Search This Blog

18.11.09

ஜாதி ஒழிக்கப்படாத நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்


ஜாதி வாரி கணக்கெடுப்பு!

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் நேற்று (17.11.2009) அன்று மாலை சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காணவும், அந்த மக்களின் நலனுக்கான அரசின் திட்டங்கள் உரிய மக்களுக்கு சென்றடையவும், மேம்பாடு அடைந்த மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கிடவும், ஜாதி வாரியான கணக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றங்கள் அறிவுறுத்தியதைக் கருத்தில் கொண்டு, வரும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியான கணக்கெடுப்பையும் நடத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக தொடங்கிடவேண்டும்.

2. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் நலத் திட்டங்கள் அந்த மக்களுக்கு முறையாக சென்றடைவதைக் கண்காணித்திட பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு மத்திய அரசு அமைத்திடவேண்டும்.

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்திற்கு உள்ளதுபோன்று அதிகாரம் மத்திய அரசு அளித்திடவேண்டும்.

சமூகநீதிக் கண்ணோட்டத்திலும், பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு கண்ணோட்டத்திலும் இம்மூன்று தீர்மானங்களும் இக்காலகட்டத்தில் மிகவும் முத்தாய்ப்பானவை என்பதில் அய்யமில்லை.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 1931_க்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியமாகும்.

ஜாதி அமைப்பு வேரூன்றி நிற்கும் இந்திய சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமூகநீதி என்பதில் ஜாதிதான் முக்கிய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு எத்தனை விழுக்காடு என்பதை நிர்ணயம் செய்திட ஜாதி வாரியான கணக்கெடுப்பு என்பது அடிப்படையில் தேவையான புள்ளி விவரமாகும்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும்போதுகூட, நீதிபதிகள் தொடுக்கும் வினா எந்த அடிப்படையில் இத்தனை சதவிகிதம் (சிக்ஷீவீtமீக்ஷீவீஷீஸீ) இட ஒதுக்கீடு என்பதே!

1931 ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்கெடுப்பை அரசு தரப்பில் சொல்லும்போது நீதிபதிகள் அதில் குறை காண்கின்றனர். நீண்ட காலத்திற்கு முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிவரக் கணக்கு தற்போது எப்படி பொருந்தும் என்று வினா எழுப்புகின்றனர்.

அப்படியிருக்கும்போது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரி புள்ளி விவரமும் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கறாராக ஏன் ஆணை பிறப்பிக்கக் கூடாது என்பதுதான் நமது முக்கிய வினாவாகும்.

இரண்டொரு வழக்குகளில் மறைமுகமான முறையில் இதற்கான அறிவுறுத்தலை உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் காட்டியிருக்கின்றன என்று கருதப்பட்டாலும், இன்னும் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

இட ஒதுக்கீடுக்கு மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பல்வேறு சமூக, பொருளாதார வளர்ச்சிகளுக்காக ஜாதிவாரி புள்ளி விவரம் என்பது மிகவும் தேவையானதே!

அதுவும், ஜாதியை சட்டப்படி ஒழிக்கும் காலம் வரைக்கும் இந்த விவரம் ஒவ்வொரு முறையும் திரட்டப்பட வேண்டியதே!

ஜாதி வாரி கணக்கெடுப்பால் ஜாதி உணர்ச்சி வளர்ந்துவிடும் என்பதெல்லாம், ஜாதி வாரி புள்ளி விவரம் எடுக்கப்படக்கூடாது என்று கருதுபவர்களின் தந்திரப் பேச்சாகும்.


-------------------"விடுதலை" தலையங்கம் 18-11-2009



0 comments: