Search This Blog

26.11.09

பெரியாரின் அறிவாயுதங்கள்

1925இல் பெரியாரால் தொடங்கிய குடிஅரசு ஏடு
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை சென்று பெரும் புரட்சியை ஏற்படுத்தியது
குவைத் நாட்டில் தமிழர் தலைவர் உரை

(குவைத்தில் 16.10.2009 அன்று நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றுகிறார்.)

தந்தை பெரியார் 1925இல் தொடங்கிய குடிஅரசு இதழ் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரை வருமாறு:

தமிழ்நாட்டில் கூட இவ்வளவு தமிழ் கொஞ்சி விளையாடுமா?

தந்தை பெரியாரின் தலைமகனாம், பகுத்தறிவு சிந்தனையின் தலைமகனாம், எல்லோராலும் அண்ணன் என்று அழைக்கக் கூடிய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கூட தமிழ் இவ்வளவு கொஞ்சி விளையாடுமா? என்று எங்களுக்கெல்லாம் அய்யம் வரக் கூடிய அளவுக்கு உங்களுடைய கருத்துகள் இருந்தது. வளநாடு என்று சொல்லக் கூடிய குவைத் நாட்டில் நான் செம்மொழியைக் கண்டேன் (பலத்த கைதட்டல்). இங்கு வருவது பொருள்களை வாங்கிச் செல்ல அல்ல. நல்ல இன உணர்வுத் தோழர்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு.

தோழர்களின் பொருளுள்ள பேச்சு

தோழர்களுடைய பொருளுள்ள பேச்சுகளை கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல தோழர்களை, நல்ல தோழியர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொருளுள்ள கவிதைகளை, புரட்சிகரமான சிந்தனைகளை கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவிலே நீங்கள் அழைத்தமையை ஏற்று கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

உங்களுடைய நாட்டிலே மின்தடை என்பதே அறியாத நாடு. ஆனால் எங்களுடைய நாடோ அதில் கொஞ்சம் வித்தியாசம் கொண்ட நாடு.

இங்கு எங்கும் மின்மயம். மின்மயம் போல் ஆளுமை நிலை உள்ளது-.

தென்னிந்தியாவில் அரசியல் புரட்சி

தந்தை பெரியாரின் தலைமகனாம் பேரறிஞர் மத்திய அரசு அண்ணா அவர்கள் முதன் முறையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்தார். தென்னிந்தியாவிலே ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை நடத்தியவர் அண்ணா. முழுக்க முழுக்க தமிழர்களின் ஆட்சியை அமைத்தவர்.

அண்ணா அவர்களுடைய நூற்றாண்டை ஒட்டி அண்ணா அவர்களது உருவம் பொறித்த சில்வர் நாணயத்தை வெளியிட்டு மரியாதை செய்திருக்கிறது. (கைதட்டல்)

திராவிடர் கழகம் சமூக சீர்திருத்தப் பணிகளை மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளை, விஞ்ஞான அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பணிகளை செம்மையாகச் செய்து கொண்டு வருகின்றது. தமிழ்நாட்டில் பெரியார் மணியம்மை கல்வி நிறுவனம் போன்ற பல கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வருகிறோம்.

இங்கே நான் சொன்ன பெயர்களின் பட்டியலை குறைத்திருக்கிறோம். பட்டியலில் விடுபட்ட தோழர்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆகவே நீங்கள் அதற்காக பொறுத்தருள வேண்டும் என்று கேட்டு என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

அற்புதமான விழா

முதலாவதாக இப்படிப்பட்ட ஓர் அற்புதமான விழாவை அமைப்பதற்கு செல்லப்பெருமாளுக்கு உரிமை தந்தவர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கின்ற ஆழ்வார் அவர்கள் ஆவார்கள். எனவே அவர்களுடைய நினைவைப் போற்றி என்னுடைய உரையை நான் துவக்குகின்றேன். அவருக்கு நாம் வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.

மகிழ்ச்சி கடலிலே மூழ்கி

இந்த விழா ஒரு முத்திரை பதித்த விழாவாக குவைத் நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சிக் கடலிலே நான் மூழ்கித் திணறிக்கொண்டிருக்கின்றேன்.

அதுவும் உங்களுடைய அன்பு என்பதிருக்கின்றது; அது எங்களை ஆட்கொண்ட முறை இருக்கிறது; அது மூச்சுத் திணறக் கூடிய அளவுக்கு எங்களை கொண்டு போய்விட்டிருக்கிறது.

இங்கே பேசிய தோழர்கள் என்னை அன்போடு வரவேற்றீர்கள். உபசரித்தீர்கள்.

பெரியார், அண்ணாவுக்கு செய்த சிறப்பாக

இங்கேயும் எங்களுக்கு ஏராளமான சிறப்புகளை செய்திருக்கின்றீர்கள். அந்தச் சிறப்புகள் என்னைப் பொறுத்த வரையிலே, எனக்கு செய்யப்பட்ட சிறப்பாக நான் கருதவில்லை.

மாறாக நம்முடைய அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணாஅவர்களுக்கும் செய்த சிறப்பாக நான் ஏற்றுக்கொண்டு அதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். எமை நத்துவாய் என எதிரிகள் கோடியிட்டழைத்தாலும் தொடேன் என்று சொன்னாரே புரட்சிக் கவிஞர் அத்தகைய புரட்சிக் கவிஞருடைய பொன் வரிகளுக்கு இலக்கியமாய் திகழ்ந்து குவைத் செல்லப்பெருமாள் அவர்கள் இங்கே மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார். அதனை இயக்க சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சாதனையாகும்.

இங்கே பேசிய அத்துணை பேரும் பெரியார் பெருந்தொண்டர் குவைத் செல்லப்பெருமாள் அவர்களுடைய உழைப்பைப் பற்றி, அவர்களுடைய கொள்கை உறுதியைப் பற்றி சொல்லும்பொழுது தனிமரம் தோப்பாகிவிட்டது என்று மிக அழகாகச் சொன்னீர்கள்.

தனிமரம் தோப்பாகிவிட்டது

ஆம்! உண்மைதான்; தனிமரம் தோப்பாகிவிட்டது. காரணம்அது கனிமரமாக இருந்த காரணத்தால் (கைதட்டல்)

கனிகள் தந்து அவை விதைகளாகப் பூமியில் விழும்பொழுது தோப்பு தானே உதயமாகும். தோல்வி வராது. தோப்புதான் வரும். அவரைப் பொறுத்தவரையிலேயே அவர் யாரைப்பற்றியும் கவலைப்பட்டதில்லை.

தனித்தே நின்றார். தனித்தே வென்றார் என்று நீங்கள் சொன்னீர்கள். குவைத்தில் செல்லப்பெருமாள் பெரியார் படிப்பகத்தை நடத்துகின்றார்.

பெரியார் தனித்து நின்றுதான்

ஆழமாக சிந்தித்து பார்த்தால் தந்தை பெரியாரே தனித்து நின்று தான் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். நான் தன்னந்தனியராக இயக்கத்தைத் தொடங்குகிறேன், யார் எனக்கு முன்னாலே செல்லுகிறார்கள், யார் எனக்குப் பின்னாலே வருகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.

அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசிய பல உரைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து பெரியார் ஒரு சகாப்தம் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றோம். அண்ணா அவர்கள் குறிப்பிட்ட ஒரு சொல்.

அண்ணா அவர்கள், பெரியார் ஒரு காலகட்டம், அண்ணா அவர்கள் ஒரு திருப்பம் என்று சொன்னார்கள்.

அண்ணா சென்னார்

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அண்ணா அவர்கள் சொல்லுகிறார். அவர் பின்னாலே யார் வருகிறார், யார் செல்லுகிறார் என்று எதைப்பற்றியும் அவர் கவலைப்பட்டதில்லை. அவர் இயக்கத்தை நடத்திக்கொண்டே போவார் என்று சொன்னார்.

உங்களிலே எத்தனைபேர் பெரியார் திரைப்படம் பார்த்தீர்கள் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் இதே போல ஒரு அரங்கத்தில் பெரியார் படத்தைப் பார்க்கலாம். அதிலே கூட அந்தக்காட்சி இணைக்கப்பட்டிருக்கிறது.

பெரியாரின் அறிவாயுதங்கள்

தந்தை பெரியாருடைய அறிவு ஆயுதங்கள், குடிஅரசு, பகுத்தறிவு, விடுதலை போன்ற ஏடுகள். அண்ணா அவர்களின் அறிவாயுதம் எது? அவர் விடுதலையின் ஆசிரியராக இருந்து, தொடர்ந்து அவர்கள் திராவிட நாடு இதழை தனி ஏடாக, வார ஏடாக நடத்தினார்கள். ஒரு மிகப்பெரிய அறிவுப்புரட்சியை அமைதிப் புரட்சியாக உருவாக்கினார்கள்.

அந்த அறிவுப் புரட்சியை, அமைதிப் புரட்சியை செய்து காட்டினார்.

1925இல் தொடங்கிய குடிஅரசு ஏடு

தந்தை பெரியார் அவர்கள் 1925இலே குடிஅரசு ஏட்டினைத் துவக்கினார்கள். எங்களைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்திலே அந்த இதழைத் தொடங்கினார்.

இந்தக் காலத்திலேயே இவ்வளவு எதிர்ப்பு. நான் உள்பட எதிர் நீச்சல் அடித்துக் கொண்டுதான் வருகின்றேன். முதல்வர் கலைஞர் அவர்களிடம் நெருக்கடி காலத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள். உங்கள் மீது ஒரு குற்றம் சுமத்துகிறார்களே, தேசிய நீரோட்டத்தில் நீங்கள் கலக்கவில்லையே என்று செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு கலைஞர் அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார். ஏனென்றால் அது ஈரோடு குருகுலத்தின் பயிற்சி.

கலைஞர் சொன்ன பதில்

நான் ஈரோடு போனவன்; ஆகவே நீரோடு போக விரும்பவில்லை என்று கலைஞர் சொன்னார் (கைதட்டல்). எதிர் நீச்சல் அடித்தால் தான் நமது வல்லமை தெரியும்.

நீரோட்டத்தில் யார் வேண்டுமானாலும் குதித்து விட்டால் அது இழுத்துக் கொண்டே போகும். ஆகவே இந்த எதிர்நீச்சல் அப்படித்தான். தந்தை பெரியார் அவர்கள் எதிர் நீச்சலோடு தன்னுடைய பணியைத் தொடங்கினார்கள்.

உலகெலாம் பரவியது

பெரியார் தொடங்கிய குடிஅரசு, இதழ் பெரும் புரட்சியை அந்தக் காலத்திலே செய்தது. உலகெலாம் சென்றது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்றது.

ஏட்டிற்கு நட்டம் வந்த பொழுது

அப்படி சென்ற பொழுது ஒரு காலக்கட்டத்திலே அந்த ஏட்டிற்கு நட்டம் வந்தது. நம்முடைய இலட்சிய ஏடு என்றால் நட்டம் தான் வரும். பொருள் நட்டம் வந்தது. அங்கே அருகிலிருந்தவர்கள் சொன்னார்கள். அய்யா மிகுந்த பொருள் நட்டம் ஏற்படுகின்றது. எனவே இதனை நிறுத்திவிடலாமா? என்று கேட்டார்கள்.

அதற்கு தந்தை பெரியார் அவர்கள் தந்த பதில் என்ன தெரியுமா? செல்லப்பெருமாளை எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

நான் ஒருவனே எழுதி, ஒருவனே அச்சடித்து, ஒருவரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே திண்ணையில் அமர்ந்து படித்து வெற்றி கொள்வேன் என்று சொன்னார். (கைதட்டல்).

அன்றைக்கு பெரியார் சொன்னார்.

இன்றைக்கு செல்லப்பெருமாள் அதை குவைத்திலே செய்து காட்டியிருக்கின்றார். (கைதட்டல்). எனவே அதில் எங்களுக்கு வியப்பில்லை.

குவைத் செல்லப்பெருமாள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் அந்த உறுதி வெற்றி பெறும்.

இந்த நிலையிலே பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டிலே கொண்டாடினோம்.

தமிழ் செம்மொழி என்பதற்கு

தமிழ்நாட்டை விட அதிகமான அளவுக்கு சொல்வளத்தோடு, கருத்து வளத்தோடு, தமிழ் செம்மொழி என்பதற்கு ஆதாரம் வேறு எங்கும் தேடிக் கண்டுபிடிக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டிற்குப் போய்ச் சொல்வேன். குவைத்துக்குப் போய் ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள். அப்பொழுது அந்தத் தமிழின உணர்வு, உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்று. (கைதட்டல்).

அவ்வளவு ஆழமாக இங்கு எல்லோரும் கருத்துகளை எடுத்து சொன்னீர்கள். உங்களைப்பின் பற்றி ஒரு சில கருத்துகளை சொல்லுகின்றேன்.

நீதியின் குரல் ஒலித்தது

இங்கே நீதியின் குரல் தெளிவாக ஒலித்தது. சில நேரங்களிலே எங்கள் நாட்டிலே இந்த குரல் நெரிக்கப்படுகிறது; அல்லது வளைக்கப்படுகிறது; அல்லது குரல் கம்மியிருக்கிறது.

ஆனால் இங்கு பளீர் பளீர் என்று நீதியின் குரல் கேட்கிறது என்று சொன்னால் இங்குள்ள ஆட்சியாளரை நாம் பாராட்ட வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு பெரிய புரட்சியை செய்தார்கள் என்பதற்கு அடையாளமாக அங்கீகரித்தது யார் என்று சொன்னால், பெரும் எதிர்ப்புகளுக்கிடையே அங்கீகரித்து யுனெஸ்கோ மன்றம்.

---------------------தொடரும் 25-11-2009

2 comments:

அப்பாதுரை said...

எத்தனை ovia வந்தாலும் ஒரு oviyaவுக்கு இணையாகுமா?
தொடர்ந்து குரல் கொடுங்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி