Search This Blog

6.1.09

ராஜபக்சேயின் ஆட்சிக்காக பாதப்பூஜை செய்யும் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும்


உத்தரவாதம் கொடுப்பார்களா ராஜபக்சேயின் பக்தர்கள்?

இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மகிந்தா ராஜபக்சேயைக் குடியரசுத் தலைவராகக் கொண்ட சிங்கள வெறி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகத் தமிழர்களை இழிவுபடுத்தவும், அச்சத்திற்கு உள்ளாக்கவும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4).


காலை 6 மணிமுதல் குளிரையும் பொருட்படுத்தாது, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்துத் தமிழர்களும், கொழும்பு காவல் நிலையங்களுக்குமுன் காணப்பட்டனர்; மாலை நெடு நேரங்கழித்தும் பதிவு வேலை நடந்தது.

கிளிநொச்சியைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிவிட்டதாக, சிங்களவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்துவரும் சூழல்; அந்நிலையில் இதுநாள்வரை ஈழத்தை ஆதரிக்காத தமிழரும்கூட, பதிவு செய்யும் அவமானத்துடன் வாழ்வதைவிட, எப்படியும் ஈழத்தை அடைந்துவிட்டால் மானத்தோடு வாழலாமே என எண்ணத் தொடங்கிவிட்டனர் எனச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறீலங்கா எல்லாச் சமூகத்தினருக்கும் உரியது எனில் தமிழருக்கெதிராகத் தொல்லை தரவும், அவமானம் உண்டாகவும் வகையிலான நடவடிக்கைகள் ஏன்? எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர், கொழும்புவாழ் தமிழர்கள்.


மேற்கண்ட செய்தியை டெக்கான் கிரானிக்கல் ஆங்கில ஏடு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது (5.1.2009).

ராஜபக்சேயின் சிங்களவெறி ஆட்சிக்காக பாதப்பூஜை செய்யும் இந்நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் இந்த நிலைக்கு என்ன நியாயத்தைக் கற்பிக்கப் போகிறார்கள்?

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே தமிழர்கள். அப்படியிருக்கும்பொழுது காவல் நிலையத்துக்குச் சென்று ஏன் அவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் - தங்களைப்பற்றிய தகவலைத் தெரிவிக்கவேண்டும்?

அப்படியென்றால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அனைவரும் கிரிமினல்களா? குற்றவாளிகள் குறிப்பிட்ட இடத்தில் தங்கிக் கொண்டு நாள்தோறும் காவல் நிலையத்துக்குச் சென்று கையொப்ப மிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிப்பதுண்டு - அதே நிலைதான் கொழும்பில் வாழும் தமிழர்களுக்குமா?


சில ஆண்டுகளுக்குமுன் கொழும்பில் வந்து உற்றார், உறவினர்கள், தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்ற உத்தரவு போட்டது மட்டுமின்றி பலாத்காரமாக வெளியேற்றிய வெறியர்தான் இந்த ராஜ பக்சே. கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிய நிலையில், உச்சநீதி மன்றம் எச்சரித்த நிலையில், ஆச்சரியமாக இந்தியாவும் குரல் கொடுத்தவுடன், அந்த நிலை பின்வாங்கப்பட்டது.

விடுதலைப்புலிகளிடம் இருந்த ஒரு பகுதி தங்கள் வசம் வந்துவிட்டது என்ற இறுமாப்பின் அடுத்தகட்டமாக குடிமக்களான தமிழர்களின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது போலும்! விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாகக் கூறி தமிழர்களான குடிமக்களைக் கொன்று குவித்தும் இன்னும் வெறியடங்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

இராணுவத்தின்மூலம் தீர்வு ஏற்படாது என்ற இந்திய நிலையில் மாற்றம் இல்லை என்றும், அரசியல் தீர்வுதான் சரியானது என்றும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கரமேனன் நேற்றுகூட கிளிப்பிள்ளைபோல சொல்லியிருக்கிறார்.

அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசே முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, போரை நிறுத்த வழி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டும் இலங்கையில் நடந்தது என்ன? போரைத் தடுக்க இந்திய அரசு மேற் கொண்ட நாணயமான செயல்முறை என்ன? வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்புவதாகக் கூறிய பிரதமரின் வாக்குறுதி என்னாயிற்று?

அதற்குப் பின்னாலே வெளியுறவுச் செயலாளர் இவ்வாறு கூறுவதைக் கண்டு சம்பந்தப்பட்ட மக்கள் நகைக்க மாட்டார்களா? இந்தியாவின் நம்பகத்தன்மையே கூட இப்பொழுது கேள்விக் குறியாகி விட்டதே!

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் இந்திய அரசு நடந்துகொண்ட தன்மையில் கடும் வெறுப்பும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை இந்திய அரசு உணருமா?

போராளிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக விவாதத்துக்காக ஒப்புக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம் - அடுத்து ராஜபக்சே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையான உரிமைகளைக் கொடுக்கப் போகிறார்கள்? ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தமான வடக்கு கிழக்கு மாகாண இணைப்புகளை உறுதிப்படுத்துவாரா?

ராஜபக்சேவுக்குக் காலைக் கழுவிவிடும் பக்தர்கள் அதற்கு உத்தரவாதம் கொடுப்பார்களா?

----------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 6-1-2009

2 comments:

Unknown said...

//அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசே முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, போரை நிறுத்த வழி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டும் இலங்கையில் நடந்தது என்ன? போரைத் தடுக்க இந்திய அரசு மேற் கொண்ட நாணயமான செயல்முறை என்ன? வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்புவதாகக் கூறிய பிரதமரின் வாக்குறுதி என்னாயிற்று?//

அங்கிருக்கும் அனைத்துத் தமிழர்களும் செத்தபின் தான் போவார்கள் போலும்.
எல்லோரும் ஏமாத்துகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்