Search This Blog

29.11.08

போர் நிறுத்தமே தீர்வு




இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரிதும் தமிழர் கள் வாழும் பகுதிகள். கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்களும் கணிசமாக உண்டு. இந்நிலையில், தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்கல் கொள்கையை சிங்கள அரசுகள் கட்சிகள் மாறினாலும் கூட, இதே உணர்வுக்கு அவர்கள் தொடர்ந்து ஆளாகியதால், தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைப் பெரிதும் திட்டமிட்டே அமைதியாக செய்வதில் குறியாய் செயல் பட்டே வந்தன.

இரண்டாவதாக தமிழர்களில் விபீடணர்களை விலைக்கு வாங்கி, அவர்களை ஆழ்வார்களாக்கி பதவியால் மயங்கச் செய்து தன் வயப்படுத்திக் கொண்டு, எந்த அமைப்பினர் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுகிறார்களோ அவர்களையே, இன எதிரிகள் என்ற ஒரு மாய்மாலப் பிரச்சாரத்தினை செய்ய வைக்கின்றன. இராணுவத்திற்கு சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு 7 விழுக்காடு கூடுதலாக நிதி ஒதுக்கியதற்கு விளக்கம் கூறிய (இலங்கை நாடாளுமன்றத்தில்) சிங்கள அதிபர் ராஜபக்சே விடு தலைப்புலிகளுக்கு எதிராக ஆயுதங்கள் வாங்கி இராணுவத் தைப் பலப்படுத்தியும், அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரத்திற் கெனவும் கூடுதல் நிதி என்று கூறியதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று உண்டு. கூலிப்படைகளை தன் நாட்டிலும், வெளிநாட்டிலும் உருவாக்கும் பணியில் மும்முரமாக இலங்கையின் சிங்கள ஆதிக்க அரசு ஈடுபட்டுள்ளது என்பது புரிகிறது!

இலங்கை அப்பாவித் தமிழ் மக்கள் (சிவிலியன்கள்) தங்கள் ஊர்களைவிட்டு உயிரைப் பாதுகாக்க, உறக்கமின்றி, 2 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் பிள்ளை குட்டிகளுடன் காடுகளில், பட்டினியோடு வதியும் நிலை - குண்டுமழைக்கு அஞ்சி, பதுங்கு குழிகளும் பயன்படாது என்று காடுகளுக்குச் சென்று பாம்புக் கும், தேளுக்கும் இடையில் பரிதாபமான வாழ்க்கை வாழும் நிலையை எண்ணினால் இதயம் வெடித்துவிடும் நிலை உள்ளது!

இதைத் தடுத்து நிறுத்திட, போர் நிறுத்தம் ஒன்றுதான் வழி; நிரந்தர அரசியல் தீர்வு காணவேண்டும். அதனை அடைய முறையான நடுவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது தான் சரி என்பதை கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு அதனை அடிக்கடி கூறிடும் நமது மத்திய அரசு குறிப்பாக பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் போன்றவர்கள் தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடின்றி ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான உணர்ச்சி வெள்ளத்தின் வேகத்தைப் புரிந்துகொண்டு, பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு, மருந்துகளைக் கொண்டு செல்ல தனிக் கப்பல்கள், சர்வதேச செஞ்சிலுவை அமைப்புகள், அய்.நா. பொது அமைப்புகள்மூலம் அளிக்கும் ஏற்பாடு, அதனை ஒழுங்குபடுத்திட தமிழக முதல்வர் கலைஞர் அவர்களது அரசு செய்யும் ஏற்பாடுகள் எல்லாம் நமது நன்றிக்குரியன; ஈழத் தமிழர் நிவாரண நிதி சில நாள்களிலேயே 20 கோடி ரூபாய்களைத் தாண்டிவிட்டது என்பது தமிழ் மக்களின் ஆதரவு எவ்வளவு என்பதை சுட்டிக்காட்டுவ தாகும். இவை எல்லாம் முதலுதவி போன்றதே தவிர, முற்றானதாக அமைய முடியாது என்பதால்தான், போர் நிறுத்தம் தேவை என் பதை தமிழ்நாடு அரசு, தமிழக முதல்வர் கலைஞர் கூட்டிய கூட் டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதன்மைப் படுத்தியது.

இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்களது அறி வுரையை ஏற்று, விடுதலைப்புலிகள் தரப்பில், அதன் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன்மூலம் அறிவித்துவிட்டனர். இதை வரவேற்ற முதலமைச்சர் அவர்கள் 10.11.2008 அன்று விடுத்த ஓர் அறிக்கையில் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 14.10.2008 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி,

அந்தத் தீர்மானம் படிப்படியாக நடைமுறைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நமது பிரதமரின் கருத்தும், வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்தும் அமைந்துள்ளன. இனி அந்தக் கருத்தைச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர வேண்டியது இலங்கை அரசுக்குரிய தவிர்க்க முடியாத பொறுப்பும், கடமையுமாகும். இதனை இந்திய அரசு இலங்கை அரசுக்கு உணர்த்தி செயல்படச் செய்வது அவசர - அவசியத் தேவையாகும் என்று வற்புறுத்தியுள்ளார்கள்.

இந்த அறிக்கை வெளியாகுமுன்பே இலங்கை அரசின் சார் பாக அதன் இராணுவப் பேச்சாளரான சிங்கள அதிகாரி போர் நிறுத்தம் செய்யமாட்டோம், விடுதலைப் புலிகள் சரணடைந்து ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்றெல்லாம் கூறிய தோடு, விடுதலைப் புலிகளின் சார்பில் விடுக்கப்பட்ட நல் லெண்ண சமிக்ஞையைக் கொச்சைப்படுத்தும் வகையில் - (இங்குள்ள அவர்களின் ஊதுகுழல்களும் வழக்கமாகப் பேசுவது, எழுதுவதுதான் அது) அவர்கள் பலவீனமாகி, தோல்வியைச் சந் தித்துள்ளனர் என்று கூறியுள்ளது, விடுதலைப்புலிகளை ஒழிப்பது என்ற சாக்கில், தமிழினப் படுகொலையைத் (Genocide) தொடர்ந்து நடத்திடும் வெறியில் உள்ளனர் என்பதைத்தானே இது காட்டுகிறது?

மத்திய அரசுக்கும், நமது பிரதமருக்கும் உள்ள கடமை, இந்த காலகட்டத்தில், மிகமிக முக்கியமானது! தமிழ்நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகளும் - காங்கிரஸ் உள்பட - போர் நிறுத்தம் தேவை; உடனடியாக அது ஒன்றுதான் அப்பாவித் தமிழ் மக்களை அழிவி லிருந்தும், பசி பட்டினி வாழ்க்கையிலிருந்தும் மீட்டுக் காப்பாற்ற உதவும்; நிரந்தர அரசியல் தீர்வு காண வற்புறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். 6 கோடி தமிழர்களின் ஒருமித்த உணர்வின் வெளிப்பாடுதான் முதல்வர் கலைஞர் அவர்கள் 10.11.2008 அன்று மத்திய அரசுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.

இதனை அலட்சியப்படுத்தினால், அரசியல் ரீதியாகவும் காங்கிரசுக்கு - ஆளும் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவை தமிழ்நாட்டில் உருவாக்கும் என்ற கண்ணோட்டத்துடனும் மத்திய அரசும், பிரதமரும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் மரியாதைக்குரிய தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும் யோசிக்கக் கடமைப்பட்டுள்ளனர்! தீவிரவாதிகளை ஒழிக்கும் போர் என்று கூறி, இன்னும் இரண்டொரு நாளில் முடியப் போகிறது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை - உண்மைக்கு மாறான - பிரச்சாரத்தினை இலங்கையின் சிங்கள இராணுவமும், அரசும் கூறி வருவதை, அங்கிருந்துவரும் செய்திகள் உறுதிப்படுத் தாததோடு, விடுதலைப்புலிகள் வலுவிழக்கவில்லை; கிளிநொச்சியைக் கைப்பற்றும் திட்டத்தையே சிங்கள இராணுவம் தள்ளிப் போட்டு, வேறு துறைக்குச் சென்றுள்ளது என்று (ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், 10.11.2008) கொழும்புச் செய்தியாளர் எழுதியுள்ளார்.

Apparently, there are two reasons for putting the capture of Killinochi in back burner. One is that the area of Killinochi is full of people, locals as well as refugees from West Wavuni. Attacking this region with area weapons like artillery and the Air Force, is bound to cause civilisan casualties, inflame passions in Tamil Nadu and force New Delhi to intervene.

The other reason is that Killinochi and its environs are heavily defended by the LTTE, with mines, physical obstacles and good fighting cadre. The LTTE has built three earthbunds between Iranamed and Killinochi to stall troops.

இதன் தமிழாக்கம் வருமாறு:-

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான போரைக் கைவிட வேண்டும் என்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, உள்ளூரில் வாழும் பொது மக்கள் மற்றும் மேற்கு வவுனியாவில் இருந்து வந்த ஏதிலிகள் கிளிநொச்சிப் பகுதியில் நிறைந்து இருப்பதால், இப் பகுதியை பீரங்கிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதும், விமானப் படைத் தாக்குதல் மேற்கொள்வதும் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்பு ஏற்படக் காரணமாக அமைந்தே தீரும் என்பதால், தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சியை அது தூண்டிவிட்டு, இந்தப் பிரச்சினையில் இந்தியாவைத் தலையிடச் செய்ய அது நிர்பந்திக்கும்.

மற்றொரு காரணம், கிளிநொச்சியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும், தமிழீழ விடுதலைப்புலிகளால், கண்ணி வெடிகள் மற்றும் நன்கு போரிடும் வீரர்கள்மூலம் ராணுவ முன்னேறத்துக் குத் தடை ஏற்படுத்தும் வகை யில் பலமாகப் பாதுகாக்கப்பட்டிருப் பது ஆகும். இரணா மடுவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையே விடு தலைப் புலிகள் மூன்று தரைத் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. இந்தப் போர் ஏதோ இரண்டொரு நாள்களில் முடியாது என்பது. அப்படியானால், அப்பாவி மக்களின் கதி என்ன? போர் நடை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், உணவும் மருந்தும் ஒழுங் காகப் போய்ச் சேருமா? சேர்ந்தாலும் ஒரு பக்கம் குண்டுமழை; சாவுகள்; மறுபுறம். முதலுதவி என்பது முரண்பாடாக அமைந்து விடாதா?

அத்தோடு கொழும்பு செய்தித்தாள்களில் வந்துள்ள மற்றொரு செய்தியும் சிங்கள இராணுவத்தின் பலம், வீரம் கேள்விக் குரியதாகி வரும் நிலையையும் காட்டுகிறது!

வன்னிப் போர் முனையிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் ஓட்டம்; சிங்கள இராணுவத்திற்குத் திடீர் நெருக்கடி என்ற செய்தி (கொழும்பு ஏடுகளில் 5.11.2008) வந்துள்ளது. ராணுவத்திலிருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் ஓட்டம் பிடித்து வருவதாக கொழும்பு பத்திரிகைகள் கூறுகின்றன.

ஆயிரக்கணக்கான வீரர்கள் ஓட்டம் பிடித்துள்ளார்கள். இவர்களை இலங்கை அரசு மீண்டும் வலுக்கட்டாயமாக சேர்த்துள்ளது. அப்படி இருந்தும் பலர் ஓடிய வண்ணமே உள்ளனர்; போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 25,000 (இருபத்தைந் தாயிரம்) சிங்கள வீரர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட சிங்கள வீரர்கள் ஓட்டம் பிடித்துள்ளார்கள். இப்படி தப்பி ஓடுவதால், இராணுவத்திற்கு சிக்கல் ஏற்பட் டுள்ளது. கைப்பற்றிய பகுதிகளை நிலை நிறுத்திக் கொள்வதில், கஷ்டம் நிலவுகிறது. ஆகவே, அவர்கள் தப்பி ஓடாதபடி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போர் நடைபெறும் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் சோதனை இடப்படுகின்றன. ராணுவ வீரர் போன்ற தோற்றத்தில் யாராவது இருந்தால், அவர்களைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்குப் பொருள் என்ன?

எனவே, உடனடி போர் நிறுத்தத்தை மத்திய அரசும், பிரதமரும், முதல்வரின் வேண்டுகோள் அறிக்கைக்கு ஏற்ப, அவசர அவசியமாகப் பார்த்து, ஒரு நிம்மதிப் பெருமூச்சினை அம்மக்கள் விடும் வகையில் செய்யவேண்டும் என்று மத்திய அரசின், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமையை மிகுந்த அன்புடன் வேண்டுகிறோம். லட்சோபலட்சம் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை இது!

------------------- கி.வீரமணி அவர்கள் நவப்பர் 16-31 2008 "உண்மை" இதழலி எழுதிய தலையங்கம்.

0 comments: