Search This Blog

11.6.10

மூக்கை அறுப்பதும், கையை வெட்டுவதும்தான் பக்தியா?


பக்தீ!

எவ்வளவு மட்டரகமான மூட நம்பிக்கை விவகாரமாக இருந்தாலும், பார்ப்பன ஊடகங்கள் அவற்றைச் சன்னமாக வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பரப்பி விடுவார்கள். கடைசியில் ஒரு வரி இருக்கும் என்பது நம்பிக்கை.... என்பது அய்தீகம்! என்று கூறி நழுவி விடுவார்கள். அறிவு நாணயம் உள்ளவர்களாக இருந்தால் ஆம், அப்படித்தான் என்று அடித்துச் சொல்லவேண்டியதுதானே!

கடந்த ஞாயிறன்று வந்த தினமலர் (6.6.2010) வார மலரில் ஒரு கட்டுரை:

பல்லவ நாட்டு அரசனான கழற்சிங்கர் திருவாரூர் தியாகராசர் கோவிலுக்கு மனைவியோடு வந்தானாம் மனைவி கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தபோது, சன்னதிக்குப் பக்கத்தில் மணம் வீசும் பூ ஒன்றைக் கண்டாளாம். உடனே அதனை எடுத்து முகர்ந்து பார்த்தாளாம் ராணி.

அவ்வளவுதான், பக்கத்தில் பூ கட்டிக் கொண்டிருந்த சிவபக்தன் செருத்துணையார் என்பான் தாண்டிக் குதித்து, பூவை நுகர்ந்த ராணியின் மூக்கைக் கத்தியால் சீவிவிட்டானாம்!

வலி தாங்க முடியாமல் ராணி துடிதுடித்தாளாம்!

தகவல் அறிந்த மன்னன் கழற்சிங்கர் உருவிய வாளுடன் அங்கு வந்தானாம். என் மனைவியின் மூக்கை அரிந்தவன் யார்? என்று கோபாவேசத்துடன் கொப்பளித்தானாம்! மூக்கை அரிந்த சிவபக்தன் நடந்ததைச் சொன்னானாம்.

அப்படியா? எம்பெருமானுக்குரிய பொருளை அவனுக்குப் படைக்கும்முன்னர் பயன்படுத்திய இவளுக்கு இந்தத் தண்டனை போதாது... என்று கூறி வாளால் ராணியின் கையையும் வெட்டினாராம்.

என்ன ஆச்சரியம்! அப்போது வானில் ஒரு ஒளி பிறந்ததாம். பார்வதியும், சிவனும் காட்சி தந்தனராம். பக்தனை சோதிக்கவே சிவன் இந்தத் திருவிளையாடலைப் புரிந்தானாம்!

திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் இறைவனுக்குச் சூடுமுன்பு மாலையை, தான் அணிந்துகொண்டு அழகு பார்த்தாளே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானாளே அது எப்படியாம்? இது சைவம்; அது வைணவம்! அதனாலே இந்தக் குளறுபடியோ!

இந்த நிகழ்ச்சியின்மூலம் எல்லாப் பொருளும் இறைவனுக்குத்தான் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது என்கிறது தினமலர் (தினமலர் தன் எல்லா சொத்துக்களையும் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?).

பக்தனை சோதித்துத்தான் கடவுள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், கடவுளின் சக்தியே கேள்விக்குறி ஆகிவிடவில்லையா?

இரண்டாவது எல்லாப் பொருளும் இறைவனுக்குத்தான் என்றால், மக்கள் எந்தப் பொருளையும் பயன்படுத்தக்கூடாதா? பயன்படுத்தக் கூடாது என்றால், மனிதன் எப்படி உயிர் வாழ முடியும்?

அவர்கள் கூற்றுப்படியே மனிதனும் இறைவனின் படைப்புதானே! படைக்கப்பட்ட பொருள்கள் ஒன்றை ஒன்று பயன்படுத்திக் கொள்ளாமல் வாழ முடியாதே! இறைவன் படைப்பாகிய பூவை இறைவன் படைப்பாகிய ராணி நுகர்ந்ததில் என்ன தவறு நடந்துவிட்டது?

ஒரு பூவை நுகர்ந்ததால் மூக்கை அறுப்பதும், கையை வெட்டுவதும்தான் பக்தியா?

இப்பொழுது அப்படி செய்தால், வெட்டியவன் சிறைக்குத்தானே போகவேண்டும் அப்பொழுது சிவனும், பார்வதியும் யாருக்கு வானில் காட்சி தருவார்கள்?

-------------------------- மயிலாடன் அவர்கள் 10-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Anonymous said...

(தினமலர் தன் எல்லா சொத்துக்களையும் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?)



அரசியல்வாதியா இருந்தா வோட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு கொடுக்கலாம். தண்ணியடிக்கிற பழக்கம் இருந்தா டாஸ்மாக் கடைல கொண்டு போய் கொட்டலாம். சினிமா தயாரிப்பாளரா இருந்தா பெண் சிங்கம், ஆதவன் மாதிரியான சமுக சீர்திருத்த படங்களை எடுக்கலாம். இல்ல
பல கோடி பணத்துல நாலஞ்சு சானலை திறந்து மானாட, மயிலாடவை கண் குளிர காண செய்யலாம். ஆனா பார்ப்பானுக்கு அந்த மாதிரியான சமுக சிந்தனை எல்லாம் இருக்காதே. இடிஞ்ச காளஹாஸ்தி கோவிலுக்கு கோபுரம் டொனேஷன் கொடுக்கலாம்.