Search This Blog

25.11.09

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச நாள் சிந்தனை


பெண்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச நாளாக இன்று கொண்டாடப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் டில்லியில் கருத்தரங்கம் ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது.

இதுபோன்ற நாள்கள் அனுசரிக்கப்படுவதால் என்ன இலாபம் என்பதைவிட, பெண்களின் நிலை எந்த இடத்தில் இருக்கிறது என்கிற வரவு_செலவு பார்ப்பதற்கு நிச்சயமாகப் பயன்படும். அதன்மூலம் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்தவரை 2001 முதல் 2007 வரையிலான ஒரு புள்ளி விவரம்:

பாலியல் வன்முறை (கற்பழிப்பு) _ 3,176

பாலியல் தொந்தரவு _ 10,006

கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டோர் _ 4,482

வரதட்சணை சாவு _ 1,261

கணவனாலும், உறவினர்களாலும் கொடுமைக்கு ஆளானோர் _ 8,549.

அரசுக்குத் தெரிந்த புள்ளி விவரங்கள் இவை. உண்மையில் இதைவிட அதிகமான துயரங்கள்தாம் பெண்களைக் குத்திக் குதறியிருக்கும்.

பரிதாபப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் இந்தப் பெண்களைக் கைதூக்கிவிட ஆண்கள் தோள் தூக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பூனைகளால் எலிகளுக்கு உரிமை கிடைக்குமா என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாதான் இதற்குப் பதிலாகும்.

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடம் என்பது (நியாயமாக 50 விழுக்காடு தேவையே!) 1996 ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கட்சிகளைக் கடந்து ஆண்கள் இதில் எதிர்ப்பாக உள்ளனர் என்பது வெட்கப்படத்தக்கதாகும்.

உலகில் இந்தப் பிரச்சினையில் இந்தியா 104 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 10.7 விழுக்காடுதான். பாகிஸ்தானில்கூட 21.3 விழுக்காடாகும். முதல் இடத்தில் இருப்பது ருவாண்டா (48.8 விழுக்காடு).

பெண்களின் மக்கள் தொகையும் சரிந்து வருகிறது. இந்தியாவில் 1000 ஆண்களுக்குப் பெண்களின் எண்ணிக்கை 933 ஆகும். சீனாவிலோ 100 ஆண்களுக்கு 117 பெண்கள் என்ற நிலை உள்ளது.

ஒரு நல்ல தகவல இந்தியாவில் ஆண்களின் சராசரி வயது 63.9. பெண்களின் சராசரி வயதோ 66.9. இவ்வளவு இடர்ப்பாடுகளையும் கடந்து இந்த நிலை; காரணம், ஆண்களைவிட பெண்களுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகமாம். இருந்தாலும் அவர்கள் தலையெடுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஆண்மை என்ற ஆண்களின் அடக்குமுறை தத்துவம்தான் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும். விழா எடுப்பவர்கள் இதுபற்றியெல்லாம் எங்கே சிந்திக்கப் போகிறார்கள்?

----------- மயிலாடன் அவர்கள் 25-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: