Search This Blog

14.11.09

குழந்தைகள் தினம்-ஒரு பகுத்தறிவுப் பார்வை


குழந்தைகள் தினம்

இன்று குழந்தைகள் தினம். ஆம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு அய்.நா. அறிமுகப்படுத்தியது.

1963 இல் பிரதமர் நேரு மறைந்த நிலையில், அவர் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. பல நாளேடுகளில் வெவ்வேறு நாள்களில் இது கடைபிடிக்கப்படுகிறது.

எதிர்கால ஒளி முத்துகளாகிய குழந்தைகளுக்காக ஒரு நாள் என்பது மிகமிக முக்கியம்தான். குழந்தைப் பருவத்தில் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ பெற்றோரும், வீட்டாரும் குடும்பங்களில் எப்படி நடந்துகொள்கிறார்களோ அவர்களைப் பொறுத்த பாதிப்பு நிச்சயமாகக் குழந்தைகளுக்கு உண்டு! உண்டு!!

குழந்தைகள் நலன் கருதியாவது பெற்றோர்கள் பொறுப்பானவர்களாக, ஒழுக்கம் உள்ளவர்களாக, சிக்கனக்காரர்களாக, எதிலும் ஒரு திட்டம் உடையவர்களாக, நேரம் தவறாதவர்களாக வாழ்ந்து காட்ட வேண்டியவர்களே!

ஊட்டச்சத்து என்பது மிகமிக இன்றியமையாதது!

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானமுள்ள மக்கள் 77 விழுக்காடு வாழும் நாட்டில், குழந்தைகளுக்குச் சத்துணவை எங்கே போய் தேடுவது? சர்வதேச பட்டினி அட்டவணையில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 66. (“கரீபி ஹட்டாவோ’’ _ வறுமையே வெளியேறு பிரதமர் இந்திரா காந்தியின் கோஷம்!). பரவாயில்லை நமக்கும்கீழ் இன்னும் 22 நாடுகள் இருக்கின்றன. இது ஒரு அற்ப ‘போனஸ்’ சந்தோஷம்!

நீதிக்கட்சித் தலைவர் சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராகவிருந்த காலகட்டத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு இலவசத் திட்டம், காமராசர் காலத்தில், கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் வழிகாட்டுதலோடு வளர்ந்து, தமிழ்நாட்டில் இன்றைய தினம் பல்கிப் பெருகி, இந்தியாவுக்கே மகுடமாக ஜொலிக்கிறது! (வாழ்க கலைஞர்!).

இந்தியத் துணைக் கண்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு 50 விழுக்காடு என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ராஜேந்திரபாபு கூறியுள்ளார் (10.10.2008).

ஒரே ஆண்டில் உலக அளவில் மரணம் அடையும் குழந்தைகளின் எண்ணிக்கை 1.25 கோடியாகும். இதில் இந்தியாவில் மட்டும் 25 லட்சம் ஆகும். முதல் பிறந்த நாளைக் கொண்டாட முடியாத இந்தியக் குழந்தைகள் ஆயிரத்துக்கு 58; உலக அளவில் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் 35 விழுக்காடுஇந்தியாவில்தானாம். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,26,66,377. இந்தியாவில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் அதிகம் இல்லை. வெறும் 7 கோடிதானாம்! ராஜஸ்தானில் இன்னும் குழந்தைகள் திருமணம்; தமிழ்நாட்டில் தீட்சதர் குடும்பங்களில் இன்னும் அதே நிலைதான்!

இன்னும் சொல்லலாம், புள்ளி விவரங்களை அதிகம் சொன்னால் தலையைச் சுற்றுமே!

ஒரு கூடுதல் தகவல்: இலங்கைத் தீவில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ்க் குழந்தைகளின் எண்ணிக்கை 90 ஆயிரமாகும்.

---------- மயிலாடன் அவர்கள் 14-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: