Search This Blog

1.12.10

சங்கர மடம் முன் பெரியார் - மகாவிஷ்ணுவின் முன் பெரியார்

சிலைகள் பேசுகின்றன!

தந்தை பெரியார் 1973 டிசம்பர் 24 இல் தம் அசைவைத் துறந்தார். இனத்தின் கதி என்ன? இயக்கத்தின் கதி என்ன? என்ற எரிமலைக் கேள்வி அனைவர் உள்ளத்திலும் தகித்தது!

அதுவரை தந்தை பெரியாரைத் தாயாகப் பேணுவதில் மட்டுமே தன் சிந்தனையையும், மூச்சையும் செலுத்திக் கொண்டிருந்த அன்னை மணியம்மையார் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

தந்தை பெரியார் உடல் அடக்கம் முடிந்த நிலையில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்களிடம் ஒரு கேள்வியை செய்தியாளர்கள் அப்பொழுது முன்வைத்தனர்.

அதற்கு விடை பகன்றார் - சற்றும் தாமதிக்காமல்! திராவிடர் கழகம் யாருடனும் இணையாது - கலையாது என்றார். அய்யா காட்டிய வழியில் நூலிழை பிறழாமல் நடப்போம் என்றார்.

தந்தை பெரியார் மறைந்து 37 ஆண்டுகள் பறந்தோடி விட்டன. இந்தக் கால கட்டத்தில் ஜாதி ஒழிப்புக் களத்தில், சமூக நீதிக் களத்தில், பெண்ணுரிமைக் களத்தில், மூடநம்பிக்கை ஒழிப்புக் களத்தில் எத்தனை எத்தனையோ வெற்றிகள் குவிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் சில வரலாற்றுக் குறிப்பு நினைவுச் சின்னங்கள்; சில முக்கியமானவை.

சங்கரமடம் முன் பெரியார் சிலை!

காஞ்சிபுரம் சங்கர மடம் என்பது ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதல்ல - அவர்களாகவே உருவாக்கிக் கொள் ளப்பட்ட புரட்டு மடம் என்பது ஒரு புறம் இருந்தாலும், பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அதனைக் கண்டு கொள்வதில்லை.

குடியரசுத் தலைவர், பிரதமர் வரை காஞ்சி மடத்துக்கு ஓடோடி வந்து, சங்கராச்சாரியாரின் பாதார விந்தங்களில் தங்கள் முகங்களைப் புதைத்துக் கொள்வார்கள். தரையில் உட்கார்ந்து அந்த ஜெகத் குருவை தரிசிப்பார்கள்.

இந்தியாவுக்கு டில்லி தலைநகரம் என்று சொல்லப் பட்டாலும், மானசீகமாக காஞ்சிபுரம்தான் அவர்களுக்குத் தலைமைப் பீடமாக இருந்து வந்திருக்கிறது.

அந்த மடத்தின் முன் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையை நிறுவினாரே திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் - அது எத்தனைக் கோடி பெறும் என்பதைப் பார்க்க வேண்டும்.

அந்த இடத்தில் தந்தை பெரியார் சிலை வைக்க அனுமதி பெற்றிருந்தாலும், அ.இ.அ.தி.மு.க. அரசு அனுமதியை மறுத்தது.

அந்த இடத்தில் அய்யா சிலையை வைத்தால் உடைத்தெறிவோம் என்று அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திலேயே குரல் கொடுத்து என்றென்றைக்கும் வரலாற்றில் அவமானத்தைத் தேடிக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர்.அரசின் அனுமதி மறுப்பினை எதிர்த்து செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமறவர் காஞ்சி சி.பி. இராசமாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

வழக்கினை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் வீ.இராமசாமி அரசுக்கு மூன்று வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தாக்கீது பிறப்பித்தார். (7.9.1979)

தடைகளையெல்லாம் கடந்து காஞ்சி சங்கர மடத்தின் திருமுன்னே வருணாசிரமக் கோட்டைக்கு முன்னால் தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், வைதிகத்தைத் தூள் தூளாக்கும் வெடிகுண்டாம் வரலாற்று நாயகர் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். (இப்பொழுதுகூட உணர்ச்சிப் பெருக்கால் கை தட்டலாம் - ஆர்ப்பரிக்கலாம்!)

இதன்மூலம் தந்தை பெரியார் இயக்கத்தின் தன்மானத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் வரலாற்றில் இடம் பெற்றார்.

சங்கர மடம் முன் பெரியார் சிலையா? நினைத்துப் பார்க்க முடியுமா ஆரியக் கூட்டத்துக்கு?

ஜீரணிக்க முடியாமல் தவியாய்த் தவித்தார்கள். தூக்கமின்றிப் புரண்டு புரண்டு படுத்தார்கள்.

ஆளுநர் ஆட்சி வந்தது. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். சிலை அமைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினர்.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு எம்.எம்.இஸ்மாயில், மாண்புமிகு ரத்தினம் ஆகியோர் முன்னிலையில் வழக்கு வந்தது. சிலையை அந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதால் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வி.பி. ராமன் (அட்வகேட்ஜெனரல்) வாதாடினார்.

ஏற்கெனவே சிலை வைக்கப்பட்டு விட்டதால், இந்தக் கேள்வியே எழவில்லை என்று நமது தரப்பில் எடுத்துக் கூறப்பட்ட நிலையில், அரசு தரப்பு மனு நிராகரிக்கப் பட்டுவிட்டது. (18.3.1980)

ஆம், தந்தை பெரியார் தான் வென்றார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீரமணி அவர்களின் முயற்சிதான் வென்றது.

கடவுள் மறுப்பு, ஆன்மா மறுப்பு வாசகங் கள் தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டன.

பக்த கோடிகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரக்கூடிய இட மாயிற்றே - வெளி நாட்ட வர்களும் வந்து பார்க்கும் இடமாயிற்றே. அவர்களுக்குத் தெரிய வேண்டாமா?

காஞ்சிபுரம் ஒரு காலத்தில் பவுத்தர்களின் கோட்ட மாக விளங்கிய பவுத்தப் பூமியாயிற்றே!

கி.பி. 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவான்சுவாங் என்ற சீன யாத்திரீகர் காஞ்சிபுரத்தில் நூறு பவுத்தப் பள்ளி களும், ஆயிரம் பிட்சுகளும் இருந்ததாகக் குறிப்பிட் டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் எனும் பெயரில் உள்ள சிவன் கோயில் தொடக்கத்தில் புத்தர் கோயிலாக இருந்தது. இக்கோயிலின் முன் கோபுரத்து அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இருப்பதை இன்றும் காணலாம். காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஒரு காலத்தில் பவுத்தரின் தாராதேவி ஆலயமாகும்.

பிற்காலத்தில் இவை எல்லாம் அடிச்சுவடு தெரியாமல் ஆரிய சதிகாரர்களால் அழிக்கப்பட்டு விட்டன என்பது தான் வரலாறு. மேலும் தகவல் அறிய விரும்புவோர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலான பவுத்தமும் தமிழும் என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

பவுத்தத்தை வீழ்த்தி ஆரியம் குடி கொண்ட - அதன் வெறி கொள் சின்னமான காஞ்சி சங்கரமடத்தின் வாயில்முன் புத்தரின் மறுபதிப்பான தந்தை பெரியார் சிலையை நிறுவியது - வரலாற்றுக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த அரும் பெரும் வரலாற்று நிகழ்வைச் சாதித்தவர்தான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி ஆவார்.

மகாவிஷ்ணுவின் முன் பெரியார்

அதேபோல மகாவிஷ்ணு குடிகொண்டிருக்கும்(?) சிறீரங்கம் கோயில் முன் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டதுமாகும்.

சிறீரங்கத்தில் திறக்கப்படவிருந்த தந்தை பெரியார் சிலையை இரவோடு இரவாக சில சமூக விரோதிகள், கோழைகள் சேதப்படுத்தினர் (7.12.2006).

அவ்வளவுதான், திரண்டு எழுந்தது கருஞ்சட்டைப் பட்டாளம். கட்சிகளைக் கடந்து தமிழர்கள் போர்க் கோலம் பூண்டனர். சட்டப்பேரவையில் ஒருமித்த முறையில் புயல் வீசியது.

வழக்கம் போலவே பார்ப்பனர்கள் நீதிமன்றத்திற்குப் படையெடுத்தனர். பெரியார் சிலை திறப்பினைத் தடை செய்யக் கோரினர். சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கையாளர்களின் மூக்கை வெட்டி அனுப்பிவிட்டது. (12.12.2006)

வேறு என்ன? தந்தை பெரியார் சிலை திறப்பு விழா - முழு நாள் விழாவாக மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் ஓகோ என்று நடைபெற்றது.(16.12.2006) தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தலைமையில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்தச் சிறீரங்கம் கோயிலும் ஒரு காலத்தில் பவுத்தக் கோயிலாகவே இருந்திருக்கின்றது என்று ஆதாரங்கள் பேசுகின்றன. நாகைப்பட்டினத்தில் இருந்த அய்ம் பொன்னாலான பவுத்த சிலையைத் திருடிக் கொண்டு வந்து சிறீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு மதில்சுவர் எழுப்பினான் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்.(ஆதாரம் : தஞ்சைவாணன் கோவை).

இந்த ரெங்கநாதன் கோயிலுக்கு நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் வருவதுண்டு.

காஞ்சிபுரத்தில் சங்கரர் இருப்பது போல இங்கு ஜீயர் இருக்கிறார்.

ரெங்கநாதனைத் தரிசிக்க வரும் பக்தர்கள், முதலில் தந்தை பெரியார் சிலையைத் தரிசித்துவிட்டுத்தான் உள்ளே போகவேண்டும். அதிலும் கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகங்கள் அடங்கிய கல்வெட்டு உண்டு.

அசோகனுக்குப் பிறகு கொள்கைக் கல்வெட்டுகளை நிறுவி வருவது திராவிடர் கழகமே!

தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 37 ஆண்டுகளில் ஏராளமான எண்ணிக்கையில் தந்தை பெரியார் சிலைகள் திறக்கப்பட்டுள்ளளன. பெரியார் படிப்பகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

வாழ்க தமிழர் தலைவர்!

புத்தர் தோன்றி, பவுத்த பள்ளிகளை நிறுவி கருத்துப் பிரச்சாரம் செய்யப்பட்டதுபோல அதே அச்சில், காலத்திற்கேற்ற கூடுதல் கவனத்துடனும், கருத்துடனும் தந்தை பெரியார் கருத்துகளை, சிந்தனைகளை உலக அளவில் பரப்பும் பணியைத் தன்மேல் போட்டுக் கொண்டு செய்து வருகிறார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

வாழ்க தந்தை பெரியார்!

வாழ்க தமிழர் தலைவர்!!

----------------------- தி.க.பொதுச் செயலாளர் கவிஞர்.கலி.பூங்குன்றன் அவர்கள் 1-12-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: