Search This Blog

14.12.08

இஸ்லாமை மறுக்கும் இஸ்லாம்




ஜுன் 1-15 2008 "உண்மை" இதழில் தோழர் இனியவன் அவர்களால் புஷ்பக விமானமும் புராக் விமானமும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையில்
கீழ்கண்ட கேள்வியை எழுப்பியிருந்தார் தோழர் இனியவன். அந்த கேள்வி உங்கள் பார்வைக்கு இதோ:

“முகம்மது நபி அவர்கள் புராக் என்ற மிருக விமானத்தில் ஏறி மிஹ்ராஜ் என்கிற விண்-வெளிப் பயணம் சென்றதாக இஸ்லாம் மார்க்கத்தில் நம்பப்படுகிறது (நூல்: புகாரி, 3207).
இராமன் சென்ற புஷ்பக விமானமும், முகம்மது நபி சென்ற புராக் விமானமும் எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?
புராக் விமானத்தில் முகம்மது நபி அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சி அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?”



இந்தக் கேள்வியின் உண்மையான பொருளைப் புரிந்து கொள்ளாமல் ஒரு சில இஸ்லாமியத் தோழர்கள் உணர்ச்சிவசப்பட்டு பெரியார் இயக்கத்தை அவதூறு பரப்பி எழுதி வருகிறார்கள். அவர்களின் அவதூறுகளை வரிக்கு வரி நம்மால் மறுத்து எழுத முடியும் . நிற்க

புராக் விமானப்பயணத்துக்கு வருவோம்.

இந்தப் பயணம் நடந்ததா? இல்லையா?இதில் உண்மை இருக்குமா? இது சரியா? தவறா? என்று இஸ்லாமியர்களிடையே கூட அய்யப்பாடுகள் உண்டு.

இதுகுறித்து சத்தியமார்க்கம்.காம் பதிவில் உள்ளதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

“மிஃராஜ் தரும் படிப்பினைகள்...!



இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாத, மறக்கடிக்க முடியாத திரும்பத் திரும்ப நினைவுகூரப்படும் பல்வேறு தருணங்களும் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் உண்டு. அவற்றில் இறைவனின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான இறை அத்தாட்சிகளில், இன்று இஸ்லாமிய உலகம் நினைவு கூரவேண்டிய ஒரு நிகழ்வு தான் இஸ்ரா எனப்படும் மிஃராஜ் நிகழ்ச்சி.

உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் இறைவன் புறத்திலிருந்து தமக்கு வழங்கப்பட்ட அத்தாட்சிகளை தத்தம் சமுதாயத்திற்கு காண்பித்து அவர்களை இறைநம்பிக்கையில் உறுதி படுத்தியது போன்று, அகிலத்தின் அருட்கொடையாகிய பெருமானார் நபி(ஸல்) அவர்களுக்கும் தனது அத்தாட்சியை காண்பிப்பதற்காக இறைவன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் துணையுடன் நபி(ஸல்) அவர்களை விண்ணுலகில் கொண்டு சென்று சுற்றிக் காண்பித்த நிகழ்வு தான் மிஃராஜ் எனப்படுகின்றது.

இஸ்லாம் ஓர் அறிவுப்பூர்வமான மார்க்கமாகும். அதில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும், செய்தியும் இவ்வுலக மக்களை நேர்வழியில் நடத்தவும், இவ்வுலக வாழ்வில் சிறப்பாக எங்ஙனம் செயல்படுவது என்பதை விளக்கவும், நிலையான மறுமை வாழ்வை நல்ல முறையில் அமைத்திட இவ்வுலகில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்தும் மக்களுக்கு போதிப்பதை மட்டுமே முக்கியமான நோக்கமாக கொண்டு உள்ளது. இதன் நிகரற்ற செய்தியை கேள்விப்படும் அறியாமையில் உழலும் எவரும் மூடநம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் விட்டொழித்து நிச்சயமாக இந்த அறிவுப்பூர்வமான வழியில் செயல்பட முனைவர்.

ஆனால், காலச் சூழலின் காரணமாக அரபி மொழியில் அமைந்த இஸ்லாத்தின் அனைத்து வழிமுறைகளும் அவரவர் மொழியில் கிடைக்காத காரணத்தினால், சமூக விடுதலை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நேர்மையான அணுகுமுறை போன்ற வெளிப்புறத்தில் தெரியும் பல்வேறு சிறப்புகளைக் கண்டு அவற்றிற்காக இஸ்லாத்தில் இணைந்த அனேக மாற்று கொள்கை, மாற்று மொழி மக்கள், தங்கள் மனதில் இஸ்லாத்தை ஏந்தினரே தவிர தங்கள் வாழ்வில் அதனைச் செயல்படுத்த முறையான இஸ்லாமிய திட்டங்கள், விளக்கங்கள் அவரவர் மொழியில் இல்லாத காரணத்தினால் தாங்கள் வாழ்ந்த சூழல், கலாச்சாரங்களுக்கேற்ப இஸ்லாத்தில் தாங்கள் கேள்விப்படும் சம்பவங்களையும், நிகழ்வுகளையும் கற்பனையாகப் புனைந்து சில சடங்கு சம்பிரதாயங்களைப் பேண ஆரம்பித்து விட்டனர்.

அதன் ஒரு நீட்சியாக இந்த மிஃராஜ் பயண நிகழ்வு தினங்களிலும் தங்கள் கற்பனைகளில் உதித்தவைகளுக்கு ஏற்ப இஸ்லாம் காண்பித்துத் தராத சில செயல்களைப் புனிதம் எனக்கருதி செயல்படுத்தி வருகின்றனர். மிஃராஜ் தினம் என ஒரு குறிப்பிட்ட தினத்தை நிச்சயித்து அன்றைய தினம் இரவு முழுவதும் வணக்கம் என்ற பெயரில் தஸ்பீஹ் போன்ற நபி(ஸல்) அவர்கள் காண்பித்துத்தராத தொழுகைகளை தொழுவதும், நபி(ஸல்) அவர்கள் பயணம் சென்ற புராக் வாகனத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து அதனை புனிதமானது எனக் கருதி வீட்டில் மகிமைப்படுத்தி வைப்பது போன்ற செயல்களை முஸ்லிம் சகோதர, சகோதரிகள் செய்து வருகின்றனர்.

இறைவனிடமிருந்து நன்மையை மட்டுமே எதிர்பார்த்து சகோதரர்களால் அறியாமையில் செய்யப்படும் இச்செயல்கள், நபி(ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஒரே காரணத்திற்காக இஸ்லாத்தின் பார்வையில் மிகப்பெரும் தண்டனைக்குரியவை என்பதை இதனைச் செய்யும் முஸ்லிம் மக்கள் அறிந்து கொள்ளாத அளவிற்கு அறியாமையில் இருக்கின்றனர். நன்மையை எதிர்பார்த்து செய்யப்படும் செயலுக்கு நன்மை கிடைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை; அதனால் தீமை விளைவது என்பது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை இபாதத்-வணக்கம் என்ற முறையில் எச்செயலை செய்வதற்கும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மிக்க அவசியமாகும். நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் புதிதாகப் புனைந்து இஸ்லாத்தில் நுழைக்கப்படும் எந்த ஒரு செயலும் இறைவனால் அங்கீகரிக்கப்படாது. இது இஸ்லாத்தின் சாதாரண அடிப்படையாகும்.

மேலும், இஸ்லாமிய வரலாற்றில் பதிந்துள்ள ஒவ்வொரு நிகழ்வும் இவ்வுலக மக்களுக்கு மிகப்பெரிய படிப்பினைகளை கொடுக்கும் விதத்தில் இறைவனால் நிகழ்த்தப்பட்ட அத்தாட்சிகளாகும். அவற்றை உற்று நோக்கும் பொழுது இதனை எளிதாக புரிந்து கொள்ள முடியும். மிஃராஜ் என்ற இந்த விண்ணுலகப் பயண நிகழ்விலும் இறைவன் இவ்வுலக மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு பல்வேறு படிப்பினைகளையும், அத்தாட்சிகளையும் வழங்கியுள்ளான்.

இந்நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் கூறும் பொழுது,

“(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 17:1)

என்று தெரிவிக்கிறது. இவ்வசனத்திலும் வல்ல நாயன் மிகத் தெளிவாக இந்நிகழ்வு இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பிப்பதற்காகவே நிகழ்த்தப்பட்டது எனக் குறிப்பிடுகின்றான்.

எனவே, இந்நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாம் தரும் படிப்பினைகள் என்ன என்பதையும், இச்சமூகம் இந்நாட்களில் செய்யும் செயல்களை இஸ்லாம் வலியுறுத்துகின்றதா என்பதையும் இஸ்லாமிய ஒளியில் ஆய்வு செய்து அறிந்து கொள்வது அவசியமாகும்.

மிஃராஜ் சம்பவத்தைக் குறித்து குறிப்பிடும் பொழுது இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

1. மிஃராஜ் நிகழ்ந்த தினம்.
2. மிஃராஜ் தரும் படிப்பினை.

ஒவ்வோர் ஆண்டும் ரஜப் மாதம் 27 ஆம் தேதி இரவை மிஃராஜ் தினமாகக் கருதி முஸ்லிம்கள் பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, கொண்டாடப்படும் விதத்தில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள தினங்கள் ரமலான் நோன்பை அடுத்து வரும் ஈகைப் பெருநாள் எனும் ஈத்-அல்-ஃபித்ர் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் அல்லது தியாகத் திருநாள் எனும் ஈத்-அல்-அழ்ஹா (பக்ரீத்) ஆகிய இரு தினங்கள் மட்டுமே. இதைத் தவிர வேறு ஒருநாளை கொண்டாட வேண்டுமெனில் குறிப்பிடப்படும் அந்த நாள் சரியானது தானா என்பதற்கு முதலில் ஆதாரம் வேண்டும்.

மிஃராஜ் தினமாக அனுஷ்டிக்கப்படும் இந்த ரஜப் 27 அன்று தான் மிஃராஜ் சம்பவம் நிகழ்ந்தது என்பதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை....


......மிஃராஜ் நினைவு கூர்தல் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களுக்கு அப்பிரயாணத்தில் பயன்பட்ட புராக் என்ற வாகனத்திற்கு ஒரு வினோத உருவம் கொடுத்து, சிறு பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த பொம்மைகள் கிடைக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியை போன்று அதனை வீட்டில் வைத்துக் கொண்டு பூரிப்படைவதில் என்ன பிரயோஜனம் இருக்கின்றது? இன்று உலகில் இறைவனிடம் மிகப்பெரும் மதிப்பு வாய்ந்த அந்த இறை இல்லத்திற்காக, நபி(ஸல்) அவர்கள் முதல் இவ்வுலகில் அதற்கு முன்னர் வந்துள்ள அனைத்து நபிமார்களும் ஒருங்கே ஒரே நேரத்தில் கூடி தொழுத சிறப்பு வாய்ந்த இஸ்லாமிய சமூகத்தின் இதயநாடியான மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்காக ஒரு கூட்டம் முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகம் செய்து கொண்டிருக்கும் வேளையில், கையில் புராக் என்ற பெயரில் ஒரு வினோதப் படத்தை வைத்துக் கொண்டு “மிஃராஜ் நினைவு கூர்தல்” எனத் தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மற்றொரு சாராரை நினைத்து பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை.


ஆக புராக் என்ற வாகனம் ஒரு கட்டுக்கதை என்பது உறுதியாகிறது.

மேலும் விரிவான விபரங்கள் தேவைப்படுவோர் சத்தியமார்க்கம்.காம் –ல் “மிஃராஜ் தரும் படிப்பினைகள்...!” கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்.

நன்றி

9 comments:

அப்துல் குத்தூஸ் said...

//ஆக புராக் என்ற வாகனம் ஒரு கட்டுக்கதை என்பது உறுதியாகிறது.//

தமிழ் ஓவியா அய்யா அவர்களே... உங்களின் அறியாமையை என்னவென்று கூறுவது?

புராக் வாகனம் என்பது ஒரு கட்டுக்கதை என்று அவர்கள் எங்கு கூறியுள்ளார்கள்? நிதானமாக படித்து பொருள் புரிந்துக் கொள்ள முயற்சிக்கவும். இப்படிப்பட்ட ஆக்கங்களை படிக்க நீங்கள் கொண்டுள்ள ஆவலை வரவேற்கின்றேன். ஆனால், தயவுசெய்து பொருளை சரியாக விளங்கிக் கொள்ள முயற்சிக்கவும். கோயபல்ஸ் வேலையெல்லாம் உங்களுக்கு எதற்கு?

அதாவது முஸ்லிம்களில் சிலர் அந்த நிகழ்வை வணக்கமாக, வழிபாட்டு நாளாக கொண்டு அப்படிப்பட்ட ஒரு நாளை எந்த ஆதாரமும் இல்லாமல் (நடந்ததற்கான ஆதாரம் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். அந்த நிகழ்வு நடந்த நாள் பதிவு செய்யப்படவில்லை) வழிபட்டு வருகின்றனர். இதை தான் தவறு என்று அந்த கட்டுரையாளர் விளக்குகிறார். அந்த நாளை வழிபடுவதற்கு அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ எங்களுக்கு வழிகாட்டவில்லை என்பதால் அப்படிபட்ட ஒரு நிகழ்வு நடந்தது என நம்புங்கள் ஆனால், அந்நாளை வழிபாட்டிற்கு உட்படுத்தாதீர்கள் என்றுதான் அவர் அக்கட்டுரையில் அறிவுருத்துகின்றார்.

தயவுசெய்து மீண்டும் படிக்கவும்.

நன்றி.
அப்துல் குத்தூஸ்.

வாசகன் said...

தலைப்பினை நீங்கள் மாற்றுங்கள்:

'இஸ்லாமின் பேரால் இல்லாத வழிபாட்டை மறுக்கும் இஸ்லாம்' என்று.

மத்தபடி இந்தகட்டுரை நன்றே.

Unknown said...

சகோதரர் அப்துல் குத்தூஸ் சொன்னது போல அழகான கட்டுரையை தவறாக விளங்கிக் கொண்டீர்கள்.
மிஃராஜ்ம் உண்மை, புராக் வாகனமும் உண்மை.
அக்கட்டுரையில், புராக் வாகனம் என அவர்கள் வைத்துள்ள படமும், அது நடந்ததாக அவர்கள் குறிப்பிடும் நாளும், அதற்காக அந்நாளில் அவர்களால் செய்யப்படும் வணக்கமுமே கண்டிக்கப் பட்டுள்ளது.

suvanappiriyan said...

//தலைப்பினை நீங்கள் மாற்றுங்கள்:

'இஸ்லாமின் பேரால் இல்லாத வழிபாட்டை மறுக்கும் இஸ்லாம்' என்று.//

கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

தமிழ் ஓவியா said...

வருகை புரிந்தத அனைவருக்கும்
ஆலோசனைகளுக்கும்
நன்றி

விமர்சகன் said...

நன்றியெல்லாம் ஓ.கேதான்
இன்னும் தலப்ப மாத்திலீங்களே தமிழ் ஓவியா:) சீக்கிரம் மாத்திடுங்க

எழில் said...

தமிழ் ஓவியா,

எந்த இடத்தில் சத்தியமார்க்கம்.காம் கட்டுரை புராக் வாகனம் ஒரு கட்டுக்கதை என்று கூறுகிறது?

தமிழ் படிக்க புரிந்துகொள்ள தெரியுமா?

புராக் பயணம் நடந்தது என்பதை எந்த இடத்திலும் மறுக்கவில்லை. ஆனால், அதனை வைத்து வழிபடுவது தவறு என்று கூறுகிறது.

சரியாக படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கவும்.

yasir said...

மிஹ்ராஜ் என்கிற பயணத்தின் போது இறைவனால் முகமது அழைத்துச் செல்லப்பட்டார் என்பது ஓர் கதை,அக்கதைக்கு மெறுகூட்டி கண்காது வைத்து கற்பனை வாகனத்தில் பயணித்ததாக வழிபடுவது கட்டுக்கதை அவ்வளவுதான்.

yasir said...

மிஹ்ராஜ் என்கிற பயணத்தின் போது இறைவனால் முகமது அழைத்துச் செல்லப்பட்டார் என்பது ஓர் கதை,அக்கதைக்கு மெறுகூட்டி கண்காது வைத்து கற்பனை வாகனத்தில் பயணித்ததாக வழிபடுவது கட்டுக்கதை அவ்வளவுதான்.