Search This Blog

29.5.09

அர்ஜூன் டாங்கி வழங்கும் விழாவில் மூடநம்பிக்கை - வழக்கு தொடருவோம் - தமிழர் தலைவர்கி.வீரமணி


அர்ஜூன் டாங்கி வழங்கும் விழாவில் மூடநம்பிக்கை -
வழக்கு தொடருவோம் - தமிழர் தலைவர்!

* ஒரே மதம், ஒரே மொழி எனும் போக்கில் இருந்து, இந்தியாவைக் காப்பாற்றியிருப்பது திராவிடர் இயக்கமே! - டாக்டர் சாந்தி சிறீ

* கம்யூனிஸ்ட் ஆட்சி மேற்கு வங்கத்தில் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை - டாக்டர் ரிம்லி பாசு

சென்னை பகுத்தறிவாளர் கலந்துரையாடலில் கருத்து மழை


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் மதச் சார்பின்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையாக அக்கோட்பாடு இந்தியாவில் பின் பற்றப்படவில்லை எனத் தமிழர் தலைவர், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள், சென்னைப் பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியபோது விவரித்தார்.

சென்னை பெரியார் திடலில் மே 28 மாலை 5.45 மணிக்கு பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முக்கியக் கருத்துரையாளர்களாக, புனெ பல்கலைக் கழகப் பேராசிரியைகளும், சுதந்திர ஆய்வு மய்யப் பொறுப்பாளர்களுமான டாக்டர் சாந்தி சிறீ பண்டிட், மற்றும் டாக்டர் ரிம்லி பாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அக்கொள்கையைப் பின்பற்றுவதை மேற்கொள்ளாமல், அதை மீறும் வகையில் நடைமுறை இருக்கிறது. அதற்குக் காரணம் மதச்சார்பின்மைக்கு இந்நாட்டில் தவறான விளக்கம் தரப்படுகிறது. மதச்சார்பின்மையின் உண்மையான பொருள், அரசு மத நடவடிக்கைகளில் ஈடுபடாது என்பதாகும். ஆனால், இந்திய நாட்டின் தலைவர்கள் அதற்குப் புதுவிதமான விளக்கம் தருகிறார்கள். எல்லா மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்; சமமாக பாவிக்க வேண்டும் என்ற தவறான பொருளை அதற்குக் கொடுக்கிறார் கள். அதன் காரணமாகப் பெரும்பான்மையராக இருக்கும் இந்துக்களின் மதச் சடங்குகளை அரசு நிருவாகம் பின்பற்றுகிறது.

பெரியார் கடுமையாக விமர்சித்தார்

இந்தத் தவறான நடை முறையைப் பெரியார் தொடக்கத்திலேயே கண்டித்தார். மதச்சார் பின்மை என்றால் அரசாங்கத்திற்கு மதத்துடன் தொடர்பு இல்லை என்றுபொருள். கன்னி என்றால், ஆண்களுடன் உடலுறவுத் தொடர்பு இல்லாதவர் என்பது உண்மையான அர்த்தம். அப்படி அல்லாமல், கன்னி என்பவள் எல்லா ஆண்களுக்கும் சம உடலுறவு வாய்ப்புத் தரு கிறவள் என விளக்கம் சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் சிந்தனைக்கும் ஏதாவது சம் பந்தம் உண்டா? எவ்வளவு மோசமாக இதை திரித்துச் சொல்கிறார்கள். அது போலவே, செகுலரிசம் அல்லது மதச் சார்பின்மை என்பதற்கு எல்லா மதங்களுக்கும் அரசு சம அளவில் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதும் அபத்தமான விளக்கமாகும் எனப் பெரியார் கடு மையாக விமர்சித்தார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் ராணுவக் கவச வண்டிகளுக்கு இந்துமத இதிகாசக் கதை நாயகனாகிய அர்ஜூனனின் பெயரை வைப்பது மதச் சார்பின்மையை மீறுவதாகும். இந்தியா எனும் நாடு இந்தியா எனும் பெயர் கொண்டதாகத் தான் இருக்கவேண்டும். அதை இந்துஸ்தான் என்பதாக மாற்றக் கூடாது. இந்துஸ்தான் டெலிபிரிண்டர் என்றெல்லாம் மாற்றக் கூடாது.

வழக்குத் தொடருவோம்

அர்ஜூன் டேங்க் எனும் இராணுவ கவச வண்டிகளுக்குத் தீமை எதுவும் தாக்காது இருப் பதற்கு எலுமிச்சம் பழம் வைத்துச் சடங்கு செய்யப்பட்டதாக மே 26 ஆம் நாள் பத்திரிகை படத்துடன் செய்தி வெளிவந்திருக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் கூறுகிற, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனும் அடிப்படைக் கடமையை மீறுவதாக ஆகி றதல்லவா? அரசு நிருவாகத்தில் இருப்பவர்கள் மதப்பண்டிகை வாழ்த்து அட்டைகளை அனுப்பு வது கூடாது. ஏற்கெனவே திராவிடர் கழகம் இது தொடர்பாக வழக்காடி வெற்றி பெற்றுள் ளது.

இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம். மக்கள் என்றும் விழிப்போடிருந்து நீங்கள் உரிமைகளைக் காத்துக் கொள்ள வேண்டும்.

மதம் மக்களை இணைப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அது மக்களைப் பிரிக்கவே செய்கிறது. ஒரே மதமான சீக்கிய மதத்திற்குள் இரு வேறு பிரிவினருக்குள் பலமான மோதல் நிகழ்ந்து, கோடிக்கணக்கில் சொத்துகள் நாசமான நிகழ்ச்சிகள் இரண்டு நாள்களுக்கு முன் நடந்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவ்வாறு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி தமது உரையில் விளக்கினார்.

சாந்தி சிறீ

பேராசிரியை சாந்தி சிறீ உரையாற்றுகையில், பகுத்தறிவு இயக்கத்தைப் பெரியார் மக்கள் இயக்கமாக ஆக்கியிருப்பது பாராட்டிற்குரியது என்றார். இந்தியாவின் பிற பகுதிகளில் அவ்வியக்கம் அறிவாளிகள் மத்தியில் மட்டும் தான் சிறிய அளவில் இருக்கிறது.

ஒரே மதம், ஒரே மொழி என்ற நிலைக்குச் செல்லாமல், இந்தியாவைக் காத்த பெருமை திராவிட இயக்கத்தை சேரும். அத்துடன் இந்து மதமும் சமஸ்கிருதப் பண்பாடும் வலியுறுத் தும் ஜாதிய ஏற்றத் தாழ்வை ஒழிப்பதற்குப் பெரியார் இயக்கம் பெரும் பங்கு ஆற்றிவருகிறது.

பெண்களும் தாழ்ந்த ஜாதியாரும் படித்து முன்னேறுவதை மனு அனுமதிப்பதில்லை - இந்து மதம் அனுமதிப்பது இல்லை. 19 ஆம் நூற்றாண்டில் பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கச் சென்ற சாவித்திரி பாய் ஃபுலேயை மேல் ஜாதி மக்கள் புனெயில் கல்லால் அடித்தார்கள்.

இந்திய மக்களைப் பிரிட்டிஷ் அரசு பிரித்து ஆளவில்லை; அவ்வாறு செய்தவர்கள் பார்ப்பனர்களே.

புரோகிதம் அற்ற தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதைத் திருமண முறை இந்தியா முழுவதும் பரவ வேண்டும். பெண் இழிவைப் போக்குவதற்கு அது உதவும்.

தர்ம சாஸ்திரத்தை எழுதிய மனுவின் மூளை மிகவும் கெட்டது; அழுக்குப் பிடித்தது.

பள்ளிப்பாடங்களில் இருந்து வரவேண்டும்

பகுத்தறிவைப் பற்றியும் பெரியாரைப் போன்றவர்களின் வாழ்வைப் பற்றியும், பள்ளிகளில் கற்றுத்தரவேண்டும். பாட நூல்களில் அவை இடம் பெற வேண்டும். தமிழ்நாட்டில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுக்க அறிவுப்பிரச் சாரத்தைப் பரப்பி வருகிறார். தமிழ்நாட்டில் கலைஞர் சிறந்த பகுத்தறிவு ஆட்சியை நடத்தி வருகிறார். இவ்வாறு, சாந்தி சிறீ, கருத்துகளை எடுத்து ரைத்தார்.

ரிம்லிபாசு

மேற்கு வங்காள மாநிலம், 30 ஆண்டுகளுக்கு மேல் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையிலான கூட்டணி ஆட்சியில் இருப்பினும், நிலச் சீர்திருத்தம் போன்ற வரவேற்கத் தக்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பினும், அங்குள்ள மக்கள் இன்னும் ஜாதிப் பிடிப்பில் கட் டுண்டவர்களாகவே இருக்கிறார்கள். பகுத்தறிவு எண்ணம் அங்கு பரவவில்லை; சமுதாய மாற்றம் ஏற்படவில்லை. சமூக நீதியும் அளிக்கப்படவில்லை என, டாக்டர் ரிம்லி பாசு கூறினார்.

முன்னதாகப் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன் அனைவரை யும் வரவேற்று உரையாற்றுகையில், பகுத்தறிவுச் சிந்தனைக்கும் மனிதநேயப் பார்வைக் கும், தந்தை பெரியார் தமிழ் மக்களிடையே வலுவான அடித்தளம் போட்டிருப்பதையும், அவருடைய கொள்கைகள், ப.க புரவலர் ஆசிரியர் வீரமணியவர்களின் காலத்தில் உலகமயம் ஆகியவருவது குறித்தும் குறிப்பிட்டார்.

ப.க. மாநிலத் தலைவர் நேரு, புனெ பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த பேராசிரியை களை அறிமுகப்படுத்தினார்.

ப.க சென்னை மாவட்டத் துணைத் தலைவர் பொறியாளர் கரிகாலன் நன்றி கூறினார்.

பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் சிறப்பு விருந்தினர்கள் சாந்தி சிறீ அவர்களுக்கும், ரிம்லி பாசு அவர்களுக்கும் திராவிடர் கழக தலைவர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். கூட்டத் திற்கு வந்திருந்த பல தோழர்கள் பல்வேறு கோணங்களில் வினா எழுப்பினர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களும், தமிழர் தலைவர் அவர்களும் அறிவார்ந்த பதில்களை அளித்து கரவொலியைப் பெற்றனர். மணியம்மையார் அரங்கம் நிரம்பி வழிந்தது.


---------------நன்றி:-"விடுதலை" 29-5-2009

2 comments:

குப்பன்.யாஹூ said...

பொந்க்யய உங்க பகுத்தறிவு போராட்டமும் நிங்களும்,

திமுக இருக்கிற மத்திய மந்திரிசபைல எழுபத்தி இரண்டு மந்திரிகள் கடவுள் பேரை சொல்லித்தான் பதவி பிராமணம் எடுக்ரங்க.

இன்னமும் பகுத்தறிவு வ்யாபாரம் ஓடுதா மார்க்கட்ல.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வியாபாரமா?

என்னய்யா குப்பன் ? ஆன்மீகம் தான் வியாபாரம் அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களின் யோக்கியதையை படித்தால் சங்கராச்சாரி பார்ப்பானிலிருந்து சவுண்டிப் பார்ப்பான் வரை சந்தி சிரிச்சு கிடக்குதே. குப்பனுக்கு அதெல்லாம் தெரியாதா?.