Search This Blog

17.6.08

கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன?






இதோ ஆதாரங்கள்:

ஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள்,

``இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;

பெண்ணின் துர்புத்தியால் தான்
இங்கு வருணாசிரம தர்மம்
அழியப் போகிறது என்று!

அப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறான். ஆனால் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்று சுட்டிக்காட்டியுள்ளார், கீதை ஒரு கொலை நூல் என்பதை யும் திலகருடைய மேற்கோள் ஒன்றையும்கூட பொருத்தமாகச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் கனிமொழி.

இதை எதிர்த்து விநாயகர் வி. முரளி அறிக்கை ஒன்றை இன்றைய (`தினமணி 17.6.2008) நாளேடு ஒன்றில் விடுத்துள்ளார்.

``பகவத் கீதையில் இல்லாததை திரித்துக் கூற வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் விநாயகர் வி. முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:

`பெண்களால்தான் வருணாசிரம தர்மம் அழியும் என்று கீதையில் அர்ஜூனன் கூறுகிறார் என கடலூரில் நடைபெற்ற தி.மு.க., மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார்.
இது போன்ற கருத்துகள் பகவத் கீதையில் இல்லை. இவ்வாறு இல்லாத கருத்துகளை திரித்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விநாயகர் வி. முரளி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்று `தினமணியில் செய்தி வந்துள்ளது.

அப்படி எதுவும் கீதையில் இல்லை; இல்லாததை கனிமொழி கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும். திராவிடர் இயக்கப் பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ (திருமதி கனிமொழி உட்பட) ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டார்கள்.

கீதையின் முதல் அத்தியாயத்திலேயே உள்ள சுலோகங்களில் உள்ள கருத்தைத் தான் கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

``கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.

``அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:
(அத்.1 - சுலோகம் - 41)

இந்த உண்மையைத்தான் ஆதாரப்பூர்வமாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.

கீதையைப் பரப்புபவர்களைவிட எதிர்ப்பவர்கள்தான் உள்ளபடியே படித்து ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?


-------- தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதியது -"விடுதலை" 17-6-2008

0 comments: