Search This Blog

19.12.10

இந்து மூலம் சோ வுக்கு தர்மஅடி


மனு சாகவில்லை!


மனுதர்மத்தை மண்டைக்குமேல் தூக்கி வைத்து ஆராதனை செய்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களா? என்று கேட்கலாம்.

இருக்கிறார்கள், நிச்சயமாக இதோ இருக்கிறார்கள் சோ ராமசாமி உருவங்களில் இருக்கிறார்கள்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக மனு போன்ற இப்படிப்பட்ட ஆழ்ந்த சிந்தனை இங்கே இருக்கிறது என்பதைக் கண்டு மேல் நாட்டு அறிஞர் கள்கூட வியந்து பார்க்கிறபோது, நாம்தான் மனுஸ்மிருதியை இகழ்ந்து பேசுவது பெருமை என்று நினைக் கிறோம். மனுஸ்மிருதியை இகழ முனைபவர்கள், அப்படிச் செய்வதற்கு முன்னால், அதில் என்ன கூறப்பட்டி ருக்கிறது என்பதைத் தெரிந்து கொண் டால் நல்லது!

--------(துக்ளக் 24.11.2010 பக்கம் 13) என்று எழுதுகிறார் திருவாளர் சோ ராமசாமி.

மேல்நாட்டு அறிஞர்கள் எல்லாம் கூடிக் கலந்து பேசி மனுவின் உத்தமத் தனம்பற்றி உச்சி மோந்து விட்டார் களாம்.

அப்படியானால் நாமும் சில வெளிநாட்டு அறிஞர்களை அறிமுகப் படுத்த வேண்டாமா? அதுவும் அந்த வெளிநாட்டு அறிஞர்கள் மனுதர்ம சாஸ்திரம்பற்றி என்ன கூறினார்கள் என்பதை சோ ராமசாமியின் அபிமானத்துக்குரிய இந்து ஏடே (8.11.1992) எடுத்துக் கூறியிருக்கும் பொழுது, அதனை எடுத்துக்காட்டி னால்தானே சோவுக்குக் குளிர் ஊட்டியது போல் இருக்கும் அது இதோ:

மனு, தன்னுடைய சட்டப் புத்தகத் தில், ஒரு சிலருக்காக அவர்கள் ஆதிக்கம் செலுத்தவும், புனிதமானவர்களாகக் கருதப்படவும் சில நியதிகளை உருவாக்கியுள்ளார். உயர்ந்த வாழ்க்கை வாழவும் அவர்களுக்குச் சில கொள்கைகளை வகுத்திருக்கிறார். இது நிறைவேற வேண்டுமென்றால், சட்டத்தின் பிரிவுகள் மறைமுகக் கட்டளைகளாகத் தானிருக்க முடியும்; ஒவ்வொரு புனிதமான பொய்யின் நோக்கமும் இதுதான்...

---------------- பிரடெரிக் நியட்சே

மனு, தன்னுடைய நூலில் இந்தியாவின் சமுதாய, ஒழுக்க நெறிகளைப் புனிதமான முறையில் தொகுத்து, மனித வர்க்கத்தின் மேம்பாட்டிற்காகவே, தந்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் உண்மையில், இந்த மனு தர்ம நூல் ஜாதிவெறியும், ஆண் பெண் உறவு பற்றிய தவறான கருத்துகளையும் புகுத்தவே எழுதப்பட்டுள்ளது. பிற ஜாதியினருக்குக் கொடுமையான தண்டனைகளையும், குரூரமான சித்திரவதைகளையும், சமுதாய மக்களை ஒன்று சேரவிடாமல், சிலருக்கு ஏகபோக உரிமைகளையும் பலருக்கு அடிமைகளின் வாழ்க்கையையும் தந்து, எழுதியுள்ளார். மற்ற ஜாதிக்காரர்களை இழிவுபடுத்தியும், கண்டித்தும் பல பகுதிகளில் குறிப்பிடுகிறார். இந்த நூலை எழுத தன் சொந்த முடிவுகளையே எடுத்துக் கொண்டுள்ளார். இந்த முடிவுகள், உலகம் படைக்கப்பட்ட போதே கடவுள்களால் தரப்பட்ட, காலத்தால் அழியாத கட்டளைகள் என்கிறார். மனுஸ்மிருதி என்ற இந்த நூல், முதன்முதலாக மனிதர்களுக்குப் புரியும் மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாகவும் கூறுகிறார்.

1794இல் ஆங்கில மொழியிலும், 1797-இல் ஜெர்மன் மொழியிலும், 1833-இல் பிரெஞ்சு மொழியிலும், 1859இல் போர்ச்சுக்கீசிய மொழியிலும் இந்த மனுதர்ம சாஸ்திரம் மொழிபெயர்க்கப்பட்டது.

1886இல் ஜார்ஜ் பக்ளர் என்பவர் மனுவின் சட்டங்கள் என்ற தலைப்பில் (ஆக்ஸ்போர்டு பிரஸ்) இந்த நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். மீண்டும் 1988இல் இந்த நூல் மோதி-லால் பனார்சிதாஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. மனுஸ்மிருதி முதலில் பிரம்மாவிடமிருந்து ஆரம்பித்து அதன் சாராம்சங்கள் மனுவிடம் கூறப்பட்டதாகவும், அதை அறிந்துகொண்ட மனு, அவற்றை முனிவர்களிடம் கூறியதாகவும் எழுதப்பட்டுள்ளது. மனுவில் மூளையிலிருந்து பிறந்த பத்து மக்களில் ஒருவரான பிருகு என்பவர் உலக உற்பத்தி எவ்வாறு நடைபெற்றது என்பதைப்பற்றி மனுவின் விளக்கத்தை விரிவாகக் கூறுகிறார். பக்ளர் கூறுவதைப் போல, மனு முதலில் மன்வந்தராஸ் (ஏழு மனுமுனிவர்களின் காலம்) என்பது பற்றியும், யுகங்கள் (உலகத்தின் நான்கு காலங்கள் கிருத, திரேதா, துவாபர, கலியாவை என்பதைப்பற்றியும் கூறுகிறார். மேலும், யுகங்களின் மற்ற பிரிவுகளைப் பற்றியும், அடுத்தபடியாக முக்கியமான நான்கு ஜாதிகளைப்பற்றியும் (வர்ணங்கள்), அதற்குப்பிறகு பார்ப்பனர்களின் மகாத்மியத்தைப் பற்றியும் மனுவின் புனித சட்டமான மனுஸ்மிருதியைப்பற்றியும், தனக்கு நேரடியாகக் கூறப்பட்டதை அப்படியே கூறுவதாகவும் ஒப்புவித்துவிட்டு நூலை முடிக்கிறார்.

1991இ-ல், வெண்பிடோனிகர், பிரியன் கே.ஸ்மித் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பில் 2685 செய்யுட்படல்கள் தரப்பட்டுள்ளன. பல ஜாதி மக்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளைகளைப்பற்றியும், வாழ்நாள் முழுவதும் அவர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகளைப்பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஓர்அரசன் எப்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்பதைப் பற்றியும், பல ஜாதிகளைச் சேர்ந்த மக்களிடையே உள்ள ஆண்களின் பெண்களின் உறவு முறைகளைப்பற்றியும், இன்னும் அழுத்தமாகக் கணவன் மனைவி உறவைப்பற்றியும், பிறப்பு, மரணம், கர்மா, சடங்குகள், மறுபிறவி மற்றும் இறுதி வாழ்க்கைபற்றியும் கூறியுள்ள இந்த நூலை உலக வாழ்க்கையைப்பற்றியும், உலகத்தில் பல ஜாதியினர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதுபற்றியும் பல நெறிமுறைகளைத் தருவதாக மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள், தங்களுடைய மேற்கத்திய கண்ணோட்டத்தில், இதற்கு இணையான நூல் வேறெதுவும் இல்லையெனவும், பல நூற்றாண்டுகளாக இந்நூல் அதிகார பூர்வமான அரச கட்டளை என மதிக்கப்பட்டு வந்ததாகவும், முன்னுரையில் எழுதியுள்ளனர். மனுஸ்மிருதி மற்ற மத நூல்களைப் போலவே, பிரெடரிக் நியட்சேவின் கண்ணோட்டத்தில் படிக்கப்பட வேண்டும்.

ஒரு விஷயம் தெளிவாகிறது; பக்ளர் இந்த நூற்றாண்டிற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்: படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூட புத்தகத்தைப் போலிருக்கிறது; ஆனால், ஆரியர்களுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை

மேலும் குறிப்பிடுகிறார்: கற்பனையான பாரம்பர்யக் கதைகளையும், ஜோடிக்கப்பட்ட கட்டுக் கதைகளையும் தன் கருத்துக்கு ஆதரவாக சில விவாதங்களையும் முன் வைத்திருக்கிறார், இருப்பினும், அவைகளுக்கெல்லாம் ஆதாரமோ, அதிகாரபூர்வமான பதிவேடுகளோ எதுவுமில்லாமையால், வாதங்கள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. இந்துக்களின் மிதக்கும் நெறிமுறைகளில் மனு பல வடிவங்களில் தோன்றுகிறார். பிரம்மாவாக, அவருடைய மறுபிறப்பாக, மாமுனிவராக, முதல் அரசனாக, மன்னர்களின் முதல் மன்னனாக, மனித வர்க்கத்தின் முதல் தந்தையாக, அதன் சமுதாய, ஒழுக்க போதனைகளைக் கற்பித்தவராகக், காட்சியளிக்கிறார்.

வெண்டி, ஸ்மித் ஆகியோர் குறிப்பிடுவதைப்போல இந்தியாவின் பூர்வீக கால நூல்களில் நாங்கள் கண்டதைப் போலவே இந்த மனுஸ்மிருதியும் முனிவர்களால் (பார்ப்பனர்கள்) இயற்றப்பட்டது என்பதை மட்டுமின்றி, இந்த மனுதர்ம சாஸ்திரம் அந்த முனிவர்களின் (பார்ப்பனர்கள்) சுயநலத்திற்காகவே எழுதப்பட்டது என்பதையும் விளக்கமுற அறிந்தோம். இந்தியாவின் பூர்வீக மக்களின் வாழ்க்கை நெறிகளுக்கும் கல்வியறிவிற்கும் தாங்களே முன்னோடிகள் என்பதைப் போலவும் சித்திரித்து, உலகத்துக்கே புத்திமதி கூறும் அளவிற்குத் தங்களை உயர்த்திக் காட்டி இந்த முனிவர்கள் (பார்ப்பனர்கள்) இந்த மனுதர்ம சாத்திரத்தை எழுதியுள்ளனர். உண்மையான மனிதன் எப்படியிருக்க வேண்டும்? என்பதைப் பற்றியும் அதற்கு இந்த முனிவர்களே வழிகாட்டிகளாக விளங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

-------------தகவல்: இந்து 8.11.1992 பி. இராதாகிருஷ்ணன்

மேனாட்டு அறிஞர்களே வியந்து பாராட்டி விட்டார்களாம். மேலே எடுத்துக்காட்டப்பட்ட அறிஞர்கள் பொட்டில் அறைவதுபோல ஆய்வு செய்து குவித்திருக்கிறார்களே இதற்கு என்ன பதில்? எடுத்துக் கூறத் தயார்தானா? வழக்கம் போல அய்ம்பொறிகளையும் மூடிக் கொண்டு, அடுத்த பிரச்சினைக்குத் தாவும் அனுமார் வேலைதானா?

மனுநீதி பிராமணர்களுக்குக் கூடுதல் சலுகை அளிக்கவில்லை என்பதற்காக முடியைப் பிளந்து சோ திணறுகிற திணறல் இருக்கிறதே நல்ல நகைச்சுவைதான்! இதோ சோ விவாதங்களை படியுங்கள் (துக்ளக் 1.12.2010)

கேள்வி: மனு ஸ்ம்ருதியின் சில அம்சங்களைப்பற்றிச் சொல்வதற்கு ஆரம்பமாக, ஒரு விஷயத்தை விளக்குங்கள். மனு ஸ்ம்ருதியில் ஒரே குற்றத்திற்கு, வெவ்வேறு வர்ணத்தவருக்கு வெவ்வேறு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா?

சோ: உண்மைதான். மனு ஸ்ம்ருதியில் ஒரு குற்றம் ஒரு திருட்டு நடந்தால், குற்றம் செய்தவனின் வர்ணத்தைப் பொறுத்து அவனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி: அதாவது பிராமணனுக்குச் சலுகை; ஒரு குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால் அவனுக்குக் குறைவான தண்டனை; அல்லது தண்டனையே கிடையாது. மற்ற வர்ணத்தவர் செய்தால் கடும் தண்டனை! இது என்ன நியாயம்?

சோ: நீங்கள் அவசரப்படுகிறீர்கள். வர்ணத்தைப் பொறுத்து தண்டனை மாறுபடுகிறது என்று நான் சொன்னேனே தவிர, பிராமணனுக்குக் குறைவான தண்டனை என்று சொல்லவில்லை.

கேள்வி: என்ன சொல்கிறீர்கள்? பிராமணனுக்கும் மற்றவர்களைப் போலவே தண்டனை விதிக்கப்-பட்டிருக்கிறதா?

சோ: இல்லை. மற்றவர்களைவிட, பிராமணனுக்கு ஒரே குற்றத்திற்கு அதிக தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அஷ்டாபத்யம் து சூத்ரஸ்ய

ஸ்தேயே பவதி கில்பிஷம்/

ஷோடசைவ து வைச்யஸ்ய

த்வாத்ரிம்சத் க்ஷத்ரியஸ்ய ச//

ப்ராம்மணஸ்ய சது: ஷஷ்டி:

பூர்ணம் வாபி சதம் பவேத்/

த்விகுணாவா சது: ஷஷ்டி:

தத்தோஷ குணவித்தி ஸ://

என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது. இதன் அர்த்தம்.

குற்றம் புரிந்த சூத்ரனுக்கு (அவன் விதி முறையை அறிந்தவனாயின்), வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவன் வைச்யனாக இருந்தால், பதினாறு மடங்கு தண்டனையும்; க்ஷத்ரியனாக இருந்தால், முப்பத்திரண்டு மடங்கு தண்டனையும் விதிக்கப்பட வேண் டும். குற்றம் புரிந்தவன் பிராமணனாக இருந்தால் அவன் குற்றத்தின் தன்மையை உணர்கிற நிலையில் உள்ளத்தால் அவனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

குற்றத்தின் தன்மையை உணர்ந்தவனாகவும், அது செய்யத் தகாத காரியம் என்பதை முழுமையாக அறிந்தவனாகவும், பிராமணன் இருப்பான் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவனுக்கு மற்றவர்களை விடப் பல மடங்கு அதிகத் தண் டனையை மனு ஸ்ம்ருதி விதிக்கிறது.

உண்மை இப்படியிருக்க, தண்டனை விஷயத்தில், பிராமணர்களுக்கு மனு ஸ்ம்ருதி சலுகைகள் காட்டுவதாகச் சொல்வது தவறு அல்லவா? ஆனால், ஒரு விஷயம். பிராமணனுக்கு ஒரு தண்டனையில் மட்டும் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால், அவனை நாடு கடத்த வேண்டும் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது.

பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு, பிரம்மஹத்தி அதாவது பிராமணனைக் கொலை செய்வது கொடிய பாவம் என்ற நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம்.

கேள்வி: அப்படி என்றால், மற்ற தண்டனைகளில் பிராமணனுக்குக் கூடுதல் தண்டனை என்றாலும் மரண தண்டனை என்று வருகிறபோது, அவனுக்கு ஒரு சலுகை இருக்கிறதே?

சோ: உண்மைதான். ஆனால், யாருக்கு இந்தச் சலுகை? பிராம ணனுக்கு. பிராமணன் என்றால் பிராமண குலத்தில் பிறந்த அனைவரும் அல்ல. இப்படி நான் சொல்வதற்குக் காரணமும் மனு ஸ்ம்ருதிதான்.

பிராமணனுக்குப் பல கட்டுப்பாடுகளை மனு ஸ்ம்ருதி விதிக்கிறது. அவற்றிலிருந்து தவறுகிறவனை பிராமணனாக மனு ஸ்ம்ருதி ஏற்கவில்லை.

இப்போது, அரசியல் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு சில உரிமைகளை அளிக்கிறது. ஆனால், யார் இந்தியக் குடிமகன்? அதையும் சட்டமே விளக்குகிறது. இந்தியாவில் குடியிருப்பதால், ஒருவர், நானும் குடிமகன்தான் என்று கூறிக் கொண்டு, அந்த உரிமைகளைக் கோர முடியாது.

அதேபோல், பிராமணன் யார் என்பதை மனு ஸ்ம்ருதி விளக்குகிறது. அந்த இலக்கணப்படி வாழாதவன், நானும் பிராமணன்தான் என்று கூறிக் கொண்டு, மரண தண்டனையிலிருந்து விலக்குப் பெற முடியாது.

--------------------------(துக்ளக் 1.12.2010)

இதில் நெளிந்தாடும் முரண்பாடுகளைக் கவனிக்க வேண்டும். உண்மைதான். மனுஸ்ம்ருதியில் ஒரு குற்றம் ஒரு திருட்டு நடந்தால், குற்றம் செய்தவனின் வர்ணத்தைப் பொறுத்து அவனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொண்டு விட்டு அதற்கு முரணாக மனு நீதியில் கொலை செய்யும் பிராமணனுக்குத்தான் அதிகத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகக் கதையைத் தூக்கிக் கொண்டு ஆடுகிறார். ஒன்று, மனு நீதி முரண்பாட்டின் மொத்தக் கூடை என்று ஒப்புக் கொள்ள வேண்டும்; இல்லையெனின், இவர் புரிந்து கொள்வதில் தடுமாறுகிறவர் என்பதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்மை இப்படியிருக்க, தண்டனை விஷயத்தில், பிராமணர்களுக்கு மனுஸ்ம்ருதி சலுகைகள் காட்டுவதாகச் சொல்வது தவறு அல்லவா! ஆனால் ஒரு விஷயம், பிராமணனுக்கு ஒரு தண்டனையில் மட்டும் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால் அவனை நாடு கடத்த வேண்டும் என்று மனுஸ்ம்ருதி கூறுகிறது.

பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு, பிரம்மஹத்தி அதாவது பிராமணனைக் கொலை செய்வது கொடிய பாவம் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என்று நழுவுகிறார் சோ.

பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதற்குப் பிரம்மஹத்தி அதாவது பிராமணனைக் கொலை செய்வது கொடிய பாவம் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என்று ஓடித் தப்பிக்கப் பார்க்கிறார்.

அது என்ன நம்பிக்கை? அந்த நம்பிக்கை எப்படி வந்தது? பிரம்ம ஹத்தி தோஷம் என்பது பார்ப் பனர்களின் சாஸ்திரத்திலிருந்து வந்ததுதானே? இந்த இடத்தைத் தம் சாமர்த்தியத்தால் காப்பாற்ற முடியவில்லை என்கிறபோது நம்பிக்கை என்னும் முக்காடுபோட்டு நழுவும் நாணயமற்ற தன்மையைத் தமிழர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

திருட்டுக் குற்றத்தைச் செய்கிற பிராமணனுக்குச் சூத்திரர்களைவிட அதிக தண்டனை அளிக்கப்படுகிறதே என்பதைப் பிடித்துக்கொண்டு வெகு காலமாகத் தப்பிக்கப் பார்ப்பது இவரது குணம்.

வெறுக்கத் தக்கதா பிராமணீயம்? எனும் தொடரில் இவர் எழுதியதுண்டு. அதற்குப் பதிலடி கொடுத்து திராவிடர் கழகத் தலைவர் உண்மை இதழில் எழுதி பின்னர் வெறுக்கத்தக்கதே பிராமணீயம் எனும் நூலாக வெளி வந்துள்ளது. (அக்டோபர் 2001)

அந்தப் பதிலை மீண்டும் நினைவூட்டுவோம்:

அறிந்து திருட்டுக் குற்றத்தைச் செய்கிற சூத்திரனுக்கு வழக்கமான தண்டனையைவிட எட்டு மடங்கு அதிகமான தண்டனையை விதிக்க வேண்டும்; வைச்யனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்திரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு அறுபத்து நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.

பிராமணனுக்கு சலுகையை அளிக்கிற மனுநீதிதான் மேற்கண்ட விதிமுறையையும் வற்புறுத்தி இருக்கிறது என்று கூறி மனு தர்ம சாத்திரம் பிராமணர்களுக்குத்தான் அதிக சுமையைக் கொடுத்திருக்கிறது என்று சாதிக்க முயலுகிறார்.

இதில் எவ்வளவு பெரிய சாமர்த்தியம் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். மனிதர்கள் யார் தவறு செய்தாலும் அதற்குரிய தண்டனையை அளிக்க வேண்டும் என்று கூறுவதுதான் சமதர்ம நோக்கு. இந்து மதம் கூறும் மனுதர்மம் வலியுறுத்தும் வர்ண தர்மத்தில்தான் கடுமையான ஏற்ற - தாழ்வுகள் உண்டே!

பிராமணர்களை உயர்வாக சமூக அமைப்பில் வைத்திருக்கிற காரணத்தால்தான் மிக உயர்ந்த கவுரவம் அவனுக்குக் கொடுக்கப்பட்டு இருப்பதால்தான் அவன் தவறே செய்யக் கூடாது என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது; சூத்திரனா, அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பது அவனுக்கு அதிக உரிமை அளிக்கப்பட்டதாகப் பொருளாகுமா? அவனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது தான் இதற்குப் பொருள்.

பொன்னைப் பூட்டி வைப்பதற்கும், துருப்பிடித்த பழைய இரும்பை வாசலில் தூக்கி எறிந்திருப்பதற்கும் உள்ள வேறுபாடு தான் இதிலும்.

பொன்னுக்கு உரிமை இல்லை அது காற்றுப் புகாத பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டு விட்டது; இந்த இரும்பை எடுத்துக் கொள்ளுங்கள், எவ்வளவு காற்றோட்டமாக வெளியில் கிடக்கிறது என்று ஒருவன் சாமர்த்தியமாகப் பேசினால் எதுவோ அதுவேதான் சோ சொல்லும் சொல் ஜாலமும்!

இது ஒன்றும் சோவின் மூளையில் உதித்த பாணி இல்லை இவருக்கு வழிகாட்டி இவர்களின் குருநாதர் காஞ்சி காமகோடிதான்.

அவர் கூறுவதையும் கொஞ்சம் கேட்போமே!

இப்பொழுது ஏற்பட்டிருக்கிறபடி ஒரு பெரிய அபிப்பிராயம் என்னவென்றால் சாஸ்த்திரோத்தமான வர்ணாசிரம தர்மத்தில், பிராமணனுக்குத்தான் சௌகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிரமம் குறைவு என்கிற எண்ணம், இது சுத்தப் பிசகு.

நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில், பிராமணன் சரீரத்தில் உழைத்த உழைப்பு, ஒரு குடியானவனின் உழைப்புக்குக் குறைச்சலானதல்ல. இவனுக்கு எத்தனை விரதானுஷ்டானங்கள், உபவாசம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயக் காயப் போட்டாக வேண்டும்? எத்தனை ஸ்நானம்? இந்த சிரமங்கள் இதர ஜாதியாருக்கு இல்லை. ஒரு குடியானவன் விழித்தெழுந்ததும், வயிறு ரொம்ப ஜில்லென்று பழையது சாப்பிடுகிறது மாதிரி செய்ய பிராம்மணனுக்கு ரைட் ஏது?

-----------(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியாரின் தெய் வத்தின் குரல் இரண்டாம் பாகம் பக்கம் 1013-_1014)

வஞ்சப் புகழ்ச்சி என்பார்களே அதற்கு எடுத்துக்காட்டுதான் இது.

பார்ப்பனரல்லாதாருக்கு ஜில்லென்று பழையது சாப்பிடுகிற உரிமை இருக்கிறது அது பிராம்மணர்களுக்குக் கிடையாதாம்!

ஏன் அந்த நிலை? அந்த விரத அனுஷ்டானங்கள் பார்ப்பான் அல்லாதாருக்கு ஏன் மறுக்கப்பட்டது? அவன் பிறவியில் தாழ்ந்தவன் விபச்சாரி மகன் நாலாஞ்சாதி என்பதால்தானே? இந்த உணர்ச்சியை மறைப்பதற்கு சங்கராச்சாரி பார்ப்பனரிலிருந்து சோ பார்ப்பான்வரை பேசும் எழுதும் வஞ்சக வார்த்தைகள்தான் இந்த ஜில் ஜில் பழைய சோறு கதைகள். அறிந்து திருட்டுச் செய்கிற பிராமணனுக்கு நூற்று இருபத்தெட்டு மடங்கு தண்டனை என்பதெல்லாம் வெறும் பகட்டுச் சொற்கள்தான் நடைமுறை சாத்தியம் இல்லாததுதான். உண்மையான நடைமுறையை இதே மனுதர்மம் வேறு ஒரு இடத்தில் தெளிவுபடுத்தி விட்டது.

பிராமணனுக்குத் தலையை முண்டனஞ் செய்வது கொலைத் தண்டமாகும். மற்ற வருணத்தாருக்குக் கொலைத் தண்டமுண்டு என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 8 சுலோகம் 379)

பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அய லூருக்கு அனுப்ப வேண்டும். (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 380)

இவற்றையெல்லாம் திட்டமிட்டு மறைப்பதில் சோ கெட்டிக்காரராக இருக்கிறார்!

மனுதர்மத்தையும் பார்ப்பன சாத்திரங்களையும், இதிகாசங்களையும் வேத, உபநிசத்துகளையும் உயர்த்திப் பிடிக்க முயலும் சோ கூட்டம் ஒன்றே ஒன்றுக்கு மட்டும் பதில் கூறிவிட்டு, அடுத்த இடத்துக்கு நகரட்டும்!

மனுதர்ம சாத்திரம் எட்டாவது அத்தியாயம் 415 ஆவது சுலோகம்.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.

சுலோகம் 417 என்ன கூறுகிறது?

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமாநனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரரல்ல.

மனுர்வையத் கிஞ்சிதவதக்

தக் பேஷஜம் (மனு எதைச் சொன்னாரோ அது மருந்தேயாம்)

இந்த மா மருந்தான மனுவின் வாசகங்களுக்கு மரியாதையாகப் பதில் சொல்லிவிட்டு, அதற்குப் பிறகு எதை வேண்டுமானாலும் கிறுக்கட்டும்!

சூத்திரர்களை ஏழு வகையாக பிரித்து அவர்கள் யார் யார் என்று பட்டியல் போட்டுக் காட்டுகிறதே மனுதர்மம். அதில் கூறப்படும் ஒவ்வொன்றும் எவ்வளவு இழிவுபடுத்தக் கூடியது உச்சகட்டமாக விபசாரி மகன் என்கிற வரை நீண்டு போய் உள்ளதே என்று எழுதினார் தமிழர் தலைவர்.

எவ்வளவு துணிவும், பார்ப்பன ஆணவமும் இருந்தால் இத்தகைய ஒரு மனு தர்மத்தை இந்த 2010 ஆண்டிலும் தூக்கிப் பிடித்துக் காட்ட முயற்சி செய்வார் திருவாளர் சோ?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று சுயமரியாதை இயக்கம் சொன்னதுகூட மிகவும் சொற்பமான பரிகாரம்தான் என்று எண்ணத் தோன்றவில்லையா?

ஏற்கெனவே சொல்லப்பட்ட அதே பதில்தான் இப்பொழுதும் ஆனாலும் சோவிடமிருந்துதான் உருப்படியான பதில் இல்லை.

குறிப்பு: மனுநீதி சாஸ்திரத்தைப் படித்து விட்டுப் பேசட்டும் என்கிறார் திருவாளர் சோ. ஆம் படித்து விட்டுத்தான் பேசுகிறோம். கேட்ட கேள்விகளுக்குப் பதில் தேவை!

******************************************************

இந்துமூலம்சோவுக்குதர்மஅடி

இந்தக் கேவலமான மனுதர்ம நூலை எழுதியவர் எவருடைய சுயநலத்திற்காக எழுதப்பட்டனவோ அவர்களெல்லாம் கடந்த ஒரு நூற்றாண்டாகத் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கமென்றும், பின்னர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களுடைய தலைமையில் சுயமரியாதை இயக்கமென்றும், பார்ப்பனியத்திற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்கள் தோன்றின. பார்ப்பனர்களுக்கெதிராக வன்முறைப் பேச்சுகளும் தாக்குதல்களும் தொடங்கின. அவர்களுடைய பூணூல்களையும், உச்சிக் குடுமிகளையும் அறுத்தெறிய அவர் அறைகூவல்களை விடுத்ததாகக் கூறப்படுகிறது. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்று அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. மனுதர்ம நூல், கடந்த காலத்தில் ஒரு புனிதமான சட்டமாக இருந்தது. சாதிக்கு ஆதரவு தரும் மேலாதிக்க ஜாதியின் அடையாளச் சின்னமாகவும் இருந்தது. ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று முன்னணியில் வந்து நின்ற டாக்டர் அம்பேத்கர், டாக்டர் ராம் மனோகர் லோகியா, பெரியார் போன்றோரின் கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளாகியது. மண்டல் கமிஷன் ஆதரவு ஆர்ப்பாட்டங்களின்போது மனுஸ்மிருதி பல முறை எரிக்கப்பட்டது.

இந்தக் காலத்தில், கடந்த காலத்தில், எப்படியிருந்தாலும், நல்ல நடைமுறைகள் வர வேண்டும். தற்போது பதிப்பிக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பதிப்பு, மனுவினாலும், அவருடைய சீடர்களாலும் இழைக்கப்பட்ட கொடுமைகளை, முறைகேடான செயல்களை அறிந்து கொள்ள பெரிதும் உதவி புரியும். மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கலாம். எதற்காக?

இன்றைய இந்தியாவில், வலிமை பொருந்திய மேலாதிக்க உணர்வு மிகுந்த ஜாதிவெறி கொண்ட சமுதாய அமைப்பைக் காண்கிறோம். மேலும் மேலும் மேல் ஜாதிக்காரர்களின் சுரண்டலுக்கும், கொள் ளைக்கும் இரையாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு வரும், தாழ்ந்த, பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடவும் போராடவும் இந்த நூலை மீண்டும் படிப்பது மிகவும் அவசியம் என்பது என் கருத்து. மனுவின் புதிய அவதாரங்களான அத்வானிகளையும், மால்கானிகளையும், அடையாளம் கண்டு கொண்டு அவர்களைப் புரிந்து கொள்ளவும் நூலைப் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். மனுவை மீண்டும் உயிர்ப்பித்து மனுதர்ம ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த பாடுபட்டு வரும் அத்வானிகளின், மால்கானிகளின் புது முயற்சிகளான அயோத்தியில் ராமர் கோயில் நிர்மாணமும், மதுராவில் கிருஷ்ணன் கோயில் நிர்மாணமும் எந்த அடிப்படைக்காகச் செய்யப்படுகின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள உதவி புரியும்.

மேலே கூறியிருப்பது விடுதலை ஏடு அல்ல சோ மதிக்கும் இந்து ஏட்டின் கட்டுரையின் ஒரு பகுதி. (8.11.1992) சோ என்ன சொல்லுகிறார்?

--------------------- மின்சாரம் அவர்கள் 18-12-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

Invest Trust said...

//... பக்ளர் இந்த நூற்றாண்டிற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்: படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூட புத்தகத்தைப் போலிருக்கிறது; ஆனால், ஆரியர்களுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை...//

இதில் பலகாலமாக கூறப்பட்டுவரும் பெரும் புளுகான, பொய்யான ஒரு வார்த்தை, அதுவும் அதை மேலை நாட்டான் பயன்படுத்தினான் என்பதற்காகவே நாமும் இன்றுவரை, நம் புத்தியில் பகுத்தாயமல் அதை அப்படியே ஏற்கும் பக்குவம் அடைந்து விட்டோம். அதுதான் ஆரியன் என்னும் வார்த்தை.

பல இனங்கள் இடம் பெயர்ந்தாலும், பண்டைய அவர்களின் இனம் அது இருந்த இடத்தில், ஆரம்பித்த இடத்தில் அதன் சுவடுடனும், அடையாளங்களுடனும் இன்று காணப்படுகிறது. ஆனால் இன்றுவரை இது பொய்தான் என்றும் அறிந்து, அல்லது அதை பற்றிய சிந்தனை கிஞ்சித்தும் இல்லாமல், நாம் அந்த ஆரியன், ஆரிய என்ற சொற்களை ஒரு இனமாக பாவித்து இன்றும் நம்புகிறோம். கடவுளை மறுக்க துணிவிருக்கும் நமக்கு இந்த புனைந்த கதையான ஆரிய, ஆரியன் என்பதை இன்றும் மறுதளிக்கும் உரிமையோ, திண்மையோ, வண்மையோ, இல்லாதது ஆச்சரியம் இல்லை. ஏன் எனில் நாம் (மேலை நாட்டானின் அடிவருடிகளாகவும், அடி நக்கிகளாகவும்)அவர்களின் கருத்தை மறுக்காமல் ஏற்கும் பக்குவத்தை அடைந்து விட்டோம். ஆனால் அது நம் பாரத தேசத்தின் வழக்கு என்றாலே உடனே மேலை நாட்டானிடம் இருந்து அதை எதிர்க்க கருத்துருவாக்கம் கொள்ள முயல்கிறோம். அல்லது முடிகிறோம்.

சமீப காலங்களில் நடைபெற்ற பல ஆய்வுகள், இந்த ஆரியப் புளுகை அறுத்தெரிந்து சுக்கல் சுக்கலாக கிழித்தெறிந்தும் நாம் விட்ட பாடில்லை.
ஆரியன் என நீங்கள் கூறும் இனத்தின் தோற்றம். தோன்றல் எங்கே? அந்த இடத்தில் இன்றளவும் யாரேனும் உள்ளார்களா, இல்லை அவர்கள் அங்கே வாழ்ந்ததன் கூறு ஏதாவது ஆய்வில், வெறும் எழுத்தில் உள்ளது இல்லாமல் இன்றய இந்தியாவில் உள்ள ஆரியர்கள் என்று நீங்கள் கூறும் இனம் பயன்படுத்தும் மொழியிலோ, இல்லை வாழ்கையிலோ இல்லை அவர்களின் கலாசாரத்திலோ இருக்கும் எந்த ஒர் அம்சமாவது அங்கெங்கிலும் கிடைக்கப் பெற்றுள்ளதா? சான்று உண்டா?

உங்களின் சுயபுத்தியைக் கொண்டு ஆரியன் என்பது ஒரு இனம் அல்ல, அது ஆரிய என்ற தலைவனை, உயர்ந்த பண்புகளை மட்டும் குறிக்கும் ஒரு வார்த்தைதான், சொல்தான் என்று ஏன் புரிய, தெரிய இயலவில்லை உங்களுக்கு.

அல்லது சுயபுத்தி அற்றவனா இந்த இந்தியத் துணைக்கண்ட திராவிடன். ஈ.வெ.ரா சொன்னாற்போல சோற்றிலடித்த பிண்டங்களா? காட்டு மிராண்டிகளா? மூளையற்ற முண்டங்கள்தானா? மழுங்கின புத்திதான் இவன் சொத்து. என்றாவது இது குறித்த சிந்தனை உங்கள் எண்ணங்களில் உதித்ததுண்டா?

Invest Trust said...

//... பக்ளர் இந்த நூற்றாண்டிற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்: படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூட புத்தகத்தைப் போலிருக்கிறது; ஆனால், ஆரியர்களுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை...//

இதில் பலகாலமாக கூறப்பட்டுவரும் பெரும் புளுகான, பொய்யான ஒரு வார்த்தை, அதுவும் அதை மேலை நாட்டான் பயன்படுத்தினான் என்பதற்காகவே நாமும் இன்றுவரை, நம் புத்தியில் பகுத்தாயாமல் அதை அப்படியே ஏற்கும் பக்குவம் அடைந்து விட்டோம். அதுதான் ஆரியன் என்னும் வார்த்தை.

பல இனங்கள் இடம் பெயர்ந்தாலும், பண்டைய அவர்களின் இனம் அது இருந்த இடத்தில், ஆரம்பித்த இடத்தில் அதன் சுவடுடனும், அடையாளங்களுடனும் இன்று காணப்படுகிறது. ஆனால் இன்றுவரை இது பொய்தான் என்றும் அறிந்து, அல்லது அதை பற்றிய சிந்தனை கிஞ்சித்தும் இல்லாமல், நாம் அந்த ஆரியன், ஆரிய என்ற சொற்களை ஒரு இனமாக பாவித்து இன்றும் நம்புகிறோம். கடவுளை மறுக்க துணிவிருக்கும் நமக்கு இந்த புனைந்த கதையான ஆரிய, ஆரியன் என்பதை இன்றும் மறுதளிக்கும் உரிமையோ, திண்மையோ, வண்மையோ, இல்லாதது ஆச்சரியம் இல்லை. ஏன் எனில் நாம் (மேலை நாட்டானின் அடிவருடிகளாகவும், அடி நக்கிகளாகவும்)அவர்களின் கருத்தை மறுக்காமல் ஏற்கும் பக்குவத்தை அடைந்து விட்டோம். ஆனால் அது நம் பாரத தேசத்தின் வழக்கு என்றாலே உடனே மேலை நாட்டானிடம் இருந்து அதை எதிர்க்க கருத்துருவாக்கம் கொள்ள முயல்கிறோம். அல்லது முடிகிறோம்.

சமீப காலங்களில் நடைபெற்ற பல ஆய்வுகள், இந்த ஆரியப் புளுகை அறுத்தெரிந்து சுக்கல் சுக்கலாக கிழித்தெறிந்தும் நாம் விட்ட பாடில்லை.

ஆரியன் என நீங்கள் கூறும் இனத்தின் தோற்றம். தோன்றல் எங்கே? அந்த இடத்தில் இன்றளவும் யாரேனும் உள்ளார்களா, இல்லை அவர்கள் அங்கே வாழ்ந்ததன் கூறு ஏதாவது ஆய்வில், வெறும் எழுத்தில் உள்ளது இல்லாமல் இன்றய இந்தியாவில் உள்ள ஆரியர்கள் என்று நீங்கள் கூறும் இனம் பயன்படுத்தும் மொழியிலோ, இல்லை வாழ்கையிலோ இல்லை அவர்களின் கலாசாரத்திலோ இருக்கும் எந்த ஒர் அம்சமாவது அங்கெங்கிலும் கிடைக்கப் பெற்றுள்ளதா? சான்று உண்டா?

உங்களின் சுயபுத்தியைக் கொண்டு ஆரியன் என்பது ஒரு இனம் அல்ல, அது ஆரிய என்ற தலைவனை, உயர்ந்த பண்புகளை மட்டும் குறிக்கும் ஒரு வார்த்தைதான், சொல்தான் என்று ஏன் புரிய இயலவில்லை, தெரிய முயலவில்லை உங்களுக்கு.

அல்லது சுயபுத்தி அற்றவனா இந்த இந்தியத் துணைக்கண்ட திராவிடன். ஈ.வெ.ரா சொன்னாற்போல சோற்றிலடித்த பிண்டங்களா? காட்டு மிராண்டிகளா? மூளையற்ற முண்டங்கள்தானா? மழுங்கின புத்திதான் இவன் சொத்தா. என்றாவது இது குறித்த சிந்தனை உங்கள் எண்ணங்களில் உதித்ததுண்டா?