Search This Blog

30.12.10

சேஷலூ குட்டி அடுத்தாத்து சுக்கூருடன் ராத்திரி ஓடிட்டா.!


அப்போதே வாக்குக் கொடுத்திட்டேன்


தாய்: ஏண்டி சேஷலூ குட்டி அவன் சாயபு ஆச்சுதேடி அவன்கிட்டே என்னடி ரகசியம் பேசுறே.

மகள்: இல்லே அம்மா நான் சின்னக் குழந்தையா இருக்கச்சே வீதியிலே விளையாண்டிருந்தப்போ மணலிலே ஒரு வீடு கட்டினேன். அதை வந்து இந்த அடுத்த ஆத்து சுக்கூர் இடிக்க வந்தான். நான் இடிக்காதடா என்று சொன்னேன், அப்படியானால் என்னைக் கட்டிக்கிறாயா என்று கேட்டான், நானு வீடு இடிந்துபோமேன்னு ஆகட்டுமென்று சொல்லிட்டேன். அதை இத்தனை நாள் மனசிலே வெச்சிண்டிருந்து இப்ப வந்து கேக்கராண்டி.

தாய்: நீ என்னடி சொன்னாய்.

மகள்: நான் என்னம்மா சொல்லட்டும், ஆகட்டுமென்னுதான் சொல்லித் தொலைச்சேன்.

தாய்: அடிஅடி நாசமாப்போன முண்டே! துலுக்கனையா கட்டிக்கிரேண்ணு சொன்னே, நீ பேதியிலே போக, நீ பிளேக்கிலே போக, உனக்கு ஒரு உளமாந்தை வர.

மகள்: கோவிச்சுக்காதே அம்மா! அப்ப நான் ஆகட்டும் என்னு சொல்லியிருந்தேன் அல்லவா, அதை வச்சிண்டு வந்து கேட்டான். பின்னே நான் என்ன சொல்றது.

அப்ப நான் அப்படி சொல்லாதெ இருந்தா வீட்டை இடிச்சிருப்பானம்மா?

தாய்: உன் தலையிலே நெருப்பைக் கொட்ட, நான் 2, 3 வருஷத்திற்கு முன்னையே உன்னைக் கல்யாணம் பண்ணனும் என்னு உங்கப்பாஓடே சொன்னபோது, உங்கப்பா சாரதா சட்டமோ லக்ஷிமி சட்டமோ என்னமோ பேரெழவு சட்டம் குறுக்கிடறதடி என்று சொன்னார் அந்தப் பிராமணன். இப்போ நீ மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடற போதே அவனுக்கு வாக்குக்கொடுத்துட்டேன் என்கின்றாயே, இன்னம் கொஞ்ச நாள் போனா பறையனுக்கும் சக்கிலிக்கும் பால் குடிக்கிறபோதே வாக்குக்கொடுத்துட்டே னென்றல்லவாடி சொல்லுவாய். என் வயிறு பத்தி எறியரதேடி, நீ அந்த சுக்கூரோடு கொஞ்சினதைப் பார்த்து.

மகள்: இல்லே அம்மா உன்னெதிரிலே நான் கொஞ்சுவேனா அம்மா? 2, 3, வருஷத்திற்கு முன்னே கல்யாணம் ஆயிருந்தால் கூட அப்பவும் நான் வாக்குத் தவறமாட்டேனம்மா. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லேன். இப்ப அவன் வந்து நீ சொன்ன வார்த்தை என்னடி சேஷலூ குட்டி என்றானே, அப்பவும் இப்படித்தானே கேட்பான்.

தாய்: அடி சண்டாளி சொன்ன வார்த்தையாவது மண்ணாங்கட்டியாவது அவன் இனிமே இங்கே வந்தா உன் மயிரை அறுத்துடுவேன் தெரியுமா?

சின்னக் குழந்தையாய் இருக்கும்போது என்னமோ சொன்னாளாம் அவன் வந்து இப்போ கேக்கறானாம் என்னடி அனியாயம் இது?

மகள்: நீ மயிரை அறுக்கவாண்டாம் அம்மா சுக்கூரே என் மயிரைக் கத்தரிச்சூடறேன் என்று சொல்லி இருக்கான். யாரோ சரோஜனி குட்டிகளாம் அதுகள் மயிரைக் கத்திரிச்சிண்டிருக்காம். அதுமாதிரி என்னையும் கத்தரிச்சு விட்றேன்னு சொன்னான்.

தாய்: அய்யய்யோ கெட்டுப்போச்சடி காரியம். நம்ம குடும்பத்தையே ஜாதியையே பாழாக்கீட்டாயே நான் காவேரியில் போய் வீழ்ந்துடறேண்டி உன்னாலே.

மகள்: அம்மாம்மா, வேண்டாம்மா பின்னெ நான் என்னாம்மா சொல்லட்டும் சுக்கூருக்கு?

தாய்: என்னடி சொல்லறது. நான் அப்போ கொழந்தையா இருக்கச்சே வேடிக்கையா சொன்னா இப்ப என்னமாடா வந்து இத்தனை தைரியமாக் கேக்கறாய் என்று அதட்டிச் சொல்லடி.

மகள்: இப்பவும் நான் கொழந்தை தாம்மா.

இப்ப யாரையாவது கட்டிண்டா கட்டின ஆம்படையானை இன்னும் 10 நாள் பொறுத்து நான் கொழந்தையா இருக்கும்போது கல்யாணம் செய்தூண்டேன் நீ வாண்டாம் போண்ணு சொன்னா போய்டுவானா? அப்படிதாம்மா சுக்கூரும் கேட்பான். ஒரு தடவை வாக்குத் தவறினால் என்ன? இரண்டு தடவை வாக்குத் தவறினால் என்ன? அப்புறம் தினம் தினம் வாக்குத் தவறினால் தான் என்னம்மா?

நான் சுக்கூர் கிட்ட சொல்லீட்டேன். கட்டினா அவனைக் கட்டிக்கிறேன். இல்லாவிட்டால் கன்னியா மடத்தில் சேர்ந்துக்கிறேன். எனக்குப் புருஷனே வாண்டாம், சுக்கூர் முகத்தில் மறுபடியும் நான் எப்படி விழிப்பேன்.

தாய்: உங்கப்பா வரட்டுமடி, நாளை காலையில் வரப்போரார். இதெல்லாம் அவரிடம் சொல்லி உன்னை இந்த வாரத்துக்குள்ளாகவே எவன் தலையிலாவது கட்டித்தொலைத்து விட்றேன்.

மகள்: அப்படியா என்னமோ செய்துக்கோ நான் என்னமோ சுக்கூருக்கு வார்த்தை கொடுத்திட்டேன்.

தாய்: உம், உம் கொடுப்பேடி ஆள் எளப்பாளியாய் இருந்தால் (என்று சொல்லி விட்டு பேச்சை முடித்து விட்டாள்.)

(இரவு 1 மணிக்கு சுக்கூரும் சேஷலூக் குட்டியும் டப்பிள். தகப்பனார் வந்தார்.)

தாய்: ஏம் பேசலே கேட்டீளா சேஷலூ குட்டி அடுத்தாத்து சுக்கூருடன் ராத்திரி ஓடிட்டா.

தகப்பன்: அவனோடு தான் போனாள் என்று உனக்கு எப்படிடீ தெரியும்.

தாய்: நேற்று அவனோடு சிரிச்சிண்டு பேசிகிண்டிருந்தா. நான் கண்டிச்சேன். அவள் ஒரு தைரியம் சின்ன கொழந்தையாய் மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடும்போது அவனைக் கட்டிக்கிறேண்ணு வாக்குக் கொடுத்துட்டாளாம். அதுக்காக அவனை கட்டிக்கணுமாம். அப்படின்னு என்னிடம் சொல்றா, வஸ்சேன் அப்பா வந்த சொல்ரேண்ணே. பயந்துண்டு ஓடிட்டா முண்டை.

தகப்பன்: சனியன் தொலைந்தது போ. அவன் மேலே அவளுக்கு ஆசை வந்துட்டுது என்னமோ சொல்லிண்டு ஓடிட்டா. நல்லகாரியம் இந்த நம்ம அயோக்கிய ஜாதியிலேயே அவளுக்கு தகுந்த மாப்பிள்ளை வேணுமுண்ணா 5000 ரூ வரதக்ஷணை கல்யாணச் செலவு 2000 ரூ ஆக 7000 ரூபாயிக்கு எங்கே போரது யாரை விக்கிறது.

போகட்டும் போ அவனும் SSLC. பாசுபண்ணி இருக்கான். நல்ல அசல் சாயபு. பிராமணனாட்டமா செக்கச்செவேரெண்ணு இருக்கான். பிராமணன் M.A. படிக்கிறதும் சரி சாயபு SSLC படிக்கிறதும் சரி, சீக்கிரத்திலெ ஏதோ வேலைக்கு வந்துடுவன், நம்மை விட்டது சனியன்.

தாய்: ஐயய்யோ அசட்டு பிராமணா அப்படிதான் இருந்தாலும் ஒரு முதலி நாயக்கன் இல்லையா சாயப்போடவா ஓடரது.

தகப்பன்: என்னமோ அவ கண்ணுக்கு பிடிச்சவனோடு போய்ட்டா. நம்ம ஜாதியில் இல்லாவிட்டால் வேறு யாரோடு போனால்தான் என்ன? முதலிக்கும் சாயபுக்கும் என்னடி வித்தியாசம் மொட்டை ஒன்றுதானே, உனக்கு என்னத்துக்கடி இத்தனை ஆத்திரம்.

தாய்: சுக்கூர் அவாத்திலே பொண்ணை மூடி போட்டல்லவா வெச்சூடுவா. இனி அவளைப் பார்க்க முடியுமா.

தகப்பன்: நீ வேணுமன்னா அவாத்துக்கு போய் தினம் பாத்துட்டு வாடி யாரு வாண்டாமென்றா.

தாய்: சரி சரி அவாத்துக்கு போனா நாலுபேரு என்ன சொல்லுவா.

தகப்பன்: என்னமோ சொல்லுவா நான் சம்மதிச்சா அப்பரம் யார்டீ கேக்ரெவா இனி அப்படித்தாண்டி எல்லாம். ராஜகோபாலாச்சாரியார் சேட்டுக்கு பெண் கொடுக்கலையா?

சூரியராவ் நாயுடு ஒரு சாயபுக்கு பெண் கொடுக்கலையா? நீலகண்ட சாஸ்திரி வெள்ளைக்காரனுக்கு பெண் கொடுக்கலையா? சடோபாத்தியாயா நாயுடுக்கு பெண் கொடுக்கவில்லையா? நாம்தானா கெட்டுப்போயிட்டோம். அதுவும் நாமா கல்யாணம் செய்து கொடுத்தமா அவளே ஓடிட்டா.

நமக்கு என்னடி பயம் ரூ 7000 மிச்ச மாச்சடி சுக்கூர் அவப்பா சிபார்சிலே நம்ம மணிக்கி கூட ஒரு உத்தியோகம் வந்துடும். நீ ஒண்ணும் சத்தம் போடாதே. யாராவது கேட்டால் காங்கிரஸ்காரர் கேட்டா இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று சொல்லடி. ஜஸ்டிஸ்காரர் கேட்டா சுயமரியாதையில் சேர்ந்துட்டோம் என்று சொல்லடி, அப்பரம் யார் நம்மண்டை வருவா பார்ப்போம்.

தாய்: சரி பகவானே காலம் இப்படியா கெட்டுப்போகணும்?

தகப்பன்: என்னடி கெட்டுப்போச்சி? நாளவருஷத்துக்குப் பார்டீ சேஷலூகுட்டி தங்க விக்கிரகமாட்டமா பிள்ளை பெத்துடப்போரா எங்கயோ அவா சௌக்கியமாய் இருந்தால் சரி, போய் வேலையைப் பார்.

------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதியது --- “பகுத்தறிவு” - ஜனவரி 1936

1 comments:

kobikashok said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்