Search This Blog

16.11.08

பூணூல் இல்லாத பார்ப்பான்



பருவமழை குறைந்த காரணத்தால்தான் மின்சாரக்
கட்டுப்பாடு கொண்டு வர நேர்ந்தது பக்தர்கள் வேண்டுமானால்
வருணபகவான் கைவரிசையைக் காட்டச் சொல்லட்டுமே
தந்தை பெரியார் அவர்கள் விளக்கவுரை!



நான் பெரிதும் அரசியல் துறையில் நாட்டம் செலுத்தாமல் சமுதாயத் துறையில் மாறுதல் வேண்டி கவனம் செலுத்தி வருகின்றவன் ஆவேன் என்றாலும் அவ்வப்போது அவசியம் ஏற்படும்போது அரசியலைப் பற்றியும் சில வார்த்தை கூறிவருகிறேன்.

பார்ப்பனர் ஒழிப்பு

நாம் சமுதாயத்துறையிலும் அரசியல் துறையிலும் பார்ப்பனர்களை ஒழித்துக் கட்டிவிட்டோம். இனி அவர்கள் தலை எடுக்க முடியாது. என்றாலும் அவர்களின் காலடியில் இருந்து கொண்டு நம்மவர்களே நமது வளர்ச்சிக்குக் கேடாக செயல்பட்டு வருகின்றார்கள். அவர்களும் இனி தலை எடுக்க முடியாது. மக்கள் அவர்களையும் மதிக்க மாட்டார்கள். நமது இழிநிலையினை குறைபாடுகளைக் களைந்தெரிய முற்பட வேண்டும். இன்றைக்கு நாம் தமிழர் ஆட்சியில் இருக்கின்றோம் என்றாலும் நாம் சட்டப்படி, சாஸ்திரப்படி சூத்திரர்களாக, தாசி மக்களாக இழிமக்களாகத்தான் உள்ளோம். காரணம் நாம் ஏற்றுக் கொண்டுள்ள கடவுள், மதம், சாஸ்திரம் காரணமாகத்தானே. இழிமக்கள் இதுகளை வைத்துக் கொண்டு எப்படி இழித் தன்மைக்குப் பரிகாரம் தேட முடியும்?

இந்து என்பதற்கு ஆதாரம் என்ன?

1000,2000 ஆண்டுகளாக இழி நிலையில் இருந்து வருவதைப் பற்றிய கவலை இந்த விழிப்பான காலத்திலும் கவலையற்று இருக்கலாமா? தமிழனுடைய எந்த இலக்கியத்தில் ஆகட்டும், ஆதாரங்களில் ஆகட்டும், தமிழன் இந்து என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா? சிந்திக்க வேண்டாமா?

எங்களைப் பற்றி நாத்திகன், சாமி இல்லை என்பவன், சாமியை செருப்பினாலே அடித்த வர்கள் என்றுதான் சொல்லுகின்றார்களே ஒழிய அந்தக் கடவுள் காரணமாக நாம் இழி மக்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றோமே என்று உணர மறுக்கின்றார்களே? தோழர்களே இது 1973 வருஷம். மனிதன் ஆகாயத்தில் பறக்கின்றான்; சந்திர மண்டலத்துக்கு போய் வருகிறார்கள். ஒரு பொத்தானை அழுத்தினால் லட்சம் விளக்கு எரிகின்றது. இப்படி எத்தனையோ அதிசய அற்புதங்கள் எல்லாம் ஏற்பட்ட வண்ணமாக இருக்கின்றது. இவ்வளவு மாறுதல்களையும் பார்த்துக் கொண்டும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை இழிமகன் என்று கடவுள் பேரால், மதத்தின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் கூறப்பட்டு உள்ளதை ஒத்துக் கொண்டு வாழ்கின்றான் என்றால் நம்மை விட காட்டு மிராண்டிகள் உலகில் யார் இருக்க முடியும்? மற்ற எல்லா துறையிலும் மாறுதலை ஏற்றுக் கொண்டு திருந்துகின்ற மனிதன் கடவுள், மதம், சாஸ்திரத் துறைகளில் மட்டும் திருந்தப் பயப்படுகின்றானே.

இன்றைய தினம் அரசியல் என்பது தி.மு.க. ஆட்சியை ஒழிப்பது என்று நமது எதிரிகள் எண்ணிக் கொண்டு காரியம் ஆற்றுகின்றன. தி.மு.கழகத்தை எதிர்க்கின்ற எந்தக் கட்சிக்காரர்களும் தனித்து நின்று எதிர்க்க முடியவில்லையே. 10 கட்சிக்காரர்கள் சேர்ந்து கொண்டுதானே எதிர்க்கின்றார்கள். ஆனால் தி.மு.கழகம் மட்டும்தான் தனித்து நின்று மற்றவர்களை எதிர்க்க முடியும். யோக்கியமான, நாணயமான குற்றச்சாட்டுகளைக் கூறி ஆட்சி மீது குற்றம் சாட்டினால் நாணயமானவர்கள் என்று கூறலாம்?

எப்படியாவது தி.மு.கழகத்தை ஒழித்தால் தான் மற்ற கட்சிகள் வாழ முடியும், பிழைக்க முடியும் என்பதை திட்டவட்டமாக உணர்ந்த காரணத்தினால் தான் இப்படி அயோக்கியத் தனத்தில் இறங்கி உள்ளார்கள். தி.மு.கழக ஆட்சி தமிழர்கள் ஆட்சியான படியால் தமிழர் நலனுக்கு உகந்த எல்லாக் காரியங்களையும் மடமட என்று செய்து தீர்க்கின்றார்கள். இன்னமும் செய்ய திட்டம் இட்டு இருக்கிறார்கள். இப்போது எதிர்க்கட்சிகளுடன் இழவெடுக்கின்றதே சரியாக உள்ளது.

பூணூல் இல்லாத பார்ப்பான்

தோழர்களே தி.மு. கழகத்திற்கு முன்பு ஆட்சிப் பொருப்பில் இருந்தவர்கள் எல்லாம் ஏன் தி.மு.கழகம் போல பல சாதனைகளை செய்து இருக்கக்கூடாது? செய்யவில்லையே!
தமிழர்களாக உள்ளவர்கள் பதவியில் இருந்தாலும் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகத்தானே அன்று நடந்து கொண்டார்கள். இன்றைக்கு தி.மு.கழக ஆட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிசையிலோ சந்திலோ பொந்திலோ கவனிப்பார் அற்றுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எல்லாம் மாடமாளிகைகள் போல வீடு கட்டிக் கொடுத்து வருகின்றது.

வீடில்லா ஏழை மக்களுக்கெல்லாம் பல லட்சம் குடி இருப்பு வீட்டு மனைகளை வழங்கி இருக்கின்றது. நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் அளித்து வருகின்றது. இது மட்டும் அல்ல, சாதியற்ற ஏழை மக்களின் கண்பார்வை மங்கலைத் தடுக்கக் கண் சிகிச்சை முகாம்களை ஏற்படுத்தி சிகிச்சை அளித்து கண்ணாடியும் வழங்கு கின்றது. இது மட்டுமல்ல, எவராலுமே இன்றைய அளவும் கவனிக்கப்படாமல் விடப்பட்ட பிச்சைக்காரர்கள் பிரச்சினையினை சமாளிக்க பிச்சைக்காரர்கள் மறு வாழ்வுத் திட்டம் என்ற ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் தொண்டு செய்து வருகின்றது.

எதிர்க் கட்சிகளுக்கு திட்டம் ஒன்றுமில்லையே

இப்படி மக்கள் நல்வாழ்வுக்கு என்று என்ன என்ன திட்டங்கள் தீட்டி செயல்பட வேண்டுமோ அவைகளை எல்லாம் செய்து வருகின்றது. இதன் காரணமாக நான் முன்பு கூறியதுபோல எதிர்க் கட்சிகள் என்பவைகளுக்கு தாங்கள் பதவிக்கு வந்தால் இன்ன செய்வோம் என்று கூறுவதற்கு வகையற்றுப் போயிற்று.

கம்யூனிஸ்ட்டுகள் தாங்கள்தான் புரட்சிகரமான காரியத்தைச் செய்யக்கூடியவர்கள் என்று கூறிக் கொள்ளவே வகையற்றுப் போச்சே. அதன் காரணமாக கம்யூனிஸ்ட்டுகள் இந்த ஆட்சியை எதிர்க்கின்றார்கள். தோழர்களே. தி.மு.கழகத்திற்குப் பதில் யார் இனி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும் தி.மு.கழக ஆட்சியினால் ஏற்பட்ட சாதனைகளை எல்லாம் கெடுக்கப் பார்ப்பார்களே ஒழிய ஒன்றும் வேறு செய்துவிட முடியாது.

இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கும் மின்சாரத் தட்டுப்பாட்டினை அரசியல் கட்சிக்காரர்கள் பயன் படுத்திக் கொண்டு சர்க்கார் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படச் செய்து விடலாம் என்று முனைகின்றார்கள்.

தீ வட்டிகள் ஊர்வலம்

தீவட்டி ஊர்வலம் மின்சாரத் தட்டுப்பாட்டுக்காக கண்டித்து நடத்தப் போகின்றார்களாம். இது ஒன்று புத்தி இல்லாதத் தனமாக இருக்க வேண்டும் அல்லது வேண்டும் என்றே செய்யும் அயோக்கியத்தனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கிராமங்கள் தொகை 57 ஆயிரம் என்றால் இதில் 54 ஆயிரம் கிராமங்களுக்கு தமிழக அரசு மின்சாரம் வழங்கி இருக்கின்றது. இன்னும் கொடுக்க வேண்டிய கிராமங்களோ 3000 தானே பாக்கியுள்ளது.

இந்தியாவிலேயே வேறு மாகாணங்களில் இந்த அளவுக்கு வழங்கப்படவே இல்லையே. இதற்கு முன்னைய இவர்கள் ஆட்சியில் 4, 5 ஆண்டுகளாக தட்டுப்பாடு இல்லையே. இந்த ஆண்டு மழை மின்சார உற்பத்திப் பகுதியில் (இந்தப் பகுதியில்) பெய்யாமல் போய்விட்ட தன் காரணமாக மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

மற்றும் நமக்கு மின்சாரம் கொடுத்து உதவி வந்த கேரளம், மைசூர் போன்றவைகளும் அந்தப் பகுதிகளிலும் பருவ மழை குறைந்த காரணத்தினால் அவர்களுக்கே மின்சாரம் போதவில்லை என்று கூறி நமக்குக் கொடுத்து வந்த மின்சாரத்தை நிறுத்திக் கொண்டார்கள். பருவமழை பெய்யாது போனதினால் ஏற்பட்ட கோளாருக்கு யார்தான் என்ன பண்ண முடியும்? இருக்கின்ற மின்சாரத்தை தொழில்களுக்கும், வீடுகளுக்கும், விவசாயத்திற்கும், பகிர்ந்து அளிக்கின்றார்கள். இதில் என்ன தவறு கூறமுடியும்? மின்சாரத் கட்டுப்பாடு என்று கூறி தீவட்டிப் பிடித்தால் என்ன லாபம்? உடனே மழை பெய்து மின்சார உற்பத்தி பெருகி விடுமா?
அரசாங்கம் ஏன் மின்சாரம் கொடுக்க வில்லை. எதனாலே கொடுக்க முடியவில்லை. யார் வீட்டுக்காவது எடுத்துக் கொண்டார்களா என்று பார்க்க வேண்டாமா? தோழர்களே நமது தமிழகத்தில் 6 லட்சத்து 54 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் கொடுத்து உள்ளார்கள். நீங்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியா பூராவுக்குமே மின்சாரம் 16 லட்சம் பம்புசெட்டுகளுக் குத்தான் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 6.5 லட்சம் பம்பு செட்டுகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதே.

இப்படி எல்லாம் விவசாயத்துக்கும் தொழிலுக்கும் கிராம விளக்குகளுக்கும் பகிர்ந்து அளித்துள்ளது.

மின்சாரம் இல்லாதபோது இருக்கின்றன. பகிர்ந்து அளிப்பதைவிட ஒரு அரசாங்கம் வேறு என்னதான் செய்ய முடியும்? கூப்பாடு போடுகின்ற எதிர்க்கட்சிக்காரர்களாவது கூறட்டுமே.



-------------------தந்தைபெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 11,12,13 தேதிகளில் திருவண்ணாமலை, திட்டக்குடி, மணப்பாறை ஆகிய நகரங்களில் ஆற்றிய அறிவுரையின் ஒரு பகுதி.

0 comments: