Search This Blog

17.6.10

திறமைகளை நிரூபித்த ஒடுக்கப்பட்ட மக்கள்


கல்விப் புரட்சி!

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் மனுதர்மம். அந்தக் காலத்தில் கல்வி என்பதேகூட சுருதி, ஸ்மிருதிகள்தானே! அவற்றைச் சூத்திரனுக்குச் சொல்லிக் கொடுத்தால் அந்தப் பிராமணன் நரகத்திற்குப் போகவேண்டும் என்று கற்பவனுக்கும், கற்பிப்பவனுக்கும்கூட தண்டனை என்கின்ற கொடுமை!

வெள்ளைக்காரன் ஆட்சியில்தான் அந்தத் தடை கொஞ்சம் உடைக்கப்பட்டது. நீதிக்கட்சி ஆட்சியில் பாதை அமைக்கப்பட்டு செப்பனிடப்பட்டது.

தந்தை பெரியார் என்ற மாபெரும் சகாப்தத் தலைவரின் எரிமலைப் பிரச்சாரத்தால், பூகம்பப் போராட்டங்களால் இமயமலைபோல தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு இருந்த ஆரிய இறுமாப்பு ஆதிக்கக் கோட்டை தூள் தூளாக்கப்பட்டது.

பார்ப்பனர் இரண்டுமுறை சென்னை மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுண்டு. 1937_39 இல் உடம்-பெல்லாம் மூளை உள்ளவர் என்று அக்கிரகார சரகத்தால் ஏற்றப்பாட்டுப் பாடப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 2500 கிராமப்பள்ளிகளை இழுத்து மூடினார். அதற்கு அவர் சொன்ன காரணம் விசித்திரமானது என்று சொல்வதைவிட பார்ப்பனர்களின் சூழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடியது.

மதுவிலக்குக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவே பள்ளிகளை இழுத்து மூடுவதாகச் சொன்னார்.

சரி, 1952 இல் மறுமுறை சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்தாரே அப்பொழுதும் என்ன செய்தார்? 6000 தொடக்கப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தினார்.

தந்தை பெரியார் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட அரிய கருவூலமான பச்சைத் தமிழர் காமராசரைக் கொண்டு, ஆச்சாரியார் இழுத்து மூடிய 6000 பள்ளிகளைத் திறக்கச் செய்ததோடு அல்லாமல், மேலும் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளைத் திறக்கச் செய்தார் தந்தை பெரியார்.

இலவசக் கல்வி, இலவச புத்தகங்கள், இலவச சீருடை, மதிய உணவு என்று அலை அலையாகச் சலுகை மழை பெய்து, கல்வி என்றால் என்ன என்று அறியாத குக்கிராமத்துக் குப்பன் வீட்டுப் பிள்ளைகளும் கல்விக் கூடங்களில் காலடி வைக்கும் சகாப்தம் பிறப்பெடுத்தது.

இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் வண்ணம் 1928 ஆம் ஆண்டிலேயே வகுப்பு வாரி உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து ஆண்டாண்டு காலமாக அடிமை மாடுகளாக நடத்தப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், கல்வி வேலை வாய்ப்பு வாய்க்கால்கள் திறந்து விடப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்னும் அசல் மனுதர்மச் சட்டம், முதலாவதாகப் பலி கொண்டது தமிழ் மண்ணின் வகுப்புரிமைச் சட்டத்தைத்தான்அதற்காகவும் போராடி முதல் திருத்தம் கொண்டு வருவதற்கும் காரண கர்த்தாவாக இருந்த காலக்கதிரவன் தந்தை பெரியாரே!

தமிழ்மண் கொடுத்த அந்த சமூகநீதி ஒளி இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி காரிருளை காணாமற் போகச் செய்தது.

இந்தியா முழுமையும் மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் 27 விழுக்காடு கொண்டு வந்ததற்குக் காரணம் திராவிடர் கழகமும், அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுமேயாகும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் கலைஞர் தலைமையிலான ஆட்சி செய்த ஒரு புரட்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர், மாணவியர்களின் பெற்றோர் பட்டதாரிகளாக இல்லாவிட்டால், இந்த முதல் தலைமுறையினர் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்!

அதன் பலனின் மாட்சியை என்ன சொல்ல! இந்த வகையைச் சேர்ந்தவர்கள் இவ்வாண்டு பொறியியல் கல்லூரிகளில் 78086 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல, மருத்துவக் கல்லூரிகளில் 6440 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

தகுதி மதிப்பெண்களைக் குறைத்ததாலோ, கட்டணம் கிடையாது என்று அறிவித்ததாலோ கல்வியின் தரம் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

தேர்வில் வெற்றி பெறாத எவருக்கும் பட்டங்கள் வழங்-கப் போவதில்லை. அப்படியிருக்கும்போது, தகுதி_திறமை தரைமட்டமாகிவிடும் என்று கருதிட இடம் இல்லை.

இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு, உயர்ஜாதியினருடன் போட்டிப் போட்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், தங்களின் தனித்தகுதிகளை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக 2009 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரி தேர்வில் பொதுப் போட்டியில் 460 இடங்கள் என்றால், அதில் பிற்படுத்தப்பட்டோர் 300; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72; தாழ்த்தப்பட்டோர் 18; முசுலிம்கள் 16; உயர்ஜாதியினர் 54.

அதேபோல, மருத்துவக் கல்லூரி கட் ஆஃப் மதிப்பெண்ணில் 200_க்கு 200 வாங்கியோர் 8 பேர்; அதில் பிற்படுத்தப்பட்டோர் 7; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர். உயர் ஜாதியினர் எவரும் இலர்.

இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன? வாய்ப்புகள் கொடுத்தால், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள் என்பதைத்தானே காட்டுகிறது.

தொழிற்கல்லூரிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் சேருவது தி.மு.க. ஆட்சியின் சாதனை மகுடத்தில் ஒளிரும் வைரக்கல்லாகும்.

----------------------- “விடுதலை” தலையங்கம் 17-6-2010

0 comments: