Search This Blog

26.6.08

துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த பொடிப்பெண்



தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒருகுன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம்.தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம்.தமிழ்நெறி காப்பேன் – தமிழரைக் காப்பேன் – ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல அல்ல,தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அதுமட்டுமல்ல

குன்றூடைக்கும் தோளும், நெருப்புமழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் காண்போம். – இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பது கண்டோம்.
யாரைப் புகழ்ந்து எழுதினோம்,புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ – நம் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
பெரியார் செத்துக் கொண்டிருந்தார்.தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.
ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு;மக்களின் மீது வைத்திருக்கும் அருள் மற்றொன்று.

ஆயினும்

காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றி பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது;அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது.பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப்பெண்ணை,
அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?


பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப்பொருளாலும் அழகு பெறக்கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.
அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஒரே ஒரு மாலையை எந் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி – அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளிக் தம் தலையில் வைத்தார் என்பதுமில்லை.

----------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் - 10-4-1960 – “குயில்” இதழில் எழுதிய கட்டுரை.



அன்னை மணியம்மையார் பற்றி அண்ணா

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்.

நூல்: “அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் சிந்தனை முத்துகள் –பக்கம் 284




அம்மா பற்றி அய்யா

எனது காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது.மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன.அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும்.ஒரு சமயம் ஆபரேசன் (அறுவைசிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம்.ஆனாலும் நான் பயப்படவில்லை.எதற்கும் தயாராக இருக்கிறேன்.மணியம்மையார் கவனிப்பும் உதவியும் அளவிடற்கரியது.

-----------பெரியார் 89-ஆவது பிறந்தநாள் “விடுதலை” மலர் – 17-9-1967

0 comments: