Search This Blog

26.11.09

பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றம் பாராட்டு!

எனக்கென்று ஒரு வசந்தகாலம்!
குவைத்தில் தமிழர் தலைவர் அற்புத உரை!

குவைத்தில் 16.10.2009 அன்று நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றுகிறார்.

எனக்கென்று ஒரு வசந்தகாலம் ஒன்று இருந்தது. அது எந்தக் காலம் என்பதை அண்ணா அவர்கள் விளக்கிய செய்தியை குவைத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

யுனெஸ்கோ மன்றம் பாராட்டு!

யுனெஸ்கோ மன்றம் அய்க்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார மன்றம். அந்த யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியார் அவர்களுக்கு 1971 காலகட்டத்திலே மிகப் பெரிய விருது ஒன்றை அளித்தது.

1971ஆம் ஆண்டு வாக்கிலே அந்த விருது வழங்கப்பட்டது. அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள்தான் அந்த விருதினை அளித்தார்கள்.

அன்றைக்கு எங்கள் நாட்டின் மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் திரிகுணசென் அந்த விருதினை வழங்கினார்.

அந்த விருதுக்குரிய காரணங்களை அற்புதமான வரிகளில் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் பெரியார். பெரியார் அவர்கள் காலத்தைக் கடந்த ஒரு முன்னோடி. அது மட்டுமல்ல, மூடநம்பிக்கையின் முடை நாற்றம் வீசாமல் தடுக்கக்கூடிய முழு எதிரி.

மனித நேயத்தின் மறுஉருவம் என்று தெளிவாகச் சொன்னார்கள்.

அண்ணா தலைசிறந்த பேச்சாளர்

தந்தை பெரியார் அவர்கள் செய்த சாதனை இருக்கிறதே அது ஒப்பற்ற சாதனை. வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை.

அய்யா அவர்களிடம் பயின்ற அண்ணா ஒரு தலைசிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். அண்ணா அவர்களைப் பற்றி ஒரு சில உதாரணங்களை ஆங்காங்கே தொட்டுத் தொட்டு காட்டுகிறேன். அண்ணா அவர்களுடைய பேச்சு என்றால் பலாச்சுளையை தேனில் தோய்த்து சாப்பிடுவதைப் போன்று இனிக்கும்.

எதிரிகள் கூட வியப்பர்

எதிரிகள் என்று வருபவர்கள் கூட அவர் வயப்படுவர். அண்ணா அவர்களுடைய சிந்தனை, சொற்கள் எங்கிருந்து விழுகின்றதென்பதே தெரியாது. குற்றால அருவியின் நீர்வீழ்ச்சி போல, நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல அண்ணா அவர்களுடைய கருத்துகள் அவ்வளவு வளம் பெற்ற கருத்துகளாகும்.

அண்ணா அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம். அண்ணா அவர்களுடைய பேச்சுகளை அருகில் இருந்து கேட்டவர்கள் நாங்கள்.

கேள்விக்கு பதில் சொல்கின்ற ஆற்றல்

கேள்வி கேட்டு பதில் சொல்வது என்கிற முறை தந்தை பெரியாரிடம், அண்ணா அவர்களிடம், கலைஞர் அவர்களிடம், திராவிட இயக்கத்தினரிடம் உண்டு. எந்தக் கேள்விகளுக்கும் சரளமாகப் பதில் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். பெரியார் குருகுலத்திலே அப்படிப்பட்ட ஒரு பயிற்சி தெளிவாக உண்டு. காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு அவசரமாக ரயிலுக்குப் போக வேண்டும் என்று அண்ணா அவர்கள் மேடையை விட்டு இறங்குகின்றார்.

அண்ணா அவர்களிடத்திலே ஒரு கேள்வி

அவர் அவசரமாக இறங்குவதைப் பார்த்த அப்பொழுது இருந்த எதிர் கட்சியினர் உடனடியாக எழுதி வேண்டுமென்றே ஒரு கேள்வித்தாளை அண்ணா அவர்களிடத்திலே கொடுக்கின்றார்கள். இது நீண்ட காலத்திற்கு முன்னாலே நடந்த செய்தி.

பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து அப்பொழுது பிரியவில்லை. பாகிஸ்தான் பிரிவினையை அப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜின்னா ஆரியரா? திராவிடரா? என்று கேள்வி. அண்ணா அவர்கள் அந்தக் கேள்விச் சீட்டைப் பார்த்தார். படித்தவுடனே மேடையை விட்டுக் கீழே இறங்கிய அண்ணா, மீண்டும் மேடை ஏறினார்.

ஜின்னா ஆரியரா? திராவிடரா?

ஜின்னா ஆரியரா? திராவிடரா? என்று ஒரு தோழர் கேள்வி கேட்டிருக்கின்றார். திரு. ஜின்னா திராவிடர்; ஸ்ரீமான் ஜின்னா ஆரியர்; ஜனாப் ஜின்னா அவர்தான் இஸ்லாமியர் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு மேடையைவிட்டு கீழே இறங்கிப் போய்விட்டார். (கைதட்டல்)

அண்ணா அவர்கள் எதற்கும் மிகச் சிறப்பாக பதில் சொல்லக் கூடியவர். ஆற்றல் வாய்ந்த பேச்சாளர். அதேபோல அண்ணா அவர்களுடைய எழுத்துகள் சாதாரணமானவை அல்ல. அண்ணா அவர்களின் எத்தனையோ சிறப்பான எழுத்துகளை எடுத்துக் காட்டலாம்.

அண்ணா பகுத்தறிவுக் களஞ்சியம்

அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவுக் களஞ்சியம் என்ற நூலை நாங்கள் வெளியிட்டி ருக்கின்றோம். இந்த நூலிலே அற்புதமான செய்தி இதைத் திராவிடநாடு ஏட்டிலே அண்ணா அவர்கள் எழுதினார். இது ஒரு சுவையானது.

அண்ணா அவர்களுடைய தலைப்பே அற்புதமானது. அண்ணா அவர்களைப் போல தலைப்பு எழுதுகின்ற ஏட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் வேறு யாரும் கிடையாது.

அண்ணா விடுதலையின் ஆசிரியர்

கிளிநிறம் பெற்ற கழுகு. கிளி போன்று பச்சை நிறம் பெற்றிருந்தால் அது சரியாகுமா? அதற்கான உவமையை அவர்கள் சொன்னார்கள். அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தபொழுதுகூட தன்னுடைய முதலமைச்சர் பதவியை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை.

அண்ணா அவர்கள் விடுதலையின் பழைய ஆசிரியர் என்ற முறையிலே பெரியார் மலருக்கு, அய்யா பிறந்த செப்டம்பர் 17 க்காக ஒரு கட்டுரையை விடுதலை ஆசிரியர் என்ற முறையிலே கேட்டிருந்தேன்.

அண்ணா முதல்வராகி அப்பொழுதுதான் சில மாதங்கள் ஆகின்றன. முதல்வர் பதவியை ஏற்பதற்கே அண்ணா அச்சப்பட்டார். எல்லோரும் பதவி கிடைக்காதா என்று பார்க்கிறார்கள்.

முதல்வர் பதவியை அச்சத்தோடு பார்த்தார்

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலே யாராவது ஒரு கட்சியைத் தொடங்கினாலே நான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். (கைத்தட்டல்) எனவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே அண்ணா அவர்களை முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஆனால், அச்சத்தோடு அண்ணா அவர்கள் பொறுப்பேற்கிறார்கள்.

இவ்வளவு மக்கள் நம்மீது இவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்களே இவர்களுடைய நம்பிக்கைக்கு மாறாக நான் நடக்க முடியுமா? நடக்கக் கூடாது.


அண்ணாவைத் தொந்தரவு செய்தேன்

எனவே, அந்த நம்பிக்கையை நியாயப்படுத்த வேண்டும் என்று அண்ணா அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்திலேதான் அண்ணா அவர்களிடம் கட்டுரை வேண்டினேன். அவர்களிடம் மலருக்கு கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று அண்ணா அவர்களை நான் தொந்தரவு செய்தேன். அண்ணா அவர்களுடைய நிகழ்ச்சிக்கு இரண்டு, மூன்று முறை சென்றிருப்பேன் என்னுடைய முகத்தைப் பார்க்கின்ற அளவுக்கு முன்னாலே உட்கார்ந்திருப்பேன்.

நிகழ்ச்சி முடிந்து அண்ணா அவர்களை சந்திக்கும்பொழுது சொல்லுவார். என்னப்பா, மலருக்கு கட்டுரை கேட்கத்தானே வந்திருக்கிறாய்? கொஞ்சம் பொறு; எழுதிக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லுவார்.

சரித்திரம் படைத்த எழுத்துகள்!

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எழுதினார். அவருடைய எழுத்துகள் எப்படிப்பட்ட உயிருள்ள எழுத்துகள் என்பதை சரித்திரம் படைக்கக்கூடிய எழுத்துகள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா அவர்கள் விடுதலை மலருக்காக அவரே தலைப்பிட்டு எழுதிக்கொடுத்த கட்டுரைதான் அந்த வசந்தம் என்பது. கட்டுரையின் துவக்கமே மிகச் சிறப்பானதாக இருக்கும். எழுத்தாளர் அண்ணா அவர்களை இப்பொழுது பாருங்கள்.

எனக்கென்று ஒரு வசந்தகாலம்

எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆண்டு பலவற்றுக்குப் பிறகு அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றைய கவலைமிக்க நாள்களிலே எழமுடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி அவருடன் காடுமேடு பலசுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக்குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.

அப்பொழுது கலவரம் எழாமல் ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும்; பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும்.

தலைபோகும் - உயிர்போகும்...

புறப்படு முன்னர் தலைபோகும் _ தாடிபோகும் _ தடிபோகும் _ உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண்டிய நிலை.

அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா? என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு பொருளற்ற ஒரு பதில் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார் _ வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால்

பெரியார் மீது கற்கள்...

ஈரோட்டுக்குப் பக்கத்திலே இருங்கூர் என்ற ஊர் பெரியாரும், அண்ணாவும் செல்லுகிறார்கள். அந்த ஊரிலே பெரியார் பேசக் கூடாது என்பதற்காக பெரியார் மீது கற்கள் விழுந்து கெண்டிருக்கின்றன ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சாம்பலைக் கொண்டு வந்து இருவரின் எதிரிலே நின்று கொண்டு ஏராளம் வீசிக்கொண்டேயிருக்கின்றார்கள்.

------------------தொடரும் .."விடுதலை" 26-11-2009

0 comments: