திலே பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னேன்.

108 நாங்கள் சொல்லுகிற முறையே வேறு. என்ன என்று கேட்டார் சிரித்துக்கொண்டே. வேறு ஒன்றும் இல்லிங்க. 108, 108 என்று இதுவரையிலே அர்ச்சகர்கள்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 108 சகஸ்ரநாமம், 108 திருவிளக்கு என்று. இந்த 108 பகுத்தறிவாளர் கையில் வந்தால் அது உயிர்காக்கும் என்று சொல்லிக் காட்டியது கலைஞர் ஆட்சி. ஆகவே பக்திக் காரன் 108க்கு விளக்குத் தூக்குகிறான். 108 அர்ச்சனை பண்ணினான். ஆனால் 108 இன்றைக்குப் போகிற உயிரை உள்ளே பிடித்துப் போட்டு அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கக் கூடிய அளவிற்குச் செய்தார் என்று சொன்னால் காரணம் அவர் பகுத்தறிவுவாதி.

பழைய ஆட்களாக இருந்தால் என்ன சொல்லுவான். அது அவனுடைய தலைஎழுத்து போய்விட்டான் என்று சொல்லுவான். அதற்கு நாம் என்ன பண்ண முடியும்? அவனுடைய சீட்டைக் கிழித்துவிட்டான்.

யாரோ ஒருவன் இருந்து வரிசையாக சீட்டை எல்லாம் ஒட்டி வைத்து டக்கு டக்கு என்று கிழித்து விடுகிற மாதிரி சொல்லுகிறான்.

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தார்

ஆனால் இன்றைக்கு கலைஞர் ஆட்சி வந்தவுடனே அவன் கையைத் தூக்கினால் பட்டென்று ஒரு அடி அடித்து சீட்டைக் கிழிக்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு 108 நிற்கிறது என்று சொன்னால் இது எவ்வளவு பெரிய வாய்ப்பு? எனவே சொன்னதை செய்தார் என்பதை விட சொல்லாததையும் சேர்த்து செய்தார் (பலத்த கை தட்டல்). அதுதான் திமுக ஆட்சிக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய வாய்ப்பு.

----------------தொடரும்--”விடுதலை” 15-6-2010

*************************************************************************************


நடைபெற்று வருவது தேவாசுர போராட்டம் பரம்பரை யுத்தம் இன்னமும் முடியவில்லை!
பெரியார் சிலை திறப்பில் தமிழர் தலைவர் பேச்சு

தேவாசுர போராட்டமான பரம்பரை யுத்தம் இன்னமும் முடியவில்லை என்று திருத்துறைப்பூண்டியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு விளக்கவுரையாற்றினார்.

திருத்துறைப்பூண்டியில் 12.6.2010 அன்று தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்த திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சுயமரியாதை என்று சொன்னாலே

சுயமரியாதை என்று சொன்னாலே பகுத்தறிவு என்று தந்தை பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துச்சொன்னார். கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்னார்.

கடவுளை மற என்பதோடு நிற்கவில்லை. ஏனென்றால் இதற்கு முன்னால் நம்மாள் கடவுளை நினைத்துக்கொண்டு மனிதனை மறந்துவிட்டான்.

கடவுளுக்குக் கொண்டு போய் பாலை ஊற்றுகிறான். நெய்யை ஊற்றுகிறான். இங்கே பால் இல்லாமல் குழந்தை வீர் வீர் என்று கத்துகிறது. பட்டினியால் சாகிறது. ஆனால் இந்த இயக்கம் வந்த பிற்பாடுதான், பகுத்தறிவு இயக்கம் வந்த பிற்பாடுதான் அதோ சிலையாக நிற்கிறாரே, அவர் தந்த சீலத்தின் காரணமாகத்தான் இன்றைக்கு மனிதனை நினைக்கிறோம் என்ற அளவிலே மனிதர்கள் காப்பாற்றப்பட வேண்டும். மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று இந்த ஆட்சி கருதுகிறது. நாம் கருதுகிறோம். திமுக ஆட்சியில் குழந்தைகளுக்குத் தரப்படுகின்ற உணவு சத்துணவாக இருக்க வேண்டும். காய்கறி நன்றாக இருக்கவேண்டும். அதற்கு தேவையான பணத்தை அளிக்கிற ஆட்சி இந்த ஆட்சி.

உலகிலேயே பார்க்க முடியாது

இந்த மாதிரி ஒரு ஆட்சியை இந்தியாவில் தேடினாலும் கிடையாது. உலக வரலாற்றிலேயே கிடையாதய்யா. கருவுற்ற தாய்மார்களுக்கு உதவி, திருமணங்களுக்கு உதவி, அதை எல்லாம் விட எங்களுக்கே கொஞ்சம் சங்கடம்வளைகாப்பு விழாவுக்கு நம்ம அமைச்சர்கள் எல்லாம் செல்லுகிறார்கள். தி.மு.க ஆட்சியில்....!

தி.மு.க ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. பெண்களுக்கு சொத்துரிமை. படிப்புரிமை, கருத்துரிமை என்ற உரிமைகள் எல்லாம் வந்ததென்றால் அதற்குக் காரணம் பெரியார்; காரியம் கலைஞர் (கைதட்டல்). எனவே தான் இன்றைக்கு நாங்கள் எப்படியிருக்கிறோம் என்றால் ஒரு கொடியில் இரு மலர்கள் என்று சொன்னாலும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொன்னாலும், அதனுடைய அடித்தளம் என்பதிருக்கிறதே அது சாதாரணமானதல்ல.

இது கூட்டணி அல்ல; இது உறவு.....!

இது ஏதோ அரசியல் சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. நாங்கள் கூட்டணியினர் அல்லர். கூட்டணியினராக இருந்தால் வருவார்கள். போவார்கள். திரும்பி வரலாமா? என்று யோசிப்பார்கள். கதவு தட்டுவார்கள். திறக்கிறதா என்று பார்ப்பார்கள்.

ஆனால் எங்களுக்கும், தி.மு.கவுக்கும் இருப்பது தோழமை அல்ல. எங்களுக்கு இருப்பது உறவு, உறவு. உறவைப் பிரிக்கவே முடியாது. அண்ணன் தம்பிகள் சண்டையே போட்டுக்கொண்டால் கூட, பிரிய முடியாது.

காரணம் என்ன? இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது யாதெனில் இவர் என்னுடைய தம்பி அல்ல என்று சொல்லவே முடியாது. ஆகவே இந்த உறவு என்பதிருக்கிறதே அது லாபத்தின் அடிப்படையைக் கொண்டதல்ல. அது முழுக்க முழுக்க கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற அடிப்படையிலே வளர்ந்திருக்கிற காரணத்தால்தான் இதுபோன்று தந்தை பெரியார் அவர்களுடைய சிலைகள் திறக்கப்படுகின்றன.

கலைஞர் ஆட்சியில் அமர்ந்திருப்பது மக்களுக்காக

ஆட்சி பீடம் என்று சொன்னால், அது அலங்காரத்திற்கல்ல. காட்சிக்காக அல்ல. பல நேரங்களிலே பலர் ஆட்சியிலே அமருவது என்பது அது காட்சிக்காக.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் கலைஞர் அவர்களுடைய ஆட்சி. அவர் ஆட்சியிலே அமர்ந்திருப்பது என்பதிருக்கிறதே அது மக்களுக்காக, பல நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கிக்-கொண்டிருக்கின்றார்கள். அதெல்லாம் என்ன? இங்கு நல்ல மதிப்பெண் பெற்ற பிள்ளைகளை எல்லாம் அழைத்து உற்சாகப்படுத்தினீர்கள். இந்த முகங்களை எல்லாம் பார்த்தோம். ஒரு காலத்தில் இந்த கருப்பு முகங்களுக்கெல்லாம் படிக்க வாய்ப்பு உண்டா? அல்லது இப்படிப் படித்து வருவோம் என்று நினைத்தார்களா? சரசுவதி காடாக்ஷம் நமக்கு இல்லை என்று நினைத்தார்கள்.

இன மீட்சிக்காக உள்ள ஆட்சி

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால் கலைஞர் அவர்களுடைய தயவிலே நிற்க வேண்டிய அளவிற்கு மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கி எல்லா இடங்களிலும் சிறப்பு வந்துவிட்டது என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள்.

எனவே மிகப்பெரிய மாறுதல் சமுதாயத்திலே ஏற்பட்டிருப்பதினாலே இந்த ஆட்சி என்பதிருக்கிறதே, அது காட்சிக்காக அல்ல. நம் இனத்தின் மீட்சிக்காக, மறு வாழ்வுக்காக, புதுவாழ்வுக்காக என்பதுதான்.

நம்முடைய அமைச்சர் பழனிமாணிக்கம் அவர்கள் சுருக்கமாகச் சொன்னாலும் சுருக்கென்று ஒரு வார்த்தையைச் சொன்னார். ரொம்ப அழகாகச் சொன்னார். சரி நாமெல்லாம் எழுந்துவிட்டோம்.

இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நம்முடைய எதிரிகள் எல்லாம் வீழ்ந்துவிட்டார்கள். இனிமேல் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவோம் என்றெல்லாம் நினைக்க முடியாது.

எதிரிகள் ஒதுங்கி விடவில்லை அவர்கள் வீழ்ந்துவிட்டாலும். எப்படியிருக்கிறார்கள் என்று சொன்னால், ஒதுங்கி விடவில்லை. மாறாகப் பதுங்கியிருக்கிறார்கள், சந்தர்ப்பத்தைப் பார்த்து. ஆகவே நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேட்டையாடும் பொழுதுகூட பதுங்கித்தான் வேட்டையாடுவார்கள். ஓர் இன யுத்தம் நடைபெறுகிறது.

பரம்பரை யுத்தமே!

இந்த நாட்டிலே பார்ப்பனீயம் என்ன சொல்லுகிறது? பரம்பரை யுத்தம் என்று சொல்லுகிறார்கள். நமக்கும் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. பரம்பரை யுத்தம்தான்.

இது தேவாசுர யுத்தம். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெறுகின்ற யுத்தம் இது. தேவர்கள், அசுரர்கள் கதை அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்து விட்டார்கள்.

பாம்பு வந்தது. பாம்பை கயிறாக ஆக்கி மேரு மலையை மத்தாக ஆக்கி பாற்கடலை கடைகிறார்கள் தேவர்கள். நான் கதைப்படி சொல்லுகின்றேன். இது நடந்ததா? இல்லையா? என்பது வேறு. இந்தக் கதையை மட்டும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போட்டி

தேவர்களுக்கும், அரசுரர்களுக்கும் போட்டி. அமிர்தத்தை யார் எடுப்பது என்று. கதைப்படி தேவர்கள் எங்கு நிற்கிறார்கள்? அசுரர்கள் எங்கே நிற்கிறார்கள்? தேவர்கள் பாம்பின் வால்பக்கம் நிற்கிறார்கள். பாம்பின் தலைப்பக்கம் யார் நிற்கிறார்கள் என்றால், அசுரர்கள் நிற்கிறார்கள். அப்படியானால் எவ்வளவு பெரிய வீரர்களாக தேவர்கள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.

அமிர்தத்தைக் கடைந்து எடுத்து விடுகிறார்கள். இது யாருக்குச் சேர வேண்டும்? குறைந்த பட்சம் 50 சதவிகிதமாவது இவர்களுக்கும், அவர்களுக்கும் சரிசமமாக வரவேண்டும்.

அப்பொழுதே 50 சதவிகிதத்திற்குப் போட்டி

இந்த 50 சதவிகித போட்டி அப்பொழுதே இருந்திருக்கிறது. தேவர்கள் அவ்வளவையும் ரொம்ப சாமர்த்தியமாக என்ன பண்ணினார்கள் என்று சொன்னால் நூறு சதவிகித அமிர்தத்தையும் நாங்களே அனுபவிப்பேன் என்று எடுத்துக்கொண்டு போய்விட்டனர்.

பாம்பின் தலையைப் பிடித்து அமிர்தம் கடைந்த அசுரர்களை தேவர்கள் ஏமாற்றினார்கள் கதைப்-படியே உனக்கு பங்கு இல்லை என்று அசுரர்களைப் பார்த்து சொன்னார்கள்.

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சொன்னாரே!

அசுரர்களை எப்படி ஏமாற்றினார்கள் பாருங்கள். பதுங்கியிருக்கிறார்கள் என்று நிதித்துறை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள் சொன்ன-தற்காகச் சொல்லுகின்றேன். என்ன நடக்கிறதென்றால் திடீரென்று ஒரு மோகினி அவதாரம் வருகிறது. இந்த அசுரர்கள் எல்லாம் வழக்கமாக மீதி சங்கதிகளில் சரியாக இருப்பார்கள். ஆனால் இந்த சங்கதியில் அசுரர்களுக்கு வீக்பாயின்ட்டே இதுதான். மோகினி அவதாரம் வந்தவுடனே அசுரர்கள் எல்லாம் ஏமாந்து விடுகிறார்கள்.

மோகினி அவதாரம் அந்தக் காலத்தில் மட்டுமல்ல. நாளைய வரைக்கும் உண்-டு. ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொன்னவர்தான் இதோ சிலையாக நிற்கின்றாரே அந்த அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்பதை நீங்கள் புரிந்து இந்த இயக்கத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, திருத்துறைப்பூண்டியில் சிலை வைப்பதற்காக ஒத்துழைத்த, நன்கொடை அளித்த, சிறப்பாக செய்த அத்துணை தோழர்களுக்கும் நன்றி கூறி நீண்ட நேரம் ஒத்துழைத்த இயற்கைக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


-------------------------”விடுதலை” 16-6-2010

2 comments:

Anonymous said...

"பார்ப்பனீயத்துடனான பரம்பரை யுத்தம் இன்னமும் முடியவில்லை!"


உண்மை தான். பார்ப்பனீயம் இன்று ஆட்சியாளர்கள் வடிவத்தில் உருவெடுத்து - தமிழனை குடிகாரர்களாக்கி சீரழித்து கொண்டிருக்கிறது. பார்ப்பனீயம், ஆட்சி அதிகாரம் இரண்டின் நோக்கமும் ஒன்று தான். கீழே இருப்பவன் கீழேயே இருக்க வேண்டும். அதற்கு பகுத்தறிவும் அசிங்கமாய் துணை போகிறது. அதற்கு ஆயிரம் சப்பை கட்டுகள்.

நம்பி said...

//karrupu said...

"பார்ப்பனீயத்துடனான பரம்பரை யுத்தம் இன்னமும் முடியவில்லை!"


உண்மை தான். பார்ப்பனீயம் இன்று ஆட்சியாளர்கள் வடிவத்தில் உருவெடுத்து - தமிழனை குடிகாரர்களாக்கி சீரழித்து கொண்டிருக்கிறது. பார்ப்பனீயம், ஆட்சி அதிகாரம் இரண்டின் நோக்கமும் ஒன்று தான். கீழே இருப்பவன் கீழேயே இருக்க வேண்டும். அதற்கு பகுத்தறிவும் அசிங்கமாய் துணை போகிறது. அதற்கு ஆயிரம் சப்பை கட்டுகள்.
June 18, 2010 11:00 AM//
தபர்றா...லவுட்டை பார் எகத்தாளத்தை பார்...தமிழன் மேல எவ்வ்வளவு அக்கறை பார் குடிகாரனாக ஆவதை பத்தி யோசிக்கிறது...பார் அவன் மூட்டைத்தூக்கி சம்பாதித்த காசை தட்டல போட்டா புண்ணியம் என்று சொல்லுவ...அப்படித்தானே எழுதி வைச்சிக்கிறீங்க...இவ்வளவு நாள் மனிதனுக்கே மனிதனாக இருக்கும் அடிமைத்தனத்தை, மனிதக்கழிவை மனிதனே சுமக்கும் அவல நிலையை நினைத்து வலியை போக்குவதற்காக குடிப்பதையும், குடிக்காமல் அவன் உழைச்ச காசை உன் தட்டில பிச்சைக் காசா போட்டா உக்காந்து சாப்பிடுவே...பதிலுக்கு அவன் தலைமேல தண்ணி தெளிப்ப...காசு மட்டை எடுத்து இடுப்பில சொருவிப்பே...இதுக்கு பேரு உங்க ஊர்ல பகுத்தறிவா...? எந்த ஊர்ல பார்ப்பனச்சேரியிலா...? என்னைக்கு ரோஷம் வந்து உழைக்கப்போற...?

என்னைக்கு அவனுக்காக குரல் கொடுக்கப்போற...என்னைக்கு அவன் மேல வற ஆதரவு தரப்போற...முடிதிருத்தறவன்..முடித் திருத்தறவனாகவே இருந்தா சந்தோசப்படுவ...மலம் அள்ளுகிறவன் மலம் அள்ளுகிறவானாகவே இருந்தா சந்தோஷப்படுவ...அதானே உங்களது பகுத்தறிவு..

சோம்பேறியாக மணியாட்டுகிறவனை மட்டும் தொந்தரவு பண்ணாம மணியாட்டிகிறவனாகவே விட்டா சந்தோஷப்படுவே...அதற்கு வேற எவனையும் உள்ளே நுழைய விடமாட்டே அவன் இடத்திலே உக்கார்ந்து கொண்டு அவனையே வெளியேத்துவ...இதெல்லாம் நடந்தா சந்தோஷப்படுவ..அதான் நடந்து கொண்டு இருக்குதே...அதை நினைத்து அவனால் எப்படி குடிக்காம இருக்கமுடியும், உடல்வலியோடு மனவலியையும் சேர்த்து போக்குகிற மருந்து அவனுக்குத்தானே.. நீ உழைச்சினா அந்த வலிபத்தி தெரியும்...அப்ப குடிக்காம இருக்கறதை பத்தி எழுது....

நீ பப் டிஸ்கோத்தே..ஸ்டார் ஹோட்ட்ல்னு போய் குடிக்கப்போறறே..அவன் டாஸ்மர்க் போய் குடிக்கப்போறான்...ஸ்டார் ஓட்டல்ல ஆம்பளை பொம்பல என யார் வேணுமென்றாலும் குடிக்கலாம்...அப்ப தமாஷா குடித்துகொண்டே தோள் மேல கூட கையைப்போடுவே...இதானே உம்பட பகுத்தறிவு...இந்த நாட்டில மட்டும்தானே உனக்கு ஆச்சாரம்... அங்கே போனா எல்லாத்தேயும் பூசிப்பே.... அப்படி பூசிக்கிலனா அங்கேயே குப்பை கொட்ட முடியுமா...? ஊரை விட்டே துரத்துவானுங்க...அதைத்தான் இங்கே கொண்டுவர பாடுபடறோம். இது தான் எம்பட பகுத்தறிவு. அதுக்குத்தான் இந்த யுத்தமெல்லாம்...ஓகே ஓகே..