Search This Blog

15.6.08

மதம் மாறுவது எந்த வகையில் குற்றம்?


மதம் மாறுவது எந்த வகையில் குற்றம்?
------------------------------------------------------------------

தோழர்களே! இன்று இந்தப் பரந்த இந்தியக் கண்டத்தில் இமயம் முல் கன்னியாகுமரி வரையில் அநேகமாக எல்லா முக்கிய நகரங்களிலும், சிற்சில கிராமங்களிலும்கூட பலதரப்பட்ட குறிப்பாக, இந்து - முஸ்லீம் கலவரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நடக்காத இடங்களில் நடக்கும்படியாக... அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் பொறுப்பற்ற கலகக்காரர்களும், அரசியல், தேசியப் பத்திரிகைகளும் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கின்றன.

கிறித்தவ மதமும்,இஸ்லாமிய மதமும் 'ஒரு கடவுள்தான் உண்டு. மக்களில் ஒரு சாதிதான் உண்டு' என்று சொல்கின்றன. ஆனால், அவர்கள் இருவர் அல்லாத இந்த நாட்டு மக்கள், ஆரியப் பழங்கால காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்தவர்கள் - பல கடவுள்களைக் கற்பித்துக் கொண்டு, மக்களில் பல சாதிகள் இருப்பதாக ஏற்பாடு செய்துகொண்டு நடைமுறையிலும், அதுபோலவே கடவுள்களையும் - அக்கடவுள்களுக்கு உருவங்களையும் வைத்து பூசை செய்துகொண்டு, பல சாதியாகப் பேதப்படுத்தி நடத்தி - ஒரு சாதியை மற்றொரு சாதி அழுத்தி அடக்கி ஆண்டு வருகிறது.

இந்த நிலை இஸ்லாம், கிறித்தவம் அல்லாத இந்து மதத்திற்கு - அடிப்படையிலேயே மாறுபட்ட நிலையாக இருப்பதோடு, இந்த இழிதன்மையிலுள்ள மக்கள், அறிவு வளர்ச்சியும், மனிதத் தன்மையும், மான உணர்ச்சியும் கொண்டால் - எந்த மனிதனும் தன் மதத்தைச் தானே இகழவும், வேறு மதத்தை நாடவும் நினைத்துதான் தீருவான். ஆதலால், மதம் மாறும் உணர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், இன்றைய காட்டுமிராண்டி நிலையைப் பாதுகாக்கவும் செய்யப்படும் முயற்சிகள் பெரிதும் இன்று மதப்பேராட்டமாகவும் அரசியல் போராட்டமாகவும் இருந்து வருகின்றன.

இன்றைய அரசியல் கட்சிகளுக்கு சாதி, மத பேதம் இல்லையென்றால் அரசியல் தலைவர்கள் சாதி, மதப்பேச்சு ஏன் பேச வேண்டும்? எந்த மதக்காரனையோ, எந்த சாதியயானையோ அல்லது சாதியால் கஷ்டப்படுகிற மக்களை பெருவாரியாகக்கொண்டு - சுய ராஜ்ய சர்க்காரை அமைத்தால் என்ன தப்பு ஏற்பட்டுவிடும் என்பது எனக்குத் தெரியவில்லை.

'முஸ்லீம்மிடம் அதிகாரம் போனால் எல்லோரையும் முஸ்லீம் ஆக்கிவிடுவான்' , 'தாழ்ந்த சாதிக்காரனிடம் அதிகாரம் போனால் சாதி முறையைக் கெடுத்துவிடுவான்' என்பதல்லாமல் வேறு என்ன காரணத்தால் முஸ்லீமோ, தாழ்ந்த சாதிக்காரன் என்பவனோ - பயம் ஒழியப் பதவியில் அமரத் தடைசெய்வதையே, மறுப்பதையே இன்றைய அரசியல் போராட்டமாகச் செய்யவேண்டும்? என்று கேட்கிறேன்.

ஒரு மனிதன் இந்து மதத்தில் இருந்து அந்நிய மதத்திற்குச் சேர்ந்துவிட்டான் என்றே வைத்துக்கொள்ளுவோம். இதனால் மீதியிருக்கும் இந்துக்களுக்கு ஏற்பட்ட கெடுதி என்ன? அல்லது சேர்க்கப்பட்டவனுக்குத்தான் ஏற்பட்ட, ஏற்படப்போகும் கெடுதி என்ன? எதற்காக வேறு மதத்திற்கு மாறிவிட்டான் என்றோ, மாற்றப்பட்டுவிட்டான் என்றோ மற்றவர்கள் ஆத்திரப்டுகின்றனர்.

இந்து மதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ சூத்திரனாகவோ இருக்கிறவன் - வேறு மதத்திற்கு சிறப்பாக இஸ்லாம் மதத்திற்குப் போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனா ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டம் என்ன? கஷ்டம் என்ன? என்று கேட்கிறேன். மறுபடியும் அவன் விரும்பினால், அவனுக்கு விருப்பமான மதத்திற்குப் போகலாமே கூடாது என்று யார் சிறையில் வைத்துவிடுகிறார்கள்? ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக்கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி, மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுகிறார்களே தவிர, சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் - ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு 'எப்படியாவது அவனுக்குப் பறப்பட்டம், சூத்திரத்தன்மை போனால் நலம்' என்போம்.

இந்து ஆட்சி ஏற்பட்டுவிட்டதாலேயே, ராம ராஜ்யம் ஏற்படுவதாலேயே - நமது சூத்திரத்தன்மையும், பஞ்சமர், கடைச்சாதித் தன்மையும் மாறிவிடப்போவதில்லை. நம்மில் இருந்து இஸ்லாமாக மாற்றப்பட்டவர்களும், கிறித்துவர்களாக மாற்றப்பட்டவர்களும் அல்லது தானே மாற்றமடைந்தவர்களும் இன்று எதில் கஷ்டப்படுகிறார்கள்? எதில் கெட்டுப்போய்விட்டார்கள்? ஆகவே இந்து - வேறு மதத்திற்குப் போவதென்றால், மாற்றப்படுவதென்றால் கடை சாதியான் மேல் சாதியாக ஆக்கப்பட்டான் என்றுதான் அர்த்தம்.

-------------தந்தைபெரியார் "குடிஅரசு" 16-1-1946

0 comments: