Search This Blog

29.11.09

பெரியாரும் - கலைவாணரும்

கலைவாணர்

கலைவாணர் என்.எஸ். கிருட்டிணன் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1908). 49 ஆண்டுகளே வாழ்ந்து மக்கள் மத்தியில் என்றென்றும் குடிகொண்டிருக்கும் இலட்சியக் கலைஞர் அவர்.

இனி என்.எஸ். கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக் காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப்பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால், அந்தச் சரித்திரத்தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண் டப்படாததாக ஆகி விடும் (குடிஅரசு, 11.11.1944) என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார் என்றால், கலைவாணர் தம் பெருமையின் சிகரம் எவ்வளவு உயரமானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

தந்தை பெரியார் ஒருவரைப் பாராட்டுகிறார் என்றால், அதன் பொருள், அந்த மனிதரால் சமுதாயம் பெற்றிருக்கும் வளர்ச்சியை எடை போடுவதாகும்.

சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்த சீலர் என்பதுதான் கலைவாணருக்குரிய தனித்தன்மையாகும்.

எத்தனை எத்தனையோ சொல்லலாம்; ஒவ்வொன்றும் சிந்தனைக் கற்கண்டு, அறிவு மணக்கும் பூச்செண்டு.

திருநீலகண்டர் படம் 1939 இல் வெளியானது. அதில் ஆத்திக _ நாத்திக லாவணிப் பாடல் (கலைவாணருக்குக் கிடைத்த அருமையான நாத்திகக் கவிஞர் உடுமலை நாராயணகவி).

கலைவாணரும், டி.எஸ். துரைராஜும் எதிர் எதிர் பாட்டுப் பாடுவார்கள்:

கல்விக்கரசி தமிழ்ச்செல்வி

என்றொரு பெண்ணைக்

கைதொழுதீரே, அந்த மங்கை

மறையவன் நாவிலவள்

உறைவது நிஜமானால்

மல ஜலம் கழிப்பது

எங்கே எங்கே?

என்று பாடி வெடிச்சிரிப்பைக் கிளப்பினார் கலைவாணர்.

1956 இல் திருச்சியில் தி.மு.க. மாநில மாநாடு கலைவாணர் புத்தர் கதை வில்லுப்பாட்டு நடத்தினார். பெரியாரும், அண்ணாவும் பிரிந்திருந்த காலகட்டம்.

அந்த நேரத்தில், இட்டுக்கட்டி இடையில் விட்டார் இரண்டு வரிகளைப் பாட்டாக.

அய்யாவும், அண்ணாவும்

ஒன்றானால் புத்தர்

ஆசை நிறைவேறும்

என்று பாடினாரே பார்க்கலாம்! மக்கள் கடல் கரவொலி அடங்கிட வெகுநேரமாயிற்று.

கலைவாணர், நடிகவேள் எம்.ஆர். இராதா போன்ற கலைஞர்கள் இன்று இல்லையே, என் செய்ய?

--------------------- மயிலாடன் அவர்கள் 29-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: