Search This Blog

3.12.10

பெரியார் உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்

தமிழர்களின் இறையாண்மையைக் காக்க, தமிழ் மொழியைக் காக்க, தமிழின உரிமைகள் காக்கப்பட தமிழர் தலைவர் நீண்ட காலம் வாழவேண்டும்

திராவிடர் கழகம் இருக்கவேண்டும்

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தொல். திருமாவளவன் எம்.பி., அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து நூல்களை வழங்கினார். விழா மேடையில், இனமுரசு நடிகர் சத்யராஜ், கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் உள்ளனர் (சென்னை பெரியார் திடல், 2.12.2010).


தமிழும், தமிழினமும் காக்கப் பட தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் நீண்ட நாள் வாழவேண்டும்; திராவிடர் கழகம் இருக்க வேண்டும்; தமிழர் தலைவரின் கொள்கை வளர்ச் சிப் பணி, கல்வி - நிறுவனப் பணிகளை எல்லாம் தந்தை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அவரை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார். அதுமட்டுமல்ல தமிழர் தலைவரின் பிறந்தநாளை நாடெங்கும் எழுச்சி விழாவாக கொண்டாட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறி விளக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் (நேற்று) 2.12.2010 இரவு 7 மணிக்கு நடைபெற்ற கட்டுக்கடங்காத கூட்டத்திற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நாத்திக நன்னெறிச் செம்மல் இனமுரசு சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தொல். திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் நாடாளு மன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரையில், குறிப்பிட்ட முக்கிய செய்திகள் வருமாறு:-

தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று லட்சோப லட்சம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் எங்களு டைய பிறந்தநாள் வாழ்த்துகளை முதற்கண் தெரி வித்துக் கொள்கிறேன். (கைதட்டல்) அதே போல நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை உருவாக்கிய ஆ.திராவிடமணி அவர்களுக்கும் இன் றைக்குப் பிறந்தநாள் என்பதை அறிந்து எங் களுடைய வீர வணக்கத்தை அவர்களுக்கும் தெரி வித்துக் கொள்கின்றோம்.

தமிழர் தலைவரிடம்
தொலைபேசியில் பேசினேன்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு தொலைநோக்காளர். நான் இன்று காலையில் அவ ரிடம் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து களைச் சொல்லி இன்றைக்கு மாலையில் நடை பெறுகின்ற பொதுக்கூட்டத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொன்னேன். நான் இப்பொழுது வெளியூரில் இருக்கின்றேன். பிறந்தநாள் விழா கொண்டாடு வதை நான் விரும்புவதில்லை என்று அடக்கத் தோடு சொன்னார். பொதுவாக பிறந்தநாளை விரும்பாத தலைவர்களே இருப்பதில்லை. நம் முடைய உணர்வுகள் பட்டை தீட்ட வேண்டு மானால் நம்முடைய ஆசிரியர் அவர்கள் நீடூழி வாழ வேண்டும். ஆகவே நம்மை நாமே பட்டைத் தீட்டிக் கொள்ள அவருடைய களப்பணி நமக்குத் தேவைப்படுகிறது.

பெரியார், ஆசிரியரை அடையாளம் கண்டார்

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா அவர் களை அடையாளம் கண்டார். அதே போல தந்தை பெரியார் நம்முடைய தமிழர் தலைவரை அடை யாளம் கண்டார். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் நம்முடைய கலைஞர் அவர்களை அடையாளம் கண்டார். தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு இருக்கிற காலத்தில் நமக்கு தமிழர் தலைவரை அடையாளம் காட்டினார். அவருடைய இயக்கம் இன்றைக்கு எல்லா வகைகளிலும் தமிழர் தலைவருடைய கடும் உழைப்பால் சிறப்பாக வளர்ந்திருக்கிறது. ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம், அவருடைய வாரிசு களாலேயே தொடரப்பட முடியாமல் இருக்கிறது. தேங்கியிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய இடம் அய்யா அவர்களுடைய இயக்கத்தைப் போல் அல்லாமல் ஒரு வெற்றிட மாகவே இருப்பதை நம்மால் உணராமல் இல்லை.

பெரியார் திடலுக்கு நானே தேடி வந்தேன். பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கருத்துகளை கேட்டேன். தமிழர் தலைவர் அவர்கள் பேசுகின்ற கூட்டத்தில் அவருடைய உரையை தூர இருந்து கேட்டிருக்கின்றேன். பிறகு பகுத்தறிவாளர் கழக மாநாடு, வழக்காடு மன்றம் போன்றவை பெரியார் திடலில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டிருக்கின்றேன். ஆசிரியர் அவர்களை எனக்கு அவ்வளவாக அப்பொழுது தெரியாது. பழக்கம் இல்லை.

பெரியார் திடலில் இருந்து பெற்ற கருத்துக்கள்தான்

பெரியார் திடலிலிருந்து பெற்ற கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தின. அந்த வகையிலே இங்கே என்னை ஊக்கப்படுத்தி பேசியதைக் கண்டு ஆறுதல் அடைகின்றேன். நம்பிக்கை பெறுகின்றேன்.

தேர்தல் அரசியலால் துணிந்து கருத்துகளைச் சொல்ல முடியவில்லை என்ற மன உளைச்சல் எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் தேர்தல் பக்கமே தலை வைக்காமல் சுழன்று சுழன்று தனது இறுதிக்காலம் வரை பணியாற்றினார். தந்தை பெரியாரின் நெஞ்சுரம், போர்க்குணம் நம்முடைய தமிழர் தலைவரிடத்திலே இருக்கிறது.

பெரியாரின் மறுபிறவி

ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் தந்தை பெரியாருடைய கொள்கை வாரிசாக மட்டுமல்ல, மறு பிறவியிலே நமக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும் தந்தை பெரியாரின் மறுபிறவியாகவே நமக்குக் காட்சி அளிக்கிறார். (கை தட்டல்)

தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனால்தான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்பதை முதன் முதலில் நமக்கு அடையாளப்படுத்திக் காட்டியவர்.

என் வாழ்நாளில் தி.க. போராட்டத்தில் முதன்முதலாக கைது ஆனேன்

ஈழப்பிரச்சினைக்காக சென்னை பெரியார் திடலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. யார் யார் எந்தக் குழு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். நானும் ஒரு குழுவும் சென்று சைதாப்பேட்டையில் மின்சார ரயிலை மறித்தோம். உடனே காவல்துறையினர் எங்களை கைது செய்து பல்லாவரம் காவல் நிலையத்தில் வைத்தார்கள். என் வாழ்நாளில் திராவிடர் கழகம் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில்தான் முதன் முதலாக கலந்து கொண்டு கைது செய்யப்பட்டேன். இரவு எங்களை விடுதலை செய்தார்கள். இரவு 8 மணிக்கு கைதான தோழர்கள் எல்லாம் விடுதலை செய்யப் பட்டு பெரியார் திடலுக்கு இரவு வந்து சேர்ந்தோம்.

அன்றைக்கு இரவு 8 மணிக்கு மேல் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் திடலுக்கு வந்து கைது செய்யப்பட்டு விடுதலையாகி வந்தத் தோழர்களைப் பாராட்டி பேசினார்கள்.

இன்றைக்கும் அவருடைய பேச்சு ஞாபகம் இருக்கிறது. பிரபாகரன் அவர்களால்தான் தமிழ் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று தெளிவாகப் பேசினார்கள்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற மாநாட்டில் நமது ஆசிரியர் அவர்கள் பத்து வயது சிறுவனாக இருந்து பேசினார். அப்பொழுது தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் அவரை அடையாளம் கண்டு பாராட் டிப் பேசினார்கள். திராவிடர் இயக்கத்து திரு ஞானசம்பந்தன் வீரமணி என்று பேரறிஞர் பெருந் தகை அண்ணா பாராட்டி பேசினார்.

அப்படிப்பட்ட ஆசிரியரை அவருடைய 78ஆம் ஆண்டு பிறந்தநாளில் இந்தத் திருமாவளவன் வந்து பாராட்டுவது பெரிய செய்தியே அல்ல.

இந்தியாவிலே சமூக நீதிக்காக

இன்றைக்கு இந்தியாவில் சமூகநீதியை கட்டிக் காப்பாற்றுகின்ற ஒப்பற்ற தலைவராக விளங்கு கிறார். நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களே அதைப் பாராட்டிச் சொல்வதை நாம் பார்க் கின்றோம்.

எம்.ஜி.ஆர் பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்தார். அதை அன்றைக்கு கடுமையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், கலைஞர் அவர்களும் எதிர்த்தார்கள்.

எம்.ஜி.ஆர். படுதோல்வியை சந்தித்தார்

அதன் விளைவு தோல்வியே கண்டிராத தலைவர் என்று சொல்லப்பட்ட எம்.ஜி.ஆர். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இரண்டே இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது.

69 சதவிகிதத்திற்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் முதல் குரல் கொடுத்தவர் நம்முடைய ஆசிரியர். திரா விடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை காத்தார்கள்.

ஒரு தாழ்த்தப்பட்ட வரதராஜன், உச்சநீதிமன்ற நீதிபதியாக வர முடிந்தது என்று சொன்னால் அது தி.க., தி.மு.க., செய்த அரிய சாதனை.

பிரபாகரனின் ஆயுதங்கள் பறிப்பு

தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, எம்.ஜி.ஆர். ஆட்சியில் பிரபாகரன் மற்றும் அவர்களுடைய போராளிகளின் ஆயுதங்கள் ஒயர்லெஸ் போன்ற கருவிகளை எல்லாம் காவல்துறையினர் பறித்துச் சென்றபொழுது சென்னை மந்தைவெளி பி.எஸ்.எஸ். மருத்துவ மனையில் இருதய நோயால் தாக்கப்பட்டு இருந்த தமிழர் தலைவர் அவர்கள் பிரபாகரன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த செய்தியைக் கேள்விப்பட்டு சென்னை அடையாறு இந்திரா நகரில் தங்கியிருந்த பிரபாகரன் வீட்டிற்குச் சென்றார்.

அப்பொழுது நான், அருள்மொழி போன்றவர் கள் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நிலையில், சட்டக்கல்லூரி மாணவர்கள் எல்லாம் திரண்டு சென்று பிரபாகரன் வீட்டிற்கு முன்பு வந்து ஒலி முழக்கம் எழுப்பினோம். அதற்கு முன்பே தமிழர் தலைவர் அவர்கள் ஆயுதம் ஏந்திய நாம் உண்ணா விரதம் இருக்கக் கூடாது என்று பிரபாகரன் அவர்களிடம் வற்புறுத்திச் சொல்லியிருந்தார்.

நாங்களோ, ஆயுதம் ஏந்திய கைகள் அகிம்சை கைகளை ஏந்த வேண்டாம் என்று ஒலி முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தோம்.

தொலைபேசியில் எம்.ஜி.ஆர்.

அறையில் இருந்த தமிழர் தலைவர் அவர்களும், பிரபாகரன் அவர்களும் வெளியே வந்து எங்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது தொலைபேசி மணி ஒலித்தது. நமது ஆசிரியர் அவர்களும், பிரபாகரன் அவர்களும் உள்ளே சென்று பேசிவிட்டு வெளியே வந்து சொன்னார்கள். உதகமண்டலத்திலிருந்து எம்.ஜி.ஆர். தொலை பேசியில் பேசினார். நான் ஆயுதங்களை திரும்ப உங்களிடமே கொடுக்கச் சொல்லிவிட்டேன் என்றார். உண்ணாவிரதப் போராட்டம் தேவை யில்லை என்று சொல்லி மேதகு பிரபாகரனுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தவர் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அதே போல ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்களே அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக நான் மறைமலை நகரில் உண்ணா விரதம் இருந்தபொழுது முதன் முதலில் ஓடோடி வந்து தடுத்து அறிவுரை சொன்னார்.

எனது உடல்நிலை தொடர்ந்து பாதிக்கும் என்று கவலைப்பட்டு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை முடிக்கச் சொல்லி என்மீது பாச உணர்வைக் கொட்டியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் (கைதட்டல்).

கலைஞர் - தமிழர் தலைவர்

தலைவர் கலைஞர் அவர்களும், ஆசிரியர் அவர்களும் பெரியார் இயக்கத்தின் மிகப்பெரிய தூண்கள். மகத்தான தலைவர்கள். ஒரு தாழ்த்தப் பட்ட சகோதரன் உயர்பதவியில் அமர்ந்திருப்ப தற்காக ஊழல் என்று பேசுகிறார்கள். பணம் வாங்கியிருப்பார்கள் என்று பேசுகிறார்கள்.

இப்படி பேசுகிற அணி யார்? அ.தி.மு.க, பாரதீய ஜனதா கட்சி, சுப்பிரமணிய சாமிகள்.

இதே தொலைத் தொடர்பு துறையிலே பிரமோத் மகாஜன், அருண்ஷோரி காலத்திலே அவர்கள் அமைச்சராக இருந்த பொழுது ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறதே அதைப்பற்றி இவர்கள் ஏன் வாய் திறக்கவில்லை?

ஆசிரியர் 100 ஆண்டுகள் வாழ்க

சமூக நீதி குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இந்துத்துவ மேலாண்மை சக்திகளின் ஆதிக்கத்தை முடியடிக்க வேண்டும். இந்தப் பணிகளை எல்லாம் தொடர்ந்து களத்தில் நின்று போராட நம்முடைய ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் நூறு ஆண்டு கள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.

தமிழர்களின் இறையாண்மையைக் காக்க, தமிழ் மொழியைக் காக்க, தமிழர் இனத்தின் உரிமை களைக் காத்திட திராவிடர் கழகமும், தமிழர் தலைவரும் வேண்டும். பொடா, கிடா என்ற எந்த அச்சுறுத்தலுக்கும் பெரியார் திடல் மிரண்டதில்லை. திராவிடர் கழகத் தோடு விடுதலை சிறுத்தைகள் இயக்கம் என்றைக்கும் உறு துணையாக இருந்து களப்பணி ஆற்றும்.

பெரியார் உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்

இன்றைக்கு ஆசிரியர் ஆற்றி வருகின்ற சமுதாயப் பணி, கல்விப் பணிகளை எல்லாம் பார்த்தால் தந்தை பெரியார் உயிரோடு இருந்தால் உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார். ஆசிரியரும், கலைஞரும் ஒரே மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஜாதியை ஒழிக்க முன் வருபவர்கள் யார்?

இன்றைக்கு ஜாதியை ஒழிக்க யார் முன் வருவார்கள்? கலைஞர் வருவார். தமிழர் தலைவர் வருவார். ஜாதி ஒழிப்பை தங்களது கொள்கையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று எத்தனை கட்சிக் காரர்களால் சொல்ல முடியும்?

தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் எழுச்சி விழாவாகக் கொண்டாட வேண்டும். - இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.

------------------------"விடுதலை” 3-12-2010

0 comments: