Search This Blog

3.11.08

அந்நஜாத் ஏட்டிற்குப் பதிலடி

அந்நஜாத் ஏட்டிற்குப் பதிலடி -1

கீழ்த்தரமான கிறுக்கல்

ஜனவரி 2008 அந்நஜாத் என்னும் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.
கட்டுரையின் தலைப்பு: பகுத்தறிவார்களே! பகுத்தறிவைப் பகுத்துப் பார்த்திருக்கிறீர்களா? என்பது
இந்தக் கட்டுரையாளர் அயூஃபாத்திமா
இவர், பகுத்தறிவாளர்களைக் கடுமையாகவும், கொடுமையாகவும் தம் கட்டுரையில் திட்டித் தீர்த்திருக்கிறார்.

பகுத்தறிவு என்பது பற்றியும் தாறுமாறான முறையில் தரம் தாழ்ந்து எழுதி, கடவுள் மறுப்பாளர்களைத் தாக்கியும் ஏசியும் கிறுக்கியிருக்கிறார்.

அவரது வாதங்களை(?) முதலில் சுருக்கமாக எடுத்துவைத்து அவற்றிற்கான பகுத்தறிவு விளக்கத்தைத் தொடர்ந்து தர இருக்கிறோம்.

குழப்பத்தின் கூடாரம்

அய்ம்புலன்கள் கொண்டு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு மட்டுமே, பகுத்தறிவு செயல்பட முடியும்.
இந்த அய்ம்புலன்களுக்குள் அடைபடாத ஒன்றை இந்தப் பகுத்தறிவால் விளக்க முடியாது; ஏற்க முடியாது.
அதனால்தான், கோவூர் போன்றவர்கள், கடவுளைக் காட்டுங்கள்! கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் - என்ற அறிவற்ற வாதத்தை வைத்தனர்.
இது கட்டுரையாளர் எடுத்து வைக்கும் வாதங்களின் ஒரு பகுதி.

குழப்பத்தின் கூடாரமாக இவர் மாறி, தானும் குழம்பி, பிறரையும் குழப்புகிறார்.
அய்ம்புலன்களுக்கும் அடைபடாத ஒன்று என்று இவர் எதைக் கருதுகிறார்?
அய்ம்புலன்களுக்கும் அடைபடாத ஒன்று என்று சொன்னால் அது உள்பொருள் அல்ல; இல்பொருள்!
அப்படி புலன்களுக்கு எட்டாத - ஒன்றைப் பகுத்தறிவால் விளக்க முடியாதுதான்; ஏற்க முடியாதுதான்!
இது உண்மைதானே?
புலன்களுக்கு எட்டாத அந்தப் பொருள்
அதுசரி,
இவர், அய்ம்புலன்களுக்கும் அடைபடாத ஒன்று என்று எதனைக் கூறுகிறார்?
வெளிப்படையாக இப்பொழுது சொல்லி விடுகிறார் இவ்வாறு;
அதனால்தான் கடவுளைக் காட்டுங்கள்! கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் என்ற அறிவற்ற வாதத்தை வைத்தனர் கோவூர் போன்றவர்கள்.
என்கிறார் கட்டுரையாளர்.

இது திரிபு வாதமல்லவா? தகிடுதத்தம் அல்லவா? பித்தலாட்டம் அல்லவா?
அய்ம்புலன்களுக்கும் அகப்படாதது பொய்:
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்,
பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர்,
சார்லஸ் பிராட்லா
இங்கர்சால்
முதலான உலகின் தலைசிறந்த பகுத்தறிவாளர் பெருமக்கள் எல்லாம் கடவுளைக் கண்ணால் மட்டும் பார்க்கும்படியாகவா கேட்டனர்; வாதிட்டனர்?

கண், காது, செவி, மூக்கு, மெய் ஆகிய அய்ம்பொறிகளுள் ஒன்றினாலேயே, சில, பலவற்றாலேயோ, அய்ந்தினாலேயோ மெய்ப்பித்துக் காட்டுங்கள் என்றல்லவா வலிவான பகுத்தறிவு வாதங்களை எடுத்து வைத்தனர்?

பஞ்சேந்திரியங் (அய்ம்பாறி)களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய்! இதுதான் பகுத்தறிவுவாதிகளின் கொள்கை (9.2.70 விடுதலை) என்றல்லவா தந்தை பெரியார் கூறினார்!

அய்யா பெரியாரின் அறைகூவல்!

அய்யா பெரியார் பின்வருமாறு அறைகூவல் விடுகிறார்.

இன்றைக்கும் நான் கடவுள் நம்பிக்கைக்காரர்களைக் கேட்கிறேன்! ரூபாய் பதினாயிரம் பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.
சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறது என்று யாராவது ஒருவர் சொல்லட்டும்!
சொல்ல முன்வந்து தன் நடத்தையைக் கொண்டு மெய்ப்பிக்கட்டும்!
யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்து வைக்கிறேன் என்று கூறுகிறேன்!!
யார் வருகிறீர்கள்? யார் வருகிறார்கள்?
சவால்விடுகிறேன்!
என, அறை கூவல் விடுத்தாரே?
தன் நடத்தை - செய்கை - அய்ம்பொறி இயக்கத்தைக் கொண்டு மெய்ப்பித்துக் காட்டட்டும் என்றுதானே அவர் பறை சாற்றினார்?

கண்ணால் காட்டு! என்று மட்டுமா சொன்னார்?

ஏன் இந்தக் கட்டுரையாளர் திரிபுவாதம் செய்ய வேண்டும்?

அறிஞர் கோவூரின் அதிரடி

டாக்டர் கோவூர் அவர்கள், கடவுளைக் கண்ணால் மட்டுமே காட்டுக! என்றா சொன்னார்?
அவர், மிகவும் கீழே இறங்கிவந்து, கடவுளை மெய்ப்பித்துக்காட்ட உன்னால் முடியாதா?
போகட்டும், கடவுள் சக்தியையாவது மெய்ப்பித்துக்காட்டு! ஏற்கிறேன்; என 23 அறைகூவல்கள் விடுத்தாரே? மெய்ப்பிப்பவருக்கு நூறாயிரம் ரூபாய்ப் பரிசு தருகிறேன். என் சவாலை ஏற்று வருக! பரிசு பெறுக!

என்றல்லவா, உலகெங்கணும் உள்ள கடவுள் நம்பிக்கையாளரிடம் அறிவிப்பு செய்தாரே?
மெய்ப்பித்துக்காட்டும் துணிவு கட்டுரையாளர் போன்ற சண்டப் பிரசண்டம் செய்யும் சூரப்புலிகளுக்கு ஏன் வரவில்லை?

நேருக்கு நேர்:

கடவுளைக் கண்ணால் கண்டு தான் ஏற்பேன் - என்று அடம்பிடிப்பவர்கள் பகுத்தறிவை முறைப்படி விளங்காத மூடர்கள் ஆக மட்டுமே இருக்கமுடியும்!
இது, இந்தக் கட்டுரையாளரின் பண்பு நலம் செறிந்த வார்த்தைகள்! கண்ணால் கண்டால் மட்டுமே ஏற்பேன் என்று பகுத்தறிவாளர் எவரும் கூறவில்லையே?
அவ்வாறிருக்க,
அடம்பிடிப்பவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார் இவர்?
அடம்பிடிப்பது இவர் போன்றவர்களா? பகுத்தறிவாளர்களா?
பகுத்தறிவை முறைப்படி விளங்காத மூடர்களாமே, பகுத்தறிவாளர்கள்? இவர் மட்டும்தான் முறைப்படி விளங்கிக் கொண்டவரா?
பகுத்தறிவாளர்களின் முன்னே நேருக்கு நேர் வந்து முறைப்படி விளக்க இவர் முன்வருவாரா?
யார் மூடர்கள்?
மூடத்தனத்தை - முட்டாள்தனத்தை - மடமையை, மூடநம்பிக்கையை முறியடிக்க முனைபவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்!
இவர் போன்றோரின் மூடத்தனத்தைத் தகர்த்து, தவிடுபொடியாக்கி முழு அறிவாளர்களாக ஆக்கப் பாடுபடுபவர்கள் தாம் பகுத்தறிவாளர்கள்!
அறிந்து கொள்ளட்டும் இவர்!!
கீறல் விழுந்த கிராம்போன் இசைத்தட்டு:
காலம்காலமாக, சொல்லப்பட்டு வரும் இன்னொரு வாதத்தையும் கட்டுரையாளர்கள் முன்வைக்கிறார்.
மனிதனின் அய்ம்புலன்களுக்குள் கட்டுப்படும் ஒன்று கடவுளாக ஒருபோதும் இருக்க முடியாது!
அய்ம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவனாக - பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டவனாக மட்டுமே, மனிதனையும் மற்ற அனைத்தையும் படைத்த ஒரே இறைவனாக இருக்க முடியும்!
கீறல் விழுந்த கிராமபோன் பதிவு இசைத்தட்டில் ஒலிப்பது போல, அய்ம்புலன்களுக்கு எட்டாதவன்; மனதிற்குக் கிட்டாதவன்; அறிவிற்கு அப்பாற்பட்டவன் என்றெல்லாம் காலம்காலமாக, கடவுள் நம்பிக்கையாளர்கள் கரைந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனையேதான் அந்நஜாத் கட்டுரையாளர் அறிவாளி இப்பொழுது வழிமொழிந்து ஒத்திசை பாடுகிறார்.
இதற்கு, பகுத்தறிவாளர்களும் காலம் காலமாகப் பதில் சொல்லி வருகிறார்கள்.
அவர்களுள் பகுத்தறிவின் சிகரம் பெரியார் அவர்களின் விளக்கம் தரும் வினாக்களை இங்கே எடுத்துரைத்தாலே போதும்! என்று கருதுகிறோம்.

என் கேள்விக்கென்ன பதில்?

கடவுள் எப்படிப்பட்ட மனதிற்கும் எட்டாதது; எப்படிப்பட்ட அறிவுக்கும் அறியக்கூடாதது;
ஆதலால், உனக்குப் புரியவும் புரியாது! உன் மனதிற்கு எட்டவும் எட்டாது!
அதனை நீ அறியவும் முடியாது; புத்திக்கும் எட்டாதவன்; இந்திரியங் (அய்ம்பொறி)களுக்கும் எட்டாதவன் என்று சொல்லப்படுகிறது என்றால், இப்படிப் புரியாதவர்; எட்டாதவர்; அறியப்படாதவர் உனக்கு மாத்திரம் எப்படி புரிய, எட்ட, அறிய, தெரிய முடிந்தது?
இந்த வினாவிற்கு கட்டுரையாளர் என்ன விடை விளம்பப் போகிறார்?
எதிர்பார்க்கிறோம்!

மண்டையில் உறைக்க மறுக்கிறதே!

அய்ம்புலனுக்கும் - ஆறாவது அறிவாகிய பகுத்தறிவுக்கும் எட்டாதவன் கடவுள் என்கிறாரே இவர்? அப்படி எட்டாத ஓர் இறைவன் இருக்கின்றான் என்று - இவர் எந்தப்புலன் கொண்டு தெரிந்து கொண்டார்?
அல்லது உணர்ந்து கொண்டார்?
இல்லாத, 7ஆவது 8ஆவது அல்லது வேறு எத்தனையாவது அறிவைக் கொண்டு அறிந்து கொண்டார்?
பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத - எட்டாத ஒரு விஷயம், பொருள், நடப்பு எதுவாயினும் அது முழுமையான பொய் என்றுதானே பகுத்தறிவாளர்கள் அடித்துக் கூறுகின்றர்கள்?
அது ஏன் இவரனையாரின் மண்டையில் உறைக்க மறுக்கிறது?
விளக்கத்தை மட்டும்தான் நாம் கூறமுடியும்!
அதனைப் புரிந்து கொள்ளக்கூடிய விவேகத்தை - நுண்ணறிவை நாம் கொடுக்க முடியுமா?
முடியாதே!

படைப்பல்ல; பரிணாமம்


அடுத்து, பகுத்தறிவுக்கும் - அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு கருத்தினை இவர் எழுதுகிறார் இப்படி:
அய்ம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன் மட்டுமே மனிதனையும் மற்ற அனைத்தையும் படைத்த ஒரே இறைவன் ஆக இருக்க முடியும்.
மனிதனும் மற்றைய பொருளனைத்தும் ஓர் இறைவன் எனப்படும் கடவுளால் படைக்கப்-பட்டவை என்கிறார் கட்டுரையாளர்.
உலகின் பொருள் அனைத்தும் அணுக்களாலானவை; அணுவும் நுண்மையான ஆற்றலானாது.
ஆக, பொருள் - சக்தி இரண்டின் (Matter-Energy) உருமலர்ச்சியே அனைத்துப் பொருள்களும்.

இவை இயல்பாகத் தோன்றியவை; எவருடைய படைப்பும் அல்ல; பரிணாம முறையில் உருமலர்ச்சி பெற்றவை (No creation, but evolution) ஆற்றலின் அழிவின்மைக் கோட்பாட்டின் (Laws of conservation of Energy) அடிப்படையில் என்றும் இருப்பவை; என்றும் அழிவற்றவை (Eternal and Everlasting), தோற்றமும் முடிவும் அற்றவை (No beginning and so no ending)

இல்லாத ஒன்றைப் புதிதாகப் படைக்கத்தான் ஒரு படைப்பாளி (creator) தேவை.
என்றும் இருப்பதனைப் படைக்க ஒருவன் தேவையில்லை.

ஒற்றை உயிரணுவின் உருமலர்ச்சி


இதுபோலவே, மனிதன் என்பவன் உயிரற்ற நுண்பொருளிலிருந்து வளர்ச்சி பெற்ற ஒற்றை உயிரணு (Mono cell) சரலிருந்து உருவேர்ச்சி பெற்று காலப்போக்கில் குரங்கு, மனிதக் குரங்கு, மனிதன் எனப்படும் பாலூட்டிக் குடும்பத்தி-லிருந்து அதாவது பிரைமேட் (primate) குழுவிலிருந்து ஒரு கிளையாகக் கிளைத்து உருமலர்ச்சி (Evolution) பெற்ற இனமே மனித இனம்.

எனவே, மனிதனும் பரிணாம முறையில் உருலேர்ச்சி பெற்றவனே! படைக்கப்பட்டவன் அல்லன்.
எனவே, மனிதனும் மற்றைய அனைத்துப் பொருள்களும் இறைவன் என்பவனால் படைக்கப்பட்டவன் என்ற கட்டுரையாளரின் கருத்து, பகுத்தறிவிற்கும் அறிவியலுக்கும் மாறானது; வேறானது; முரணானது.
மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியையே பாடிக்கொண்டிருப்பதை இவரனையார் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
கேளுங்கள் கொடுக்கப்படும்!

அடுத்து,

கட்டுரையாளர் பின்வருமாறு எழுதுகிறார்:

தங்களைப் பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி எடுத்துப் பக்குவப்-படுத்தப்பட்டவர்கள் எனப் பெருமைப்படப் பேசிக்கொள்ளும் பகுத்தறிவாளர்களிடம் சில வினாக்களைத் தொடுக்கிறோம்.

தந்தை பெரியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்று, தெளிவு பெற்று, முதிர்ச்சி எனப்படும் பக்குவப்படுத்தப்பெற்ற பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதில் பறை சாற்றிக் கொள்வதில் உலகிற்கு அடையாளம் காட்டிக் கொள்வதில் எம்போன்ற பகுத்தறிவாளர்களுக்குப் பெருமை தான்! பெருமிதம்தான்!

இதில் என்ன அய்யம்?
இதில் என்ன குற்றம்?

நெஞ்சு நிமிர்த்தி, அஞ்சாமையோடு, வெளிப்படையாக வீறு கொண்டு இன்று மட்டுமல்ல, என்றும் கூறுவோம்!

நீங்களும், உங்கள் போன்றாரும், நாங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தாதவர்கள்; ஏன் பகுத்தறிவு அற்றவர்கள்! என்று கூச்சமில்லாமல் சொல்லிக் கொள்ளுங்களேன்!
யார் வேண்டாம் என்றது?

சில வினாக்களைத் தொடுக்கப் போகிறோம் என்கிறார். தொடுத்துப் பாருங்களேன்.
அஞ்சாது - அயராது முறையான, தெளிவான விடைகளையும், விளக்கங்களையும் கொடுப்பவர்கள் தான் பகுத்தறிவாளர்களாகிய நாங்கள்! பதிலளிக்கப் பயந்து விடமாட்டோம்!
வினாக்களைக் கேளுங்கள்! கொடுக்கப்படும் விடைகள்!!

---------------- (தொடரும்)
--------------------- "உண்மை" மார்ச் 16-31-2008



அந்நஜாத் ஏட்டிற்குப் பதிலடி -2

கூப்பிட்ட குரலுக்கு

கட்டுரை மேலும் பின்வருமாறு தொடர்கிறது:
பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் உங்கள் தாயையும் தந்தையையும் அவர்கள் உங்களைப் பெற்றெடுக்கும்போது உங்கள் கண்ணால் பார்த்துப் பகுத்தறிந்து தான் ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஒரு பிள்ளை, தான் பிறக்கும்போது அது எப்படித் தன் பெற்றோரைத் தெரிந்து கொள்ள முடியும்?

தெரிந்து கொள்ள வேண்டிய தேவைதான் என்ன?

பெற்றோரை மட்டுமல்ல, பிறந்த இடத்தில் காணப்படும் பிறபொருள்களைக் கூட எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?

தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையானம் தான் என்ன?

பிறந்த குழந்தை, வளர்ச்சியடையாத தன் அறிவினைப் பயன்படுத்தாமலேயே வளர, வளர, தன் இயல்பான உடலில், உயிரியல் தொடர்பால் கண்ணால் பார்த்தும், காதால் குரலைக் கேட்டும் தன் தாயினைத் தெரிந்து கொள்கிறதே?

அழுகிற ஒரு குழந்தை, தன் கட்புலனால் அறிவதற்கு முன்பே தன் செவிப்புலனால் தன் தாயை, தந்தையை அறிந்து கொள்ளுமே?

தன் தாய் வெளியிலே எங்கோ சென்றிருந்த போது, இடைவிடாமல் அழுது, அரற்றி எவர் வந்து தூக்கினாலும் அமைதிப்படுத்தினாலும் அழுகையை நிறுத்தாத குழந்தை, என் கண்ணே! அழாதே! இதோ வந்துவிட்டேன்! என்று தன் தாய் குரல் கொடுத்தவுடனேயே அழுகையை நிறுத்தி குரல்வந்த பக்கம் கூர்ந்து நோக்கி சட் என அழுகையை நிறுத்தி விடுகிறதே?

இதோ! எந்தன் அன்னை முன்னாலே!

எவர் தூக்கினாலும் அடம்பிடித்து அழும் குழந்தை தன் தாய் தன் மேல் கை வைத்துத் தொட்டவுடன் அந்தத் தொடு உணர்ச்சியால் தாய் வந்து விட்டாள்! என்று தெரிந்து கொண்டு அமைதி அடைவதும் இந்த முறையில்தானே?

குழந்தையானது வளர வளர, பாலூட்டி, தாலாட்டி, பரிவுகாட்டி, பேணி வளர்க்கும் தன் தாய் தந்தையை சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் அய்ம்புலனாய், பழக்கத்தால் நன்கு அடையாளம் கண்டு கொள்கிறதே?

வேண்டாத வீண் அலட்டல்

மேலும் எழுதுகிறார்:

எங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும்-போது தாய் என்றும் தகப்பன் என்றும் தெரிய வந்ததை நம்பித்தான் தாயையும் தந்தையையும் ஏற்றுக் கொண்டோம் என்று மட்டுமே நீங்கள் சொல்ல முடியும்!

என்று விவரம் தெரியத் தொடங்கும்போது, ஏற்கனவே எம்மால் சொல்லப்பட்ட வழி முறைகளால் இனம் காணும் குழந்தை, நாளடைவில் தெரிய வந்ததை நம்பி பின் அதனை ஏற்றுக் கொண்டு பெற்றோரை உறுதி செய்து கொள்கிறது.

புலன் நுகர்வு - பட்டறிவு உணர்த்துவதை ஏற்பது தானே நம்பிக்கை. நம்பிக்கை வைப்பதே தவறா? மூடநம்பிக்கை கொள்வதுதான் குற்றம்! நன்னம்பிக்கை வைப்பது குற்றமல்லவே!
பெற்றோரை மட்டுமல்ல, தன் உடன் பிறப்பாளர்களை, மற்ற உறவுக்காரர்களையும் இப்படித்தானே குழந்தை நம்பி ஏற்றுக் கொள்கிறது!

மீண்டும் கேட்கிறோம்!

அன்று பிறந்த குழந்தை, தன் தாய் யார்? தந்தை யார்? என அறிந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? நோக்கம் என்ன? அது பெறும் நன்மை என்ன? அறியாவிட்டால் வரும் தீமை என்ன?
ஏன் கட்டுரையாளர் இவ்வாறு வீணாக அலட்டிக் கொள்ள வேண்டும்?
அதுதான் அதிகப்பிரசங்கித்தனம்:
மேலும் கடுமையாக எழுதுகிறார்:
தங்களை மாபெரும் பகுத்தறிவாளர்கள் எனப் பீற்றிக் கொள்ளும் ஒரு சிலர், அதிகப் பிரசங்கித்தனமாக மரபணுச் சோதனை மூலமாக எங்கள் தாயையும் தந்தையையும் பகுத்தறிந்து கொள்வோம் எனப் பீற்றலாம்.
ஆமாம், மெய்தான்!
மரபணுச் சோதனை - டி.என்.ஏ. டெஸ்ட் மூலம் பெற்றோரை இனம் காணலாம்.
இப்படிக் கூறுவது அறிவியல் வழியில் தீர்மானிக்கப்படும் அடிப்படை உண்மையல்லவா? இதைப் பீற்றிக் கொள்வது என்று கட்டுரையாளர் ஏன் கூற வேண்டும்.
வீணாக - பொய்யாக - புளுகாக பறை சாற்றுவதுதானே பீற்றிக் கொள்வது?
உண்மையைக் கூறுவது எப்படிப் பீற்றிக் கொள்வதாகும்? இப்படி அவர் சாற்றுவது தான் அதிகப்பிரசங்கித்தனம்!

தாயும் யாரோ? தந்தையும் யாரோ?

கட்டுரையாளர் மேலும் அதிகப்பிரசங்கித்தனம் (சொற்றொடர் அவரது நன்கொடை தான்) ஆக எழுதுகிறார் பின்வருமாறு:

இது காலம் வரை, தங்களின் தாயாக, தந்தையாக நம்பி ஏற்று இருந்தவர்கள், தங்களின் தாயுமல்ல, தந்தையும் அல்ல என மரபணுச் சோதனை மூலம் அறிந்து கொண்டபின் அந்த மரபணுச் சோதனை மூலம் தங்களை உண்மையிலேயே பெற்றெடுத்த தாயையும் தந்தையையும் அறிய முடியுமா?

அதாவது, இவ்வுலகிலுள்ள குறைந்தது தங்கள் ஊரிலுள்ள அனைவரையும் தங்களின் மரபணுச் சோதனைக்கு உட்படுத்த முடியுமா? சாத்தியமா?
அறிவியலின் அரிய சாதனை!
மரபணுச் சோதனை மூலம் தங்கள் தாய் தந்தையர் இவர்கள் அல்லர் என அறிந்து கொள்ள முடியும் என்கிறார் கட்டுரையாளர். இந்த மரபணுச் சோதனை அறிவியல் - பகுத்தறிவு வளர்ச்சியின் விளைவு அல்லவா?

கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத இந்த பகுத்தறிவு - அறிவியல் வளர்ச்சிப் போக்கு இந்த அளவில் உள்ளது என்றால் என்ன பொருள்?

முன்னர் இல்லாத அறிவு தற்காலம் வளர்ந்து வருகிறது என்பதுதானே? பகுத்தறிவை - அறிவியலை எள்ளி நகையாடி, ஏளனம் செய்து இழித்துரைக்கும் இவர் தம்மையறியா
மலேயே அதன் மாண்பினை, தேவையை, அருமையை ஒத்துக் கொண்டு விட்டாரே?

முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை:

தன் தாய் தந்தையர் இவர்கள் அல்லர் என மரபணுச் சோதனை மூலம் உறுதிப்படுத்துவது மட்டுமே முடியும்.

அதே சோதனை மூலம் பெற்ற தாய் தந்தை-யரை அறிய முடியாது, ஒருபோதும் முடியாது என இவர் எப்படிக் கூறலாம்?

இப்போது முடியாது! என்று வேண்டுமானால் இவரனையார் கூறலாம். எப்போதும் - ஒரு போதும் முடியாது என்று எப்படிக் கூறலாம்!

இவருக்கு இந்த உரிமையை யார் தந்தது? பெற்றோரை மரபணுச் சோதனை மூலம் அறிய முடிவதை முடியாது! என இவர் கூறுவது சரியல்லவே? முடியாது என்பது முட்டாள்-களின் வார்த்தை என்பது பொன்மொழி!

வேண்டாத வீண் வேலை

மரபணுச் சோதனை எப்போது நிகழ்கிறது?
இந்தப் பெண்ணை நான் தொட்டதில்லை; கை விட்டதில்லை; இவள் பெற்ற பிள்ளைக்கு நான் அப்பனல்ல! - என்று வழக்கு வரும் போது தானே இந்தச் சோதனை நிகழ்த்தப்படுகிறது?
ஆம்! சோதனைப்படி இந்தக் குழந்தை இவரது உயிரணுவுக்குப் பிறந்தது தான்! என்றோ, இல்லை! இவரது உயிரணுவுக்குப் பிறக்கவில்லை என்றோ அறிவியல் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

ஊரிலுள்ள அனைவருமா, இப்படித் தங்கள் பெற்றோர் இவர்தாம் என்றோ, இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள அலைகிறார்கள்? இதனால் இவர்களுக்கு நன்மை என்ன? வேண்டாத - வீண் வேலையில் ஏன் இவர்கள் இறங்கப் போகிறார்கள்?

அறிவியல் ஆய்வினால் அறிய முடியுமே!

மரபணுச் சோதனை மூலம் தன் பெற்றோர் இவர் என்று எப்படி அறிய முடியும்? ஒருபோதும் முடியாது! என்று கேட்கிறார் இவர்? ஏன் முடியாது?

குற்றம் சாட்டப் பெற்றவன் உண்மையான குற்றவாளி அல்லன் என்று காவல்துறைப் புலன் விசாரணையில் தெரிய வந்தவுடன் யார் உண்மையான குற்றவாளி என அறிய எத்தனையோ வழிமுறைகளைக் காவல் துறையினர் கையாள்கின்றனரே?

அதற்காக, உலகிலுள்ள, ஊரிலுள்ள அத்தனை பேரையுமா பிடித்து வந்து அல்லது இழுத்து வந்து புலன் விசாரணை நடத்துகிறார்கள்? இல்லையே?

சந்தேகத்திற்கு உரியவர்களை, இவர்கள் குற்றவாளிகளாக இருக்கலாமோ எனக் கருதப்படுபவர்களை மட்டும், உயித்தறிந்து, உசாவியறிந்து, கடந்த காலத்தில் அவர்தம் குற்ற நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து குறிப்பிட்ட சிலரை மட்டும் காலத் தாழ்ச்சி (னுநடயல)க்குப் பிறகாவது விசாரணை செய்து குற்றம் புரிந்தவர்களைக் கண்டு பிடித்து குற்றவாளிக் கூண்டிலே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள்.

அதுபோல, அய்யத்திற்குரியவர்களை உசாவியறிந்து அவர்களிடம் மரபணுச் சோதனை செய்து உண்மைகளை, பகுத்தறிவின் அடிப்படையிலான அறிவியலால் முடியாதா? முடியும்! எப்படி?

எப்படி? எப்படி? அறிந்தது, எப்படி?
நீங்கள் திருமதி வளர்மதி அவர்களின் மகள்தானே?
ஆமாம், உங்களுக்குத் தெரிந்தது எப்படி?
எனக்கு உங்கள் அம்மாவை நன்கு தெரியும்! அவர்களின் பொதுவான உருவ அமைப்பு உங்களுக்கு இருப்பதோடு உங்களின் பேச்சு, அவர் பேசுவது போலவே இருக்கிறதே?

இன்னோர் உரையாடல்:

தம்பி, நீ வாழப்பாடி வடிவேலுவின் மகன் தானே?
ஆமாம், அய்யா! எப்படித் தெரிங்சுகிட்டீங்க?
வடிவேலுவோட முகச்சாயல் அப்படியே உங்களிடம் தெரிகிறதே?
இப்படிப்பட்ட உரையாடல்களை நாம் பல்வேறு இடங்களிலே வாய்ப்புகளிலே கேட்டிருப்போம்.
ஏன் நாமே கூட அடுத்தவரைப் பார்த்துக் கேட்டிருப்போம்!

நம்மிடம் மற்றவர்கள் கேட்டிருக்கவும் கூடும்.

பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு

இனப் பெருக்க உயிரணுக்களிலுள்ள பண்புக் காரணிகள், பண்புக்காரணி அலகுகள் ஆகியவை பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு மரபியல் பண்புகளை எடுத்துச் செல்கின்றன.
எடுத்துச் செல்பவைதான் பண்புக் காரணி-களிலுள்ள டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. எனப்படும் மூலக்கூறுகள்.

ஒரு பண்புக் காரணி அலகில் நிறம், கண்கள், மயிர் இவற்றின் நிறம், மூக்கின் அமைப்பு, உடலளவு, உயரம், நீண்ட அல்லது சுருண்ட தலைமயிர் முதலியவை பெற்றோரின் மூலம் பிள்ளைகட்கு வருகின்றன.

இவற்றை, அறிவியல் வழி ஆய்ந்து உறுதிப்படுத்துவதான் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. சோதனை ஆகும்.

துப்புத் துலக்கலாம்!

இத்தகு தன்மைகள் மேலே சொல்லிய வண்ணம் தோற்றம், நடை, பாவனை, உடலமைப்பு முதலியவற்றை வைத்தே தந்தை யாராக இருத்தல் கூடும் என்பதைக் கண்டறிய முடியும்; துப்புத் துலக்க முடியும்!

இதேபோல் உள்ள பலரையும் மரபணுச் சோதனை மூலம் இனம் காண முடியும்.
சந்தேகப்படும்படியானவரைத் தேர்வு செய்து, புலன் விசாரணைக்குள்ளாக்கி குற்றவாளிகளை உறுதிப்படுத்தும் காவல்துறை முறை தான் இது!

இப்படியிருக்க,

அனைவரையும் மரபணுச் சோதனைக்கு உட்படுத்த முடியுமா? சாத்தியமா? என, அந்நஜாத் ஏடு பொறுப்புணர்வின்றி, தேவையும் இல்லாமல் வினவுவது முற்றிலும் சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?


பெற்றோர் எல்லாம் நெறி பிறழ்ந்தவர்களா?

தங்கள் பெற்றோர் எல்லாம் ஒழுக்கம் தவறிய நடத்தையால்தான் தம்மை ஈன்றெடுத்-துள்ளனரோ? என அய்யப்பட்டு, இப்படிப்-பட்ட வினாக்களை எழுப்புவது நாகரிகம் அற்ற பண்பாட்டுக் குறைவான போக்கு அல்லவா?

பகுத்தறிவைக் கொச்சைப்படுத்த இது ஒரு வழியா? முறைமையா?
அசிங்கத்தை அள்ளி வீசுவதா?

கட்டுரையாளர் மேலும் இவ்வாறு எழுதுகிறார்:

தாயின் கர்ப்பப்பை உலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்த பின்னர் தங்களின் மழலைப் பருவத்தில் தாங்கள் செய்த அசிங்கமான செயல்களையாவது பகுத்தறிவு கொண்டு அறிய முடிகிறதா?
அதாவது அந்தக் குழந்தைப் பருவத்தில் பெற்ற தாய் சிறிது கவனமில்லாமல் இருக்கும்போது ஒன்றிற்கும் இரண்டிற்கும் போய் அவற்றைக் கைகளால் பிசைந்து அதை வாயில் வைத்து சப்பியதை எல்லாம் தங்களின் பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறதா?
அசிங்கத்தை இத்தனை விளக்கமாக, நேரடி வருணனை போல விவரிக்கும் அசிங்கம் வேறு உளதா?

உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும்:

பிறந்த பிள்ளைக்கு அய்ம்புலன்களின் முதிர்ச்சியிருக்காதே! உலகிலுள்ள பொருள்கள், நிகழ்வுகள் பொறிகள் வழி மூளையில் பதிந்து அந்தத் தகவல்கள் முழுமையாக உணரப்படாத நிலையில்தானே பிள்ளையின் மூளை வளர்ச்சி இருக்கிறது.
வளர்ந்து, முழுமையாகப் புலன்கள் முதிர்ச்சி பெற்ற பின்தானே அதனைப் பகுத்தறிய முடியும்!

பகுத்தறிவும் அப்பிள்ளைக்கு முழுமையோ முதிர்ச்சியோ பெற்றிராதே? புலனுணர்வு, பகுத்தறிவு இவற்றைப் பற்றிய அரிச்சுவடி அறிவே இல்லாமல் இப்படி எழுதலாமா? பகுத்தறிவை அசிங்கப்பகுத்தலாமா?

மேற்சொல்லப்பட்ட பிள்ளைப் பருவச் செயல்களை உலகிலுள்ள எல்லாக் குழந்தை-களும் தானே செய்கின்றன?

அவற்றை நேரடியாகப் பார்த்து நாமும் மழலைப்பருவத்தில் இப்படித்தானே செய்திருப்-போம் - என்று உய்த்துணர்ந்து ஊகித்து அறிவது உய்த்தறிவு இல்லையா? பகுத்தறிவைக் கொண்டு வந்து போட்டுக் குழப்புகிறாரே?

விவரமறியா சின்னக் குழந்தைத்தனமான மனநிலையில் இவர் இருக்கிறாரே? அசிங்-கத்தைக் குழந்தை வாயில் வைத்துச் சப்புவது போல இவரும் அதனை எழுது கோலில் தொட்டு எழுதுகிறாரே?

----------------- (தொடரும்)
-------------------"உண்மை" - ஏப்ரல் 1-15-2008



கோழியா? முட்டையா? மரமா? விதையா?
- பேராசிரியர் ந.வெற்றியழகன் எம்.ஏ.,பி.எட்.,


அந்நஜாத் ஏட்டிற்குப் பதிலடி (3)

பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியுமா?

அந்நஜாத் ஏட்டின் கட்டுரை மேலும் இவ்வாறு தொடர்கிறது:

தாங்கள் கர்ப்பப்பையில் இருந்ததையோ, சிறு பிராயத்தில் செய்தவற்றையோ பகுத்தறி-வால் பகுத்தறிய முடிகிறதா? கருப்பையில் கருவாக இருந்ததை அறிவது பகுத்தறிவு என்று இவரிடம் எவர் சொன்னார்?

பல்வேறு அறிவியல் முறையிலான ஆய்வுகளால் இதனை அறிந்து கொள்ள முடியுமே! பல்வேறு கால கட்டங்களில் கருப்பையில் உள்ள நம் கருவின் நிலைகளை - தோற்றங்களை, வளர்ச்சிகளை ஸ்கேன் மூலம் படம் பிடித்துப் பார்க்கலாமே! படம் பிடித்துக் காட்டு-கிறார்களே!

அண்மையில் சுவீடன் நாட்டைச் சார்ந்த டாக்டர் பெர்சன்ட் ஸ்ட்ராம் என்னும் அறிவியலாளரும், லென்னார்ட் நில்சன் என்பவரும் மின்னணு நுண் பெருக்காடி வழியாக பெண்ணின் சினை முட்டை ஆணின் உயிரணுவும் சந்திக்கும் நிகழ்ச்சியிலிருந்து கருவாகி அது குழந்தையாகி, பின் வெளிவரும் வரையில் உள்ள வளர்ச்சி நிலைகளைத் தெளிவாக, படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.

வாரந்தோறும் காணப்படும் வளர்ச்சி நிலை

3ஆவது வாரம் கருவில் மென்மையான பள்ளம்; 4-ஆவது வாரம் மூன்றரை மில்லி மீட்டர் அளவு கரு இருக்கிறது; அதில் கைகள் துளிர்விடத் தொடங்குகிறது. சில நாள்களில் கால்கள் எட்டிப் பார்க்கின்றன.

5-ஆவது வாரத்தில் ஒரு முந்திரிப் பருப்பு அளவு வடிவாகக் கரு உள்ளது. அரை அங்குலத்துக்கும் குறைவு. முகம், தலைப்பகுதி, மூக்குத் துளைகள், வாய், இவை உருவாவதைக் காட்டுகிறது.

மென்மையான பள்ளம் கண் ஆகிவிட்டது. வயிற்றுப் பகுதியில் இதயம் துடித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒரு வால் காணப்படுகிறது.

6-ஆவது வாரம் வரை, பூனை, எலி, பறவை, மாடு, மனிதன் ஆகிய எல்லாக் கருக்களும் ஒரே மாதிரிதான் தோற்றம் அளிக்கின்றன.

மாதாந்தர வளர்ச்சி

2-ஆவது மாதம், ஆண் அல்லது பெண்ணின் பாலின உறுப்புகள் தோன்றுகின்றன. 3-ஆவது மாதம், செரிமான உறுப்புகள் எலும்புகள் தொடக்கம்.

4-ஆவது மாதம், ஏறக்குறைய முழுக் குழந்தையின் வடிவம்; 5-ஆவது மாதம், தலைமுடி, நகம், பால்பற்களின் முளைகள்; 6-ஆவது மாதம், கண் திறந்து மூடுகிறது; 7-ஆவது மாதம், குழந்தை அழுகிறது, மூச்சு விடுகிறது; 8,9-ஆவது மாதம், குழந்தை பிறப்பதற்கு அணியமாகிறது.

இவை எல்லாம் செம் (sem) எனப்படும் மின்னணுக் கருவி கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் தெளிவாகத் தெரிகின்றன.

மாந்தர்களின் எல்லாக் கருக்களும் கருப்பையில் இந்தப்படித்தான் காணப்படும்.
பகுத்தறிவாளர்களின் கருவும் இப்படித்தானே?

முன்னேற்பாட்டின் எம் கரு வளர்ச்சியை செம் மூலம் பெற்றோர்கள் படம் பிடித்து வைத்திருந்தால் பார்த்தறிந்து கொண்டு விடலாமே?

அப்படி இருக்க, தாயின் கருப்பையில் கருவாக இருந்ததைப் பகுத்தறிய முடிகிறதா? என்று கட்டுரையாளர் அசட்டுத்தனமாக வினா எழுப்புவானேன்?

சின்னஞ்சிறு வயதினிலே

இதே போலத்தான்,

சிறு வயதில், நாம் இருந்த தோற்றத்தையும், செயல்களையும், வளர்ச்சி நிலைகளையும், ஒளிப்படம், வீடியோ, ஆடியோ சி.டி முதலியன மூலமானப் பதிவு செய்து நம் பெற்றோர்கள் வைத்திருந்தால் அவற்றைப் பார்த்தோ, கேட்டோ நாம் தெரிந்து கொள்ள முடியுமே?
சொல்லாமலே தெரிந்து கொள்ளலாமே!

மேலும் ஒரு வினாவினைக் கட்டுரையாளர் இவ்வாறு எழுப்புகிறார்:
தான் இதுவரை போகாத சைனா, சிங்கப்பூர் பற்றிய விவரங்களை - அனுபவங்களைப் பகுத்தறிய முடியுமா?

இந்த இடங்களைப் பற்றிய விவரங்களை நேரிலே அங்கு போய்த்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லையே? ஏற்கெனவே அங்கு போய் வந்தவர்கள் கூறும் தகவல்கள் கொண்டு அறிந்து கொள்ளலாமே?

அவற்றின் ஒளிப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், திரைப்படங்கள், வீடியோக்கள், செய்தித்தாள்கள் முதலான புதிய கருவிகள், ஊடகங்கள் வாயிலாகவும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாமே?

இந்தக் கட்டுரையாளர் இந்த 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறாரா? அல்லது கற்காலத்தில் வாழ்கிறாரா?
அந்த இடங்களின் அனுபவங்களைப் பகுத்தறிய முடியுமா? என்று ஓர் அபத்தமான கேள்வி கேட்கிறார்.
ஒரு பொருள் அல்லது இடத்தினை அய்ப்புலன்களால் நுகர்ந்து பெறும் பட்டறிவுதானே அனுபவம் என்பது?

போகாமலே பார்த்தறியாமலே எப்படி, பட்டறிவு - அனுபவம் ஏற்படும்? எப்படி அந்த, பெறாத அனுபவங்களைப் பகுத்தறிய முடியும்? குழப்பத்தின் கொடுமுடியில் ஏறி நின்று தவிக்கிறாரே! அந்தோ! என இரங்கல் தெரிவிக்கத்தான் எம்மால் இயலும்!

அலறித் துடிப்பது ஏன்?

எதற்கெடுத்தாலும் பகுத்தறிவால் முடியுமா? என இவர் வினவுகிறார்! பகுத்தறிவு பற்றி இவர் என்ன கருதிக் கொண்டிருக்கிறார்?

அறிவின் பல்வேறு முறைகளில் - துறைகளில், வகைகளுள் பகுத்தறிவும் ஒன்று.
திருவள்ளுவர், பேரறிவு, கூரறிவு, அய்யறிவு, மெய்யறிவு, வாலறிவு, நூலறிவு முதலான 16 வகையான அறிவுக் கூறுகளைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

அவற்றுள் மெய்ப்பொருள்காணும் அறிவுக்கூறு பகுத்தறிவு ஆகும்.
மற்ற அறிவுத்துறை கொண்டு பல்வேறு செய்திகளை - நடப்புகளை, பொருள்களை ஆய்வு செய்து உண்மை காணலாம்.

இவர், எதற்கெடுத்தாலும் பகுத்தறிவு - பகுத்தறிவு கொண்டு பார்க்க முடியுமா? என்று ஏன் அலறுகிறார்? பகுத்தறிவுப் பயநோயாக இருக்குமோ?

வீணான வினா!


அந்நஜாத் மேலும் இவ்வாறு வினவுகிறது:

பகுத்தறிவு கொண்டு மரணத்தின் பின் உள்ள வாழ்வு பற்றிப் பகுத்தறிய முற்பட்டால் அது விவேகமான செயலாகுமா?

இப்படி ஒரு வினா! வீணான வினா!!


மரணத்தின்பின் மறுவாழ்வு, மறுபிறவி என்பவையெல்லாம் மதக் கருத்து; மெய்ப்பிக்-கப்படாத பொய்ம்மைக் கருத்து; கற்பனைக் கருத்து; மூடநம்பிக்கை.
இறந்த பிறகு ஏது வாழ்வு?

மரணம் அல்லது இறப்பு என்பது என்ன?

மூச்சுறுப்பு மண்டிலம், குருதியோட்டம் அல்லது இதய இயக்கம், நரம்பு மண்டிலம் அல்லது மூளை இயக்கம் இவற்றுள் ஒன்றோ இரண்டோ அனைத்துமோ செயலிழப்பது தான் இறப்பு.
உடலின் இயக்க ஆற்றலின் மறுபெயர்தான் உயிர் என்பது; உடல் வேறு; உயிர் வேறு அன்று. உடல் அழிந்தபின் உயிர் என்னும் இயங்காற்றலும் அழிந்துபடுகிறது. உடல் அழிந்தபின் உள்ளிருந்த உயிர், உடலினின்றும் வெளியேறி மறு(மை) வாழ்வோ, மறுபிறப்போ எய்துகிறது என்பது இல்லை.

அப்படி இருக்க, மரணத்தின் பின் உள்ள வாழ்வு பற்றிப் பகுத்தறிவு கொண்டு அறிய முற்படுவது விவேகமானதா? எனக் கட்டுரையாளர் வினவுவது விவேகமானதா?
எது முந்தி, எது பிந்தி?

கட்டுரையாளர் தொடர்ந்து பின்வரும் வினாக்களை எழுப்புகிறார்:

விதையிலிருந்து மரமா? மரத்திலிருந்து விதையா? என்பதைப் பகுத்தறிந்திருக்கிறார்களா?
முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா? பகுத்தறிந்து உண்மையைக் கண்டறிந்து விட்டார்களா?

முதிர்ச்சியில்லாத - குழந்தைத்தனமான வினாக்கள் இவை!
கோழியா? முட்டையா? மரமா? விதையா?
எது முதலில் தோன்றியது? நாமும் கொஞ்சம் அலசுவோம்.
தர்க்கவாதம் தரும் உண்மை

உடலுடன் இணைந்தே தோன்றுவது காமவுணர்வு; இது வெட்ட வெளியில் தோன்றாது.
கோழியில்லாமல் காமவுணர்வு தோன்றாது.

காமவுணர்வு உந்தப் பெற்று ஆண்-பெண் கோழிகள் உடலுறவு கொள்கின்றன.
அதன் விளைவாக உருவாவதே முட்டை! முட்டை முதலில் தோன்றுவது இல்லை!
அதுபோல, விதை என்பது ஒரு தாவரக் கரு. உயிருள்ள மரம் தோன்றாமல் அந்தரத்தில் வெட்ட வெளியில் விதை தோன்றாது.

மரம் தோன்றி அதன் கருவாக உருவாவதே விதை கல்து வித்து. எனவே, கோழிதான் முதலில், மரம்தான் முதலில் தோன்றியது என அறிந்து கொள்வது தர்க்க முறையில் ஆன விளக்கம்.

அறிவியல் ஆய்வு முடிவு

முதலில் தோன்றியது உறுப்பில்லாத ஒரு செல் உயிரிகள் காலப்போக்கில் பல செல் உயிரிகளாகி பரிணாமம் அடைந்து தாவர, விலங்குயிரிகள் தோன்றின. விலங்குயிரிகளின் உச்சகட்ட உருமலர்ச்சியே மனித இனம்.

எனவே, தொடக்ககால உயிரி முட்டையிலிருந்து தோன்றவில்லை. ஆண் பெண் பறவைகள் இணைவதால் உருவாவதே முட்டை; ஆண்-பெண் விலங்குயிரினம் இணைவதால் உருவாவதே கரு. கொடி, செடியின் மலரிலுள்ள ஆண் பகுதியும் பெண் பகுதியும் இணைவதால் உருவாவதே விதை. முட்டை, கரு, விதை இவையாவும் இயல்பில் ஒரு தன்மையனவே!

இதுதான் விடை! என்ன செய்யப் போகிறார்?

கோழிதான் முந்தி, முட்டை பிந்தி; மரம் தான் முந்தி, விதை பிந்தி; கட்டுரையாளரின் வினாக்களுக்கு அளவை (Logic), அறிவியல் முறையிலான விடைகள் இவை.
இப்பொழுது அந்நஜாத் கட்டுரையாளர் என்ன சொல்லப்போகிறார்?
மீண்டும் மீண்டும் இதே வினாக்களைக் கேட்டுக் கொண்டே செவிபொத்தி, விழி மூடிக் கிடக்கப் போகிறாரே?


படைப்பன்று; பரிணாமம்

கட்டுரையாளர் பின்வருமாறு தொடர்கிறார்: விண்ணையும், மண்ணையும் இன்னும் எண்ணற்ற கோள்களையும் படைத்து, அதிசயிக்கத்தக்க வகையில் அவற்றை, அவற்றின் ஓடு பாதையில் ஒரு வினாடி முன்பின் ஆகாமல் பல்லாயிரம் கோடி ஆண்டுகள் எவ்வித இடையூறு இல்லாமல் சுழலவைத்திருக்கும் அந்த ஒரே இறைவன் இவர்களின் பகுத்தறிவில் அடைபடவில்லை என்பதால், அந்த இறைவனை மறுப்பவர்கள் எந்த அளவு அறிவீனர்களாக இருக்கமுடியும்?

விண், மண், கோள்கள் முதலானவை இயல்பாகத் தோன்றியவை, அவை எவருடைய படைப்பும் அல்ல.

ஆற்றலின் அழிவின்மைத் தத்துவ அடிப்படையில் அவை, பொருளாக இருந்து ஆற்றலாக மாறினாலும், ஆற்றலாக இருந்து பொருளாக மாறினாலும் என்றும் இருப்பவை; என்றும் அழிவற்றவை.

தோற்றமும் முடிவும் அற்றவை. எனவே, என்றும் இருக்கும் ஒன்றைப் புதிதாகப் படைக்க எவனும் தேவையில்லை.

ஆகவே, படைப்பாளன் எனப்படும் இறைவன் தேவையில்லாதவன்; இல்லாதவன். எனவே விண், மண் கோள்கள் இறைவன் என்பவனால் படைக்கப்படாதவை. இறைவன் எனப்படுபவனே இல்லை என்கிறபோது அவன்தான் அவற்றைப் படைத்தார் என்று கதைப்பதும் அறிவற்ற கூற்று ஆகும்.

இயற்கை இயக்கவிசைகள்

கோள்களின் ஓடு பாதையில் ஒரு வினாடி முன்பின் ஆகாமல் - இடையூறும் கோளாறும் இல்லாமல் இறைவன் சுழலவைத்துள்ளான் என்கிறார் கட்டுரையாளர்.
கோள்களின் சுழற்சிக்கும் ஓடு பாதை இயக்கத்துக்கும் அவற்றின் சுழற்சி விசை, மய்ய நோக்கு விசை, ஈர்ப்பு விசை முதலான ஆற்றல்கள் எனப்படும் இயற்கை இயக்க விசைகள் தான் காரணம்.

இறைவன் எனப்படும் கற்பனைக் கடவுள் தேவையில்லை.
தடம் மாறும் தகவல்கள்


இந்தக் கோள்கள் முதலானவை, முன்பின் மாறாமல் தம் ஓடு பாதைகளில் சுழல வைத்திருக்கிறானாமே இறைவன்! கதைக்கிறாரே கட்டுரையாளர்!
கீழ்வரும் தகவல்களைப் பாருங்கள்: வானத்திலேயே அதிக ஒளியுள்ள விண்மீனாகிய சிரியஸ் ஒழுங்காத்தான் ஓடு பாதையில் செல்லாமல், கோணலான பாதையில் நகர்வதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர் (முனைவர் ம.அ.தங்கராஜ் எம்.ஏ., பிஎச்.டி., டொராண்டோ, இயற்பியல் துறைப் பேராசிரியர், சென்னைக் கிறித்துவக் கல்லூரி - எழுதிய வாழ்வளிக்கும் சூரியன் நூல் பக்கம் 108)

யுரேனஸ் கிரகத்தின் போக்கைக் கவனித்து வந்த வான் விஞ்ஞானிகள் அதன் தாறுமாறான போக்கைக் கண்டு கவலையுற்றனர் (ஷஷஷ பக்கம் 69)

வானவீதியில் திங்களின் இயக்கம் மிக மிக ஒழுங்கற்றதாக இருக்கிறது (ஜேம்ஸ் பிக்கரிங் நூல்: கதிரவனின் கைதிகள் பக்கம் 96)

சூரியன் இப்போது தனது அச்சில் ஒரு தடவை சுழல்வதற்கு அநேகமாக முழுதாக ஒரு மாதம் ஆகிறது. சூரியன் இவ்விதமாக எப்போதுமே மெதுவான வேகத்தில் சுழன்று கொண்டிருக்கவில்லை. சூரியமண்டலம் புதிதாகத் தோன்றிய சமயத்தில் சூரியன் மிக மிக வேகமாக இன்று வியாழன் சுழலும் வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது (ஆர்.எஸ்.கிரிகர் நூல்: பிரபஞ்சத்தின் வரலாறு பக்கம் 107).

விலகி ஓடும் விண்பொருள்கள்

என்ன தெரிந்து கொண்டோம்? சிரியஸ் விண்மீன் பாதை மீறி (மாறி)ப் பயணம் செய்கிறது. யுரேனஸ் கோளின் போக்கு தாறுமாறாக உள்ளது. நிலாவின் இயக்கம் ஒழுங்கற்றதாக உள்ளது. சூரியனின் சுழற்சி வேகம் தொடக்கத்தில் உள்ளதைவிட இப்பொழுது குறைந்துள்ளது.
என்னும் தகவல்களை அறிந்து கொண்டோம் அல்லவா?

கையாலாகாத 'கடவுள்'

ஆனால், அந்நஜாத் ஏடு, கோள்களின் சுழற்சியில் ஓடுபாதைகளில் ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் இறைவன் சுழலவைத்துள்ளான் என்கிறதே?

இறைவன் கட்டுப்பாட்டினை மீறி, தாண்டி தவறி, விலகியல்லவா அவை இயங்குகின்றன?
தனது படைப்புகளே தன்னை மீறி, தடம்புரள்வதை இவனால் தடுக்கவோ, கட்டுப்படுத்துவதற்கோ முடியாத - கையா-லாகாத கடவுள் ஆக அன்றோ இவன் இருக்கிறான்!
இதுதான் இவன் தோள்களைச் சுழல வைத்திருக்கும் இலட்சணமா? வாய்விட்டுச் சிரிப்போம்! இவனை மறுப்பவர்கள் அறிவீனர்களாம்! யார் இவரா? பகுத்தறிவாளர்களா?

கனியிருப்பக் காய் கவர்பவர்.

கட்டுரையாளர் பல இடங்களில் பகுத்தறிவாளர்களை, விவேகமற்றவர்கள், அறிவற்றவர்கள், மூடர்கள், அதிகப்பிரசங்கிகள் என்றெல்லாம் பழித்துரைக்கிறார்.
இவரைப்போல நாம் கூற மாட்டோம். கனியிருப்பக் காய் கவரும் இவர் போன்றவரல்லவே பகுத்தறிவாளர்கள்!

பச்சை விளக்கினைப் பார்க்கட்டும்!

பகுத்தறிவு - பகுத்தறிவாளர்கள் இத்துணை ஆத்திரமும் அவதூறும் கொண்டு எழுதியுள்ள அந்நஜாத் ஏட்டிற்கும் கட்டுரையாளருக்கும் ஓர் அருமையான மேற்கோள் ஒன்றை நினைவூட்டி நிறைவு செய்கிறோம்.

ஏமன் மாநில ஆளுநராக ஜபல் என்பவரை முகமது நபிகள் நாயகம் அவர்கள் நியமித்தார்கள்.
நீர் எந்தச் சட்டப்படி ஆட்சி நடத்துவீர்? என நபிகள் நாயகம் அவரிடம் கேட்டார். திருக்குர்-ஆன் சட்டப்படி ஆட்சி நடத்துவேன் ஜபல். குர்ஆனில் விளக்கம் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்? உங்கள் வாக்குகளைப் பின் பற்றி நடப்பேன் அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் என்ன செய்வீர் எனது பகுத்தறிவைப் பயன்படுத்துவேன் அதுதான் சிறந்த வழி என்று கூறி, பகுத்தறிவுக்குப் பச்சை விளக்குக்காட்டி விட்டார் நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (தகவல்: உண்மை பிப்ரவரி 1-15, 2008),
இந்தப்பகுத்தறிவுப் பச்சை விளக்கு, பகுத்தறிவாளர்களைப் பழித்துரைக்கும் அன்றைய ஏமன் - ஆளுநர் ஜபல் அவர்களுக்கு மட்டுமா?
இன்றைய அந்நஜாத் - கட்டுரையாளர் அய்யூஃபாத்திமா அவர்களுக்குக் கூடத்தான்!

------------------------- (நிறைவு)

---------------------"உண்மை" ஏப்ரல் 16-31-2008

-------------------------- பேரா. ந.வெற்றியழகன் எம்.ஏ.,பி.எட்., அவர்கள் "உண்மை" இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு

2 comments:

Unknown said...

அந்நஜாத் பதில்
http://www.annajaath.com/?p=363

ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி மற்றும் அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி என்ற கிறுக்கல் எழுத்தாளர் திரு. ந.வெற்றியழகன் இருவருக்கும் அந்நஜாத் இதழ் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் எழுதியது.

வாயளவில் எழுத்தளவில் அல்லாமல் உள்ளத்தால் உண்மையை - நேர்வழியை கடைபிடிப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும்.

மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 16-30 2008 உண்மை இதழ்களில் “அறிவுக்கு எட்டாத ஒன்று இருக்க முடியுமா? என்ற தலைப்பில், அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி - 1,2,3 என்ற குறுந்தலைப்பில், “கீழ்த்தரமான கிறுக்கல்” என்று கீழ்த்தரமான கிறுக்கல் நடையில் பல பக்கங்கள் நிரப்பப்பட்டுள்ளான்; வரவேற்கிறோம். விமர்சனங்களைக் கொண்டே சத்தியம்-உண்மை-நேர்வழி நிலைநாட்டப்படும் என்பதில் அந்நஜாத்திற்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் “உண்மை” என்ற பெயரில் இதழ் வெளியிடும் உங்களிடமே உண்மை இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். உங்களிடம் உண்மை இருப்பதாக நீங்கள் நம்பினால், அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி என்று எழுதி இருக்கும் நீங்கள், அந்த இதழுக்கு மாற்றுப் பிரதிகளை அனுப்பாமல் மறைக்க முற்பட்டிருப்பீர்களா? இத்தனைக்கும் அந்நஜாத் இதழின் மாற்றுப் பிரதி உண்மை இதழுக்கு ஆரம்பத்தலிருந்தே தவறாமல் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். உண்மை இதழுக்கு (JLS 75) மட்டுமல்ல விடுதலை இதழுக்கும் (JLS 59) மாற்றுப் பிரதிகள் தவறாமல் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். பத்திரிகை தர்மத்தையே காப்பாற்ற துணிவில்லாத நீங்கள், உண்மையை - நேர்வழியை எங்கே காப்பாற்றப் போகிறீர்கள், முதலில் அந்நஜாத் இதழுக்கு, உங்களின் உண்மை இதழின் மாற்றுப் பிரதியை அனுப்பி, பத்திரிகை தர்மத்தையும், உண்மையையும் நிலைநாட்ட முன் வாருங்கள். பல நினைவூட்டல் கடிதங்கள் எழுதியும் உண்மையையும், பத்திரிகை தர்மத்தையும் நிலைநாட்ட நீங்கள் இதுவரை முன்வரவில்லை. இதுவே உங்களின் பொய் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அந்நஜாத் ஏப்ரல் 1996 இதழில் இடம்பெற்ற ஒரே உண்மைக் கடவுள் பற்றிய (பொய்க் கடவுள்கள் பற்றியல்ல) விமர்சனத்திற்கு அளித்த விளக்கத்தை மறுத்து உண்மை இதழில் (ஜூன் 96, 16-30) இதே திரு.ந.வெற்றியழகன் அளித்த விமர்சனத்தை மீண்டும் படித்துப் பாணருங்கள். பொதுவாக மரியாதை கொடுத்து மரியாதையைப் பெறுவது நல்லவர்களின் நல்ல பண்பு.

அதன் பின்னர் அந்நஜாத் ஏப்ரல், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் 96 இதழ்களில் இடம்பெற்ற நியாயமான பகுத்தறிவு அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நாத்திகர்களால் பதில் அளிக்க முடிந்ததா? எப்படி மதப் புரோகிதர்கள் கொயபல்ஸ் தத்துவப்படி சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்களோ அதேபோல் நாத்திகர்களும் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

உண்மைக் கடவுளின் பெயரால் பொய்க் கடவுள்களைக் கற்பித்து மக்களை வஞ்சிக்கும் புரோகிதர்களிடம்தான் ஊருக்கு உபதேசம் செய்யும் தீய குணம் உண்டு. அதே தீய குணம் தான் கட்டுரையாளர் ந.வெற்றியழகனிடமும், மற்றும் நாத்திகர்களிடமும் காணப்படுகிறது. கடவுளை கற்பிப்பவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. இதைவிட கடவுள் நம்பிக்கையுடைய வர்களின் மனதைப் புண்படுத்தும் ஒரு இழிசொல் உண்டா? குறைந்தபட்சம் பொய்க்கடவுள்களை கற்பிப்பவன் முட்டாள்; பொய்க் கடவுள்களை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பது நாத்திகர்களின் கோஷமாக இருந்தால் அதில் உண்மையுண்டு; அதை அந்நஜாத் உங்களைவிட ஒருபடி அல்ல, பல படிகள் மேலே போய் மிகக் கடுமையாக விமர்சித்து வருவதை நீங்கள் அந்நஜாத் இதழைத் தொடர்ந்து படித்து வந்தால் அறியமுடியும்.

பல பொய்க் கடவுள்களைக் கற்பித்து அப்பாவி பொது மக்களை வஞ்சித்து, ஏமாற்றிப் புரோகிதர்கள் ஆதாயம் அடைந்து வருவது போல், நாத்திகர்களாகிய நீங்கள் அதற்கு எதிர்மறையில் நின்று ஒரேயொரு உண்மைக் கடவுளை மறுப்பதன் மூலம், மக்களை வஞ்சித்து, ஏமாற்றி ஆதாயம் அடைந்து வருகிறீர்கள். நாங்களோ அந்த ஒரே உண்மைக் கடவுளை மட்டும் ஏற்று, மனிதக் கற்பனைகளாகிய மனு தர்மத்தை மறுத்து, அந்த ஒரே கடவுளின் கருத்தாகிய அல்குர்ஆனின் உபதேசங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.

எங்களது பார்வையில், பொய்க் கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் புரோகிதர்களும், அதைக் காரணம் காட்டி ஒரேயொரு உண்மைக் கடவுளையும் மறுத்து மக்களை ஏமாற்றி வரும் நாத்திகர்களும் சம மதிப்புடையவர்களே. புரோகிதர்கள், நாத்திகர்கள் இந்த இரு சாராரும் சேர்ந்தே உலக் மக்களை வழிகெடுத்து அழிவுப் பாதையில் இட்டும் செல்கிறார்கள் என்பது அசைக்க முடியாத உண்மை. அதனால் மக்களை ஏமாற்றும் புரோகிதர்களை எந்த அளவு சாடுகிறோமோ அதே அளவு நாத்திகர்களையும் சாடும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த ஒரேயொரு உண்மைக் கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள்; அந்த ஒரே கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என முழங்கி வருகிறீர்களே! இது ஒன்றே நாத்திகர்களை மிக மிக இழிவாக வசை பாடினாலும் அது நியாயமானதே என்று உணர்த்தப் போதுமானதாக இருக்கிறது. ஆதி மனிதனிலிருந்து இதுவரை அந்த ஒரே இறைவனைப் பற்றிய உண்மைச் செய்திகளை மக்களுக்கு அறிவித்தவர்கள். இறைத் தூதர்களான ஆதம், நோவா, ஆப்ரஹாம், டேவிட், சாலமன், மோசஸ், ஜீஸஸ், முஹம்மது (இவர்கள் அனைவர்மீதும் அந்த ஒரே இறைவனின் சாந்தி உண்டாவதாக) போன்ற எண்ணற்ற சான்றோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்பதுதானே உங்களின் முழக்கம். அவர்களின் போதனையைக் கேட்டு அந்த ஒரே இறைவனை மட்டும் (பொய்க் கடவுள்கள், சமாதிகள், கொடிமரங்களை அல்ல) வணங்குகிறவர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகளே என்பதுதானே நாத்திகர்களின் முழக்கம்.

இறைத் தூதர்களான அந்த மனிதப் புனிதர்களோடு, நாத்திகர்கள் மதித்துப் போற்றும் பெரியார், இங்கர்சால், பிராட்லா, கோவூர் போன்றவர்களை ஒப்பிட முடியுமா? ஏணி வைத்தாலும் எட்டுமா? குடியை ஒழிக்கிறேன் என்று கூறி தனது தோட்டத்திலுள்ள தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டிச் சாய்த்தவர்தானே பெரியார்! தென்னை மரங்களை ஒழித்துவிட்டால் குடிப்பழக்கம் ஒழிந்து விடுமா? அதே எண்ணத்தில்தானே பொய்க்கடவுள்களுடன் அந்த ஒரே உண்மைக் கடவுளையும் ஒழித்துவிட்டால், கடவுள் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒழிந்து விடுவார்கள் என கற்பனை செய்து கொண்டு பிரசாரம் செய்கிறீர்கள்.

நீங்கள் மதித்துப் போற்றும் எந்தப் பகுத்தறிவு சீர்திருத்தவாதியும் இன்றைக்கு சுமார் 1450 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 23 ஆண்டுகளுக்கு மட்டுமே பாடுபட்டு ஏற்படுத்திய சீர்திருத்தக் கருத்துக்கள் அல்லாமல், புதிதாக ஒரு சீர்திருத்தக் கருத்தை நிலைநாட்டியுள்ளார் என்று பட்டியலிட்டுக் காட்டமுடியுமா? பெரியார் சுமார் 75 ஆண்டுகள் பெரும்பாடுபட்டு இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) நிலைநாட்டாத ஒரே ஒரு புதிய சீர்திருத்தக் கருத்தை நிலைநாட்டினார் என்று உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா?

மதுவை ஒழிக்க தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டிச் சாய்த்தாரே! குடியை ஒழிக்க முடிந்ததா? ஆனால் இன்றைக்கு 1429 ஆண்டுகளுக்கு முன்னர் “நம்பிக்கையாளர்களே நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்.” (அல்குர்ஆன் 5:90)

என்ற இறைவாக்கை இறைத்தூதர் படித்துக் காட்டினாரோ இல்லையோ வீதிகளில் மது ஆறாக ஓடியது; மடாக்குடிகாரர்கள் என்ற பெயர் பெற்ற அந்த மக்கள் தங்கள் வீடுகளில் பீப்பாய், பீப்பாயாக சேமித்து வைத்திருந்த மதுவைக் கொண்டு வந்து வீதிகளில் கொட்டினால்கள். வீதிகள் மது ஆறாகப் பெருக்கெடுத்தது. இன்றைக்கும் இஸ்லாத்தை முறையாக விளங்கிப் பின்பற்றுகிற ஒரு முஸ்லிம் மதுவை. போதை தரும் பொருட்களைத் தொட்டுக் கூடப் பார்க்கமாட்டார்.

புரோகிதப் பார்ப்பணர்கள் ஹிந்து மக்களிடையே புகுத்தியுள்ள தீண்டாமை என்ற மகாகொடிய செயலே, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் செயலே பெரியாரையும், உங்களைப் போன்றோர்களையும் கொதித்தெழச் செய்தது. கடவுளின் பெயராலேயே இக்கொடிய செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன என்ற எண்ணத்திலேயே கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்தீர்கள். பெரியாரது 75 வருட முயற்சிகளும், அதன் பின்னர் உங்கள் அனைவரது அயராத முயற்சிகளும் உரிய பலனைத் தந்தனவா? தீண்டாமை ஒழிந்துவிட்டதா? இன இழிவு நீங்கியதா? இந்த விவரங்களையும், திரு.வெற்றியழகனின் தடுமாற்றங்களையும் அடுத்தடுத்துப் பார்ப்போம். (இறைவன் நாடினால்)

தமிழ் ஓவியா said...

ஆரோகியமான விவாதத்தை தொடருவோம்.
நன்றி.