Search This Blog

26.9.10

பார்ப்பனர்களின் அகங்காரம் ஆணவம் அடங்கி விட்டதா?


அடங்கி விட்டதா அகங்காரம்?


கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...?

பதில்: பிராமணர்கள் உயர்ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!

(கல்கி 19.9.2010 பக்கம் 30)

_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:

Ignored by Political Parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ ஆத்திரத்தோடோதான் அய்யர்வாளின் வாயிலிருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.

மனிதர்களாக இருப்பவர்கள் தேவையானவர்களே! பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - இன்றைக்கும் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவுபடுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.

ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எவனாவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கிறாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயிலாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாடகைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்களைப் பிய்த்துத் தின்பது உண்மையெனின், சகலவிதமான கூலி வேலைகளையும் செய்ய வேண்டியதுதானே?

தந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கிறார்களா? களை எடுக்கிறார்களா? ரிக்ஷா இழுக்கிறார்களா? துணி வெளுக்கிறார்களா? சவரத் தொழில் செய்கிறார்களா? ஏன் இவற்றைச் செய்வதில்லை? வறுமையிலும் வருணாசிரமம் இருப்பது ஏன்? அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்புகிறார்கள். அவர்களின் சதவிகிதமான மூன்று சதவிகிதம் கிடைக்கவில்லை என்று கூற வருகிறார்களா? அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -அந்த நிலை பறி போய்விட்டது என்று பதறுகிறார்களா? என்பதைத் தெரிந்து கொள்ளவே நமக்கு ஆசை.

2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்கள் யார்?

பி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமிபிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசின் தலைமைச் செயலாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே! இதேபோல தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களோ தொடர்ந்து தலைமைச் செயலாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா?

பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா?

மத்திய அரசு துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.

அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே?

இந்த நிறுவனங்களுக்கு பணியமர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள்? முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா? எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே!

தந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.

அவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.

இதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே!

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்கூடாது, அவன் ஏழையாகவே இருக்கவேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.

ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

(குடிஅரசு 9.11.1946)

பார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்?

ஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவாளர் சோ ராமசாமி? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்று துக்ளக் தலையங்கம் தீட்டுகிறதே! (துக்ளக் 18.11.1998)

தமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடியுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதினாரே! அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார்? பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே!

எவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.

பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்விட்டது என்று கல்கி பதில் சொல்கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா? (டிசம்பர் 2005)

அந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்? அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா?

2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்று ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே - மறந்து விட்டீர்களா?

தமிழன் என்று சொல்லடா! தலை-நிமிர்ந்து நில்லடா - அது ஒரு சுலோகம்.

பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே இதுதான் பார்ப்பனர்களின் அகங்காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா?

பொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது?

பார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன?

நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).

அய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா?

தமிழ் செம்மொழி ஆனால், வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அரசு அறிவிக்க முடியாது அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டிருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்ளார் இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது வேகவே வேகாது!


--------------கலி.பூங்குன்றன் அவர்கள் “விடுதலை” ஞாயிறுமலர் 25-9-2010 இல் எழுதிய கட்டுரை

1 comments:

Thamizhan said...

கொலைகார சுப்புணி ஆடும் ஆட்டம் போதாதா ?தின மலம் தமிழரிடம் சவுண்டி அடித்துக் கொண்டே தமிழர்களைக் கிண்டல் செய்து பிழைப்பு நடத்துகிறதே, தமிழர்கள் நடத்தும் பத்திரிக்கை,சினிமா,எதற்கெடுத்தாலும் பூஜை என்னும் பேரில் சவுண்டியடிப்பது இதெல்லாம் சோமாரிகள் நம்மிடம் இன்னும் ஏமாற்றி சுகமாக வாழ்கிறார்கள் என்பதை யார் அறியார்?